Episode-3
சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதி.. ரூம் நம்பர் 212 ல் ஒரு குரல் மட்டும் தனியாக ஒலித்துக்கொண்டிருந்தது.. அவள் ரூபா.. தனக்கு எதிரி சப்ஜெக்டான ஜாவாவை எப்படியாவது பாஸ் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் மிகவும் சின்சியராக படித்துக்கொண்டிருந்தாள்..
இறுதி ஆண்டு பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தனர் அவளும், அவள் தோழிகளும்... அன்று அது தான் கடைசி எக்ஸாம் வேறு.. மணி காலை 7 ஐத் தொட்டிருந்தது.. இவளின் அலப்பறை தாங்காமல், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவள் தோழி ஷாலினி எழுந்து குளிக்கச் சென்றாள்.. அவள் மலையாளி...
“ஹே மது.. சீக்கிரம் வருமோ டி... எனிக்கு குளிக்க போவா..” என்று தன் கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில் பாத்ரூம் கதவைத் தட்டினாள் ஷாலினி..
“இரு டி.. கொஞ்சம் முன்னாடி தான் குளிக்க வந்தேன்.. அதுக்குள்ளே வரச் சொன்னா எப்படி..?? வெயிட் பார் 5 மினிட்ஸ்..” என்றாள் மதுமிதா.. (ம்ம்.. அதே மதுமிதா தான்..)
“ஹய்யோ... எனிக்கு முடியாதடி... நீ சீக்கிரம் வா...” என்று ஷாலினி அவசரப்படுத்த, மது அதைக் கண்டு கொள்ளாமல் 10 நிமிடம் கழித்து தான் வெளியே வந்தாள்.. ஷாலினி அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்..
வெளியே வந்து ரூபாவைப் பார்த்ததும், “ஏய் ரூபா, உன் அலப்பறை தாங்காம தான் அவ என்ன வந்து அவசரப்படுத்தரா.. கொஞ்சம் சவுண்ட் கம்மியா தான் படியேண்டி.. மத்த சப்ஜெக்ட்க்கெல்லாம் நீ இப்படி அலட்டிக்கவே மாட்ட.. இதுக்கு மட்டும் ஏன் டி இவ்ளோ சிரமப்படர...” என்றாள் மது..
“என்னடி பண்றது..? அதென்னமோ ஜாவா மட்டும் எனக்கு வரவே மாட்டிங்குது.. மத்த ப்ரோக்ராம்ஸ் சப்ஜெக்ட் கூட சமாளிச்சு வந்துட்டேன்.. ஆனா, இது தான் தகராறு பண்ணுது..” என்று நொந்துகொண்டாள் ரூபா..
“ஹும்ம்ம்... உன்னோட இவ்வளோ சௌண்ட்லயும் ஒரு ஜீவன் அங்க தூங்குது பாரேன்...” என்று போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்த உருவத்தை காட்டினாள் மது..
“ஹே... அவளா.. தூங்கிட்டிருப்பானா சொல்ற.. ஹும்ம்.. கனவுல கூட எக்ஸாம்க்கு ரிவைஸ் பண்ணி பாத்துட்டிருப்பாடி... அவதான் இதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே... அவ இன்னும் தூங்குவா, இதுக்கு மேலயும் தூங்குவா...” என்று சலித்துக்கொண்டாள் ரூபா...
ரூபா பேசிக்கொண்டிருக்க, மது மெல்ல அந்த உருவத்தின் போர்வையை உருவினாள்... யார் இப்படி போர்வையை உருவியது என்பதை அறிய, தன் அழகிய விழிகள் கூச மெல்ல கண் திறந்தாள் அஞ்சலி...
“ஹலோ மேடம்... குட் மார்னிங்... விடுஞ்சிருச்சு... அதுவும், இன்னைக்கு நமக்கு கடைசி எக்ஸாம்... கொஞ்சம் எழுந்திருக்கரிங்களா..?” என்றாள் மது..
“ஹே இன்னும் டைம் இருக்கு டி.. கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்.. ப்ளீஸ்...” என்று கெஞ்சினாள் அஞ்சலி..
“ஹும்ம்... எக்ஸாம் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்னு சொல்ற மோதல் ஆள் நீ தான் டி.. ரூபாவெல்லாம் பாரு எவ்ளோ சின்சியரா படிச்சுட்டிருக்கா... நீயும் தான் இருக்கியே..!!” என்று சைடு கேப்பில் ரூபாவை கிண்டல் செய்தாள் மது...
“ஹே... சொல்லுவடி... சொல்லுவ.... எல்லாம் என் நேரம்... நீ கிண்டல் பண்ற அளவுக்கு நான் ஆயிட்டேன்...” என்று சின்னதாக கோபித்தாள் ரூபா...
குளித்து வெளியே வந்த ஷாலினி.. “ஏடி ரூபா போய் குளியடி..” என்றாள்..
“இல்ல... நான் இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு.. அப்பறமா குளிச்சுக்கறேன்..” என்றாள் ரூபா..
மது திரும்பவும் அஞ்சலியை எழுப்பினாள்.. இதற்க்கு மேல் தூங்கினால் விட மாட்டார்கள் என்று எழுந்து குளிக்கச் சென்றாள் அஞ்சலி... மதுவும், ஷாலினியும் வெளியே வராண்டாவில் உட்கார்ந்து படிக்கச் சென்று விட்டார்கள்.. ரூபா அங்கேயே தான் இருந்தாள்..
அஞ்சலி ஒரு பாடலை முணுமுணுத்தபடியே குளித்துக் கொண்டிருந்தாள்.. அவள் குளித்து முடித்து வெளியே வரும் போது, அங்கே ரூபா புக்கை வைத்தபடியே தூங்கித் தூங்கி விழுந்துகொண்டிருந்தாள்... அஞ்சலிக்கு சிரிப்பு வந்து விட்டது.. ரூபாவைத் தட்டி எழுப்பினாள்..
“ஹே, ரூபா.. ஏன்டி இப்படித் தூங்கித் தூங்கி விழற..??” என்றாள் அஞ்சலி.. முனகியபடியே எழுந்தாள் ரூபா..
“ம்ம்ம்.. காலைல 4 மணிக்கே எழுந்திரிச்சுட்டேன் அஞ்சலி.. அதான், தூக்கமா வருது..” என்றாள் தூக்கக் கலக்கத்தோடு...
“அப்போவே எழுந்து இன்னும் என்னடி படிச்சுட்டிருக்க...??”
“அதென்னமோ, எவ்ளோ படிச்சாலும் மண்டைல ஏறவே மாட்டிங்குது.. எல்லாம் மறந்த மாறியே இருக்கு..” என்றாள் ரூபா...
“ஜாவால உனக்கு என்ன ப்ராப்ளம்..?? எல்லாமே ஒரு சின்ன மெத்தட்ஸ் தான்.. நான் சொல்லித் தரேன் வா...” என்று ரூபாவிற்கு புரியும் படி சொல்லிக் கொடுத்தாள்.. கொஞ்ச நேரத்தில் சற்று தெளிவு பெற்றதைப் போல் தெரிந்தாள்..
சிறிது நேரத்தில் தோழிகள் அனைவரும் கல்லூரிக்கு கிளம்பிவிட்டனர்.. 3 மணி நேர எக்ஸாமிற்க்கு பிறகு நால்வரும் வெளியே வந்தனர்.. வரும் போது அவர்களின் மேற்படிப்பைப் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்..
“ஹே.. அஞ்சலி, நாங்க 3 பேரும் அடுத்து எம்.எஸ்.ஸி சென்னைலயே ஜாயின் பண்ணலாம்னு இருக்கோம்.. நீ என்ன பண்ணப் போற..??” என்றாள் மது.. அதைக் கேட்டதும் அஞ்சலி சற்றே முகம் மாறினாள்..
“என்னாச்சு அஞ்சலி..?? ஏன் ஒரு மாறி ஆயிட்ட..??” என்றாள் மது..
“இல்ல ஒண்ணும் இல்ல.. அப்பாவ யோசிச்சேன்.. அவர் ஓகே சொன்னா எம்.எஸ்.ஸி ஜாயின் பண்ணுவேன்.. இல்லனா....” என்று இழுத்தாள் அஞ்சலி.. அவள் தோழிகள் அனைவருக்கும் அஞ்சலியின் அப்பாவைப் பற்றி தெரியும் என்பதால் அவளின் தயக்கம் புரிந்தது...
“சரி விடடா... எந்து செய்யும்.. அப்பாகிட்டே ஒரு தரம் பரஞ்சு பாரடி...” என்றாள் ஷாலினி..
“ம்ஹும்ம்ம்..” என்று தலையை ஆட்டினாள் அஞ்சலி..
“இல்லன்னா உங்க மாமாவ அப்பாகிட்ட பேசச் சொல்லி கேட்டுப் பாரு அஞ்சலி.. அட்லீஸ்ட் இன்னும் டூ இயர்ஸ்க்கு நாம ஒண்ணா இருப்போமே..” என்றாள் ரூபா..
“பாக்கலாம். ஊருக்கு போயிட்டு சொல்றேன்..” என்றாள் அஞ்சலி அரை மனதுடன்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடம்.. அஞ்சலி பெங்களூரு, மது கோயம்புத்தூர், ஷாலினி பாலக்காடு, ரூபா காரைக்குடி.. அனைவரும் ஒன்றானது இந்தக் கல்லூரியில் தான்.. அஞ்சலி முதலில் சென்னையில்தான் தன் பள்ளிப்படிப்பை முடித்தாள்.. அவர்கள் பெங்களுருவில் செட்டில் ஆனாலும், அவளால் சென்னையை மறக்க முடியவில்லை.. அதனால் தான், கல்லூரிப் படிப்பை அவள் அப்பா அனுமதி பெற்று சென்னையிலேயே தொடர்ந்தாள்...
இரண்டொரு நாட்களில் நால்வரும் விடுதியைக் காலி செய்துவிட்டு அவரவர் ஊருக்குக் கிளம்பினர்.. அஞ்சலியைத் தவிர அனைவரும் திரும்பவும் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு சென்றனர்.. அஞ்சலியோ, எப்படித் தன் அப்பாவிடம் பேசப் போகிறோம் என்பதை யோசித்துக்கொண்டே சென்றாள்..