நீள்மதியின் யௌவனமே 4

Advertisement

அத்தியாயம் 4


சென்னையின் காலை வழக்கம்போல் பரபரப்பாக விடிந்திருந்தது.

அந்த பரபரப்பான நகரத்தின் நடுவே, செந்தாமரையின் பிரம்மாண்டமான வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த தனது அறைக்குள் நின்றுகொண்டிருந்த நீள்மதியின் மனம் மட்டும் அமைதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது.

கண்ணாடி முன் நின்று காதணியைச் சரிசெய்தவள், தன் முகத்தை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள்.

இன்று ஏனோ வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டு தயாராகியிருந்தாள்.

நீல நிற சுடிதார்.

அதற்கு பொருத்தமான காதணிகள்.

நீண்ட கூந்தலை பாதி கிளிப்பில் அடக்கிவிட்டு, மீதியை தோளில் சுதந்திரமாக விட்டிருந்தாள்.

முகத்தில் அதிக ஒப்பனை இல்லை. ஆனால் வயதுக்கே உரிய துறுதுறுப்பும் இயல்பான அழகும் அவளை தனித்துக் காட்டியது.

கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தவளுக்கு, தான் அழகாக இருக்கிறோமா என்பதைக் காட்டிலும் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள்தான் தெளிவாகத் தெரிந்தன.

ஒருபுறம் ரிஷவனை சந்திக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு. மறுபுறம் நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தாக்கம்.

அவளது இதயம் இரண்டிற்கும் நடுவே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

நேற்று வரை ரிஷவனைப் பார்க்கப் போகிறேன் என்றாலே முகத்தில் தானாக சிரிப்பு வந்துவிடும். ஆனால் இன்று அப்படி இல்லை.

ஏதோ ஒரு தயக்கம்.

ஏதோ ஒரு குழப்பம்.

ஏதோ ஒரு விளக்க முடியாத பயம்.

அவளுக்கும் ரிஷவனுக்கும் இடையிலான காதல் விஷயம் தன் தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அதை நினைத்தாலே வயிற்றுக்குள் ஏதோ உருண்டு கொண்டிருப்பது போல இருந்தது.

சிறுவயதிலிருந்து செந்தாமரை என்றால் அவளுக்கு பயமும் மரியாதையும் கலந்த உணர்வுதான்.

அவர் கோபப்பட்டால் வீட்டிலேயே ஒரு அசாதாரண அமைதி உருவாகிவிடும். ஆனால் நேற்று அவர் கோபமாக இருந்தது மட்டுமில்லை. அவரது கண்களில் வேறொரு உணர்வும் இருந்தது.

அது ஏமாற்றமா...

கவலையா... என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ரிஷவன் நல்லவன் இல்ல...” என்று அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தன.

அதை நினைத்தவள் முகம் உடனே சுருங்கியது.

“இல்ல... ரிஷவ் அப்படிப்பட்டவர் இல்ல...” என்று தனக்குத்தானே மெதுவாக சொல்லிக்கொண்டாள்.

கடந்த ஆறு மாதமாக அவனை அறிந்திருந்தாள். அவனது அன்பு பொய்யாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள்.

தன்னைப் பார்த்தால் அவன் கண்களில் தெரியும் மகிழ்ச்சி நடிப்பாக இருக்க முடியாது.

அவளை அவன் பணத்திற்காக காதலிக்கவில்லை. அதை அவள் முழுமையாக நம்பினாள்.

ஆனால்...

ஏனோ இன்று அந்த நம்பிக்கையோடு சேர்ந்து ஒரு சிறிய பயமும் மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் கண்களைப் பார்த்தவள் மெதுவாக மூச்சை இழுத்துவிட்டாள்.

“எல்லாம் சரியாகிடும்...” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

ஆனால் அந்த தைரியம் வார்த்தைகளில் இருந்ததைவிட, அவள் அதை நம்ப முயற்சித்ததே அதிகமாகத் தெரிந்தது.
அங்கு அறை கதவின் அருகே சாய்ந்து நின்றிருந்த நிவேதா அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றவள், "என்னடி... ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்க?" என்று மெதுவாகக் கேட்டாள்.

நீள்மதி கண்ணாடியில் இருந்து பார்வையை விலக்காமல் நின்றாள்.

"ஒன்னுமில்லை..."

"உன்னை எனக்கு தெரியாதா?" என்று அவள் அருகில் வந்து நின்றாள்.

"நேத்து அங்கிள் பேசுனதுல இருந்து நீ நார்மலாவே இல்ல."

நீள்மதி மெதுவாக பெருமூச்சு விட்டாள்.

"நிவி... எனக்கு பயமா இருக்கு.. என்ன பண்றதுன்னு தெரியலடி. அதுவும் அப்பா ரிஷவ்பத்தி பேசும்போது... ஏனோ ஒரு மாதிரி இருந்துச்சு."

நிவேதா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

" அவருக்கு கோபம் இருந்துச்சு. அது புரியுது. ஆனா..."

"ஆனா?"

"அவரு ஏதோ சொல்ல வர போல இருந்துச்சு.. அதுவும் அந்த பார்வையை நினைச்சாலே பயமா இருக்கு ."

நிவேதாவின் புருவம் சுருங்கியது.

"என்னவா இருக்கும் ?"

"ஹ்ம்ம் தெரியல எனக்கு "

சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு நிவேதா மெதுவாக,

"சரி அப்போ ஏன் இவ்ளோ சிக்களுக்கு நடுவுல ரிஷவனைப் போய் பார்க்குற?" என்று கேட்டாள்.

நீள்மதி உடனே அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

"ஏன்னா நான் அவனை நம்புறேன்."

அவளது பதில் எந்த தயக்கமும் இல்லாமல் வந்தது.

"எல்லாரும் எதிர்த்தாலும்?"

"நம்புவேன்.. நானும் எதிர்த்து ரிஷவன் கூட இருப்பேன் ."

"உன் அப்பா கூட எதிர்த்தாலுமா ?"

நீள்மதியின் முகம் சற்று வாடியது.

செந்தாமரை மீது அவளுக்கு எவ்வளவு பாசம் என்பதை நிவேதா நன்றாக அறிவாள்.

சில நொடிகள் யோசித்தவள்,

"அப்பாவை நான் ரொம்ப லவ் பண்றேன் நிவி." என்றாள் மெதுவாக.

"ஆனா ரிஷவையும் லவ் பண்றேன்." அவளது குரல் உடைந்தது.

"இரண்டு பேர்ல யாரையாவது தேர்ந்தெடுக்க சொன்னா... என்னால முடியாது."

நிவேதாவின் மனம் சற்றே கனத்தது.

அவள் தோழியின் கையை பிடித்தாள்.

"எல்லாம் சரியாகிடும்."

நீள்மதி சிரிக்க முயன்றாள்.

ஆனால் அந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை.

நிவேதாவிடம் சொல்லிக்கொண்டு ரிஷவனை சந்திக்கப் போகும் எண்ணத்துடன் வீட்டின் படிகளை மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தாள் நீள்மதி.

ஆனால் அவளது மனம் ஏதோ ஒரு பாரத்தை சுமப்பது போல இருந்தது.

ஹாலுக்குள் வந்தவள் தன்னிச்சையாக தன் தந்தையின் அறை இருக்கும் திசையைப் பார்த்தாள்.

கதவு மூடியிருந்தது.

ஒரு நொடி அப்படியே நின்றாள்.

“போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போவோமா...?”

என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.

ஆனால் அடுத்த நொடியே அதை மாற்றிக்கொண்டாள்.

நேற்று நடந்த வாக்குவாதம் இன்னும் அவள் மனதில் பசுமையாக இருந்தது.

இப்போது மீண்டும் பேசினால் விஷயம் இன்னும் பெரிதாகிவிடும்.

“ரிஷவ்கிட்ட பேசிட்டு வந்த பிறகு எல்லாத்தையும் அப்பாவுக்கு புரிய வைக்கலாம்.”

என்று நினைத்துக்கொண்டு வெளியே நடந்தாள்.

காரில் அமர்ந்தவுடன் அவளது கைப்பேசி ஒலித்தது.

'ரிஷவ்'.. திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் அவளது உதட்டோரம் மெதுவாக ஒரு சிரிப்பு மலர்ந்தது.


உடனே அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ...”

“என்ன மேடம்? இன்னும் கிளம்பலையா?”

அவனது குரலில் இருந்த உற்சாகம் அவளது மன அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது.

“கிளம்பிட்டேன்.”

“சரி, ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு? உங்க அப்பா ஏதாச்சும் பிரச்சனை பண்ணாரா?”

“இல்லை... அப்படியெல்லாம் இல்லை.”

“பொய் சொல்லாதே.”

“ஏன்?”

“உன் குரலை வச்சே தெரியும்.”

அவனது வார்த்தையில் அவள் உதட்டில் சிறிய புன்னகை தோன்றியது.

“ஓ... அவ்வளவு தெரியுமா உங்களுக்கு என்னைப் பற்றி?”

“எஸ் எஸ்... சொல்லு, என்னாச்சு?”

“இல்லை, நேத்து அப்பா பேசினதைப் பற்றி யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்லை.”

“ஓ... லீவ் இட். அதை நான் பார்த்துக்குறேன்.”

சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு ரிஷவின் குரல் மென்மையாக ஒலித்தது.

“நீ என்னை நம்புற தானே மதி?”

ஒரு நொடியும் யோசிக்காமல் அவளது பதில் வந்தது.

“எஸ். முழுசா நம்புறேன்.”

“ஹ்ம்ம்... எனக்கு தெரியும்.”

என்ற ரிஷவின் குரலில் ஒரு கர்வமான சிரிப்பு தெரிந்தது

“ஓகே, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நீ இங்க வர?”

“இருபது நிமிஷம்.”

“ஓகே. நான் வெயிட் பண்றேன்.”

என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அழைப்பு முடிந்த பிறகு நீள்மதியின் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது.

காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.

சென்னையின் பரபரப்பான சாலைகள் வேகமாக பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை...

அதே நேரத்தில் வேறொரு வாகனமும் அவளது காரை அமைதியாக பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

அந்த வாகனம் கருப்பு நிற ஸ்கார்பியோ.

அதற்குள் அமர்ந்திருந்த தனபால், முன்னால் சென்றுகொண்டிருந்த நீள்மதியின் காரை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

“சார் சொன்ன மாதிரி கவனமா போங்க. எந்த சூழ்நிலையிலும் மதியம்மாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.”

என்று ஓட்டுநரிடம் கூறினார்.

அதே நேரம்...

பூம்பொழிலில் இருந்த கார்முகிலனின் வீட்டில் அமர்ந்திருந்த செந்தாமரை, மேசையின் மீது பரவியிருந்த சில புகைப்படங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தார்.

அவரது முகம் கல்லைப் போல இறுகியிருந்தது.

அந்த புகைப்படங்களில் இருந்த முகத்தை பார்த்ததும் அவரது கண்களில் கோபமும் வேதனையும் மாறி மாறி தோன்றியது.

“இத்தனை வருடத்துக்கு பிறகு மறுபடியும் உன் நிழல் என் குடும்பத்தைத் தேடி வரும்னு நான் நினைக்கல, அருணாச்சலம்...” என்று அவர் பற்களை கடித்தபடி மெதுவாக கூறினார்.

அவரது மனதில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னின.

ஒரு நட்பு.

ஒரு துரோகம்.

ஒரு மரணம்.

அதற்குப் பிறகு உருவான தீராத பகை.

அதன் தொடர்ச்சியாக இப்போது அவருடைய மகளின் வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தான் ரிஷவன்.

“இந்த முறை என் மகளோட வாழ்க்கையை நான் பாழாக விட மாட்டேன்.” என்று உறுதியாக கூறியவர், தனது கைப்பேசியை எடுத்தார்.

தனபாலின் எண்ணை அழைத்தார்.

“ஹலோ, சொல்லுங்க சார்.”

“மதி கிளம்பிட்டாளா?”

“ஆமா சார். நாங்க பின்னாடியே போய்ட்டு இருக்கோம்.”

சில நொடிகள் அமைதியாக இருந்த செந்தாமரை, ஆழமாக மூச்சை இழுத்தார்.

“அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.”

“புரியுதுங்க சார்.”

“தேவைப்பட்டா... அவளை நேரா பூம்பொழிலுக்கு கூட்டிட்டு வாங்க.”

அந்த வார்த்தையில் தனபாலின் முகம் சற்று மாறியது.

ஏனென்றால் செந்தாமரை இதுபோல் ஒரு முடிவு எடுப்பது அரிது.

ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை.

“சரிங்க சார்.” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தன.

நகர நெரிசல் கொஞ்சம் குறைந்திருந்தது.

நீள்மதி ரிஷவனை சந்திக்கப் போகும் இடத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்தாள்.

அப்போது... திடீரென்று அவளது காரின் முன் ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ குறுக்கே வந்து நின்றது.

“ஷிட்!”

என்று பதற்றத்துடன் பிரேக்கை அழுத்தினாள்.

கார் கீச்சென்ற சத்தத்துடன் சாலையின் நடுவே நின்றது.

இதயம் வேகமாகத் துடிக்க, கோபத்துடன் கதவைத் திறந்து கீழே இறங்கினாள்.

“யாருடா அது ?” என்று ஆத்திரமாக கேட்டவள், ஸ்கார்பியோவிலிருந்து இறங்கிய முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

“தனபால் அங்கிள்...?”

அவளது குரலில் குழப்பம் நிறைந்திருந்தது.

தனபால் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“மன்னிச்சுக்கோங்க ம்மா.”

நீள்மதியின் புருவம் சுருங்கியது.

“எதுக்கு?”

“நீங்க இப்போ எங்களோட வரணும்.”

அந்த வார்த்தை அவளது இதயத்தை ஒரு நொடி நிறுத்தியது.

“என்ன? எதுக்கு?”

என்று கேள்விகள் அவளிடம் இருந்து வேகமாக வெளிவந்தன.

“சார் உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு.”

“என்ன... அப்பாவா? ஏன்?”

அதிர்ச்சியில் சில நொடிகள் பேச முடியாமல் நின்றவள்,

“நான் வர மாட்டேன்.”

என்று உறுதியாக கூறினாள்.

“நீங்க வந்துதான் ஆகணும்.”

தனபாலின் குரலில் இருந்த அழுத்தம் அவளுக்குள் முதல் முறையாக ஒரு பயத்தை உருவாக்கியது.

“அப்பா ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு...?” என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

“நீங்களா எங்க கூட அமைதியா வந்துட்டா போதும் ம்மா. இல்லன்னா உங்களுக்கு தான் கஷ்டமா போயிடும்.”

என்ற தனபாலின் வார்த்தைகள் நீள்மதியின் கோபத்தை தூண்டின.

“நான் வர மாட்டேன்னு சொன்னேன்ல?” என்று சத்தமாகக் கேட்டாள்.

“மன்னிச்சுக்கோங்க ம்மா. எனக்கு வேற வழி இல்லை.” என்று கூறியவுடன் தனபால் தனது ஆட்களைப் பார்த்து,

“கைஸ்... ரெடி.” என்று மெதுவாக கூறினார்.

அந்த ஒரு வார்த்தை நீள்மதியின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

“ஏய்! அவ்வளோதான். யாராவது என்கிட்ட நெருங்கிப் பாருங்க...” என்று ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.

“இந்த நீள்மதி யாருக்கும் பயப்பட மாட்டா.” அவளது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.

வேகமாக தனது காரை நோக்கி நகர முயன்றாள்.

ஆனால் தனபால் அவளது வழியை மறித்து நின்றார்.

அவரது முகத்தில் வழக்கமான மரியாதை இருந்தாலும், குரலில் உறுதி இருந்தது.

“இன்னைக்கு மட்டும் நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க ம்மா.”

“எதுக்கு? ஏன் நான் கேட்கணும்? " என்ற அவளது குரல் உடைந்தது.

“சொந்த பொண்ணையே ஆள் வச்சு கூட்டிட்டு போவாரா உங்க மினிஸ்டர்? எனக்கு எதுவும் கேட்க வேண்டாம். நான் ரிஷவனை பார்க்கப் போறேன்.”

ரிஷவனின் பெயர் வந்த அடுத்த நொடி தனபாலின் முகம் சற்று மாறியது.

ஆனால் உடனே தன்னை சமாளித்துக்கொண்டு,

“அது மட்டும் முடியாது ம்மா.”

என்றார் உறுதியாக.

“ஏன் இப்படி பண்றீங்க அங்கிள்?”

என்று கேட்டவளின் குரலில் கோபத்தை விட வேதனை அதிகமாக இருந்தது.

“அப்பா ஒரு பக்கம்... நீங்க ஒரு பக்கம்... ஏன் என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்க?” அவளது கண்கள் கலங்க ஆரம்பித்தன.

தனபால் ஒரு நொடி பார்வையைத் தாழ்த்தினார்.

சிறு வயதில் இருந்து தன் கண் முன்னே வளர்ந்த அந்த பெண்ணை இப்படிப் பார்க்க அவருக்கே மனம் வலித்தது.

ஆனால் செந்தாமரையின் கட்டளையை மீற அவரால் முடியவில்லை.

“நாங்க உங்க நல்லதுக்குத்தான் இதை பண்றோம் ம்மா.”

“அதை முடிவு பண்றது நான்தான்!” என்று நீள்மதி கத்தினாள்.

தனபால் சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றார்.

பிறகு மெதுவாக,

“நீங்க நம்புற ரிஷவன் யாருன்னு உங்களுக்கு உண்மையாவே தெரியுமா ம்மா?” என்று கேட்டார்.

அந்த ஒரு கேள்வியில் நீள்மதியின் முகம் மாறியது.

“என்ன சொல்ல போறீங்க அங்கிள்? அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை லவ் பண்றாருன்னா?”

என்று அலட்சியமாகக் கேட்டாள் நீள்மதி.

தனபால் அவளை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார்.

“இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது ம்மா.”

“ஏன் சொல்ல முடியாது? என்ன விஷயம் இருந்தாலும் இப்பவே சொல்லுங்க.”

“சொல்லுற உரிமை எனக்கு இல்ல ம்மா.”

“அப்போ யாருக்கு இருக்கு?”

“சாருக்கு.”

“அப்பாவுக்கா?”

“ஆமா ம்மா. இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேண்டியது சார் தான்.”

“அவ்வளவு பெரிய விஷயமா அது?”

தனபால் அமைதியாக நின்றார்.

அந்த அமைதியே அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“அங்கிள்... என்னை இப்படி குழப்பாதீங்க. ரிஷவ் பற்றி என்ன தெரிஞ்சிருக்கு அப்பாவுக்கு?” என்று கேட்டாள்.

தனபால் ஆழமாக மூச்சை இழுத்தார்.

அவருக்கும் உண்மையை சொல்ல வேண்டும் போல இருந்தது.

ஆனால் செந்தாமரையின் வார்த்தைகள் அவரது நினைவுக்கு வந்தது. "நான் சொல்ற வரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட அவகிட்ட சொல்லக்கூடாது.” அதனால் தன்னை அடக்கிக்கொண்டவர்,

“மன்னிச்சுக்கோங்க ம்மா. அதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது.” என்றார்.

நீள்மதி ஏமாற்றத்துடன் சிரித்தாள்.

“சரி... அப்படியென்ன பெரிய உண்மையோ அதை அப்பாவே சொல்லட்டும்.” என்று கூறியவள் ஒரு நொடி கண்களை மூடிக்கொண்டாள்.

மனதின் ஒரு மூலையில் சிறிய பயம் உருவாகியிருந்தாலும், அதை ஏற்க அவள் தயாராக இல்லை.

ஏனென்றால் அவளுக்கு இன்னும் ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ரிஷவன் தன்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டான் என்ற நம்பிக்கை.

ரிஷவனை சந்திக்க கிளம்பிய தன்னுடைய பயணம் இப்படி பாதியிலேயே நின்றுவிடும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அவன் முகம் அவளது நினைவில் வந்தது.

“நீ என்னை நம்புற தானே மதி?”

அவனது குரல் காதுகளில் ஒலித்தது.

“நான் உன்னை நம்புறேன் ரிஷவ்...”என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அடுத்த நொடியே தன் தந்தையின் முகம் நினைவுக்கு வந்தது.

தன் வாழ்க்கையில் இதுவரை எந்த விஷயத்திலும் காரணம் இல்லாமல் அவர் இப்படி நடந்து கொண்டதில்லை.

இன்று கூட கோபத்தை விட, அவரின் செயலில் ஏதோ ஒரு பயமும் பதற்றமும் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

தனபாலை நிமிர்ந்து பார்த்தவள்,

“நான் உங்க கூட வர்றேன் அங்கிள்.”என்று அமைதியாக கூறினாள்.

தனபாலின் முகத்தில் சிறிய நிம்மதி தோன்றியது.

“ஆனா...” என்றாள் நீள்மதி.

அவர் அவளை பார்த்தார்.

“இது அப்பா சொன்னதுனால மட்டும் தான். அவர் என்ன சொல்ல போறாரோ அதை கேட்ட பிறகும் என் முடிவு மாறும்னு யாரும் நினைக்க வேண்டாம்.”

அவளது குரலில் உறுதி இருந்தது.

“எனக்கு இன்னும் ரிஷவ் மேல நம்பிக்கை இருக்கு.”

தனபால் எதுவும் பேசவில்லை.

அவர் அமைதியாக காரின் கதவை திறந்து வைத்தார்.

ஒரு முறை தன் காரை திரும்பிப் பார்த்தாள் நீள்மதி.

ரிஷவனை சந்திக்க சென்ற பாதை இங்கே முடிந்தது.

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை...

அவள் இப்போது செல்லப்போகும் பாதை அவளுடைய காதல், குடும்பம், கடந்த காலம் என்று அனைத்தையும் தலைகீழாக மாற்றப் போகிறது.

மெதுவாக ஸ்கார்பியோவில் ஏறி அமர்ந்தாள் நீள்மதி.

கார் பூம்பொழிலை நோக்கி நகர ஆரம்பித்தது.


தொடரும்...
 
Last edited:
தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே.. சொல்ல முடியாத சூழ்நிலைல மாட்டிகிட்டேன். எவ்ளோ சீக்கிரம் அப்டேட் குடுக்க முடியுமோ கொடுக்குறேன். காத்திருந்ததிற்கு நன்றி.. ❤️
 

Advertisement

Advertisement

Back
Top