Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியாதே பிரியா..

Advertisement

Visha bala

Well-known member
Member
எனக்கும் இருக்கிறாள் ஓர் தோழி..எனக்கே எனக்கென என் பிரியமானவள்..எந்தன் பிரியா..

இரவிலும்.. பகலிலும்.. உடலிலும்.. உயிரிலும்.. என்றும் பரவி.. விரவி... இருப்பவள்.

உங்களில் யாருக்கேனும், யார் மீதாவது இவ்வளவு அன்பு இருக்குமா?

கண்டிப்பாக இருக்காது.. நான் என் பிரியாவின் மீது வைத்திருக்கும் அன்பைப் போல.., வேறு யாரும்.. யார் மீதும் இந்த அளவிற்குப் பித்து பிடித்து இருக்க முடியாது..

அவளைப் பிரிந்து ஒரு மாதம் இருக்கும்.. ஊடல் கொண்டு எல்லாம் நாங்கள் இருவரும் பிரியவில்லை..

செல்லப் போனால் ஊடலே வந்ததில்லை எங்களுக்குள்..

காதலில் தான் ஊடலும்.. உவகையும்.. கோபமும்.. தாபமும்..

ஆனால் எங்கள் பரிசுத்த அன்பில் ஊடலுக்கு இடமென்பதே இல்லை.

பின் ஏன் அவள் என்னை விட்டுப் பிரிந்தாள்.. எனக் கேட்கிறீர்கள் அல்லவா? அதற்கான காரணத்தைப் பின்னால் கூறுகின்றேன்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவேம்..

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவளை சந்தித்தேன்.விரதமிருந்தவரின் வேட்கையென மனம் துள்ளத்தான் செய்தது.

எவ்வளவோ விஷயங்கள் வாழ்வில் பழசாகலாம்.ஆனால் இவள் மட்டுமே என்றும் என்னுள் புதுமையை நிரப்புபவள்.

எந்த ஒரு காரியத்தையும் தினந்தோறும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அது மனதிற்கு அலுத்துவிடுமாம்..

ஆனால் இவள்... என் பிரியமானவள். என் வாழ்வு முழுக்க என்னுடன் மட்டுமே இருந்தால் என்றாலும் கூட எனக்கு சலிப்புத்தட்டாது.

அவ்வளவு பாசம் அவள் மேல்..அப்படிப்பட்டவளைப் பிரிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.இந்த ஒருமாதமும் அவளைக் காணாமல்..இந்தப் பிறவியே பாழ்பட்டது போலானது.

நாங்கள் இருவரும் நகமும் சதையுமென அவ்வளவு ஒட்டுதல்.

நான் இல்லாமல் கூட அவளால் நிச்சயமாக இருக்க முடியும். ஆனால் அவளில்லாத ஒரு வாழ்க்கை, சே..சே.. கனவில் கூட நடந்திட வேண்டாம்.

ஏனெனில், என்னை விட்டால் அவளுக்கு பல தோழர், தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அவளைத் தவிர வேறு யாரையும் தெரியாது. பிடிக்காது.

என்வாழ்வில் அவளன்றி ஒரு அணுவேனும் அசையாது.

இவ்வளவு ஏன்? எனக்கு உடம்பு சரி இல்லை என்றால் கூட, அவள் தான் எனக்கு அருமருந்து.

ஜலதோஷம் என்றாலும் அவள் வேண்டும்.. காய்ச்சல் என்றாலும் அவள் வேண்டும்.. சிறு தலைவலி என்றாலும் கூட அவள் வேண்டும் எனக்கு..

என் அருகில் அவள் இருந்தாலே யானை பலம் வந்து விடும்..

உடல் மட்டுமல்ல.. எந்தன் மனது சரி இல்லை என்றாலும் கூட பிரியாவையே பிரியமுடன் தஞ்சமடைவேன்.

எங்கேனும் வெளியே செல்வதென்றால் அவள் மட்டுமே என் உற்ற தோழி.அப்படி ஒருநாள் என்னுடன் வெளியே வருவதாகச் சொன்ன அவள்..என் தாயாரின் சதியால் வரவில்லை.

அதனால் கோபம் கொண்ட நான் மறுமுறை அவளைக் காணும் வரையில் என் அம்மாவிடம் பேசவே இல்லை.

எனக்கு கோபமூட்டுபவளும் அவளே.., என் கோபங்களை பிசுபிசுத்துப் போகச் செய்பவளும் அவளே..

என்னைச் சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும் அவள் மட்டும் என்னருகில் இல்லை என்றால் என் வாழ்வே சூன்யமாக இருக்கும்.

எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு உற்ற தோழி இருந்தால்..தினந்தோறும் தீபாவளி தான்.

என் பிரியமுள்ள பிரியா..அவளுக்கு என் மேல் இவ்வளவு பாசம் இருக்காது என்று தான் நினைக்கிறேன்.

இவ்வளவு ஏன் நான் அவளுக்கு அளிக்கும் அன்புத் தொல்லைகளால் என்னை வெறுத்து விட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏனென்றால் என் அன்பே அவளை கரையச்செய்து விடுகிறது.ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாய் இல்லை.

அன்பு என்பது கொடுத்துக் கொண்டே இருப்பது தானே?

ஆனால் அவள் மட்டும் சளைத்தவளா என்ன?

அவள் மீது நான் என் அன்பினைப் பொழியப் பொழிய..எந்தன் வாழ்க்கையில் இனிமையை மட்டுமே நிரப்புகிறாள்.

அதானால் என் அன்பு ஒரு வழிப் பாதையில் மட்டுமே சென்றிட வில்லை.

எனக்கு மட்டும் அவள் மீது ஏன் இத்தனைப் பாசம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்..

ஏனென்றால் அவள் அவ்வளவு அற்புதமானவள்..மனிதன் உருவாக்கியதிலேயே மிக மிக மேன்மையானவள்.(சிட்டியை விட).

எனக்கு அவள் மீது இவ்வளவு பாசம் இருந்தது.அது என் பிரியாவுக்குமே தெரியத்தான் செய்தது..

ஆனால் அந்தக் கல் நெஞ்சுக்காரி, ஒருநாள் இன்றிலிருந்து ஒருமாதம் நாம் சந்திக்க இயலாது எனக்கூறிவிட்டு என்னைப் பிரிந்தாள்.

இப்படி அடி முதல் நுனி வரை அவளுக்கு அடிமை என இருந்தவள்.. அவளைப் பிரிந்தால்..

அன்றிலிருந்து இன்றுவரை நான் அனுபவித்தத் துயரம்..வாய்விட்டு உரைத்தாலும் புரியாது..

உணவு செல்லவில்லை சகியே..
உறக்கம் கொள்ளவில்லை தனியே..


என என் நிலைமை மாறியது. அவள் என்னுடன் இருந்த போது கூட அவளை இந்தளவு நினைக்கவில்லை..

ஆனால் அவள் என்னை விட்டுப் பிரிந்த இந்த ஒரு மாதத்தில் நான் அவளை அணுப்பொழுதும் மறக்கவில்லை.

எனவே நாளொரு ஏக்கமும்..பொழுதொரு துக்கமுமாக என் வாழக்கை ஓடியது..இல்லை இல்லை..ஊர்ந்து கொண்டு சென்றது.

ஒவ்வொரு நாளையும் நெட்டித் தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

எங்களிருவரையும் பிரித்து வைத்த அந்த விதியை இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஓராயிரம் முறை சபித்திருப்பேன்.

என் அம்மா கூட கூறுவார்..இப்படி ஒருத்தர் மேல் பைத்தியம் பிடித்து இருக்கக் கூடாது என்று.

அது என்ன ஒரு பெண் பிள்ளைக்கு மனதை கட்டுக்குள் வைக்க முடியாதா என்று வசவு வாங்கியதும் உண்டு.

ஆனால் ஆண் என்ன?பெண்என்ன?ஆசை வெட்கமறியாது..

அதனால் ஒருமுறை என் அம்மாவிற்குத் தெரியாமல் அவளை சந்திக்க முயன்று.., கையம் களவுமாய் மாட்டிக் கொண்டேன்.

அன்று மரண அடி வாங்கியும் கூட அவளை மறக்க முடியவில்லை என்னால்.

மீண்டும் அம்மாவிற்குத் தெரியாமல் அவளை எப்படி சந்நிப்பது என்று தான் மனம் நினைத்ததே தவிர,அவளை விட்டு விடத் துணியவில்லை..

ஏனென்றால்.. மீண்டும் கூறுகிறேனே..ஆசை,வெட்கமறியாது.

இப்படிப்பட்ட நான் இவ்வளவு நாட்கள் கழித்து அவளைப் பார்க்கையில் என் ஆசை வெறியாகி விட்டது.

நானும் ஒரு பெண் தான்.ஆனாலும் கூட ஆசை என்றுமே வெட்கமறியவில்லை.

எவ்வளவு தான் மனதிற்குக் கடிவாளம் இட்டாலும் அது தன் தளைகளையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு அவளை நோக்கி பாயத் துணிந்தது.

அவள் மிகப் பெரிய கள்ளி..என் ஆவலை,ஆசையை தூண்டிவிட்டு மௌனியாய் இருக்கறாள்.அவள் மௌனத்தை மொழிபெயர்க்கும் திறனை மட்டும் இன்னும் அந்த இறைவன் எனக்கு வழங்கிட வில்லை.

வேண்டாம் வேண்டாம் அவள் மௌனம் தான் எனக்கு வசதி..

ஒவ்வொரு முறையும் இவளுடனான என் அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

எங்களது இந்தப் பிணைப்பைப் பற்றி என் குடும்பம் அறிந்தே இருந்தது.

எனவே ஒரு மாதம் கழித்து என் பிரியாவை நான் சந்திக்க இருப்பதால்,மிகப் பிரமாதமாக..மிக மிகச் சிறப்பாக அவள் தயாராகி என் வீட்டிற்கே வந்திருந்தாள்.

இதோ இப்பொழுது அவள் என் முன்னே தான் வந்து கொண்டு இருந்தாள்..

அவள் என்னை விட்டுச் சற்று எட்டத்தான் இருந்தாள்..ஆனாலும் அவள் சுகந்தம் என் நாசியை எட்டதான் செய்தது.

ஆஹா.. என்ன ஒரு அருமையான சுகந்தம்..அவளது வரவினால் வீடே மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தது..

ஆனாலும் அவள் எனக்கே எனக்கானவள்..

அவளை என் அண்ணன் பார்த்த பார்வையில் சிறு ஆவல் இருப்பது போல் தோன்றிட.. பகீர் என்று ஆனது என் மனது..

எனக்கே எனக்கான என் பிரியா அவள்.. அவனிடமிருந்து என் பிரியா தள்ளி இருப்பதே நலம்.

என் பார்வைக்கு சக்தி இருந்திருந்தால், என் தமையனையும் எரித்திடத் துணிந்திருப்பேன்.

அத்தகைய வல்லமை அற்றவள் நான்..

ஆதலால் அவசரமாக என் பிரியாவைக் கையோடு அழைத்துக் கொண்டு முன்னறைக்கு வந்து விட்டேன் நான்.

எந்த அறையாக இருந்தால் என்ன? உயிர்த் தோழியுடன் அளவலாவிட அக்கம் பக்கம் பார்க்க வேண்டுமா என்ன?

அதனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், முன் அறையை அடைந்தோம்.

அப்பாடா..என் உயிருடன் தனித்திருக்க எத்துனை தடங்கல்கள்?.. எத்துனை இன்னல்கள்?..

அனைத்தையும் கடந்து..இதோ என் முன்னே..எனக்கே எனக்கான என்னவள்..

எனக்காக எப்படி அவள் முழு அலங்காரத்தில் வந்திருந்தாளோ.., நானும் அவளுக்காக முழுமையாக தயாராகி வந்திருந்தேன்.

வாழ்க்கையில் அற்புதங்கள் நடப்பது ஒரு கணப்பொழுதில் தான்..ஆனால் அதற்காக நாம் பல யுகங்கள் காத்திருக்க நேரிடும்.

அதைப்போலவே அவளுக்காக காத்திருந்த இந்த ஒரு மாதமும் எனக்கு ஒரு யுகம் என்றேத் தோன்றியது.

ஆம் இறுதியில் அந்த அற்புதம் நடக்கப் போகும் அந்தக் கணமும் வந்து விட்டது..

என் பிரியப் பிரியா..அவளை அப்படியே அள்ளி எடுத்து என் உதட்டருகே கொண்டு செல்ல எத்தனிக்கையில்..ஆஹா.. அவள் நறுமணம் என் நாசியில் புகுந்து.. நாவின் வழியே என் நெஞ்சினுள் நுழைந்து.. இறுதியில் எந்தன் இதயத்தையும் நிறைத்தது.

கைக்கும் வாய்க்கும் காத தூரமல்ல..ஆனால் அவளை ரொம்ப நாட்கள் சந்திக்காமல் போனதால், எந்தன் கரங்களெல்லாம் நடுங்கத் தொடங்கிற்று.

மெல்ல மெல்ல அவளை என்னருகே கொண்டு வந்திட....

ஐயோ.. இது என்ன? யார் இவர்கள்? இங்கு எப்படி வந்தார்கள்? அதை விடுங்கள் எதற்காக வந்தார்கள்? என்று பலப் பல கேள்விகள் என்னுள்.

என்னைப் பெண் பார்க்க வந்த கூட்டமாம் அது.. இந்த நேரம் பார்த்து இவர்களை யார் வரச் சொன்னார்கள்? சரியாகப் பூஜை வேளைக் கரடி போல..

எனக்கு அவர்களுடைய வருகை சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஆனால்.. அவளைப் பற்றிய கை பற்றிய படியே இருக்க.. என் அம்மா என்னைப் பார்த்து இப்பொழுது வேண்டாம் என்று பொருள் படும்படி எனக்கு சைகை காட்டிட.. என் அண்ணன் இப்பொழுது உன் தோழியுடன் உள்ளே வந்துத் தானடி ஆக வேண்டும் என கேலிப் பார்வை வீசிட..

வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் என்னையும் என் பிரியாவையும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்திட..

ம்ஹூம்.. இது பின் வாங்கும் தருணம் அல்ல.. பின் வாங்க என் மனம் விழையவும் இல்லை.. முழுதாக நனைந்த பின்பு முக்காடு எதற்கு?

அவளைக் கரங்களில் பற்றி இருந்த நான் அப்படியே என் வாயினுள் போட்டுச் சுவைக்க ஆரம்பித்தேன்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்க்க.. எதைப் பற்றியும் கவலைப் படுவதாய் இல்லை நான்.

ஏனென்றால்.. உங்களுக்குத் தான் தெரியுமே..

ஆசை என்பது வெட்கத்தை அறிவதே இல்லை தானே..

ம்ம்ம்ம்....என் பிரியப் பிரியா.. எந்தன் பிரியமான பிரியாணியே.. நீ மட்டுமே என் உடலையும் உள்ளத்தையும் என் கட்டுப்பாட்டில் இருந்து களவாடுபவள்.

ஆஹா.. ஒரு மாத புரட்டாசி விரதம் முடிந்த பிறகு என் நாக்கிற்கு இன்று தான் உயிர் வந்தது.

ம்ம்ம்ம்..என் பிரியப் பிரியா உன்னை அடைதலே என் பிறப்பின் இலட்சியம்..

உன்னை அடைந்தாலே இந்தப் பிறவி முக்தியும் பெறும்..

எந்தன் பிரிய பிரியாணியே..
என்னை விட்டு... என்றும் பிரியாதே நீயே..
 
நன்றி நன்றி?..எப்படி இருக்கு சிஸ்?
ஹா ஹா ஹா
பிரியா என்பவள் ஆருயிர்த் தோழின்னு நினைத்தால் கடைசியில் பிரியாணியா?
நல்ல காமெடி
 
ஹா ஹா ஹா
பிரியா என்பவள் ஆருயிர்த் தோழின்னு நினைத்தால் கடைசியில் பிரியாணியா?
நல்ல காமெடி
எனக்கு பிரியாணி தான் உயிர்த்தோழி?
 
Top