வரம் 12

Advertisement

Writer girl

Well-known member
Member
வீட்டிற்கு வெளியே இருந்த பூங்கா போன்ற பகுதியில் நின்று கொண்டிருந்தனர் இருவரும்.

“இந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பேசலாம். வாங்க”என்று மகிழம்பூவனை அழைக்க,

“நான் வரலை அழகி. நீ உட்காரு. நான் ஊஞ்சலை ஆட்டி விட்றேன்”என்றுரைத்தான்.

“நீங்க ஊஞ்சலை ஆட்ட வேண்டாம் மிஸ்டர். மகிழன். நாம பேசத் தானே வந்தோம். ஆரம்பிப்போமா?”என்று அவனிடம் வினவினாள் சஹஸ்ரா.

“ம்ஹ்ம்”என்று தன் சம்மதத்தை தெரிவிக்க,

“உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க உண்மையிலேயே விருப்பம் இருக்கா?”எனக் கேட்டவளிடம்,

“எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உண்மையிலேயே விருப்பம் இருக்கு!”என்று உறுதியாக உரைத்தான் மகிழம்பூவன்.

அதைக் கண்டுப் புருவம் உயர்த்தி மெச்சிக் கொண்டு,”இவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கீங்களே!”என வியந்து தான் போனாள் சஹஸ்ரா.

“ஆமாம்!” என்று அழுத்தமாக கூறியவனை சுவாரசியமாகப் பார்த்து,

“ஆனால் எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா என்ன செய்வீங்க?”என்றவளிடம்,

“நம்ம ரெண்டு பேருக்குமே விருப்பம் இருந்தால் மட்டும் தான் இந்தக் கல்யாணம் நடக்கும் அழகி”என்று தீர்மானமாகப் பதிலளித்தான் மகிழம்பூவன்.

“அப்படியா? அப்போ எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னா இந்தக் கல்யாணப் பேச்சையே நிறுத்த வச்சிடுவீங்களா?”எனக் கேட்டு அவனை ஆழம் பார்த்தாள் சஹஸ்ரா.

“கண்டிப்பாக நிறுத்த வச்சிடுவேன்”என்று அவளுக்கு வாக்களிக்க,

“ஆனால் எனக்கு உங்களைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் இருக்கு மிஸ்டர். மகிழன்”என்றவளை நம்ப முடியாமல் பார்த்தான் மகிழம்பூவன்.

அதை அவதானித்தவளோ,”என்னாச்சு? ஏன் என்னை இப்படி சந்தேகமாகப் பார்க்கிறீங்க?”என்று அவனிடம் வினவினாள் சஹஸ்ரா.

“உனக்குத் தான் என்னையும், என் அக்காவையும் சின்ன வயசில் இருந்தே பிடிக்காதே! அப்பறம் எப்படி இந்தக் கல்யாணத்துக்கு உடனே ஒத்துக்கிட்டன்னு யோசிக்கிறேன்”என்றவனிடம்,

“ஆமாம். எனக்கு உங்க ரெண்டு பேரையும் அப்போ இருந்தே பிடிக்காது தான். ஆனால் பிடிக்காத விஷயம் எல்லாம் எப்பவுமே பிடிக்காமலேயே இருக்கனும்னு அவசியம் இல்லையே? அதெல்லாம் எப்போதாவது பிடிச்சுத் தானே ஆகனும்? எனக்கு இப்போ உங்களைப் பிடிச்சிருக்கு! உங்களைக் கல்யாணம் செய்துக்க எனக்கு முழு சம்மதம் தான்!”என்றவளை நெகிழ்ச்சியுடன் பார்த்து,

“உண்மையாகவா சொல்ற அழகி?”எனக் கேட்டான் மகிழம்பூவன்.

“ஆமாம். உண்மையாகத் தான் சொல்றேன்! ஆனால் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு!”என்றவளைக் கேள்வியாகப் பார்க்கவும்,

“நம்மக் கல்யாணத்துக்கு அப்பறம் என்னால் உங்க வீட்டிலேயே வந்து நிரந்தரமாக வந்து தங்க முடியாது! ஏன்னா, என்னோட பிஸினஸ் இங்கே தானே நடக்குது? அதே மாதிரி, நான் உங்களை வீட்டோட மாப்பிள்ளையாகவும் வரச் சொல்ல மாட்டேன்! உங்க வீட்டில் ஒரு மாசம், என் வீட்டில் ஒரு மாசம்ன்னுத் தங்கிக்கலாமா?”என்று அவனிடம் இயம்பினாள் சஹஸ்ரா.

அதைச் சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தவனோ,”ம்ம். சரி. நீ சொல்வதும் நல்ல யோசனையாகத் தான் இருக்கு. நான் இதுக்கு ஒத்துக்கிறேன்”என்று அவளுக்கு உறுதி அளித்தான் மகிழம்பூவன்.

“ சூப்பர்! உடனே ஒத்துக்கிட்டீங்களே!”என்றவளோ,

“அப்பறம், எனக்கு இன்னொரு கண்டிஷன் இருக்கு! அதை வேண்டுகோள்ன்னுக் கூடச் சொல்லலாம்”என்றாள் சஹஸ்ரா.

“எதுவாக இருந்தாலும் சொல்லு அழகி”என அவளிடம் தன்மையாக கேட்டான் மகிழம்பூவன்.

“நான் உங்ககிட்ட உங்க ஊரில் என்னோட தொழிற்சாலையோட ஒரு கிளையைத் திறக்க ஆசைப்பட்டேன்னு சொல்லி இருக்கேன் தானே? நான் அதுக்கான முயற்சிகளை எடுக்கும் போது நீங்க எனக்கு உறுதுணையாக இருக்கனும்! இருப்பீங்களா?”எனக் கேட்டு அவனைக் கூர்மையானப் பார்வையால் துளைக்க,

அவளைச் சில கணங்கள் அழுத்தமாகப் பார்த்து விட்டு,”இருப்பேன்”என்று அவளுக்கு வாக்குக் கொடுத்து விடவும்,

அவனது சம்மதத்தைக் கேட்டவுடனேயே,”உண்மையாகவா சொல்றீங்க? நீங்க அந்தளவுக்கு என்ன விரும்புறீங்களா?”என ஆச்சரியமாக கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

“ஆமாம். நான் உன்னை அந்தளவுக்கு விரும்புறேன் தான் அழகி! ஆனால் நீயும் என்னை அந்தளவுக்கு விரும்பனும்னு அவசியம் இல்லை. உனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்ன்றதே எனக்குப் போதும்!”என்றவனைப் பிரம்மித்துப் போய்ப் பார்த்தாள்.

அவன் தன் மீது இந்தளவிற்குக் காதல் வயப்பட்டுள்ளானா?

இது இவனால் எப்படி முடிந்தது?

இவன் தன் மீது இப்படி ஒரு நேசத்தை வைத்திருக்க என்னக் காரணம்? என்றெல்லாம் அவளது மூளை அனைத்துக் கோணங்களிலும் எண்ணிப் பார்த்தது.

ஆனால் இதற்கெல்லாம் அவளது எதிரில் இருப்பவனிடம் தான் பதில் உள்ளது.

அவள் நினைத்து இருந்தால் தனது கேள்விகளுக்கான பதிலை இப்போதே அவனிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள முடியும் சஹஸ்ராவால்!

ஆனால் அவளுக்கு அவனது விளக்கம் தேவையில்லை!

அவனிடம் கிடைக்கப் போகும் உதவி மட்டும் தான் அவளது கருத்தில் பதிந்து இருந்தது.

அதனாலேயே,”அப்போ சரி மிஸ்டர். மகிழன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம்”என்று அவனிடம் தனது விருப்பத்தை அழுத்தமாக உரைத்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

“சரி. இதை நாம நம்ம வீட்டாளுங்க கிட்டே சொல்லலாம். வா”என அவளை அழைத்துக் கொண்டுத் தங்களது குடும்பத்தாரிடம் சென்றான் மகிழம்பூவன்.

அவர்கள் இருவரின் முகங்களிலும் ஒரு தீர்க்கமான பாவனைக் காணக் கிடைத்தது மற்றவர்களுக்கு.

“என்ன எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டீங்களா? உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தானே?”என்று எதிர்பார்ப்புகள் நிறைந்த குரலில் வினவினார் கஸ்தூரி.

அதே மனநிலையில் தான் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்.

அதைக் கண்டுப் புன்னகைத்து விட்டு,”ஆமாம்மா. இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! நான் எப்போ வேணும்னாலும் இவரைக் கல்யாணம் செய்துக்க ரெடியாக இருக்கேன்”என்று தனது சம்மதத்தை அனைவரிடமும் தெரிவித்தாள் சஹஸ்ரா.

“எனக்கும் இதில் முழு சம்மதம் தான்!”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

அதைக் கேட்ட அனைவரும் துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போயினர்.

அதைக் கொண்டாடும் விதமாக,”நாம இதைக் கண்டிப்பாக ஸ்வீட் சாப்பிட்டுச் செலிபிரேட் பண்ணனும்!”என்று தங்களது வீட்டுச் சமையல் ஆளிடம் இனிப்புச் செய்து கொண்டு வருமாறு உத்தரவிட்டு அனுப்பினார் ரமணன்.

“நீங்க ரெண்டு பேரும் முழு மனதாக கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதைக் கேட்டு எனக்கும் ரொம்ப சந்தோஷம்மா!”என்று கூறித் தன் மகன் மற்றும் வருங்கால மருமகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் பால்ராஜ்.

ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமதியோ தனது சந்தேகம் உறுதியாகி விட்டதை உணர்ந்தாள்.

ஏனெனில் இந்த திருமணத்திற்குச் சஹஸ்ரா இவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் அளித்ததற்குப் பின்னால் அவளுடைய சுயநலமான ஒரு காரணம் இருக்கும் என்பதை முன்னரே அறிந்து இருந்ததால் தான் அதைப் பற்றித் தன் தம்பியிடம் உரையாடித் தெளிவுபடுத்திக் கொண்டு விட்டிருக்க,

அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் தனது சம்மதத்தை அறிவித்து இருந்த சஹஸ்ராவைக் கண்டுப் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டாள் வண்ணமதி.

ஏனெனில், இவை அனைத்தையும் அறிந்திருந்த தனது தம்பியும் கூட இவளைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறான் அல்லவா?

இனி இவர்கள் இருவரும் தான் தங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவும், முடிவெடுக்கவும் வேண்டும் என்று எண்ணிக் கொண்டு,

“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்!”எனத் தன் தம்பி மற்றும் அவனது வருங்கால மனைவிக்கு மனதார வாழ்த்துக் கூறினாள் வண்ணமதி.

அவளைக் கண்கள் இடுங்கப் பார்த்தாலும் கூடத்,”தாங்க்ஸ் மதி”என நன்றி தெரிவித்தாள் சஹஸ்ரா.

உடனே,“நன்றிக்கா”எனத் தானும் தமக்கையிடம் நன்றி நவின்றான் மகிழம்பூவன்.

“ம்ஹ்ம்”என்றவளுக்கோ, உடனே ஊருக்குச் சென்று தனது கணவன் மற்றும் மகனைப் பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் எழுந்தது.

“இதோ ஸ்வீட் செஞ்சிக் கொண்டு வந்துட்டாங்க”என்று தன்னிடம் சமையல் ஆள் கொடுத்து விட்டுச் சென்றப் பாதாம் அல்வா அடங்கிய சின்னச், சின்ன வெள்ளிக் கிண்ணங்களை அனைவருக்கும் ஒவ்வொன்று கொடுத்து உண்ணச் சொல்லி விட்டுத் தானும் ஒன்றை எடுத்துச் சாப்பிடத் தொடங்கி விட்டார் கஸ்தூரி.

தன்னிடம் இருந்த கிண்ணத்துடன் மகிழம்பூவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் சஹஸ்ரா.

அதைப் புன்னகையுடன் பார்த்தனர் அவளது பெற்றோரும், பால்ராஜ்ஜூம்.

ஆனால், இதையெல்லாம் பார்த்து விட்டுச் சஹஸ்ரா தங்கள் முன்னிலையில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்று தான் வண்ணமதிக்குத் தோன்றியது.

அதனாலேயே தனது இனிப்பு அடங்கிய கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு,”நான் ரூமுக்குப் போய் என் புகுந்த வீட்டாளுங்ககிட்டே இந்த விஷயத்தைச் சொல்லிட்டு அங்கே உட்கார்ந்து இந்த ஸ்வீட்டைச் சாப்பிட்றேன்”என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்து விட்டுத் தன் அறைக்குள் புகுந்து விட்டாள்.

அவளது செய்கையைக் கண்டு யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை.

ஏனெனில் அவள் தனது கணவனிடம் எதையும் மறைக்க நினைக்க மாட்டாள்.

அதே சமயம், மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் திருமணம் உறுதி ஆகி விட்டதால் அதை அவளது புகுந்த வீட்டாரிடம் அறிவிப்பதில் தவறேதும் இல்லை என்பதாலேயே வண்ணமதியின் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.

“அப்பறம் மாப்பிள்ளை, தங்கச்சிம்மா! நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்! நம்ம சஹா இந்தக் கல்யாணத்துக்கு இவ்வளவு எளிதாக ஒத்துக்குவாள்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை! ஆனால் இப்போ என் மனசில் இருந்த பாரம் முழுசும் குறைஞ்ச மாதிரி இருக்கு!”என்று ரமணனிடம் மகிழ்ச்சியாக கூறினார் பால்ராஜ்.

உடனே அவரும் தாங்கள் அருகருகே அமர்ந்து பேசிச் சிரித்தபடியே இனிப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த தன் மகள் மற்றும் வருங்கால மருமகனைக் கண்டுப் புன்னகைத்து விட்டு,

“எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு மாமா! என் தங்கச்சியோட ஆசையை நிறைவேத்த முடியாமல் போயிருமோன்னு ரொம்பவே தவிச்சுப் போயிட்டேன்! எங்கப் பொண்ணு நம்ம யாரோட மனசையும் உடைக்காமல் தன்னோட விருப்பத்தை நம்ம எல்லார் கிட்டேயும் சொல்லிட்டாள்”என்றார்.

“ம்ஹ்ம். எனக்குமே அவளை நினைச்சுக் கொஞ்சம் டென்ஷனாகத் தான் இருந்துச்சு! இப்போ தான் எல்லாமே சுமூகமாக முடிஞ்சிருச்சே? இனிமேல் அதைப் பத்தி எல்லாம் யோசிக்கத் தேவையே இல்லை”என்று அவர்கள் இருவருக்கும் அறிவுறுத்தினார் கஸ்தூரி.

இவர்களது பேச்சுக்கள் எல்லாம் கேட்காத நிலையில் மகிழம்பூவனும், சஹஸ்ராவும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

“இந்த ஸ்வீட் பால் பாக்கெட்டை வச்சுத் தான் செஞ்சி இருக்காங்க! ஆனால் உங்க ஊரில் சுத்தமான மாட்டுப் பால் கிடைக்கும் தானே மிஸ்டர். மகிழன்?”என்றவளிடம்,

“ஆமாம் அழகி. நான் உங்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கலாமா?”எனக் கேட்க,

“கேளுங்க”என்றுரைத்தாள் சஹஸ்ரா.

“நீ இனிமேல் என்னை,’மிஸ்டர். மகிழன்’ அப்படின்னுக் கூப்பிடக் கூடாது! சரியா?”என்றான் மகிழம்பூவன்.

உடனே,”அப்போ நான் உங்களை வேற எப்படி கூப்பிட்றது?”என்கவும்,

“மிஸ்டர்ன்ற வார்த்தை இல்லாமல் நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்”என்றதுமே,

“அப்போ ‘பூவன்’னுக் கூப்பிடவா?”என்று அவனிடம் வினவினாள் சஹஸ்ரா.

உடனே,”ம்ஹ்ம். தாராளமாக கூப்பிடு”என அவளுக்கு ஒப்புதல் அளித்து விட்டிருந்தான் மகிழம்பூவன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top