அத்தியாயம் 7
கையில் புத்தகத்தோடு ஓடி வரும் சம்பதாவை என்ன என்பது போல் பார்த்தாள் சம்யுக்தா.
பக்கத்தில் வந்த சம்பதா அந்த புத்தகத்தைப் பிரித்து அதன் முதல் பக்கத்தை காட்ட அதில் அம்மாவின் பேர் எழுதி இருந்தது. சம்யுக்தாவின் முகமும் ஆயிரம் வாட் பல்பானது. அதை டக் என்று வாங்கி புரட்டிப் பார்த்தாள். முதல் பக்கத்தில் பெயருக்கு கீழே முதலாண்டு தமிழ் இலக்கியம் என்று எழுதி இருந்தது. அம்மாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த புத்தகம் வாங்கினாலும் இது இந்த தேதியில் இங்கு வாங்கப்பட்டது என்று எழுதி விடுவாள். அவ்வாறே அந்த புத்தகத்தில் இருக்கவும், அம்மாவின் காலேஜ் பேர் இருக்கவும் அது அம்மாவினுடையது தான் என்று ஊர்ஜிதப் படுத்தினார்கள். டென்சிலும், கேப்ரியலும் வியந்தார்கள்.இருபத்தைந்து வருடத்திற்கு முந்தைய புத்தகம் திரும்ப கிடைப்பதாவது! உலகம் உருண்டை தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.
அம்மாவிடம் காட்டினால் அவள் எவ்வாறு சந்தோஷத்தில் மிதப்பாள் என்று இருவரும் நினைத்தார்கள். அதை விலை கொடுத்து வாங்கி விட்டு புத்தகக் கடையை விட்டு வெளியே வந்தார்கள். வாசலில் இருந்த பானி பூரி கடையில் பூரி வாங்கி வாங்கி அந்த வட இந்தியன் ஊற்றிய புதினாத் தண்ணியை பூரியோடு உடைக்காமல் விழுங்கி (உடையாமல் சாப்பிடுவது தான் கெத்தாம்) வயிற்றை நிரப்பிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
வீடு வந்ததும் சம்பதா ஸ்கூட்டரில் இருந்து இறங்கி காம்பவுண்ட் கேட்டைத் திறந்து விட, சம்யுக்தா வண்டியை போர்டிகோவில் நிறுத்தினாள்.
அம்மா இன்னும் வரவில்லை. மெல்ல பத்து செடி தாண்டி ரோஜாத் தொட்டியில் வைத்திருந்த சாவிக் கொத்தை எடுத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்கள்.
கதவைத் திறந்து உள்ளே வந்தார்கள். சம்யுக்தா சின்கில் இருந்த பாத்திரங்களை கழுவ, சம்பதா கொடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடிக்கத் துவங்கினாள். சன் ம்யூசிக்கில் பாடல் பார்த்துக் கொண்டே அவள் ஒவ்வொரு ஆடையாய் மடித்து மடித்து அம்மாவுடையது, தன்னுடையது, சம்யுக்தாவினுடையது என்று பிரித்து வைத்தாள். பின்னர் அம்மாவுடையதை அவள் ரூமுக்குச் சென்று ஒரு நாற்காலியில் வைத்தாள். அம்மா வந்து தன் பீரோவில் வைத்துக் கொள்வாள். தன்னுடையதை தன் பீரோவில் அதற்குரிய இடத்தில் வைத்தாள். பின்பு சம்யுக்தாவினுடையதை ஒரு சேரில் வைத்தாள்.
மணி ஏழானது.
என்ன அம்மாவை இன்னும் காணவில்லை.
கொறிக்க சிப்சை எடுத்துக் கொண்டு டிவியின் முன் உட்கார்ந்த சகோதரிகள் இருவரும் சிறிது நேரம் கே டிவியில் போட்ட படத்தில் உள்ள காட்சிகளை ரசித்ததில் மணி ஏழரை ஆகி விட்டது. தேவை இல்லாமல் அவர்கள் அம்மாவுக்கு போன் பண்ணுவதில்லை. நேரம் ஆகி விட்டதால் கூப்பிட முனைந்தனர். சம்யுக்தா அம்மாவுக்கு கால் பண்ணினாள்.
ரிங் போயும் எடுக்க வில்லை.
'சம்பதா, அம்மா எடுக்கல.'
'என்ன ஆச்சுன்னு தெரியலயே. நான் ஒரு தடவ கூப்பிட்டு பாக்கறென்.'
சம்பதாவின் காலுக்கும் பதில் இல்லை.
என்ன என்பது போல் சம்யுக்தா பார்க்க, 'எடுக்கல' என்றாள் சம்பதா.
அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசிப்பதற்குள் வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. இருவரும் எழுந்தார்கள்.
வாசலுக்கு விரைந்து யார் என்று பார்க்க, காரில் இருந்து பாலு அங்கிள் இறங்க, பின் சீட்டில் இருந்து அம்மாவை அணைத்தவாறு பூரணி ஆண்டி இறங்கினார். அம்மாவின் முகம் வாடி வதங்கிய ரோஜாப்பூ போல இருக்க, இருவரும் பதறிப் போய் ஓடி அம்மாவின் அருகில் வந்தார்கள்.
'என்னாச்சு அங்கிள்?'
'அம்மாவுக்கு என்ன ஆச்சு ஆண்டி?'
அம்மா ஒன்றும் இல்லை என்பது போல் வெளிறிய உதடுகளால் சிரிக்க முனைய 'உள்ளே போய் பேசலாம்' என்றார் பாலு.
சகோதரிகள் இருவரும் அம்மாவை அணைத்தவாறு மெல்ல கூட்டிச் சென்று அவளது ரூமில் பெட்டில் மெல்ல படுக்க வைத்தனர். பூரணி பக்கத்தில் அமர, பாலுவின் சைகையால் இரு சகோதரிகளும் ஹாலுக்கு வந்தனர். முகம் பதட்டமடைந்து காணப்பட்டது.
'அம்மாவுக்கு என்ன ஆச்சு அங்கிள்? காலைல நல்லா தான இருந்தாங்க?' அழுது விடுவது போல் இருவரும் கேட்டனர்.
'ஒண்ணூம் இல்ல கண்ணுகளா! அம்மாவுக்கு வயசாகுது இல்ல. வயசானா நோய், நொடின்னு வரது நேச்சர் தானேம்மா.'
'அம்மாக்கு என்ன அங்கிள்?'
'ஒண்ணும் இல்ல, லோ ப்ரஷர். ஆபிஸ்ல தல சுத்தி கீழ விழுந்துட்டா. பக்கத்து ஆஸ்பத்திரில சேத்தோம். பூரணி மத்தியானம் சாப்பாடு எடுத்து வந்து பக்கத்திலேயே இருந்தா. ஒங்களுக்கு இன்னிக்கி பர்ஸ்ட் டே காலேஜ்னால போன் பண்ண வேண்டாம்னு நெனச்சேன்.'
'காலேஜ் கெடக்குது அங்கிள். நீங்க இப்படின்னா எங்களுக்கு ஒடனே கூப்டுங்க.' சம்பதா சற்றே எரிச்சலோடு சொல்ல சம்யுக்தா கேட்டாள்.
'அங்கிள்! டாக்டர் என்ன சொல்றாரு?'
'கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்றாரு. யோகா பண்ண சொல்றாரு. அப்பளம் சேத்துக்க சொன்னாரு. தேவை இல்லாம மனசுஅ ஏதும் டென்ஷன் ஏத்திக்க வேண்டாம்னு சொன்னாரு.'
'ம்ம்ம்ம்'
இருவரும் அங்கிளோடு அம்மாவின் அறைக்குள் வந்தார்கள். பெட்டில் சோர்வாய் சார்ந்திருந்த அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்து அவளது கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். அம்மாவின் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
'எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இவங்க நெலம என்ன பூரணி?'
'ப்ச். அப்படில்லாம் ஏதும் நடக்காது வசந்தி. புள்ளைங்க முன்னால என்ன பேச்சு இது? வயசானா ஏதாவது வரும்னு ஒனக்குத் தெரியாதா? இவங்கள மட்டும் பாக்காம இனி ஒன் ஒடம்பயும் மனசயும் நல்லா பாத்துக்கோ. எத்தனயோ பேரு இருபது வயசிலேயே ப்ரஷர், சுகர்னு இருக்காங்க. கொஞ்சம் ஒன் ஒடம்ப பாத்துக்க அவ்ளோ தான்.'
'நாங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலேஜ் போகட்டுமாம்மா?' சம்யுக்தா கேட்க, பாலு குறுக்கிட்டார்.
'ஆளுக்கு ஒரு நாள் காலேஜ் போங்க. ஒருத்தர் அம்மாவ பாத்துக்கங்க.'
அது நல்ல யோசனையாய் பட இருவரும் தலை ஆட்டினார்கள்.
'சரி. நாங்க கெளம்பறோம்.' இருவரும் எழ, 'ரெண்டு தோச சாப்டலாம் ஆண்டி' என்றாள் சம்யுக்தா.
'பரவால்லம்மா. யோகனுக்கு பரீட்ச இருக்கு. நாங்க போயே ஆகணும். '
'ஒரு நிமிஷம் அங்கிள். இந்த அதிசயத்த பாருங்களேன்.' சொல்லி விட்டு எழுந்த சம்பதா ஹாலுக்குச் சென்று பிக் ஷாப்பரில் இருந்த தனது புத்தகக் குவியலில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்து வந்தாள். அது என்ன என்று பாலு அங்கிள் கேட்பதற்குள், 'மொதல்ல அம்மா பாக்கட்டும்.' என்று சொல்லி விட்டு அம்மாவின் கையில் அந்த புத்தகத்தை வைத்தாள்.
வசந்தி தன் கையில் இருந்த அந்த புத்தகத்தை எடுத்து கண்களுக்கு அதைக் காட்டினாள். அடுத்த நிமிடம் தீயைத் தொட்டவள் போல் அந்த புத்தகத்தை வீசினாள். அது அந்த அறையின் மூலையில் பறந்து போய் விழுந்தது. வசந்தியின் கண்கள் இருள, மயங்கினாள்.
(தொடரும்)