காலை கண்விழிக்கையில் உடல் அலுப்பாக இருந்தது அஷ்டாவுக்கு. திருமணத்திற்கு என அலைக்கழித்ததில் இன்னும் இரண்டு நாட்கள் விட்டால் கூட தூங்கிக்கொண்டே இருந்திருப்பாள்.
ஆனால், கொஞ்சமாய் விழிப்பு தட்டியபோதே, தான் இருப்பது ‘மாமியார் வீட்டில்’ என்ற நிதர்சம் நியாபகம் வர, மிச்சம் வந்த தூக்கத்தையும் விரட்டிவிட்டு அவள் எழுந்து அமர்ந்த போது, கட்டிலுக்கு எதிரே இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை வாரிக்கொண்டிருந்தான் வீரா.
அஷ்டா எழுந்துவிட்டதை கண்ணாடி வழியே கண்டவன், “குட் மார்னிங்!!!” என்றான் பல்வரிசை தெரிய, பளிச்சென சிரித்து.
அவன் சிரிப்பில் தன்னை மீறி புன்னகைத்தவள், “குட் மார்னிங்” என்றாள் சன்னமான குரலில். அதை சொல்லி முடிக்கும்போதே, கொட்டாவி வர,
“இன்னும் தூக்கம் கலையலையோ?” என்றான் வீரா.
“ம்ஹும்!!!” என சொன்னவளுக்கு கட்டிலை விட்டு இறங்கவே மனம் வரவில்லை.
‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு’ன்னு சொல்ல மாட்டானா!? என்றிருந்தது.
அவனோ, “மணி இப்போவே ஏழரை ஆச்சுங்க! காலை சாப்பாட்டுக்கே வர சொல்லிருக்காங்க உங்க வீட்டுல… நீங்க குளிச்சுட்டு கிளம்புனா தான் சரியா இருக்கும்!” என்று சொல்ல,
‘ஹை! எங்க வீட்டுக்கு போறோமா?” சிறுபிள்ளைப்போல் அவள் கட்டிலை விட்டு துள்ளி இறங்க,
“ஐயோ, பார்த்து, பார்த்துங்க! விழுந்துட போறீங்க! வீடு கொஞ்சம் பழசு, பள்ளம் விழுந்துட போது” என அவளை சீண்டிவிட்டு அவள் முறைப்பை வேடிக்கைப்பார்த்தான் வீரா.
தன் பெட்டியில் இருந்து ஒரு சுடிதாரை எடுத்தவள், குளியலறைக்குள் புகுந்துக்கொள்ள போக,
“என்ன குடிக்குறீங்க? காஃபியா? டீயா?” என்றான் அவளிடம்.
வெள்ளையில் கருநீல நிற வரிகோடுகள் போட்ட கேஷுவல் ஷர்ட், கருநீல நிற ஜீன்ஸ் சகிதம் ஜம்மென்று தயாராகி நின்றிருந்தான் வீரா. கழுத்தில் மாமனார் வீட்டில் போட்ட இரண்டு பவுன் தங்க செயின், கையில் ஒரு பவுன் மோதிரம், மறுகையில் ஒன்னரை பவுன் ப்ரேசிலேட் என புது மாப்பிள்ளைக்கு உண்டான அம்சத்தோடு அழகாய் நிற்க,
அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள், ‘மாமனார் வீட்டுல வாங்குறதே அவமானம்! இதுல நகை கடை மாடல் மாதிரி அத்தனையும் போட்டுக்கிட்டு ‘போஸ்’ குடுக்குறதை பாரேன்!’ என மனதுக்குள் அவனை வறுக்க,
அதை அறியாதவன், “என்னங்க பார்க்குறீங்க? ட்ரெஸ் நல்லா இருக்கா? மாமா எடுத்து குடுத்தது தான்!” என்றான் உற்சாகமாய்.
‘அதுவுமா?’ என நினைத்தவளின் உதடுகள் கோணலாய் வளைந்தது.
ஒன்றும் சொல்லாமல் அவள் குளிக்க செல்ல, “ஏங்க, காஃபியா? டீயா?ன்னு கேட்டேனே!?” என்றான் வீரா.
“ரெண்டும் இல்ல…”
“வேற? ஹார்லிக்ஸ்?”
“ம்ஹும்! மைலோ” என்றாள் அஷ்டா.
“எது? மைலோ’வா?” முகத்தை சுளித்தான் வீரா.
“ம்ம்ம்! சின்ன வயசுல இருந்தே அது குடிச்சு பழகிடுச்சு”
ஒருமாதிரி தலையாட்டியவன், “குளிச்சுட்டு வாங்க” என்று அறையை விட்டு வெளியேறினான்.
அடுத்து அவள் குளித்துமுடித்து சுடிதாரை மாட்டிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
ஹாலில் விஜயா அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருக்க, சங்கடமாய் நெளிந்தபடி, “சாரி த்தை! லேட் ஆகிடுச்சு” என்றாள் அஷ்டா.
அவள் குரலில் நிமிர்ந்துப்பார்த்தவர், “வாடாம்மா! எழுந்துட்டியா?” என்றார் சிரித்த முகமாய்!
மறுபடியும், “லேட் ஆகிடுச்சு” என சொல்ல, “அதுக்கென்ன? இங்க சீக்கிரம் எழுந்து செய்ய ஒரு வேலையும் இல்லை” என்றவர், தொடுத்து முடித்த மலர் சரத்தை சுருட்டி தட்டில் வைத்துவிட்டு,
“என்னடா குடிக்குற?” என்றார்.
“நான் அவர்ட்ட சொன்னேனே!?” கண்களால் அவனை தேடினாள்.
“அவன்கிட்ட சொன்னியா?” என கேட்டவர், “ரூம்ல இருந்து வெளில வந்தவன் நேரா வண்டியை எடுத்துகிட்டு வெளில போனான்… இன்னும் காணோமே!” என்று சொல்லி,
“எதுவும் வாங்கிட்டு வர சொன்னியாமா?” என்றார் அவளிடம்.
பேந்த பேந்த விழித்தவள், “இல்லையே” என கையை விரிக்க, வாசலில் பைக் சத்தம் கேட்டது.
“வந்துட்டான் போல” என்றார் விஜயா.
உள்ளே நுழைந்த வீரா, கையில் இருந்த கவரை தூக்கிக்காட்டி, “டூ மினிட்ஸ்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் ஓடினான்.
“என்னடா அது?” என விஜயா ஆர்வமாய் கேட்க, கிச்சனுக்குள் இருந்தே, “மைலோ’ம்மா” என்றான்.
“மைலோ’வா? இங்க எந்த பாப்பா இருக்குன்னு மைலோ வாங்கிட்டு வந்துருக்க?” என சிரித்துக்கொண்டே அவர் கேட்டதும் தான், சட்டென மண்டைக்குள் மணியடிக்க, சந்தேகமாய் திரும்பி தன் மருமகளை பார்த்தார் விஜயா.
அவள் நகத்தை கடித்துக்கொண்டு எங்கோ பார்த்தபடி அவஸ்தையாய் நிற்க, “ஹோ! இந்த பாப்பாக்கு தான் மைலோ’வா?” என கிண்டலாய் சிரித்த விஜயாவிடம், “நான் ஒன்னும் பாப்பா இல்ல” என சொல்லி அஷ்டா முறுக்கிக்கொண்டு நிற்க,
“அச்சச்சோ அம்மா! அவங்களை ‘பாப்பா’ன்னு சொல்லாதீங்க! பயங்கர கோவம் வரும்!” என்ற ‘டிஸ்கிளைமர்’ருடன் மைலோ’வை பாலில் கலந்து ஆற்றிக்கொண்டு வீரா வர, அவனை நேருக்கு நேராய் முறைத்தாள் அவள்.
“புடிங்க!” என டம்ப்ளரை அவள் கையில் கொடுத்தவன், “இந்த க்ளாஸ் ஓகே’வா? இல்ல, ஸ்ட்ரா வச்ச மாதிரி ஒரு டம்ளர் இருக்குமே! அது வாங்கி தரவாங்க!?” என்றான் சீரியசாய்.
கோபத்தை அடக்கிக்கொண்டு உதடு பிதுங்க அவன் நீட்டிய கிளாசை வாங்காமல் முரண்டுப்பிடித்துக்கொண்டு அவள் நிற்க, சிரிப்பை அடக்கி, “டேய் கண்ணா, சும்மா பிள்ளையை கிண்டல் பண்ணாதடா! விடு!!!” என விஜயா சொல்ல, அதுவும் அஷ்டாவுக்கு கிண்டலாய் தான் தோன்றியது.
‘எனக்கு ஒன்னும் வேண்டாம்’ என்றாள் சன்னமான குரலில்.
“அட புடிங்க!” என கரம் பிடித்து அதில் டம்ப்ளரை திணித்தவன், “ம்மா! பாப்பாவை ஒன்னும் சொல்லாதீங்கம்மா! சரியா?” என்றான் வேண்டுமென்றே!
கோபத்தை வெளிக்காட்ட முடியாத அழுத்தத்தில் அவள் கண்கள் மெலிதாய் கலங்க, உடனே, “டேய் போய் கிளம்புற வேலையை பாரு, போ” என மகனை அதட்டிய விஜயா,
“அஷ்டாமா நீ இதை குடிச்சுட்டு, வேகமா ரூமுக்கு போய் ஒரு பட்டுபுடவை கட்டிக்கிட்டு வாடா! உங்க வீட்டுல இருந்து சிதம்பரம் தம்பி, உங்களை மறுவீட்டுக்கு அழைக்க வராராம்” என்றதோடு,
“இதுல பூக்கட்டி வச்சுருக்கேன் பாரு! கிளம்பிட்டு தலைல வச்சுக்கோ மறக்காம” என்றார்.
“ம்ம்ம்” என தலையாட்டிய அஷ்டா, மைலோவை குடித்துவிட்டே அங்கிருந்து சென்றாள்.
வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்தில் முருங்கை இலையை பறித்துக்கொண்டிருந்தான் வீரா.
“இங்க என்ன கண்ணா பண்ற?” என கேட்டுக்கொண்டே பின்வாசல் படிக்கட்டில் அமர்ந்தார் விஜயா.
“ரசம் வச்சுட்டேன்! இந்த முருங்கைக்கீரையை துவட்டி வச்சுட்டா நீங்க சாப்பிட்டுப்பீங்கள்ள! அதான் கொஞ்சமா பறிக்குறேன்”
“ப்ச்! என் ஒரு ஆளுக்கு ரசமே அதிகம்! வத்தல் பொறிச்சு வச்சுட்டு சாப்பிட்டுக்குவேன்! நீ முதல்ல மறுவீட்டுக்கு கிளம்பு”
கைநிறைந்த கீரைகளுடன் அவரை நெருங்கிய வீரா, “நீங்களும் எங்களோட வாங்கன்னா கேட்க மாட்டேங்குறீங்கம்மா!” என்றான்.
“நான் எதுக்குடா? அசைவ விருந்தும் சாப்பிட மாட்டேன்! நீங்க மட்டும்ன்னா, திரும்ப வரப்போ எங்கயாவது வெளில போயிட்டு பொறுமையா வருவீங்கல்ல?” என்றார் விஜயா.
இருவரும் தனியாய் வெளியே செல்வதை நினைத்துப்பார்த்தவனுக்கு வெட்கம் பரவ, அதே இதத்துடன் “ம்ம்ம்” என்றான்.
“அப்பறம் கண்ணா?” என இழுத்தார் விஜயா. எதையோ சொல்ல வருகிறார் என புரிய, “சொல்லுங்கம்மா” என்றான் வீரா.
“அஷ்டா உன்னை நம்பி வந்துருக்க பொண்ணு! எதுக்காகவும் அவ வருந்துற மாதிரியான காரியத்தை நீ மனசறிஞ்சு செய்யாத!” என்றார்.
“நான் ஏன்ம்மா செய்யப்போறேன்? கண்டிப்பா பண்ணமாட்டேன்”
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன செஞ்சியே! அதுக்கூட பண்ணாத!” என்றார்.
அவரை நிமிர்ந்துப்பார்த்தவன், யோசனையாய், “அது சும்மா விளையாட்டுக்கும்மா” என்றான்.
“அவ கண்ணு கலங்குச்சுடா! அதுக்கூட வேண்டாம் இனி” என்றார்.
மேற்கொண்டு எந்த நியாயமும் பேசாமல் ‘சரி’ என கேட்டுக்கொண்டான் வீரா.
“சரி, நீ போய் அஷ்டா கிளம்பிட்டாளான்னு பாரு! நான் கௌசிக்கிட்ட போய் ‘உறை மோர்’ வாங்கிட்டு வந்துடுறேன்” என எழுந்து சென்றார் விஜயா.
“அப்ப இதை என்ன செய்யுறது?” என வீரா உரக்க குரல் கொடுக்க, “கிச்சன்ல வை, நாளைக்கு பருப்பு அடை செஞ்சுப்போம்” என சொல்லும்போதே அவர் வாசல் கதவை எட்டியிருந்தார்.
கீரையை வைத்துவிட்டு அன்னை வீட்டை தாண்டி சென்றுவிட்டாரா என நோட்டமிட்ட வீரா, தன் காலடி சப்தம் கூட கேட்காதபடி நைசாக தன் அறைப்பக்கம் ஒதுங்கினான். கதவில் கை வைத்ததுமே அது திறந்துக்கொள்ள, லேசாக தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப்பார்த்தான்.
கண்ணாடி முன்னே நின்றிருந்த அஷ்டா, தன் பின்னலை சீர் செய்துக்கொண்டிருக்க, “ஓ!!! ஷிட்!!!!” என்ற சத்தத்தோடு காலை உதறிக்கொண்டே உள்ளே வந்தான் அவன். முகத்தில் ஏமாற்றம் அப்பிக்கிடந்தது.
திடீரென்ற சத்தத்தில் வேகமாய் திரும்பியவள், இவன் காலை உதறிக்கொண்டு நிற்ப்பதைக்கண்டு பதட்டமாய், “என்னாச்சு?” என்று கேட்க,
“புடவை கட்ட தெரியாம திணறிக்கிட்டு நிப்பீங்க! வந்து ஜாலியா ஹெல்ப் பண்ணுவோம்ன்னு ஆசையா வந்தேங்க! ஒரு செம்ம ஸீனு இப்ப மிஸ் ஆகிடுச்சு! உங்களை யாரு அதுக்குள்ள புடவை கட்ட சொன்னது?”
குழந்தை போல முகத்தை திருப்பிக்கொண்டு அவன் கேட்க, கோவமாய் முறைக்க முயன்றாலும் வரவில்லை அவளுக்கு. முகத்தில் எட்டிப்பார்க்கும் சிரிப்பை மறைக்க வேகமாய் திரும்பிக்கொண்டவள், அவனுக்கு முகத்தை காட்டாது, “கல்யாணம் பிக்ஸ் ஆனதுமே வீட்டுல புடவை கட்டி பழகிக்கிட்டேன்!” என்றாள் சன்னக்குரலில்.
‘இதெல்லாம் என்னத்துக்கு பழகுறீங்க!’ என முனுமுனுத்தவன், “கிளம்பிட்டீங்களா? சிதம்பரம் அண்ணா கிளம்பி வந்துட்டு இருக்குறதா மெசேஜ் பண்ணாங்க” என்றான் தன் பர்சை சரிபார்த்துக்கொண்டு.
அடுத்து சில நிமிடங்களிலேயே சிதம்பரமும் வந்துவிட, விஜயாவிடம் சொல்லிக்கொண்டு தன் பைக்கில் அஷ்டாவை ஏற்றிக்கொண்டு மாமனார் வீட்டு மறுவிருந்துக்கு கிளம்பினான் வீரா.
வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தனர் சண்முகமும், மங்களமும்.
வீராவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளாத குறையாய் இருவரும் மாறி மாறி அவனை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, அடுக்களையில் இருந்து ஓடி வந்து வரவேற்றார் நீலா.
“எப்படி இருக்கீங்க மாப்ள?” முதல் நாள் மாலை வரை பார்த்து பேசியிருந்தாலும் சம்பிரதாயமாய் இதுதான் கேட்க தோன்றியது சண்முகத்திற்கு.
“ரொம்பவே நல்லா இருக்கேன் மாமா” என அஷ்டாவை பார்த்தான் வீரா. அவள் தலைகுனிந்துக்கொண்டாள்.
மங்களம், “அம்மாவை அழைச்சுட்டு வந்துருக்கலாமே தம்பி” என்க, விஜயா அவனிடம் சொன்னதையே இங்கேயும் சொன்னான் வீரா.
அடுக்களையில் தான் சமைத்ததை எல்லாம் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அடுக்கிக்கொண்டிருந்தார் நீலா. அக்காவுக்கு உதவியாய் அங்கே சென்றுவிட்டார் சிதம்பரம்.
பேத்தியின் அருகே இருந்த மங்களம், அவள் கையை சுரண்டி நைசாக அவள் அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அதைக்கண்டு புன்னகையுடன் சண்முகத்திடம் திரும்பிய வீரா, “ட்ரெஸ் நல்லா இருக்கா மாமா? நீங்க ஒண்ணுமே சொல்லல?” என்று கேட்க, அவன் உள்ளே நுழையும்போதே பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டவர், அவன் வாய்விட்டு கேட்கவும்,
“உங்களுக்குன்னே தைச்ச மாதிரி அருமையா இருக்கு! நான் கூட அளவு சரி இல்லாம போய்டுமோன்னு பயந்துட்டு இருந்தேன்” என்றார்.
“அதான் பாருங்க! நான் வராமையே எனக்கு கச்சிதமா பொருந்துற மாதிரி எடுத்துருக்கீங்க! சூப்பர் மாமா” என்றான் வீரா. அவன் பாராட்டில் சங்கோஜமாய் சிரித்தார் சண்முகம்.
அதை கேட்டுக்கொண்டிருந்த சிதம்பரம், தன் அக்காவிடம், “உனக்கு நீ ‘மறுவீடு’ வந்தது நியாபகம் இருக்கா க்கா?” என்றார்.
சிதம்பரம் கேட்கும் முன்னவே அதை தான் நினைத்துக்கொண்டிருந்தார் நீலா.
‘ஏங்க… அப்பா வாங்கிக்குடுத்த டிரெஸ்ஸை போட்டுட்டு வாங்களேன்!’ திருமணமான மறுநாள் தன் முதல் கோரிக்கையை தயங்கி தயங்கி வைத்தார் நீலா.
‘என்னை என்ன ஒன்னுத்துக்கும் வழி இல்லாதவன்னு நினைச்சியா? உங்கப்பா வாங்கி குடுத்ததை தான் நான் போட்டுக்கிட்டு வரணும்ன்னு எந்த அவசியமும் இல்ல எனக்கு! அதைவிட நூறு மடங்கு உசத்தி துணியெல்லாம் என்கிட்ட இருக்கு!’ இது தான் அப்போதைய சண்முகத்தின் பதில்.
‘அப்படி சொல்லு மகனே! இந்தா அவரு போட்ட நகையெல்லாம் கழட்டி வச்சுட்டு நம்ம வீட்டு நகையை போடு! மாத்துக்கு போடவே நாலு தினுசா நகை வச்சுருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கட்டும் உன் பொண்டாட்டி வீட்டுக்காரங்க!’ இது மாமியாராய் மங்களம் சொன்னது!
மறுவீடு விருந்துக்கு போனபோது சண்முகத்தை பார்த்து ஏமாற்ற முகத்துடன் ஏங்கி நின்றிருந்த தன் தந்தையின் தோற்றம் இன்னமும் நீலாவின் கண்களில் நிழல்படமாய் தெரிந்தது.
அவர் முகத்தில் ஒரு சின்ன சந்தோசத்தை பார்க்கத்தானே தான் ஆசைப்பட்டேன்!? முடிந்ததா?!
அவர் ஏக்கம் பெருமூச்சாய் வெளிவர, ஹாலில், “இந்த ப்ரேஸ்லெட் உங்களுக்குன்னே ஸ்பெசலா ஆர்டர் குடுத்து ஆசாரிக்கிட்ட செய்ய சொன்னது! பிடிச்சுருக்கு தானே மாப்ள?” என சண்முகம் கேட்க,
“ரொம்ப அருமையா இருக்கு மாமா” என வீரா சொல்வது அவர் செவிகளில் தெளிவாய் விழுந்தது.
“மாமா’வுக்கு அவரை மாதிரியே ஒரு மாப்பிள்ளை அமைஞ்சுருந்தா எப்படிக்கா இருந்துருக்கும்?” என சீண்டலாய் தன் அக்காவிடம் கேட்டார் சிதம்பரம்.
“ப்ச்! விடுடா! நான் பட்டதை என் பொண்ணு படக்கூடாது! அந்தமட்டிலும் சந்தோஷம்” என்றவர், “எல்லாரையும் சாப்பிட கூப்டு!” என்றார் தம்பியிடம்.
“நான் எப்படிக்கா கூப்பிடுவேன்? நல்லா இருக்காது! நீயே கூப்பிடு உன் மருமகனை!”
“அதுவும் சரிதான்” என்றவர், ஹாலிற்கு வந்து, “தம்பி, சாப்பிடலாமா?” என்றார்.
“அதுக்கு தான் வெயிட்டிங் அத்த! இதோ வந்துட்டேன்” என எந்தவித கூச்சமும், பந்தாவும் இன்றி உணவு மேசைக்கு வந்து அமர்ந்தான் வீரா.
மங்களம் பேத்தியுடன் அறையை விட்டு வந்தார்.
வீராவின் இலை முழுக்க ஊறுகாய் வைக்கக்கூட இம்மி இடமில்லாமல் நிறைந்து வழிந்தது. பறப்பன, நடப்பன, ஊர்வன அனைத்தும் அவன் இலையில் காரசாரமாய் காத்திருக்க, ஒருமுறை பார்த்ததிலேயே பாதி பசி ஓடியதை போல் இருந்தது அவனுக்கு.
அவன் பிரம்பிப்பாய் பார்ப்பதை கண்ட சண்முகம், திருப்தியாய் மனைவியை நிமிர்ந்துப்பார்த்துவிட்டு, “என்ன என்ன வச்சுருக்கன்னு மாப்பிள்ளைக்கிட்ட சொல்லு” என்றார்.
நீலாவும், “பைனாப்பிள் கேசரி” என ஆரம்பிக்க,
‘அட! அட! கேசரி’க்கே கேசரியா? பலே பலே!’ என மனதுக்குள் கெக்களித்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.
நீலா விட்டதை தொடர்ந்தார்.
“ரத்த பொரியல், குடல்கறி, நல்லி எலும்பு, சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, லெக்பீஸ், காடை பிரை, தலைக்கறி, ஈரல் கொத்துக்கறி, ஆட்டுக்கால் பாயா, இறால் தொக்கு, நண்டு மசாலா, கட்லா மீன் வறுவல், சுறா புட்டு, வான்கோழி பிரியாணி… பிரியாணி மட்டும் கடைல வாங்கினது!!!”
‘போதும்! போதும்! லிஸ்ட் ரொம்ப பெருசா போய்க்கிட்டு இருக்கு!’ என கவுன்ட்டர் குடுக்கும் அளவுக்கு நீலா நீட்டிய லிஸ்ட் போய்க்கொண்டே இருந்தது.
“இதெல்லாம் இன்னைக்கு ஒருநாள் சாப்பிடவா அத்த?” வீரா அப்படி கேட்க, சண்முகம் சிரித்தார்.
அஷ்டா, ‘என்ன இவரு லூசு மாதிரி கேட்குறாரு?’ என நினைக்க,
“மாப்பிள்ளைக்கு குசும்பை பார்த்தீங்களா?” என வாய்விட்டு நகைத்தார் சிதம்பரம்.
வீரா இலையை பார்த்துக்கொண்டே இருக்க, “சாப்பிடுங்க தம்பி” என்றார் மங்களம்.
அவன் நீலாவை தான் உற்று பார்த்தான். அவன் பார்க்கவும், “என்ன வேணும் தம்பி?” என நீலா கேட்க, “இதெல்லாம் நீங்க ஒரே ஆளாவா செஞ்சீங்க?” என்றான் ஆச்சர்யம் மேலிட.
“ம்ம்ம்” என்றார்.
“எப்படி அத்தை? காலைல எப்போ எழுந்தீங்க நீங்க?” என்றான் இன்னும் வியப்பாய்.
மங்களம், “அட அதெல்லாம் எதுக்கு தம்பி? நீங்க முதல்ல சாப்பிடுங்க! எல்லாம் ஆறிகிட்டு இருக்கு” என்றிட,
“இல்ல பாட்டி! இத்தனை ஐட்டம் ஒரே ஆளா பண்றதுனா கண்டிப்பா ரொம்பவே கஷ்டம்! அத்தை பாவம்ல” மெய்யான வருத்ததுடன் அவன் சொல்ல, இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என லெக்பீசை கடித்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை தம்பி! சந்தோஷத்தோட எந்த விஷயம் செஞ்சாலும் அதுல இருக்க கஷ்டம் தெரியாது! உங்களுக்காக நான் ஆசையா சமைச்சு வச்சுருக்கேன்! நீங்க நல்லா சாப்பிட்டாலே எனக்கு போதும்!!!” என நீலா சொன்னதும், அவருக்காகவே எப்போது உண்பதை விட சற்று கூடுதலாகவே உண்டான் வீரா.
“அத்த! ஒவ்வொரு ஐட்டமும் தாறுமாறு!” என அபிநயத்துடன் ரசித்து பாராட்டினான். நீலாக்கு நூறு கோடி பூக்களை தன்மீது கொட்டியதை போல ஆனந்தமாய் இருந்தது.
அதன்பின்னே, சண்முகம், சிதம்பரம் இருவரும் அவனுடன் கலந்துக்கொள்ள, பேச்சிலும், சீட்டுக்கட்டிலும் நேரம் ஓடியது வீராவுக்கு.