வாசலில் இருந்த தள்ளுவண்டிகாரரிடம் விரைந்த விஜயா, “தம்பி, அரைகிலோ கேரெடும், பீன்சும் போட்டுடுப்பா” என்று சொல்ல,
“வா’க்கா… புது மாமியாரே! மருமக, மகர் எல்லாம் நலமோ?” என கேலியாய் கேட்டுக்கொண்டே ஒரு ஒயர் கூடையுடன் அங்கே வந்தாள் பக்கத்துவீட்டு கௌசி.
“ம்ம்ம்…. எங்க நலத்துக்கு என்ன குறைச்சலாம்? பக்கத்து வீட்டுக்காரி பார்த்து வவுத்தெரியுற அளவுக்கு அமோகமா இருக்கோம்” என்ற விஜயா,
“இந்தாப்பா! பின்ன வந்தவங்களுக்கு அளந்து போடாம, முன்ன கேட்ட எனக்கு போட்டுக்குடு சீக்கிரமா” என ஏவினார் வியாபாரியை.
விஜயாவின் ஜாடை பேச்சைக்கண்டு விம்மிதம் கொண்ட கௌசி, “அட யக்கா! மவனுக்கு கல்யாணம் முடிச்சதும் முடிச்ச! உன் பவுசெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு போலயே” என்றாள்.
“ம்ம்ம்! ஹும்ம்!” என முகத்தை திருப்பிக்கொண்டார் விஜயா.
“அடங்கொப்பத்தா! தாங்க முடியல க்கா”
கௌசி பேச்சை காதில் வாங்காததை போல, “இந்தாப்பா, போட்டியா இல்லையா?” என்றார் அவரிடம்.
அவர் தினமும் வாடிக்கையாய் அங்கே வருபவர் தான் என்பதால் இருவரின் உரையாடலையும் சிரித்துக்கொண்டு கேட்டபடி தன் வேலையை கவனித்தார்.
“ரொம்பதான் விரட்டாத க்கா! வாங்கிட்டு போன உடனே அப்டியே கமகமன்னு சமைச்சு வைக்க போற மாதிரி பேசுற! எப்படியும் உன் புள்ள தானே சமைக்க போது”
கௌசி நக்கலடிக்க, “என் பையன் ஏண்டி சமைக்கணும்! அதான் என் மருமக வந்துட்டாளே!” என்றார் விஜயா பெருமிதமாய்.
“ஹும்! என்னத்த மருமக வந்து என்னத்த ஆக போது? இதுவரைக்கும் அம்மா புடவையை துவைச்சுட்டு இருந்த பையன், இப்போ பொண்டாடியை உட்கார வச்சுட்டு, அவ புடவையை அலசிட்டு இருக்காப்பல! இந்த புள்ளைக்கு என்னைக்கு தான் வூட்டு வேலைல இருந்து விடிவு காலம் கிடைக்குமோ?!” என அலுப்பாய் சொல்லி அவரை சீன்டிவிட்டவள்,
“நான் ஏற்கனவே காய் வாங்கிட்டேன், காசு குடுக்க தான் வந்தேன்” என்ற கௌசி, காசை வியாபாரியிடம் குடுத்துவிட்டு திரும்ப,
“இங்க பாரு கௌசி, உன் ஓட்டை வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு! இது ஒரு சேதின்னு தெரு முழுக்க பரப்பி விட்டுடாத” என்றார் விஜயா.
“இது தானே இன்னும் ஒரு மாசத்துக்கு தலைப்பு சேதியே! விடுவேனா நானு” என அவள் கெக்கலிக்க,
“அடியேய்! உன்னை கொன்னுடுவேன்” என்ற விஜயா அடிப்பதற்கு ஏதேனும் சிக்குமா என தேட, அதைக்கண்ட கௌசி,
“ஐயோ யக்கா, நான் ஓடிட்டேன்” என்று தன் வீட்டிற்குள் சென்று மறைந்துக்கொண்டாள்.
கௌசியை அடிக்க முடியாத கோவத்தை தன் நடையில் காட்டி வேகுவேகென உள்ளே சென்ற விஜயா,
நேரே பின்கட்டுக்கு சென்று, “டேய் கண்ணா! முதல்ல இந்த காம்பவுண்ட் சுவரை தூக்கி கட்டுடா” என்றார் கடுப்பாய்.
துணியை காயப்போட்டு முடித்திருந்தவன், “ஏன்ம்மா?” என்றான்.
“ப்ச்! இங்க நீ உன் பொண்டாட்டி துணியை துவைக்குறியாம்! இந்த கௌசி கழுதை அதை பார்த்துட்டு வந்து என்னை பரிகாசம் பண்றாடா” என்றார் சிணுங்கலாய்.
“அட போங்கம்மா!” என அசட்டையாய் சொன்னவன், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் குளிக்கப்போக,
அங்கே நின்றிருந்த அஷ்டா, அப்போது தான் தன் முட்டை கண்ணை விரித்துப்பார்த்தாள்.
அவன் துவைத்ததோடு அவள் கொண்டு வந்த போட்ட புடவையையும் அவன் துவைத்து காயப்போட்டிருக்க,
‘ஐயய்யோ!!!’ என பீதியானது அவளுக்கு.
உள்ளே சென்றவன் பின்னே ஓடிய விஜயா, “என்னடா நீ? கண்டுக்கவே மாட்டேங்குற?” என்றார் சலிப்புடன்.
“பார்த்தா பார்க்கட்டுமேமா? நமக்கென்ன வந்ததாம்? சுவரை தூக்கி கட்டிட்டா மட்டும் நம்ம வீட்டுல நடக்கிறது யாருக்கும் தெரியாம போய்ட போதா என்ன? வேவு பார்க்குறவங்க பார்த்துட்டே தான் இருப்பாங்க! அவங்களுக்கு ஆயிரம் வழி கிடைக்கும்!”
“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு!!! ப்பே” சிறுபிள்ளைபோல முகத்தை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார் விஜயா.
அதை கண்டு மென்னகையுடன் அவன் குளியலறை போக, “ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்!!!” என ஓடி வந்தாள் அஷ்டா.
கண்கள் விரிய, “என்னங்க? எனக்கு முதுகு தேய்ச்சு விட போறீங்களா?” என ஆவல் போல கேலியுடன் அவன் கேட்க, அவள் முகம் ‘உர்ர்’ரென்றானது.
“சரி சரி! என்னனு சொல்லுங்க”
முறைப்பை விட்டவள், “நீங்க எதுக்கு புடவை எல்லாம் துவைச்சீங்க? நானே செஞ்சுருப்பேன்ல?” என்றாள்.
“யார் செஞ்சா என்ன இப்போ?”
“அது இல்ல! அது… அதெப்படி நீங்க போய்?”
“ஏங்க, நீங்க காலைலேயே குளிச்சு இவ்ளோ பிரெஷா இருக்கீங்க! இதுக்குமேல துவைக்குறேன்னு போய் ஈரத்துல நின்னா துணியெல்லாம் ஜில்லுன்னு போய், நீங்களும் டயர்ட் ஆகிடுவீங்க! அதான் என்னோட சேர்த்தே உங்களுதும் துவைச்சுட்டேன்”
“நாளைல இருந்து நானே துவைச்சுப்பேன்!” சன்னமான குரலில் தீனமாய் சொன்னாள்.
“அதை நாளைக்கு பார்த்துக்கலாம்! நீங்க போய் சாப்பிடுங்க” என்று அவன் குளிக்கப்போக,
“வாசிங் மெசின்? வாசிங் மெசின் இருக்கு தானே?” என்றாள், ‘கடவுளே இருக்கனும்’ என வேண்டிக்கொண்டு.
“ஓ! இருக்கே!”
‘ஹப்பா!’ என நிம்மதியானவள், “ஆமா, அது இருக்கப்போ நீங்க ஏன் கல்லுல துவைக்குறீங்க? மெசின் ரிப்பேரா?” என்றாள் சந்தேகமாய்.
“அதெல்லாம் நல்லா தான் இருக்கு! நான் தான் அதுல போடல!” என்றவன்,
“நான் பெருசா உடல்பயிற்சி’ன்னு எதையும் செய்யுறது இல்லங்க! அதுக்கு நேரமும் இல்ல! அதான் இந்த மாதிரி வீட்டு வேலை செய்யுறப்போ சொகுசு பார்க்காம குனிஞ்சு நிமிர்ந்து செய்வேன்”
“ஓ!…..ஓ” என ஒரு மாதிரி இழுத்தாள் அஷ்டா.
“இப்பவாச்சும் நான் குளிக்க போலாமா? மகாராணி உத்தரவு தருவீங்களா?” அவன் போலி பணிவுடன் கேட்க, “அய்ய… கிளம்புங்க! கிளம்புங்க!” என்றவள் விறுவிறுவென ஓடினாள் அறையை விட்டு!
வெளியே இருந்த விஜயாவிடம் சென்றவள், “அத்தே! அது நான் சொல்லல” என்றாள் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த கதையாய்.
“என்னம்மா சொல்லல?”
“இல்ல… அவர்கிட்ட என் புடவையை துவைக்க சொல்லி நான் சொல்லல! நீ எதுவும் என்னை தப்பா…….?” சொல்வதை அவள் முடிக்கும்முன்னே,
“அவன் உன் புருஷன்! உனக்கு என்ன வேணாலும் அவன் செய்யலாம்! இதுல நான் என்னம்மா சொல்லப்போறேன்?” என்றார் விஜயா.
அவளுக்கு ஆச்சர்யமும் வியப்பும் போட்டிப்போட்டது.
“பொதுவாவே நான் அடுத்தவங்க விஷயத்துல மூக்கு நுழைக்காத ஆளு! அதுலயும் இப்போ மருமக’ன்னு நீ வந்தாச்சு! இன்னமும் என் புள்ள இதை பண்ணக்கூடாது, அதை பண்ணக்கூடாதுன்னு நான் சொல்லிட்டு இருந்தா அது நல்லா இருக்காதுடாமா!!!” என்றவர்,
“நீங்க அடிச்சுக்கோங்க… புடிச்சுக்கோங்க! அதெல்லாம் உங்களோட! என் வரைல, நான் உங்களுக்கு நடுல வர மாட்டேன்! எனக்கு வேண்டியதெல்லாம் நீங்க மனசொத்து கடைசி வரைக்கும் நல்லா வாழனும் அவ்ளோதான்!” என்றார்.
அவள் பிரம்மிப்பாய் பார்த்துக்கொண்டு நிற்க, அவள் கரம் பற்றி அருகே அமர்த்தியவர்,
“ரொம்ப நல்ல மாமியாரா இருக்காளேன்னு யோசிக்குறியா?” என்றார்.
அவள் ‘ம்ம்ம்’ ‘ம்ஹும்’ என குழப்பத்தில் தலையை உருட்ட, செல்லமாய் அவள் தலையில் தட்டிய விஜயா,
“நான் இப்படி சொல்றதுக்கு பின்னாடி என்னோட சுயநலமும் இருக்கு” என்றார்.
அவள் விழியாலே, ‘என்ன?’ என்று கேட்டிட,
“இப்போ மாமியார் அதிகாரத்தை எல்லாம் கைல எடுத்துக்கிட்டு உன்னை எதாவது சொல்றது, உங்களுக்குள்ள வரதுன்னு இருந்தேன்னு வை… நாளடைவுல உனக்கு என்னை பிடிக்காம போகும்! சண்டை வரும்!
நம்ம சண்டை போட்டா அது என் புள்ளையை பாதிக்கும். அம்மா பக்கமா? பொண்டாட்டி பக்கமா? எந்த பக்கம் போறதுன்னு தெரியாம திணறுவான்.
அவன் என் பக்கம் வந்தா அவன் வாழ்கை போய்டும்! இதே உன் பக்கம் போய்ட்டா, எனக்கு என் புள்ள போய்டுவான்!
இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க பந்தம் அவன் மட்டும் தான்! அவன் கஷ்டப்படுறதையோ, இல்ல அவன் என்னைவிட்டு போறதையோ நான் துளியும் விரும்ப மாட்டேன்!
அதான் இப்படி” என்றார் இதழில் புன்னகையும், கண்களில் நீரும் சேர!
வார்த்தைகள் இன்றி அவரையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.
“ரொம்ப செல்பிஷ்’ஷா இருக்கேன்னு தோணுதா?” அவர் கேட்க, “ச்ச…ச்ச…” என்றாள் உடனே!
“இங்க பாரு அஷ்டா! நம்ம மட்டும் தான் புருஷங்களுக்கு வேலை செஞ்சு குடுக்கணும்ன்னு இல்ல… அவங்க எதாவது செஞ்சு குடுத்தாலும் தயங்காம வாங்கிக்கலாம்!
அதுலயும் என் புள்ள இருக்கானே…!? அவன் மாதிரி ஒருத்தனை பார்க்குறதே கஷ்டம்” என்றவரின் குரலில் தன் மகனை குறித்த பெருமிதமே ஓங்கி இருந்தது.
“இருவது வயசுல குடும்ப பொறுப்பை முழுக்க முழுக்க அவன் கைல எடுத்தப்போ, ‘உங்களை ராணி மாதிரி பார்த்துப்பேன்’ம்மா’ன்னு சொன்னான்! நிஜமாவே என்னை ஒரு ‘மகாராணி’ மாதிரி தான் வச்சுருக்கான்” என்றவர்,
அஷ்டாவின் கரத்தை அழுத்தி, “கண்டிப்பா அவன் உன்னையும் ‘மகாராணி’யா தான் தாங்குவான்!” என்றார் உறுதியான குரலில்.
அவரிடம் பேசிக்கொண்டு வீட்டின் வெளியே வந்தவளுக்கு அவர் சொல்லிய வார்த்தைகள் எல்லாம் செவிகளுக்குள் சென்று ஒரு மோன நிலையை உண்டாக்கியிருந்தது.
‘தன்னை ராணி போல தாங்க ஒருவன் இருக்கிறான்’ என்ற நினைப்பே நெஞ்சில் தித்திக்க, வாயிலின் இருபுறமும் செழித்து நின்ற ஜாதிமல்லியை கண்ணார கண்டாள்.
சற்று முன்னே அவனிடம் பேசியது நினைவில் வந்தது.
வீரா, “வாசல்ல நுழையும்போதே ‘கமகம’ன்னு ஒரு வாசம் வருதே! அதை நின்னு அனுபவிச்சுருக்கீங்களா?”
‘ம்ஹும்’ என அவள் தலையசைக்க, “இனி நின்னு பாருங்க! ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி, மூச்சை நல்லா உள்ள இழுத்து, அந்த வாசனையை அனுபவிச்சு பாருங்க! மனசுல என்ன கவலை இருந்தாலும் ரெண்டே நிமிஷத்துல காத்தா கரைஞ்சு போகும்!!!”
அவன் சொன்னதை செய்ய வேண்டும் போல தோன்ற, கண்ணை மூடி, நிதானமாய் மூச்சை உள்ளிழுத்தாள்.
சந்தன மல்லியும், ஜாதிமல்லியும் தங்கள் வாசனையை வஞ்சனையின்றி அள்ளி வழங்க, அவள் சுவாசத்தில் படர்ந்த நறுமணத்தை கண்மூடி அனுபவித்தவளுக்கு, மனதுக்குள் ‘அவளவன்’னை அன்றி வேறேதும் நினைவிருக்கவில்லை.
இதே நிலை அடுத்த ஒருவாரமும் தொடர்ந்தது.
ஜோதி தன் இருப்பை உணர்த்த அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.