“… இவர வெளில விடுறது அவ்வளவு நல்லதா படல எனக்கு…” என்று கோதை ஒரு துப்பாக்கியுடன் பேட்ரீசியோவை நெருங்கவும் அவருக்கு தூங்குவதுபோல் நடிப்பது மிகவும் சிரமமாகிப் போனது. ஆனால் அந்த பய உணர்வை வெளிக்காட்டாமல் நேர்த்தியாக நடித்துவிட்டார்.
“நமக்கு கிடைக்க வேண்டிய பொருள் வந்தபிறகு எதுவும் முடிவு செய்யலாம்.. பொறுமையா இரு…” நீல் இவ்வாறு சொல்லிவிட்டு அங்கிருந்த அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு வெளியேறினான்.
வெளியில் சென்ற நீல் சிறிதுநேரம் நின்று இவரையே பார்ப்பதுபோல் தோன்றியது.
அவர்கள் சென்றது உறுதியான பின்பு கண்களைத் திறந்தார் பேட்ரீசியோ.
நீல் உடன் இருந்தால் தன் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை… இந்திரநீலமும் தனக்கு கிடைக்காது என்பது அவருக்குப் புரிந்தது.
அவர்கள் வந்திருப்பார்களா இல்லையா என்னும் குழப்பமிருந்தாலும், எப்படியும் சென்று ஒருகை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
நாம் போய் அதனை அருங்காட்சியகத்திற்கு என்று சொல்லி வாங்கிவிட வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு சக்தி மிகுந்த இந்திரநீலம் இவன் கைக்கு சென்றுவிடும். அதன் விளைவுகள் கனவில் கூட காணாதவையாக இருக்கும். இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு அவர்கள் அறைதேடிச் சென்றார்.
◆◆◆
அந்த நேரம் இனியா மற்றும் கோதை தங்கியிருந்த அறையில் சத்தம் கேட்டது.
“இனியா… இவரு தான் காணாம போன என் அப்பா… நம்ம கப்பல் தளத்தில் மயக்கப்பட்டு கிடந்தார்… அவருக்கு சொந்தமான பொருளை மித்ரனும் அவர் நண்பர்களும் வச்சுருக்காங்க… அத வச்சு கடந்த காலத்துக்கு பயணம் செய்ய முடியும்…அத இழந்ததுனால தான் இவருக்கு அவ்ளோ கஷ்டம்… ” என்று கோதை சொல்லவும் அங்கே மறுபேச்சின்றி அமைதி நிலவியது.
இனியா ஒன்றுமே விளங்காது விழித்தாள் என்று தோன்றியது.
பின் நீல், தான் அங்கு சென்றது, சிறையில் துன்பப்பட்டது, பின் இவர்களிடம் இருக்கும் இந்திரநீலத்திற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது என்று எல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் எப்படி வந்தேனென்று புரியாமல் இங்கே வந்துவிட்டேன் என்று கூறினார். கேட்கும் யாருக்கும் அவர் மேல் தவறு எதுவுமே இல்லை என்பதுபோல் தோன்றும்.
“இதுக்காக தான் அந்த செய்யுள் பத்தி கேட்ருக்காங்க…ஆனா நம்மகிட்ட எதுவுமே சொல்லல… இப்போ கூட போய் கேப்போம்… சொல்ல மாட்டாங்க… நீ வேணா பாரு..” என்று கோதை சொல்ல…
“வேணாம் கோதை… எதுக்கு கேக்கணும்… அப்பா தான் நல்லபடியா வந்துட்டாங்களே.. எல்லாம் ஊருக்கு போய் பேசிக்கலாம்.. இப்போ இருக்க பிரச்சனையே போதும்” என்று சொன்னாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பேட்ரீசியோ இந்திரநீலம் அவர்களிடம் தான் இருக்கும் என்று நினைத்து மித்ரன் அறைக்கு வர, முதலில் அந்த அறையில் யாருமில்லாதது போல் தோன்றியது.
உள்ளே வந்தபோது இவர்கள் அவரை தாக்கி நிலைகுலையச்செய்ததும் தடுமாறிபோனார். தன் பதவி பற்றியெல்லாம் சொல்லி… விரைப்பாகப் பேச நினைத்ததெல்லாம் மழுங்கி, உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதானது. சின்னபிள்ளைகள் முன் அவமானப்பட்டது போல் தோன்றியது. இனி ஒருபோதும் பேராசை வேண்டாம் என்று அவர் மனம் முடிவு செய்தது.
இன்னும் சொல்லவேண்டியது நிறைய மீதமிருக்கும் நேரத்தில் இனியாவும் கோதையும் வந்துவிட்டார்கள். கோதையைக் கண்டதும் இவருக்கு அனைத்தும் மறந்துபோனது. ஒரு பெண் கொலை செய்வது பற்றி அவ்வளவு சாதாரணமாகப் பேசுவாள் என்று அவர் நினைத்ததில்லை.
அதன்பின் எல்லாம் துரிதமாக நடந்தேற, மீதிக்கதையை முடிக்காமல் விட்டதற்காக அவர் மனம் அவரை அரித்துக்கொண்டிருந்தது.
பேட்ரீசியோ தங்கியிருந்த அறை, இன்னும் எல்லா அறையிலும் தேடியாயிற்று. எங்கேயும் அவர்கள் இல்லை.
கப்பலில் இருந்து படகுகள் இறங்குமென்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நேரடியாக கடற்கரைக்கு அருகிலுள்ள துறைமுகத்தில் கரைசேர்ந்து மக்கள் நிலத்தில் இறங்கிக்கொண்டிருந்தனர்.
“அப்படின்னா… இது பூம்புகார் இல்ல…” மற்றவர்களின் மனதில் தோன்றிய குழப்பம் தீர மித்ரன் வாய்திறந்து பதிலளித்தான்.
ஆம்… அவர்கள் கணிப்பு சரியே… அது இராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் துறைமுகம்.
“ஒருவேளை இலங்கையின் மறைவில் இருக்கதால ஆழிப்பேரலை இந்த பகுதியை தாக்கியிருக்காது. அதனால, இங்கே கப்பலை கொண்டுவந்து இருக்கலாம்” ஆதி சொல்வதைக் கேட்டு மித்ரன் ஆமோதித்தான்.
அதுதான் உண்மையும் கூட…
◆◆◆
அப்போது கப்பல் தலைவர் அறையிலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது…
“இனியாவும் அனன்யாவும் உயிரோட வேணும்னா யாராவது ஒருத்தர் மட்டும் இங்க வரனும்..நீங்க தாமதிக்குற ஒவ்வொரு நொடியும் தோட்டா அவங்கள நெருக்கிட்டே இருக்கும்” இதுவரையில் கேட்டிடாத அந்த ஆழமான நடுங்கவைக்கும் குரல் மயிர்கூசச்செய்தது.
ஆதி தடதடவென்று ஓடத்தொடங்க… மித்ரன் அவனை நிறுத்தினான்.
“கண்டிப்பா இது நீல் தான்…” பேட்ரீசியோ வெளிறிப்போன முகத்துடன் முணுமுணுத்தார்…
“நீ தான் இளவரசர் ன்னு நெனச்சுட்டு இருக்கான்… உன்னை பாத்தா எதுவும் செஞ்சுடுவான்…” என்று மித்ரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதை கேட்காமல் ஆதி “நான் போறேன் மச்சா… நீ இங்க இரு…” என்று அவன் கையை தள்ளினான்.
“அவர் சொல்றத கேளுங்க ஆதி… நீங்களும் முக்கியம்..” என்று பேட்ரீசியோ சொல்ல, மித்ரன் ஆதியின் தோளைப்பிடித்து அவனை அமர வைத்தான்.
“இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் பேச்ச கேளு… இதுக்கு மேல உன்ன தடுக்க மாட்டேன்…” என்று சொல்லிவிட்டு கப்பல் கட்டுப்பாட்டு அறையை நோக்கி சென்றான்.
அங்கே ஒரு ஓரமாக அனு மற்றும் இனியா ஒன்றாக கட்டிப்போடப்பட்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த மித்ரனுக்கு இதைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. “உனக்கு என்னதான் வேணும்… எதுக்கு இப்படி எங்கள பாடா படுத்துற…” என்று கேட்க அங்கே கதவுக்கு அருகில் நின்றிருந்த கோதை மித்ரன் கைகளை பின்னாலிருந்து பிடித்து மடக்கி அவனை மண்டியிட வைத்தாள். அவன் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தாள். நிச்சயமாக ஒருவர் அறியாமல் அவரை இவ்வாறு தாக்கி செயலிழக்கவைக்க பெரும் பயிற்சி தேவை.
நீல் அப்போது மித்ரன் அருகில் வந்து “இந்த ரெண்டு பேரையும் உயிரோட விடணும்னா, நான் கேட்கிற ஒரு விஷயத்தை நீ தரணும்…” என்று அவன் முடியைப் பிடித்து தலையை ஒரு சுற்று சுற்றிக் கொண்டே சொன்னான்.
வலி கடுமையாக இருந்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு பல்லைக் கடித்தபடி “அப்படி எங்க கிட்ட என்ன இருக்கு… இவங்கள விட எதுவும் முக்கியம் இல்ல… தந்துடறோம்” என்று மித்ரன் மூடியிருந்த கண்களைத் திறந்தான்.
“அந்த இந்திரநீலத்தை எனக்கு நீங்க தரணும்…” சலனமில்லாமல் துப்பாக்கியை பார்த்தபடி நீல் பேசினான். இரக்கமில்லாத அவன் இறுகிய முகத்தைப் பார்க்கவே தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல் தோன்றியது மித்ரனுக்கு.
“அது இப்போ எங்ககிட்ட இல்ல…” என்று சொல்லும்போதே அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது.
இனியா ஆவேசமாக “ இந்திரநீலம் உன்கிட்ட இருந்ததை நான் பார்த்தேன். அத நான் பார்த்தவுடன் தானே என்னை நீ கட்டிவச்ச… இப்போ அவர் கிட்ட கேக்குற..” என்று கத்தினாள். அழுகை தொண்டையை அடைத்தது.
திரும்பி அவளை நீல் ஒரே ஒரு பார்வை பார்க்க அவளும் நடுங்கி அமர்ந்தாள்.
நிற்காமல் அவள் தேகம் நடுங்கிக்கொண்டே இருந்ததை கவனித்த மித்ரன் நெஞ்சம் உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தது.
“ எனக்கு கடலில் மூழ்கின சுவருக்கு கீழ இருக்க இந்திரநீலம் வேணும். அதை நீயோ உன் நண்பனோ போய் எடுத்துட்டு வரணும். அப்படி எடுத்துட்டு வந்து தந்தா இவங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுவேன்..” என்று தன் கையிலிருந்த தோட்டாக்களை தூக்கிப்போட்டு பிடித்தபடி சொன்னார் நீல்.
கடலுக்கடியில் சென்றுவரவேண்டுமென்று சொன்னதும் மித்ரன் அடைந்த அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
“இப்போ நாம பாம்பன் கிட்ட இருக்கோம். பூம்புகார்ல இல்ல… எப்படி எடுக்கறது…? அதுவும் 100 அடி ஆழம் இருக்கும் அந்த இடத்தில்”. என்று மித்ரன் சொல்ல..
நிதானமாக அவனைச்சுற்றி நடந்துகொண்டே “அது எனக்கு தெரியாது… உனக்கு இந்த பொண்ணுங்கள உயிரோட பாக்கணும்னு ஆசை இல்லையா… ஒருவேள இருந்தா… நான் சொல்றத செய்…” என்றார் நீல்.
மித்ரன் மூளை அதிவேகமாக இயங்கத் தொடங்கியது. அவன் படித்த மரைன் இன்ஜினீரிங் மனதில் நம்பிக்கை கொடுக்க இதுவரை இருந்த அச்சம் மெது மெதுவாய் விலக ஆரம்பித்திருந்தது.
எவ்வாறு கப்பல் ஓட்டுவது என்று பயிற்சிகள் எடுத்தும் இருக்கிறான். ஆழ்கடல் நீச்சலுக்கும் பயமில்லை. ஆனால் பயமெல்லாம், எப்படி அந்த மற்றொரு கல்லை கண்டுபிடித்து எடுப்பது என்பதில் தான்.
இன்னொரு பெரும் சங்கடம் இதில் இருக்கிறது. நீச்சல் மிகவும் பிடித்ததாக இருந்தாலும், ஆழ்கடலுக்குள் மூழ்கும்போது அவனுக்கு சிலநேரங்களில் ரத்த அழுத்தம் உயர்ந்து மயக்கம் வந்துவிடும். அதனால் தான் கப்பலில் அவன் செய்த வேலையை விட்டுவிட்டு ஆராய்ச்சிப் பணியில் சேர்ந்தான். இதை வெளியில் சொல்லி அனுதாபம் தேடிக்கொள்ள அவன் ஒருபோதும் விரும்பியதில்லை.
இப்போதும் இவர்களிடம் இதை சொல்லாமல் மறைக்கவே அவன் மனம் எண்ணமிட்டது.
“உன்னோட நிபந்தனைகளுக்கு நான் சம்மதிக்கிறேன். ஆனா எல்லாம் முடிஞ்ச பிறகு எங்கள வெளில விடுவீங்கன்னு எப்படி நம்புறது..?” என்று மித்ரன் கண்களை சுருக்கிக்கொண்டு கேட்டான்.
“இந்த கப்பல்ல இருக்க தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமா நீங்க யாருக்கு வேணும்னாலும் தகவல் அனுப்புங்க. அதப்பத்தி எனக்கு கவலையில்லை… எனக்கு தேவை அந்தக்கல் மட்டும் தான்… நான் அவ்ளோ மோசமான வில்லன் இல்ல… ஆனா என்னப்பத்தியோ இல்ல என் பொண்ண பத்தியோ வெளில யாருக்கும் தெரியக்கூடாது…மீறி தெரிஞ்சா…! ” என்று சொல்லிவிட்டு தூரத்திலிருந்தே துப்பாக்கியை அனன்யாவின் தலை மீது குறிவைத்து சுடுவதுபோல் காண்பித்தார்.
“ உங்கள பத்தி நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். அதேபோல எங்களையும் விட்ருங்க..” என்று சொல்லிவிட்டு எழுந்துகொள்ள முயன்றவனின் அருகில் சென்று “நீ ரொம்ப புத்திசாலின்னு எனக்கு தெரியும். ஆனா அதை என்கிட்ட காட்டணும்னு நினைக்கவேணாம். ஜாக்கிரதை..” என்று எச்சரித்து அனுப்பினான் நீல்.
மித்ரன் சோர்ந்து போய் வந்தாலும் அவன் முகத்தில் சிறு தெளிவு தெரிந்தது. அவன் அறைக்குள் நுழையும் முன்னரே ஆதி ஓடிச்சென்று “என்னாச்சு மச்சா… ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு.. அவன் என்ன சொன்னான் ?” என்று பதட்டத்துடன் வினவினான்.
மேலே சொன்ன நிபந்தனைகளைக் கேட்டு ஆதி முழுவதுமாக அதிர்ந்து நின்றான். “பேட்ரீசியோ சொன்னது போலவே நீல் ரொம்ப கொடூரமானவன் தான்” என்ற ஆதி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொண்டான்.
பேட்ரீசியோ அந்தக்கல் தேடப்படுவதன் நோக்கம் இதுவாக இருக்குமென்று ஒரு யூகத்தை அவனிடம் கூறியிருந்தார்.
“அந்த இரண்டு கற்களும் சேரும் போது உண்டாகும் ஆற்றல் மிகப் பெரியது. அந்த ஆற்றலை பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிக்கும் நோக்கத்துடனே தான் நீல் அதனை தேடுகிறான்” என்றார்.
ஆதி “இது குவாண்டம் பிசிக்ஸ்… இப்போதான் எனக்கு எல்லாமே சரியா புரியுது” என்று சொல்ல… “தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசாத ஆதி… நமக்கு நேரம் குறைவா தான் இருக்கு…” என்று சூடானான் மித்ரன்.
“அதாவது காலப்பயணம் என்பது இரண்டு கருந்துளைகள் (black hole) ஒன்னா சேரும் இடத்தில் நடக்கும்.
Interstellar படம் பாத்திருக்கோம்ல…. அதே மாதிரி…
கருந்துளை அண்டத்தின்(universe) இரண்டு பகுதிகளை அல்லது இரண்டு காலங்களை(time periods) இணைக்கும். இரண்டு பிளாக் ஹோல் கிண்ணம் போல ஒன்னு பின்னாடி ஒன்னு ஒட்டி இருந்தா, ஒரு கருந்துளை வழியா அடுத்த கருந்துளைக்குள் நுழையும்போது நம்ம வேறொரு பரிமாணத்திற்கு போகலாம். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள பாதையை wormhole அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் இது நாள் வரை இது வெறும் கருதுகோளா(theoritical concept) மட்டும் தான் இருந்ததுன்னு நெனச்சேன். இப்போதான் அது உண்மைன்னு நான் உணர்றேன்” என்று ஆதி சொல்ல பேட்ரீசியோ அதை ஆம் என்பதுபோல் தலையசைத்து, கண்களை மூடி ஒரு மூச்சிழுத்து வெளிவிட்டார். நீல் கைகளில் இருக்கும் இந்திரநீலம் உலகை என்னவாக மாற்றபோகிறதோ என்னும் அச்சம் வாட்டியது அவரை.
“ ஆனா கருந்துளைக்குள் போன எந்த பொருளும் திரும்பி வராது அப்படின்னு தானே படிச்சிருக்கோம்…?” என்று மித்ரன் புறந்தலையை தேய்த்தான்.
“சித்தர் நம்மகிட்ட முன்னயே சொன்னது மாதிரி, நமக்கு தெரிஞ்ச விஷயம் தான் உண்மைன்னு நெனைக்கிறோம். ஆனா உண்மை ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வெவ்வேறா இருக்கு.. நம்மால நம்ப முடியாத விஷயங்கள் உலகத்துல நிறைய இருக்கு. புரிஞ்சவன் அதை அறிவியல்ன்னு சொல்லி சோதனைக்குழாயில் போட்டு அலசுறான். புரிஞ்சுக்க முடியாதவன் அதை கடவுள்ன்னு சொல்லிட்டு கடந்து போயிடறான்… அவ்ளோ தான்” என்று ஆதி சொல்லிக்கொண்டிருக்கிம்போதே மிதமாக காற்று வீசியது.
அசரீரி ஒலித்தது…. “உன் வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. காலதாமதம் வேண்டாம். வீண் வாதம் வேண்டாம். செயலைத் தொடங்குங்கள்…” என்றது அந்த ஆண்குரல்.
அனன்யா மற்றும் இனியாவை கட்டிபோட்டிருந்த இடத்தின் அருகில் அவர்களோடு கொஞ்சம் தள்ளி தரையில் அமர்ந்தபடி கோதை கடல் பரப்பை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். நீல் அங்கே இல்லை.
அவளை பார்த்து “எப்படி டி இவ்வளவு நாள் என் கூட பழகின… ஆனா உன்ன பத்தின எந்த விஷயமும் எனக்கு தெரியாம..” என்று சொல்லி முடிப்பதற்குள் இனியா ஆத்திரம் தாங்காமல் திணற…
அனன்யா பேசினாள் “நீ இப்படி எங்கள முதுகுல குத்துவன்னு நெனச்சதே இல்ல கோதை… சின்ன குழந்த மாதிரி சிரிச்சுட்டு சுத்துன உனக்குள்ள இப்படி குரூரமான ஒரு முகம் இருக்கும்ன்னு தெரியாம போச்சு எனக்கும்…” அவள் அடிமனத்திலிருந்து அழுத்தமான வார்த்தைகள் வெளிவந்தன.
“ஹேய்… சும்மா பிநாத்திக்கிட்டு இருக்காதீங்க… நான் எங்க அப்பாவ தேடுறதுக்காகத்தான் இங்க ஆராய்ச்சி உதவியாளரா சேர்ந்தேன். இங்க வரணும் இந்திரநீலம் எங்க கைக்கு கிடைக்கணும்ங்கிறது எல்லாம் எங்களோட ரொம்ப நாள் கனவு… உங்கள ஏமாத்தி எதுவும் செய்யல… வாய மூடலன்னா நடக்குறதே வேற… சொல்லிட்டேன்..” லாவகமாய் தன் குதிரைவால் சடையை இன்னும் உயர்த்தி இருக்கியபடி சொன்னாள் கோதை. அவள் பேச்சில் வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அலட்சியம் தெரிந்தது.
“ இந்திரநீலத்தை ஒளிச்சு வச்சுக்கிட்டு இல்லன்னு சொன்னீங்க…அது ஏமாத்து இல்லையா” என்று அனன்யா கேட்க…
“உங்ககிட்ட வந்து இந்திரநீலத்த நாங்க வச்சில்லன்னு நான் சொல்லல… நீங்களா நெனச்சுக்கிட்டா நான் பொறுப்பில்ல…” ஒற்றை காலை நீட்டிப்போட்டு மற்றோரு மடியை மடக்கிவைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்தாள்.
அப்போது நீலின் காலடி ஓசை கேட்டது…
அனன்யாவுக்கு பக் பக்கென்று உள்ளம் அடித்துக்கொண்டது….