முதல் நாள் என் கழுத்த நெறிக்க வந்தது ஞாபகம் வரவும், அவன்மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு… இருந்தாலும் இந்திரநீலத்தின் மேல இருந்த ஆசையால நான் அவனுக்கு உதவி செஞ்சேன்…
அதோட…உங்க கிட்ட இருந்து இந்திரநீலத்தை எடுத்தாலும் , நான் நிகழ்காலத்துக்கு திரும்பும் வழி அவன்கூட சேருவது மட்டுந்தான்னு அப்போ தோணுச்சு.…
அவன் அங்க வந்த கதையோட மிச்சத்தை அப்போ சொன்னான்..
இங்கே வந்ததும் ஏற்பட்ட குழப்பத்தில் அந்த மீனவன் அவனோடு இருக்கமாட்டேன்னு சண்டை போட்டு போயிட்டானாம். அனுமதி இல்லாம யவனர் உள்ளே நுழைய முடியாது போல இங்கே… அதனால் இளவரசரோட ஆட்கள் இவனை விசாரிச்சு சிறையில் அடைச்சு பின்னர் விடுதலை செஞ்சிருக்காங்க. அதனால் அரச குடும்பத்தின் மேல கடும் கோவம் இருந்திருக்கு இவனுக்கு.அந்த கோவம் நாளடைவில வெறுப்பா மாறிடுச்சு…
இளவரசர் கண்ணில் படாமலேயே இந்த நாலு வருஷமும் அவன் மறைஞ்சு மறைஞ்சு வாழ்ந்திருக்கான். அங்கிருந்த யவனர்களோடு எப்படியோ சகவாசம் வச்சு அங்கேயும் இந்திரநீலம் இருப்பதை தெரிஞ்சுகிட்டான்.
அது இளவரசர் கிட்ட தான் எப்போதும் இருக்கும்… அவரை கொன்னா தான் எனக்கு கிடைக்கும்னு சொல்லி சிரிச்சான்.
அவன் சொன்ன பிறகு தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது… ஆதியை இளவரசர் ன்னு அவன் நினைச்சது..
நான் எவ்வளவு தூரம் சொல்லியும் அவன் கேக்கவே இல்ல… நான் மறுத்ததால என்னால காரியம் கெட்டுடும்னு என்ன மரத்தோட கட்டி வச்சுட்டான்.
அனன்யா திரும்பி வந்ததும், அவங்க அந்த நாணயத்தில் இருந்த மருந்தால தன்வசம் இழந்துட்டாங்கன்னு தெரிஞ்சுது…
◆◆◆
இளவரசருக்கும் அனன்யாவுக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியாதுங்கிறது அவனுக்கு கொஞ்சம் உதவியா இருந்துச்சு.
அனன்யாவுக்கு ஒரு காவித் துணிய போத்தியது போல போட்டுவிட்டு, அவளை இளவரசர் வர வழில நிக்க வச்சு இளவரசர தன் வலையில் சிக்க வச்சான். அவர் அது மணிமேகலைன்னு தான் நினைச்சார் போல…
மருந்தால தன் நிலையில இல்லாம இருந்த அனன்யா இளவரசர் கிட்ட பேசாம முன்னால நடந்துட்டே இருந்தாங்க.
திடீர்னு அங்க வந்த ஆதியை பாத்ததும் நான் அசஞ்சு சைகை செய்ய பாத்தேன். ஆனா அவன் ஆதியை பாக்கல… ஆதியும் என்னை கவனிக்கல…
நான் அசைஞ்சதும் என் கையில் மருத்து தடவிய கத்தியை வச்சு கீறிட்டான். அதிலிருந்து நானும் மயங்கிட்டேன்….
ஆனா இங்க எப்படி வந்தேன்னு இன்னும் புரியல….” என்று சொன்னதும் ஆதி அனு மித்ரன் மூவரும் விக்கித்து நின்றனர்.
“அப்போ இந்திரநீலம்…” என்று மூவரும் ஏக காலத்தில் கேட்க…
“அதப்பத்தி எனக்கு தெரியாது…” என்று கைவிரித்தார் பேட்ரீசியோ…
“அப்புறம் இன்னொரு விஷயம்…இந்த குழுவில் என்ன தவிர இன்னும் ஒருத்தரும் இந்திரநீலத்தை எடுக்கணும்னு காத்திருக்காங்க … அவங்களுக்கு உங்ககிட்ட இந்திரநீலம் இருப்பதும் எப்படியோ தெரிஞ்சிருக்கு… அது ஒரு பொண்ணு… அவனோட பொண்ணு…” என்று சொன்ன அவர் நீலக்கண்கள் அப்போது அச்சத்தில் விரிந்தன.
◆◆◆
வெளியில் கதவு தட்டும் ஓசை கேட்டு, இவர்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே இனியாவும் கோதையும் நின்றிருந்தார்கள்.
“ஏதோ ரகசியமா பண்றீங்கன்னு மட்டும் தெரியுது… ஆனா என்னனு புரிய மாட்டேங்குது.. எங்க போயிருந்தீங்க இவ்வளவு நேரம்…?” தடாலென்று உள்ளே வந்து கோதை கேட்கவும் இவர்களுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தனர்.
ஆனால் இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். இனியாவின் அமைதி மித்ரனுக்கு மனதில் சிறு உறுத்தல் தந்தது. ஆதியும் இனியாவின் மேல் சந்தேகம் கொண்டான்.
“ஏதாவது செஞ்சு இந்த ஆராய்ச்சி குழு மேல கெட்ட பெயர் இழுத்துவிட்டுடாதீங்க…எல்லாத்தையும் குழப்பிவிட்டு….” இது மட்டுமே அவள் சொன்னாள்.
“இனியா நீ சொல்றது மாதிரி ஏதும் நடக்கல…. பயப்படாதீங்க… உங்ககிட்ட சொல்றதுல எங்களுக்கு ஒன்னும் தயக்கமில்லை கோதை… இருந்தாலும் எதுக்கு உங்களை கஷ்டப்படுத்தனும் தோணுது…” என்று அனு நிலைமை புரியாமல் பேசத் தொடங்க … பேட்ரீசியோ வின் முகம் அவள் செய்வது தவறு என்பதற்கு அறிகுறியாக அதிருப்தியை அப்பட்டமாக காண்பித்தது.
ஆதிக்கு விஷயம் புரிந்து அனுவின் கையை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வெளியில் போனான்.
உடனே இனியா விறுவிறுவென்று வெளியில் ஓடி படாரென்று கதவை அடித்து சாத்திவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.
“எதுக்காக அனு எப்போதும் அவசர படுற..? நீ பேட்ரீசியோ சொன்ன விஷயத்தை கொஞ்சம் நிதானமா ஒரு நிமிஷம் யோசிச்சு இருந்தேன்னா… இனியா வந்தப்போ இதப்பத்தி பேசிருக்க மாட்ட..” என்று வராண்டாவில் நின்று ஆதி அனுவிடம் கடிந்துகொண்டிருக்க அவர்கள் நின்றதற்கு எதிர் பக்கமாய் இனியா நடந்து சென்றாள்..
“இனியா அந்தப் பாடலை பத்தின குறிப்புகள் நமக்குக் கொடுத்துனால, அவதான் அந்த கெட்டவனோட பொண்ணுன்னு நீங்க சொல்றீங்களா… அவளைப் பாருங்க ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியுறா..” என அனன்யா அவள் போகும் திசையை பார்த்து சொன்னாள்.
“அனு, உனக்கு எல்லாருமே நல்லா தான் தெரிவாங்க அனு… மனுஷங்களை படிக்க நீ இன்னும் கத்துக்கவே இல்ல… அவ ஒருவேளை அந்த இந்திரநீலக் கல்ல எடுக்க கூட நல்லவ மாதிரி நடிச்சிருக்கலாம் இல்லையா..? என்னதான் மித்ரனுக்கு அவளைப் பிடிச்சிருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கணும்..” என ஆதி அறிவுரை போல் சொல்லிக் கொண்டிருந்தான்.
கதவு திறந்து கோதை வெளியில் வர அவளோடு மித்ரன் வெளியில் வந்தான். மித்ரன் கண்ணில் ஒரு அடிபட்ட உணர்வு தெரிந்தது.. ஏமாற்றப்பட்டோம் என்பது போல் உணர்ந்தான்… ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வந்து, “அவ ஏன் அப்படி பேசிட்டு போறான்னு எனக்கு தெரியல…” என்று வருத்தமாக ஆதியிடம் சொன்னான்.
கோதை இங்கிருந்து செல்ல நினைத்தும் போகாமல் மருகி மருகி நின்று கொண்டிருந்தாள்.
“ ஹேய்….. நான் ஒன்னும் அவ இப்படி பண்ணதுக்கு கோச்சுக்கவெல்லாம் இல்ல…. நீ போ… போய் அவகிட்ட என்னன்னு கேளு…” என்று மித்ரன் சொன்னான்.
கோதையோ “பரவாயில்ல… நான் இங்கே கொஞ்ச நேரம் இருக்கேனே…” என்று சொல்ல “இல்ல… அவகூடவே இரு… என்ன பண்றான்னு கொஞ்சம் பாரு..” என்று சொல்லி அனுப்பிவைத்தான் மித்ரன்.
அனு, இவர்கள் பேசிக்கொண்டதை கோதை கேட்டிருப்பாளோ என்று சங்கடமாக உணர்ந்தாள்.
“உண்மையில் இனியா அப்படி கெட்டவளா இல்லைன்னா, இதைக்கேட்டு எவ்ளோ வருத்தப்படுவா…
சரி… ஏதோ நடந்தது நடந்துடுச்சு… இனி கொஞ்சம் கவனமா இருப்போம்னு மனச தேத்திக்கிட்டு போடி…” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு உள்ளே வந்தாள்.
அனு நுழையவும் பேட்ரீசியோ “அவ தான் நீல் உடைய மகள்… ஏன் இப்படி சூழ்நிலைய நீங்களே சிக்கலாக்கினீங்க…” என்று சத்தம் போட்டு கேட்கவும் சரியா இருந்தது.
தன் கணிப்பு ரொம்ப தப்பாயிட்டுச்சே என்று அனு முகம் சிறுத்தது.
அப்போது கப்பலில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு ஒன்று செய்யப்பட்டது…
◆◆◆
கப்பலில் ஒலிபெருக்கி மூலம் …..
“உங்கள் கனிவான கவனத்திற்கு…இன்னும் இரண்டு நிமிடங்களில் நாம் கரையை அடையப் போகிறோம். தரையிறங்க ஆயத்தமாகுங்கள்.” என அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு முடியும் வரை காத்திருந்து “யாரு நீல்… ?” என்று அனு கேட்டாள்..
பேட்ரீசியோ பதில் சொல்வதற்கு முன்பே அங்கு கோதை மீண்டும் அவசரமாக ஓடிவந்து வாசலில் “இனியாவை காணும்… நான் எல்லா இடத்துலயும் தேடிப்பாத்துட்டேன்… யாராவது என்கூட வாங்க…” என்று படபட்டத்தாள்.
இதைக்கேட்டதும் மற்றவர்கள் ஏதும் பேசுவதற்கு முன் அனு பதட்டமாகி “எங்கே எல்லாம் பாத்த கோதை… எல்லா இடத்துலயும் தேடிட்டியா.. ? நானும் வரேன்…வா போய் பாப்போம்..ஆதி நீங்க இங்கேயே இருங்க..” என்று சொல்லிவிட்டு கோதையை இழுத்துக்கொண்டு ஓடினாள்.
அங்கே இவர்கள் மூவரும் தங்கியிருந்த அறையில் சென்று பார்த்தபோது இனியாவைக் காணவில்லை. அவள் பொருட்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடி இருந்தன.
இனியாவின் தண்ணீர் பாட்டில் திறந்த நிலையில் கீழே விழுந்து பாதி நீர் ஊற்றி ஈரமாகியிருந்தது தரை.
“கோதை… இங்க பாரு… தண்ணி கீழ ஊத்தியிருக்கு… அப்போ அவ தானா எங்கேயும் போகல… வலுக்கட்டாயமா ஏதோ நடந்துருக்கு…” என்று அனன்யா அதிர்ந்து சொன்னாள்.
“ஏன் அனு அப்படி சொல்ற, அவசரமா செய்யும்போது கூட தவறி கீழ விழுந்துருக்கும்… இங்க வந்து யாரு அவள என்ன செய்ய போறாங்க.. நீயா ஏதும் கற்பனை செஞ்சு எனக்கும் பீதி ஏத்தாத…” மிகவும் சாதாரணமாகப் பேசினாள் கோதை.
“அவ உன்கிட்ட ஏதும் சொன்னாளா.. எங்கேயும் போகணும்… இல்ல ஏதாவது லட்சியம்.. இப்படி ஏதும் சொல்லிருக்காளா…. ?” என்று அனு கேட்டதற்கு கோதை பதிலொன்றும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியே வேகமாக சென்றாள்.
“கோதை.. இங்க பாரு… நான் பேசிட்டே இருக்கேன்… நீ கண்டுக்காம போனா என்ன அர்த்தம்..?” அனு இவ்வாறு கேட்டுக்கொண்டே அவள் பின்னே ஓடினாள்.
“பின்ன என்ன… நீங்க எல்லாரும் பேசுறதெல்லாம் அதீத கற்பனை மாதிரியே தோணுது… ஏதோ படத்துல வரது மாதிரி சின்ன விஷயதுக்கெல்லாம் பெருசா கதை கட்டி ஒரு உருவம் குடுத்துடுறீங்க…” என்று அலட்சியமாக பதில் சொன்னாள்.
“நீ தானே இனியாவ எங்க தேடியும் காணும்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்த… இப்போ என்னடான்னா இப்படி பேசுற திடீர்னு..” ஏதோ நினைவு வந்து சட்டென்று நிறுத்தியவள், “நான் இனியா உங்க அறைக்குள்ளே போனதையும் பாத்தேன்… பின்னாடியே நீயும் போனதையும் பாத்தேன்… இந்த அறைக்கு வேற ஏதும் வழி இல்ல…” என்று சொல்லி கோதையின் கண்களை நேராகப் பார்த்தாள்.
அவை கோவைப்பழம் போல் கோபத்தின் உச்சியில் சிவந்திருந்தன. அதில் தெரிந்த வெறியால் ஒருநிமிடம் தூக்கி வாரிப் போட்டது அனன்யாவுக்கு…
இருந்தும் திடமாகிக்கொண்டு “சொல்லு கோதை… என்ன நடக்குது இங்க..?” என்று கோவத்துடன் அவளை உலுக்கி கேட்டாள் அனு.
“அதுக்கு பதில் நான் சொல்றேன்..” என்று ஒரு கரடுமுரடான குரல் கேட்டது.
……
கோதையைப் பார்த்ததால் பாம்பை பார்த்ததுபோல் நடுங்கினார் பேட்ரீசியோ.
“ஏன் எதுவுமே முழுசா சொல்ல மாட்டேங்குறீங்க… யாரு நீல்… அவரு பொண்ணு யாரு… ? தயவுசெஞ்சு குழப்பாம சொல்லுங்க… எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு…” என்று ஆதி கோபத்தில் குரலை உயர்த்த…
“இவ தான்… இப்போ வந்தாளே… இவ தான் நீல் ஓட பொண்ணு..” கைகள் நடுங்கியது.
“நீல் ன்னா அந்த கொலைகாரனா..??” மித்ரன் அதிர்ந்து கேட்டான். இந்த சூறாவளியிலும் அவன் மனதில் ஒரு ஆறுதல் தென்றலாய் வீசியது.
அது இனியா நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என்பதற்கான ஆறுதல்.
ஆனால் சட்டென்று அவன் முகம் இருண்டது. அவள் இருக்கும்போது இரண்டு முறை ஆதியும் அனுவும் இவ்வாறு வெளியில் சென்றதால் அவள் மனம் புண்பட்டிருக்கும். தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றியிருக்கும். அதுவே அவள் கோபப்பட காரணம் என்று உணர்ந்தான்.
“ஆமா… அவன் தான் நீல்…” என்று பேட்ரீசியோ சொன்னது மித்ரனின் நினைவுகளை கலைத்து தலையில் இடியிறக்குவதுபோல் இருந்தது.
இனியாவை காணும்…
அதுவும் நாம இவரு கூட பேசிக்கிட்டு இருந்ததை பாத்த பிறகு…
இப்போ அனுவும் அவள தேடில்ல போயிருக்கா…
“என்ன சொல்றீங்க நீங்க…இத ஏன் முன்னாடியே சொல்லல… அனு போன போதாவது தடுத்து இருக்கலாம் இல்ல..?” என்று கேட்ட ஆதியும் அதே பதட்டத்துடன் பய ரேகைகள் முகத்தில் ஓட நின்றிருந்தான்.
“எனக்கு அந்த பொண்ண பாத்ததும் சகலமும் நடுங்கிடுச்சு… ஒன்னும் சொல்ல முடியல…” என்று பரிதாபமாகச் சொன்னார்.
சட்டென்று மூவரும் பெண்கள் தங்கியிருந்த அறைக்கு ஓடினார்கள். அங்கு சென்று பார்த்தபோது கதவு அகல விரித்து திறந்திருந்தது. யாருமே தென்படவில்லை.
இவர்கள் இந்த பரபரப்பில் இருக்க… கப்பல் நீர் மூழ்கி அமைப்பிலிருந்து சாதாரண கப்பலாக மாறியிருந்தது.
கப்பல் கரைக்குச் செல்ல, அனைவரும் இறங்கத் தொடங்கிவிட்டனர்.
மித்ரனுக்கு கண்ணீர்… இனியாவை நோகடித்ததற்காகவும்… இப்போது அவளோடு சேர்த்து அனுவையும் தொலைத்துவிட்டதற்காகவும்…
கண்ணால் கூட சொல்லப்படாத தன் காதலும், கல்யாணம் வரை சென்றுவிட்ட நண்பனின் காதலும் இப்போது அந்த கொலைகாரனின் கையில் மாட்டிக்கொண்டதை நினைத்தாலே அவனுக்கு உடம்பெல்லாம் எரிவது போல் தோன்றியது.
◆◆◆
“நிச்சயமா அவங்க வெளியில போயிருக்க முடியாது… இங்க கடலோரங்களில் ஆழம் ரொம்ப கம்மி…கப்பல ஆழமான கடலில் தான் நிறுத்தனும்… நம்ம பூம்புகாரிலிருந்து கப்பலுக்கு வரதுக்கு படகு உதவியோடுதான் வந்தோம்… படகில் புது ஆள் ஏறினா கண்டுபிடிச்சுடுவாங்க… அதனால அனுவ கூட்டிட்டு ரொம்ப தூரம் போயிருக்க முடியாது” மித்ரன் தனக்குள் இருந்த சோகத்தை மறைத்து ஆதிக்கு ஆறுதல் கூறினான்.
“மச்சான்… நீ உனக்குள்ள இருக்கத மறைச்சிகிட்டு எனக்கு ஆறுதல் சொல்லாத டா… வா போய் இனியா, அனு ரெண்டு பேரையும் காப்பாத்தணும்…” என்று அவனை தோளில் சாய்த்துக்கொண்டான்.
கதறியழ இது நேரமில்லை… அதேபோல் ஆண்களுக்கு அழும் சுதந்திரத்தை இந்த சமூகம் ஒருபோதும் கொடுப்பதில்லை…. எனவே ஆத்திரத்தை உள்ளே தேக்கிக்கொண்டு இருவரும் கப்பல் முழுவதும் தேடினர்.
இவர்களோடு பேட்ரீசியோவும் இருந்தார். பேராசையால் ஏற்படும் விபரீத விளைவுகள் பற்றி எத்தனை கதைகள் சொல்லியிருந்தால் என்ன..? தினமொரு இன்னல் அதனால் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு அவர் ஒரு சான்று.
அவர் உண்மையிலேயே மிக நல்ல மனிதர். தங்க நாணயங்கள் மேலிருந்த மோகம் அவர் உள்ளத்தின் நாணயத்தை நசுக்கிவிட்டது.
ஆற்றங்கரையில் இருந்து கப்பலுக்கு வந்தது எப்படி என்று அவருக்கு உண்மையிலேயே தெரியாது. அவர் கண் விழித்தபோது அவர் அறையிலேயே இருந்தார். சரியாக அப்போது நீல் மற்றும் கோதை அந்த அறைக்குள் நுழையவும் கண்களை மூடி மயங்கியதுபோலவே நடித்தார்.
“அப்பா… இவர வெளில விடுறது அவ்வளவு நல்லதா படல எனக்கு…” என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியுடன் அவரை நெருங்கினாள்.
◆◆◆