அங்கே அவளுக்காகவே காத்திருந்தான் நம்ம பையன்….
இதை அனன்யா எதிர்பார்க்கவே இல்லை…
“நேத்து உன்கிட்ட எவ்ளோ சொன்னேன் அனு… என்கிட்ட உன் மனசுல இருக்கத சொல்றதுக்கு உனக்கு ஏன் அவ்ளோ தயக்கம் ???” என்றான் சட்டென்று.
இவன் எதைப்பற்றி பேசுகிறான் என்று புரியாமல் அனன்யா விழிக்க….
“உனக்கு படிப்பு முக்கியம்னு எனக்கும் தெரியும்… அது கெட்டுப்போக நான் விடமாட்டேன்… இது என் மேல ஆணை ” என்றான் ஆதர்ஷ்.
“அச்சச்சோ… அதுவா…
தப்பா எடுத்துக்காதீங்க….
இப்போதான் எல்லாம் புரியுது…
நேத்து தானே பாத்தோம் அதுக்குள்ள எப்படி உங்ககிட்ட சொல்றது…” என்றாள் அனன்யா தயங்கியபடி…
இந்த வார்த்தைகள் அவனை கொஞ்சம் சோகமாக்கினாலும், அதுதானே உண்மை என்று மூளை உரைத்தது.
“சரி போனது போகட்டும்… வா போகலாம்…” என்று தன் காரை நோக்கி நடந்தான்…
“ஓஹோய்…
என்ன…
நீங்க பாட்டுக்கு என்னமோ கல்யாணம் பண்ணி குடுத்திட்ட மாதிரி வான்னு சொல்லிட்டு போறீங்க… !!! அதுக்கெல்லாம் நாள் இருக்குதாக்கும்… !!!! ” என்று குரலில் கொஞ்சம் சுதியேற்றினாள்.
அவன் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டினான்.
“என்ன அதுக்குள்ள காதல் மடலா…??” சிரித்தாள் அனன்யா.
“ஹேய்…
நீ என்ன பத்தி என்ன தான் நெனச்ட்டு இருக்க…!!!!
ஒழுங்கா என்னன்னு பிரிச்சு படி…!!! அப்புறம் பேசு தாயே !!!” என்றான் கையை குவித்து வணக்கம் சொல்வதுபோல.
அந்த காகிதத்தை பிரித்து படித்ததும் அவளுக்கு தலைகால் புரியவில்லை…
“ஊஊஹ்….” என்று சிறிதாய் வியப்பிற்கான ஒலியும் வெளிப்பட்டது…
ஆதர்ஷ் – என்ன அனு… காதல் மடல படிச்சுட்டியா…??? நான் இப்போ பேசலாமா…!!!!
அனன்யா – என்னங்க இது… நம்பவே முடில… ரொம்ப நன்றி… இது காதல் கடிதம் இல்ல… என் கனவுக்கு கடவுசீட்டு…
அவன் அனு, அணுவும் அசையாமல் அவனையே பார்த்தாள். கண்ணெல்லாம் புன்னகைத்தது அவளுக்கு…..
ஆதர்ஷ் –உங்க அப்பாகிட்டயும் பேசிட்டேன். உனக்கு விருப்பம் தானே…!!!
அனன்யா – ஹேய்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில… விருப்பம் இல்லாமயா… !!!! எப்போ கிளம்பலாம்…??? (கிட்டத்தட்ட குதித்துக்கொண்டு அவனருகில் வந்துவிட்டாள்)
ஆதர்ஷ் – ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நிபந்தனை….!!!!!
அனன்யா – என்ன.. என்ன…? (மனசாட்சி…. பிரியமானவளே விஜய் மாதிரி ஏதும் அக்ரிமெண்ட் வச்சிருப்பானோ ??? என்று கேட்டு சிரித்துக்கொண்டது)
“நீ எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்… நன்றியெல்லாம் வேணாம்..” குறும்பாய் கண்ணிமைத்தான்….
இரண்டடி பின்னால் தள்ளிப்போய் “எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க தானே போறோம்…
அப்புறம் பாப்போம்…
இப்போல்லாம் சான்ஸ் இல்ல தம்பி” அவளும் குறும்புடன் பதில் சொன்னாள்.
“ம்ம்ம்ம்….
பாக்கலாம் அனு குட்டி…
நீ சொல்லாட்டாலும் நான் சொல்லுவேன்……..
ஐ லவ் யூ…!!!!!!!!!!!!” என்று சாலையிலேயே ஒற்றைக்காலில் மண்டியிட்டு கைகள் விரித்தான்.
இதில் தலைகால் புரியாமல் மகிழ்ந்துபோனாலும்… வெளியில் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
“எது……????
இந்த குட்டி…கிட்டி லாம்…
ஐ டோன்ட் லைக் !!!!
தெரிஞ்சுக்கோங்க…!!!!” கோபமாக திரும்பி, இந்தப்பக்கம் அவள் முகம் சிவந்தாள் நாணத்தால்…..
“சரி டீ என் கோவக்காரி…
டாட்டா…
இத சொல்ல தான் வந்தேன்…
வீட்ல கேட்டு சில வேலைகள சேர்த்து வாங்கிட்டு வந்துட்டேன்…
கெட் ரெடி பார் தி த்ரில்…” சொல்லிவிட்டு காரில் ஏறினான்.
அந்த சாலை வளையும் வரையில் பக்க கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டே மெதுவாக சென்று திரும்பினான்.
அவளும் அவன் வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை இமைக்காமல் பார்த்திருந்தாள்.
◆◆◆
இரண்டு நாட்கள் சென்ற பிறகு, நிச்சயதார்த்தத்திற்கு உடைகள் வாங்கினர்… இவளுக்கு மெரூன் நிற புடவையும் அவனுக்குப் பட்டு வேட்டி சட்டையும்…
வற்புறுத்தியும் கோட் சூட் எடுக்க அவன் மறுத்துவிட்டான்…
அவ்வப்போது விழியீர்ப்புவிசை அங்கே செயல்பட்டதை சொல்லனுமா என்ன உங்களுக்கு…???
◆◆◆
ஒரு நன்னாளில்…
இரண்டு வீட்டாரும் சொந்தங்களும் சூழ அனன்யா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது…..
அனுவுக்கு…. அவனோடு திருமணம் என்று நினைக்கும்போதே…. மகிழ்ச்சி மழைபோல் நனைத்தது.
அவன் தன்னை எவ்வளவு புரிஞ்சுவச்சிருக்கான்… தனக்கு பிடிச்சதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறான் என்று ஒரே வியப்பு…
இப்போ பாத்தீங்கன்னா… நம்ம ஹீரோ சார் ஹீரோயின பாத்துட்டே சிரிச்சிட்டு இருக்க… ஹீரோயின் கண்ணுல ஒரே ஆனந்த கண்ணீர்…
“இப்போ இவ அழுவா, இதே அடுத்த வருஷம் பாருங்க… பையன் தான் அழப்போறார்..!!” என்ற ரேஷ்மாவை போடி என்று சொல்லி கொஞ்சம் வெட்கம் என்று நினைத்து அனன்யா ஏதோ செய்ய… இப்படியே பலவாறு குறும்புகளுடன் மிக நன்றாய் நகர்ந்தது நேரம்…
நாளுக்கு நாள் காதலும், கூடவே மிக நல்ல நட்பும் உருவானது…
காதலில் முதல் படி நம்பிக்கை…
அவன் இவள நடத்தும் விதமும், அவன் அன்பும் ஆதர்ஷ் மேல அவளுக்கு பல மடங்கு நம்பிக்கை வர காரணமாச்சு….
அவன் அவளுக்கு ஆதர்சமானான்…. அவள் அவன் நெஞ்சின் ஆனந்தமானாள்…..
இருவரும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பயணத்திற்காக தங்கள் நாட்களை வேகமாக நகர்த்த பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.
எங்க போகபோறாங்க…. ????
◆◆◆
இளந்தென்றல் இதமாய் வீசிக்கொண்டிருந்தது… இப்பயணம் முடியாமல் நீளவேண்டுமென நினைத்தவனாய், நிதானமாக வாகனத்தை செலுத்தினான் ஆதர்ஷ்.
ஆதவன் மறையும் தருணம்…
இரவும் பகலும் சேரும் அந்த நேரம்…
அந்தி நேரம்….
வானம் நாணம் கொண்டதுபோல் சிவந்திருந்தது….
கொஞ்சம் கருமேகங்கள் அச்செம்பொன்னொளியில் தகதகத்து மிதந்தன…
“சந்தியாக்கால மேகங்கள்…
என் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே….
உன் நடையின் சாயலே தோணுதே…” பாடல் மென்மையாய் காற்றில் கரைந்துகொண்டிருந்தது…….
பாடல் வேறு மனநிலைக்கு கொண்டுபோய்டுமோ என்னும் நினைவில் அவள் பேசத்தொடங்கினாள்.
“காக்க காக்க படம் பாத்திருக்கீங்களா…. எனக்கு அது ரொம்ப பிடிச்ச படம்… க்ளோஸ் டூ ஹர்ட்டுன்னு கூட சொல்லலாம்…” வெளியில் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்தபடி கேட்டாள்.
“நானும் நிறைய தடவ பாத்திருக்கேன்…. !!!! பாட்டு… படம் பண்ண விதம்… எல்லாமே அருமையா இருக்கும்… ஜோ ன்னா ரொம்ப பிடிக்கும்…” என்று அவன் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது…
என் கனவில் ஆஆஆ…
நான் கண்ட…. ஆஆஆ… நாள் இது தான்…. கலாபக் காதலி….
இவ்வரிகள் வந்ததும், பேசுவதை நிறுத்தி காதலோடு அவளைப்பார்த்தான்….
அவன் மௌனம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லிவிட தவித்தது.
அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தவள், சட்டென்று அவன் அமைதியானதும் இப்பக்கம் திரும்பினாள்.
விழி மேக மோதலில் கோடி கோடி எண்ணங்களும் ஆசைகளும்…. மின்னல், மழையாய் பொழியத்தொடங்கின…..
வெளியிலும் சட்டென்று திரண்ட மேகங்கள் கொஞ்சம் ரம்மியமான சூழ்நிலை உண்டாக்கின.
வந்து ஒட்டிக்கொண்ட வெட்கப்புன்னகையை மறைத்து “ எப்டி எங்க வீட்ல பர்மிஷன் வாங்கினீங்க… ரொம்ப கஷ்டமாச்சே…!!!!” என்று பேச்சை திசைமாற்றினாள்.
” ஹ..ஹா.. ஹா…ஹா… உண்மைய சொன்னேன்…” என்றான் ரஜினி தோரணையில்.
“பார்ரா… என்ன உண்மைங்கய்யா அது… ???
எனக்கு அந்த உண்ம தெரிஞ்சாகனும் சாமிஈஈஈ….” என முதல் மரியாதை படத்து வசனம் போல இழுத்தாள்.
ஆதர்ஷ் – வா அனு… அங்க போனா நீயே தெரிஞ்சுப்ப…
◆◆◆
நதிகள் எப்போதும் ஒரே வழியில் செல்வதில்லை… அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையின் மாற்றத்துக்கு ஏற்ப போக்கும் திசையும் திரிந்து செல்லும். அதன் கரையில் இருக்கும் மக்களின் வாழிடங்களும் அதற்கேற்ப மாறும்.
நாடோடிகளாய் குகைகளில் வசித்து வந்த மக்கள் முதன்முதலில் நதிக்கரைகளிலேயே தங்கள் வாழ்வினை நிலைப்படுத்திக்கொண்டனர். அதனால் தான் பழைய நாகரிகங்கள் யாவுமே ஆற்றங்கரைகளிலேயே அமைந்திருந்தன.
அதுவே அவர்களுக்கு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக்குத் தேவையான நீரை வழங்கியது.
உணவுப்பசி மற்றும் உணர்வுப்பசியே அக்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு உந்துதல். தன்னையும் குட்டிகளையும் காத்துக்கொள்ள மனிதன் கண்டறிந்த வழிமுறை… ஆற்றங்கரை குடியேற்றம்…
அப்படித்தான் பழந்தமிழகத்தின் மக்களும் வைகை காவிரி ஆறுகளின் கரைகளில் வசிக்கத் தொடங்கினர்.
இது இரண்டாயிரம் வருட கதையில்லை… பத்தாயிரம் வருட கதை…..
நமக்கு இப்போது வரைக்கும் கிடைச்ச தரவுகள் மற்றும் கார்பன் டேட்டிங் ஆய்வுகளின் படி பூம்புகார் நகரம் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரியவந்துள்ளது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இந்நகரம் செழித்தோங்கி இருந்ததாக அறிகிறோம்….
பின் வந்த களப்பிரர் ஆட்சியில் பொலிவிழந்து, அதன் பின்னர் வந்த பல்லவர் ஆட்சியில் கொஞ்சம் வளர்ந்தது.
இறுதியாக பிற்கால சோழர்கள் சிறிது மேம்படுத்தினாலும் தன் பழைய சிறப்பினை அது மறுபடி அடையவேயில்லை.
சமீபத்தில் நடந்த கடல் ஆய்வுகளின் முடிவுகள் நம் கண்ணால் காண்பது மட்டும் உண்மையில்லை என்று உரக்கச் சொல்கின்றன.
கடலின் ஆழம் சொல்லும் செயற்கைக்கோள் புகைப்படங்களை ரிமோட் சென்சிங் எனப்படும் தோலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் ஜியோ-கிராபிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) மூலம் சென்ற நூற்றாண்டில் வடிவமைத்தனர்.
இந்தியப் பெருங்கடல் முழுதும் 2000 மீட்டர் ஆழம் இருக்க, குமரிக்கடல் பகுதியின் ஆழம் அதிகபட்சமாய் 125 மீட்டர் மட்டுமே இருக்கிறது.
அதிலும் கடலுக்குள்ளும் மலைத்தொடர்கள் இருக்கின்றன. ஆறுகள் ஓடியதற்கான தடயங்கள்(depressions) தெரிகின்றன.
அவ்வாறெனில் அங்கே ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் அல்லவா..??? நிலமாக இருந்த இடம் கடலாய் மாறியது எப்போது ???
எப்படி ஒரு நிலப்பரப்பே கடலானது…????
இந்த மாற்றம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஐஸ் – ஏஜ் பனி உருகியதன் விளைவு.
புவி வெப்பமடைதல் பற்றி எல்லோரும் நிச்சயம் அறிந்திருப்போம். அது தொடங்கியது இன்று நேற்றல்ல…
எப்போது மனிதன் தனக்கு இருப்பிடம் உருவாக்க காடுகளை அழிக்கத் துவங்கினானோ அப்போதே துவங்கிவிட்டது.
1800 களுக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டும் பூமியின் சராசரி வெப்பம் 1.7° செல்சியஸ் அளவு கூடுகிறது.
எனில் இருபதாயிரம் ஆண்டுகளில் சிறிது சிறிதாக கடல் நீர் சூழத்தொடங்கியது…
பூம்புகார் நகரமும் மூழ்கத்தொடங்கியது…
ஆனாலும் அதனை மாற்றி மாற்றி கட்டமைத்து இருப்பினும் இயற்கையின் விதி மாற்ற முடியாதது அல்லவா…???
ஒரு சிறப்பான வளர்ந்த நகரம், சில ஆயிரம் வருடங்களில் இதோ கடலடியில்…, கடல் மடியில் துயில் கொண்டிருக்கிறது அமைதியாய்…
இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளில் சென்னை, மும்பை போன்ற நகரங்கள் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எது நமைக் காக்கும்…!!!!!
◆◆◆
பயண நேரத்தில் அனன்யா தன்னுடைய கைபேசியில் பதிவுசெய்தவை இவை….