இவர்களை நோக்கி வேகமாய் நகர்ந்து வந்தது அச்சுழல்….
மாலுமிகள் எச்சரிக்கை மணியை இயக்க, பயணிகள் அனைவரும் அரைதூக்கத்தில் அலறியடித்து கப்பல் தளத்தில் கூடினர்.
முன்பே அங்கிருந்த நம் நண்பர்களும் அந்த ஒலி கேட்டு தான் சூழப்போகும் ஆபத்தை உணர்ந்தனர்.
ஆனால் அனு, ஆதி, மித்ரன் மூவரும் கப்பல் தளத்தின் ஓரத்தில் நின்றதால், அவர்கள் மீது புயலின் போது பேரலையொன்று மோதியது…
◆◆◆
மூவரும் அலையால் தாக்கப்பட்டு மயங்கியபோதிலும் அனு மற்றும் ஆதியின் கரங்கள் கோர்த்தபடியே இருந்தன.
அனு மெதுவாய் கண்விழித்தாள்…
எழ முயலுகையில் ஆதியின் கைகள் கோர்த்திருப்பது புரிந்து கொஞ்சம் நிம்மதி வந்தது….
கொஞ்சம் நாணமும் அதோடு சேர்ந்திருந்தது…
கூடவே இரவு அவன் பேசியது, இவள் காதலை சொன்னது என்று அனைத்தும் உள்ளே ரீங்கரித்தது ரஹ்மான் இசைபோலே…
அதுவொரு கனவுபோல் தோன்றியது…
நீங்காத புன்னகையை அந்த நினைவுகள் அவள் முகத்தில் தீட்டி வைத்தன பிக்காஸோ ஓவியம்போலே….
அவர்கள் கைகளில் அதே கல், மர்மப்புன்னகையோ மந்திரபுன்னகையோ என்று புரியாதபடி ஒருமுறை நீல மின்னல் ஒன்றை உமிழ்ந்துவிட்டு அமைதியானது….
ஆதியும் மயங்கியிருந்தான்… மித்ரன் அவனருகில் மயங்கியிருந்தான்…. அனு ஆதியை எழுப்ப அவன் தூக்கிவாரிபோட்டு “அனுனுனு…….” என்று அவள் கைகளை தேடியபடியே எழுந்தான்.
அந்த களேபரத்தில் மித்ரனும் மயக்கம் தெளிய, மூவரும் அப்போது தான் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்றறிய எழுந்து பார்த்தனர்….
இன்னும் விடிய சிலமணிநேரம் இருக்கும்போல் தெரிந்தது…. நன்கு சூழ்ந்த இருள்… ஆனால் பூரண நிலவொளி அவர்களுக்கு சுற்றுப்புறத்தை தெளிவாய் காட்டியது…
அந்த இடம் அவர்களுக்கு சற்றும் பரிச்சயமற்றதாய் இருந்தது…
ஆம்….
அதுவொரு ஆளரவமற்ற கடற்கரை……
வெகு தொலைவில் ஒரு நகரம் தென்படுகிறது…
மூவரும் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
“நாம எங்க இருக்கோம் இப்போ..? நம்ம கூட இருந்தவங்க எங்க போனாங்க…?” முதலில் அந்த மௌனத்தை உடைத்தது மித்ரன்.
“கப்பல் கடல்ல மூழ்கியிருக்குமா…?” என்று கேட்ட அனு முகத்தில் பயம், அழுகை எல்லாம் கலவையாய் தெரிந்தது….
“நாம மட்டும்தான் அலையில் சிக்கி ஏதோ தீவில் கரை ஒதுங்கியிருக்கோம்…” என்று சொல்லிவிட்டு மித்ரன் தன் செல்போன் எடுத்து லொகேஷன் அறிய முயல.., அது ‘ஆன்’ ஆகவில்லை. மற்றவர்கள் மொபைலுக்கும் இதே நிலை தான்…
வேறுவழியின்றி தொலைவில் தெரிந்த அந்த நகரத்தை நோக்கி கடற்கரை வழியே நடக்கத்தொடங்கினர்…
பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமான, செழிப்பான ஊராகத்தெரிந்தது. நெருங்க நெருங்க கரையோரத்தில் பெரிய கட்டிடங்கள் மற்றும் துறைமுகம் போன்ற அமைப்பும் இருப்பது தெரிய வந்தது.
“ஹேய்… நில்லுங்க… அங்க பாருங்க… இருக்க ஆளுங்கள பாத்தா இந்த இடம் இந்தியா மாதிரி இல்ல… தே லுக் லைக் யூரோப்பியன்ஸ்…” அனு வியப்பில் கத்த ஆரமிக்க, அவள் முழுதாய் முடிக்கும் முன்பே ஆதி அவள் வாயைப்பொத்தினான்.
“அனு குட்டி… கத்தி மாட்டிவிட்டுடாத டீ… இடமே ஒரு மார்க்கமா இருக்கு…” ஆதி அவள் காதருகில் மெல்ல சொல்லிவிட்டு பின் ஏதோ உணர்ந்தவனாய் சட்டென விலகி விட்டான்…
அனு முதலில் ஆதி அவள் வாய்பொத்திய நிமிடத்தில் கொஞ்சம் கோபமானாலும், சிறிது சிறிதாக அவன் அருகாமயை ரசிக்கத் தொடங்கினாள்.
மித்ரன் முன்னால் நடந்து சென்றுகொண்டிருக்க, அனு இருட்டில் ஒரு இடத்தில் தடுமாறி ஆதியின் மேல் இடித்துவிட்டு விழப்போனாள். அங்கே பெரும் பள்ளம்…
கடற்கரை மணல் தாண்டி துறைமுகத்தை அவர்கள் அப்போது அடைந்திருந்தனர். நல்லவேளையாக ஆதி அவளைப் பற்றி நிறுத்தினான்.
அந்த பள்ளத்தைக் கண்டதும் அனுவின் இதயம் படபடவென்று அடிக்கத்தொடங்கியது. “அனு… பாத்து வர மாட்டியா…!! ஏதாவது ஒரு ஏடாகூடம் பண்ணிட்டே இருக்கியே…!!!!” என்று அவன் வேறு அடிக்குரலில் கடுகடுப்பாக சொல்லவும், அனு சற்று கலங்கிப்போனாள்.
கண்களில் நீர் பளிச்சிட்டதை அந்த இருளிலும் அவன் கவனிக்க தவறவில்லை….
உடனே “மன்னிச்சுக்கோ டா… எனக்கும் பதட்டம்… உன்ன முதல் தடவையா வெளில கூட்டிட்டு வந்து இப்படி ஆயிட்டுச்சேன்னு…!!! “ அருகில் வந்து கைகள் பற்றிக்கொண்டான்.
“ம்ம்ம்ம்…!” என்றாள் அவள்.
“பொறுமையா இருடா அனு… எதுவா இருந்தாலும் பதட்டப்படாத…!!! யூ லைக் அட்வென்ட்சர்ஸ் ரைட் !!!” என்று ஆதி அவள் கையிரண்டும் இறுக பற்றிக்கொண்டு கேட்டான்….
“ம்ம்ம்ம்…. ஆனா…” என்று அனன்யா இழுப்பதற்குள்…
“ஆனா… ஆவண்ணா லாம் இல்ல… என்ன நடந்தாலும் சமளிப்போம் வா” என்று சொன்னான் ஆதி.
“ம்ம்ம்….” என்றாள் அனு.
“என்ன இப்போல்லாம் ம்ம்ம்ம் மட்டும் தான் வருது, வேற வார்த்தையே வரதில்ல…” அவள் தாடையை நிமிர்த்தி கேட்டான்.
கண்ணில் நீர் இன்னும் கடகடவென வழிந்து கொண்டிருந்தது.
அவள் கண்ணீரை துடைத்து விட்டு “என்ன பாரு…” மிருதுவாக பேசினான்.
அவள் அப்படியே நின்றதும், “ கண்ண திறந்து பாருன்னு சொல்றேன்ல…” இன்னும் மெதுவாய் சொன்னான்.
அனு கண்திறந்தாள்.
“மேலே பாரு… இந்த விண்மீன் எல்லாம் இன்னைக்கு நேத்து மொளச்சதா…” சொல்லிவிட்டு அவள் கண்களைப் பார்த்தான்.
பின் அவனே தொடர்ந்தான்…
“நிச்சயம் கிடையாது…..கண்டிப்பா எத்தனையோ கோடி ஆண்டுக்கு முன்ன உள்ளது… இப்போ அதெல்லாம் இருக்குமோ… இல்லை தன் ஒளியை கொடுத்துட்டு கரஞ்சு போயிருக்குமோ தெரியல… “ வான் பார்த்து அவன் பேசிக்கொண்டே போக…
அனுவோ அவன் பேச்சுடன் அவன் வசீகரத்தையும் உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
எங்கேயிருந்தாலும் அவளுக்கென்று ஒரு கரிசனத்தை தரும் கண்கள்… அடர் புருவம்… முதல்முறை புகைப்படம் பார்த்ததில் இருந்து அவன்மீது கொண்ட ஈர்ப்பு….
அவன் குரல் அவளை நினைவுலக்கிற்கு மறுபடி அழைத்து வந்தது….
“எதுவுமே நிரந்தரம் இல்ல டா… சீக்கிரமா வீட்டுக்கு போயிடுவோம்.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஆயிரம் வருஷம் வாழப்போறோம்…இதெல்லாம் சீக்கிரம் கடந்து போயிடும்… என்ன நம்புறல்ல…!!!”
“மம்ம்ம்ம்ம்…..” கண்கள் பனிக்க புன்னகைத்தாள்.
இருவருக்கும் விவரிக்க முடியாத உணர்வுகள்.
விழிகள் விலகாமல்….
கால்கள் நகராமல்…
ஒரு நிமிடம் …
அந்தவொரு பார்வைக்காகவே அவனுடன் ஆயிரம் ஆண்டு வாழலாம்…
“டேய்… என்னங்கடா நடக்குது இங்க… எங்க இருக்கோம்னே தெரில… நீங்க என்ன பாட்டு ஏதும் பாட போய்ட்டீங்களா…!!!” இருக்கும் இடம் மறந்து இமைக்காமல் நின்றிருந்த இருவரையும் மித்ரன் அலுப்புடன் வந்து உலுக்கினான்.
அனு விலகி நின்று சங்கோஜத்துடன் வேறு திசையில் திரும்பி புன்னகைத்தாள்….
அப்போது தூரத்தில் கண்ட தோற்றம் அவளுக்கு மயிர்கூச்சு உண்டாக்கியது….
◆◆◆
அனன்யா தான் பார்த்தது என்னவென்று நிதானிக்க பத்து நிமிடம் பிடித்தது.
அவளுக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு இன்னும் மாறவில்லை.
இதுக்கும் நமக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு அவள் அப்போது உணர்ந்தாள்…..
இத்தனை நாளா அவள் மனக்கண்ணில் உருவகம் செய்துவைத்த நகரம் இதுவா… ?????
“என்ன அனு… இவ்ளோ நேரமா என்ன யோசனை…!!!! நாங்க பேசுறதுகூட காதுல வாங்கல நீ..!!!” என்று ஆதர்ஷ் கேட்டபோது அவள் அவன் பக்கம் திரும்பி வந்து கட்டிக்கொண்டாள்.
இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை…. ஒன்றும் புரியவுமில்லை…
“என்னாச்சுன்னு யாராவது எனக்கு சொல்றீங்களா ???” என்று மித்ரன் இடைமறிக்க…
இவன் வேற கரடிக்குட்டி என்று வாய்க்குள்ளேயே திட்டிவிட்டுத் திரும்பி, அனன்யா அவளுக்கு மனதில் பட்டதை விவரித்தாள்.
உடனே மித்ரன் கேலி செய்து சிரிக்க ஆரம்பித்தான். “தமிழ் பொக்கிஷம், மதன் கௌரி ன்னு யூடியூப் வீடியோவை எல்லாம் அதிகமா பாத்தா இப்படித்தான் தோணும்… தயவுசெஞ்சு நடக்குற விஷயத்தை பேசு அனன்யா…!!!” சிரித்து விட்டு சொன்னான் மித்ரன்.
“இல்ல மித்ரன்..!!! நம்புங்க நான் சொல்றத…!!!” என்றாள் அனு.
“ நீ என்ன நெனச்சுட்டு இருக்க அனு…!! இப்போ நாம கடந்த காலத்துல இருக்கோம்னு சொல்ற அப்படித்தானே…!!!! அதுக்கு சாத்தியமே இல்ல டா…!!!” ஆதர்ஷ் வந்து அவளிடம் விளக்கினான்.
“நீங்ககூட என்ன நம்ப மாட்டீங்களா…??? நான் படிச்ச ஒரு வரலாறு கண்முன்ன நிக்குது…!!! எனக்கும் நம்ப முடியல தான்…!!! ஆனா இது உண்மை…!!!” அழுத்தமாய் சொன்னாள் தன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த நகரத்தை வெறித்தபடி….
தான் முன்பு சிரித்தது தவறென்று உணர்ந்து “அனன்யா….அது ஏதோ ராஜமௌலி படத்துக்கு போட்ட செட்டா இருக்கப்போகுது…!!! ரொம்ப சீரியஸ் ஆகாதீங்க ரெண்டுபேரும்…!!!!” மித்ரன் அமைதியாகப் பேசினான்.
அதற்கு ஆமோதிப்பது போல “இப்போ இருக்க அறிவியல் வளர்ச்சியில் அதுக்கு வாய்ப்பே இல்லை…!!!! எதிர்காலத்துக்கு போறத பத்தின புரிதலோ, கோட்பாடுகளோ கூட இருக்கு… ஆனா கடந்த காலத்துக்கு போக நீ சொன்ன மாதிரி கதைகளைப் படிக்கிறது தவிர வேற எந்த வழியும் இல்ல அனு…!!! இல்ல மாயம் மந்திரம்னு ஏதும் சொல்ல போறியா!!! எனக்கு புரியல டா….!!!!” என ஆதி வருத்தமாய் சொன்னவுடன்,
“நாம இங்கேயே பேசிட்டு இருந்தா புரியாது…!!! வாங்க அந்த ஊருக்குள்ள போவோம்…!!! அங்க போய் விசாரிச்சா தெரியபோகுது….!!!” ஆழமாக அவன் கண்களைப் பார்த்து தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்தாள் அனன்யா.
“சரி அனு… உனக்காக தான் எல்லாமே செய்றேன்… இதுவும் நீ அடம்பிடிக்கிறியேன்னு கூட வரேன்…” என்று அவள் தோள்மேல் கைபோட்டபடி நடக்க துவங்கினான் ஆதர்ஷ்.
◆◆◆
இவள் முன்பே கூறியது போல அங்கே இருந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்… பெரும்பாலும் ஐரோப்பியர்…
ஆனால் அவர்கள் பேசுவது தமிழ் தான்… பத்தடி தொலைவில் இருந்து கேட்கும்போது தன் தோழி ரேஷ்மா பேசும் மலையாள மொழி கலந்த தமிழ் போல் தோன்றியது.
இன்னும் அருகில் சென்றபோது, அங்கே நெடிதுயர்ந்த கப்பல்… கரையோர துறைமுகத்திலிருந்து புறப்பட எத்தனித்து, பாய்மரம் விரித்து விடப்பட்டது.
அதில் தெரிந்த ஓவியம் மற்றும் தொம்மென்ற சத்தத்துடன் அறைந்த முரசு இரண்டும் அவள் சொன்னது சரிதான் என்று அடித்துக்கூறுவது போல் இருந்தது.
அவள் கண்முன் தெரிந்தது இருபது அடி உயரமும் ஏறத்தாழ முப்பதடி அகலமும் கொண்ட புலியின் ஓவியம்…
கம்பத்தில் பறந்தது புலிக்கொடி… !!!!!!!!
சிலப்பதிகார பாடலின் பொருள் முழுதாய் உணர்ந்தாள்… அவள் கற்பனையைக் காட்டிலும் அது நூறு மடங்கு இருந்தது…
“முட்டா சிறப்பின் பட்டினம்..!!! எவ்வளவு உண்மை அவங்க சொன்னது….!!!” என்று தன் மனதில் இவ்வளவு நேரம் ஓடிய எண்ணங்களின் இறுதியான வாக்கியத்தை வாய்விட்டு வெளியில் சொன்னாள் அனன்யா.
◆◆◆
சிறிது தூரம் சென்றதும் அங்கே ஒரு பெரிய சுவரும் நடுவில் கதவும் தென்பட்டது.
அந்தக் கதவு மிகப் பெரியதாய், மரத்தில் அற்புத வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. அதற்கு முன்னே காவலர் போல் தெரிந்த சிலர் நின்றிருந்தனர். அவர்கள் ஐரோப்பிய சாயல் வெள்ளை மனிதர்கள்.
மித்ரன் சென்று அவர்களில் ஒருவனிடம் ஆங்கிலத்தில் பேச்சுக்கொடுத்தான்… அவனோ தமிழில் “ நீங்கள் பேசும் மொழி புரியவில்லை” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா…!!இங்கிலீஷ் தெரியாதா…. ???” என்றான் சந்தேகத்தோடு.
“எனக்கு தாய் மொழி லத்தீன்..!!!” கேட்பதற்கு மட்டுமே அவன் பதிலளித்தான்.
இதில் குழம்பிய அவன் “அப்போ நீங்க எந்த நாடு…??? இது எந்த நாடு..??” என்று வினவினான்.
“நான் யவனர் படைத்தலைவன்… இது சோழ நாடு…!!! பூம்புகார் நகரம்…!!!!” அவன் அமைதியாக பதில் பேசினான்.
இதைக்கேட்ட மித்ரன் வெளிறிய முகத்துடன் வந்து இங்கே நண்பர்களிடம் விஷயத்தைக் கூறினான்.
“கிரேக்க, ரோமானிய மக்களை பழைய தமிழில் யவனர்ன்னு சொல்லுவாங்க…!!” தன் கருத்து உண்மை என உறுதியானதில் மகிழ்ச்சியோடு இதைச்சொன்னாள் அனு.
“சரி உள்ளே போகலாம் வாங்க…!!” என்று எல்லாம் தெரிந்தவள் போல் முன்னே சென்றாள்.
“அரசர் வடநாட்டுக்கு படையெடுத்து போயிருக்கதால அங்க காவல் குறைவா இருக்கு…!!! உள்ளேபோய் விருந்தினர் விடுதியில் தங்கிக்கோங்க…” என்று அந்த யவனன் இவர்கள் மூவர் புறங்கையிலும் ஏதோ ஒரு முத்திரையைப் பதித்தான். கட்டை விரலை நோக்கிப் புலி பாய்வது போல் இருந்தது.
உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்துவந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். அதனால இவங்களோட கார்கோ ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் பெரிய விஷயமா படல போல…
அனு ஏதோ வெளிநாட்டு சுற்றுலா வந்ததுபோல் எல்லா இடத்தையும் சுற்றிக்கொண்டிருந்தாள். அந்த நடு இரவில் கூட மக்கள் கூட்டம் திருவிழா போல் இருந்தது.
மித்ரன் மெல்ல நெருங்கி ஆதியிடம் “டேய்… என்னடா இது… பூம்புகார்ங்கிறான்… சோழநாடுங்கிறான்… அரசர் வடநாடு போயிருக்காருங்கறான்… ஒன்னும் நம்புற மாதிரி இல்லையே !!!” என்றான் பயத்தில்.
“எனக்கும் பயமா தாண்டா இருக்கு… இங்க எப்படி வந்தோம்னே தெரியல… இவளப்பாரேன்…” சொல்லிவிட்டு தொலைவில் ஏதோ கடையில் விலைபேசிக்கொண்டிருந்த அனுவை புன்னகையோடு பார்த்தான்.
“மச்சான்… இந்தப் பொண்ணுங்க எமலோகம் போனாகூட கடைத்தெருவ பாத்தா விட மாட்டாங்க போல….. காண்டாகுது…!! எப்புடி டா வீட்டுக்கு போறது…!!! தப்பிக்கிற வழி என்ன…!!” என்று கோபப்பட்டான்.
ஆதி ஒன்றும் சொல்லாமல் யோசனையில் இருக்க… மித்ரன் “உனக்காச்சும் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட இருக்க… நம்ம ஊருக்கு போகலன்னா கூட இவகூட இங்கேயே மகிழ்ச்சியா இருந்துடுவ… எனக்கு இன்னும் அதுமாதிரி நல்லது ஒன்னும் நடக்கலயே டா…!!!!!” என புலம்பித்தள்ளினான்.
நீண்ட சிந்தனையில் இருந்து விடுபட்ட ஆதர்ஷ்… “மச்சா… கல்லு டா… அந்த கல்.. இந்திர நீலம்… அது எங்க போச்சு…!!!” என்று பரபரத்தான்.
இவன் என்ன எப்போ பாத்தாலும் கல்லு கல்லுன்னு உயிர வாங்குறான் என்று நினைத்த மித்ரன் “உன் வருங்கால மனைவி தான் வச்சிருக்காங்க… கடற்கரையில கூட பாத்தேன்…!!!” என்றான் அலுப்புடன்.
“அந்த அமெதிஸ்ட் தான் இதுக்கு காரணம் மச்சான்…!!” என்றான் சட்டென்று முடிவுக்கு வந்தது போல்.
“இந்திரநீலம் சரிதான்… அது அமெதிஸ்ட் இல்ல… அக்வா மரைன்… நீ ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கப்ப தப்பு கண்டுபிடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்…” என்றான் கேலியாக.
“அப்படியா…!!” என்று சிரித்துவிட்டு “எதுவோ ஒன்னு… ஆனா நாம இங்க வந்ததுக்கும் அதுக்கும் கட்டாயம் தொடர்பிருக்கு…!!!” என்றான் ஆதி.
இந்த செய்தியை அனன்யாவிடம் சொல்வதற்கு அவளை நோக்கி நடக்கையில், அவளை பத்து காவல் வீரர்களுக்கு நடுவில் வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.
ஆதியும் மித்ரனும் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றனர்……!!!!!!
◆◆◆