நுரை நுரையாக பொங்கி ததும்பி வந்து கொண்டிருந்த அருவியைப் பார்த்து மயங்கிப் போனாள் வனமங்கை. வெறும் தலையை மட்டும் நனைத்து விட்டு வரலாம் என்று தான் சென்றாள். ஆனால் சோவென்று வெள்ளியை உருக்கி வார்த்தது போல வடிந்த தண்ணீரைக் கண்டு மனம் சிறகடித்தது. எந்த வித பயமும் தயக்கமும் இல்லாமல் அந்த அருவிக்குள் இறங்கினாள் வனமங்கை.
மாதவன் அவளையே பார்க்க அவளோ சர்வ சாதாரணமாக அருவியில் தலை கொடுத்து குளிக்க ஆரம்பித்தாள். கண் முன் ஆர்பாரித்த அருவியை விட அவனது மங்கை அழகாக இருப்பது போல பட்டது மாதவனுக்கு. தண்ணீரில் முழுவதுமாக நனைந்த சேலை அவள் உடல் முழுவதும் ஒட்டிக் கொண்டது. அதைக் கண்ட மாதவனின் கண்கள் அவளை விட்டு திரும்புவேனா என்று சண்டித் தனம் செய்தது.
“தலையை திருப்பு டா, ஒரு பொண்ணு குளிக்கிறதை பாக்குறது தப்பு”, என்று அவன் மனசாட்சி குரல் கொடுத்தாலும் அதை கேட்கும் நிலையில் தான் அவன் இல்லை.
அவனது பார்வை அவளுடைய தலை முதல் கால் வரை மேய்ந்தது. அவன் பார்வையை உணராமல் “நீங்களும் குளிக்க வறீங்களா? ரொம்ப நல்லா இருக்கும்”, என்று சொன்னாள் வனமங்கை.
“நல்லா தான் இருக்கும், யார் இல்லைன்னு சொன்னா? ஆனா நேரம் காலம் தான் சரியில்லை”, என்று அவன் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல அப்போது தான் அவன் பார்வையில் இருந்த வித்தியாசமே அவளுக்கு புரிந்தது. தலையிலிருந்து கால் வரை குப்பென்று ஒரு வித நாண அலை பரவ “எதுக்கு இப்படி பாக்குறீங்க?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“ஏன் எனக்கு உரிமை இல்லையா?”, என்று பதில் கேள்வி கேட்டு அவளைத் திணறடித்தான். அதற்கு மேல் அவன் முன்னிலையில் தண்ணீரில் நிற்க மனதில்லாமல் வெளியே வந்து விட்டாள்.
“ஏண்டி அதுக்குள்ள வந்துட்ட?”
“வேண்டாம் சாமி, உங்க பார்வையே சரி இல்லை”, என்று மனதில் எண்ணியவள் “எனக்கு குளிச்சது போதும்னு தோணுச்சு. அதான் வந்துட்டேன்”, என்று சொன்னாள். அவன் அவளையே பார்க்க உடையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீரைப் பிழிந்து ஈர உடையை உதறினாள். அதில் சில துளிகள் அவன் மீது பட்டது. அந்த குளிர்ந்த நீர் துளி அவன் தாபத்தைக் கூட்டியது என்று அவள் அறிவாளா?
அவன் தன்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருக்கவும் அங்கிருந்த கல்லில் அமர்ந்து அவள் தலையை உலர்த்த ஆரம்பித்தாள். “இது தான் சாக்கு”, என்று எண்ணி அவளை நெருக்கி பிடித்து அமர்ந்தான்.
“ஐயோ என்ன பண்ணுறீங்க? தள்ளி உக்காருங்க”
“இப்படி தான் உக்காருவேன்”, என்ற அவனது பிடிவாதத்துடன் கூடிய உரிமை பேச்சில் அவன் மீது இன்னும் காதல் கூடியது அவளுக்கு.
“என்ன டி அமைதியா இருக்க?”, என்று அவன் சரசத்துடன் கேட்க அவளுக்கோ உடலில் இருந்த குளுமையும் அவன் அருகாமையும் எதுவோ செய்தது. அவள் வெட்கத்துடன் தலை குனிய அவள் முகச் சிவப்பில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் கண்களில் இருந்த பாவத்தில் திகைத்தாள். அவனுடைய கண்களில் காதலுடன் கூடிய அழைப்பிருக்க அவளால் அவனை விட்டு விலக முடியுமா என்ன?
“மங்கை’, என்று அவன் மென்மையாக அழைக்க வசிய மருந்து க்கு மயங்கிவள் போல “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
அந்த முணுமுணுப்பே அவள் மனதை அவனுக்குச் சொல்ல அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் இடுப்பை வளைத்துக் கொண்டான். அவளுடைய உடலில் இருந்த குளிர் அவனுக்கும் அவனுடைய உடல் சூடு அவளுக்கும் பரவியது போல பிரம்மை இருவருக்கும் ஏற்பட்டது.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்களேன்”
“இதுக்கு மேல இடம் இல்லையே?”, என்று உண்மையாக வருந்தினான்.
அவன் கள்ளத்தனம் புரிய “ஐயோ என்னை நெருங்கி உக்காரச் சொல்லலை. அந்த பக்கம் தள்ளச் சொன்னேன்?”, என்றாள்.
“அதுக்கு வாய்ப்பே இல்லை. இப்ப நீ கிளம்பி போய்ட்டேன்னா இன்னும் எப்ப பாக்கவோ? நாளைக்கு உங்க அப்பா வேற என்ன வில்லங்கம் செய்யப் போறாரோ? இன்னைக்கு ஒரு நாள் உன் அருகாமையை அனுபவிச்சிக்கிறேன் டி. என் மேல நம்பிக்கை இல்லைன்னா கிளம்பி போ”
“என்னை விட உங்களை நான் நம்புறேன். வேணும்னா நான் சாயங்காலம் இங்க வரவா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள். தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று அச்சமாகவும் இருந்தது.
“வேண்டாம் மங்கை. இந்த இடம் பாக்கவே பயங்கரமா இருக்கு. இங்க எல்லாம் நீ வரக் கூடாது. ஏதாவது பிரச்சனை வரும். நான் கூட இருந்துட்டா கூட பரவாயில்லை. என்னால ஒரு வேளை வர முடியலைன்னா என்ன பண்ணுவ? எனக்கு தகவல் கூட சொல்ல முடியாத நிலைமை வரலாம். ஆனா கட்டாயம் நாளைக்கு உங்க அப்பா கிட்ட வந்து பேச வருவேன்”
“ஹிம்”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள் வனமங்கை.
“என்ன டி அமைதியாகிட்ட?”
“நீங்க என்னைத் தப்பா நினைக்கலை தானே?”
“ஏய், நான் எப்படி உன்னைத் தப்பா நினைப்பேன்? என் கிட்ட மட்டும் தான் நீ உரிமையா பேச முடியும்? அதுவும் சாயங்காலம் நீ வறேன்னு சொன்னது கூட எனக்காக தான்னு எனக்கு தெரியும் டி”, என்று அவன் சொன்னதும் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டு அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
அவனுடைய அருகாமையில் அவள் மனம் சிட்டுக்குருவியாய் சிறகடித்துப் பறந்தது. அவன் தன்னை நம்பியதும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அவனுடன் வாழ்க்கையை துவங்க ஆசையாக இருந்தது. மனதின் ஆசைகள் அவளுக்குள் சில உணர்வலைகளையும் எழுப்ப அதை கண்களைத் தேக்கிய படி அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையை படித்தவனின் கரங்கள் அவனை அறியாமலே சற்று அத்து மீற அவளது உடல் அவன் கைக்குள் நெகிழ துவங்கியது. அவனுக்குள் அவளை கொள்ளை கொள்ளும் வெறி வந்தது. தன்னுடைய கைக்குள் குழையும் அவளைக் கண்டு ஆண் என்று கர்வம் கொண்டான். அவள் மனதை வென்று விட்ட பெருமை அவனுக்கு வந்தது. ஆனால் இருக்கும் இடம் உரைக்க “சரி மங்கை, நேரம் ஆச்சு”, என்றான். அவளும் ஈர உடையுடன் அரை மனதாக கிளம்பிச் சென்றாள்.
அங்கே சென்றதும் “அருவியை பாத்த உடனே அங்கேயே நின்னுட்டியா? உன்னைக் காணாம உன் தம்பி தான் பரிதவிச்சிட்டான்”, என்று ஒரு பெண் சொல்ல குச்சியை வாஞ்சையுடன் பார்த்தாள் வனமங்கை. அவனும் அக்கா முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை மன நிறைவுடன் பார்த்தான்.
மலை இறங்கிச் சென்ற மாதவன் அவ்வளவு நேரம் வெற்றி தனக்காக காத்துக் கொண்டிருக்கவும் நெகிழ்ந்து போனான். வேகமாக அவனை நெருங்கியவன் “தேங்க்ஸ் வெற்றி, ஏன் இவ்வளவு நேரம் நின்னீங்க? நீங்க போய்ருக்கலாமே?”, என்றான்.
“உங்களை விட்டுட்டுப் போக மனசில்லை சார், வாங்க போகலாம்”, என்று சொல்லி ஜீப்பைக் கிளப்பினான். அவன் பாசத்தில் நெகிழ்ந்த படி ஜீப்பில் ஏறினான் மாதவன்.
அடுத்த நாள் காலை ஆடு மேய்க்க. நேற்று போலவே குச்சி உதவியுடன் வனமங்கை மாதவனைக் காண அருவிக் கரைக்குச் செல்ல அங்கே அவளுக்காக காத்திருந்தான் மாதவன். காதலர்கள் இருவரும் மெய் மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதை ஒரு ஜோடிக் கண்கள் பார்த்ததை அவர்கள் கவனிக்க வில்லை.
“சரி நான் கிளம்புறேன்”, என்றாள் வனமங்கை.
“சரி மங்கை, நான் சாயங்காலம் உங்க அப்பா கிட்ட வந்து பேசுறேன். சரியா?”
“இன்னைக்கு வேண்டாம். அவங்க வரவே சாயங்காலம் ஆகிரும். அதனால நாளைக்கு காலைல வாங்க”
“சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டு அவனும் கிளம்பினான்.
அவன் கிளம்பிச் சென்றதும் வனமங்கையும் குச்சியைக் நோக்கிச் சென்றாள். குச்சி அங்கே பயத்துடன் நின்றிருப்பதைப் பார்த்தவள் வேகமாக அவனை நெருங்கி “என்ன ஆச்சு டா?”, என்று கேட்டாள்.
அவனோ அருகில் இருந்தவர்களை பார்வை இட அவர்களுடன் ஆடு மேய்க்க வந்த அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்ப்பது பட்டது. “என்ன மா வனமங்கை காதல் பேச்செல்லாம் பேசி முடிச்சாச்சா? இதுக்கு தான் நேத்தும் இன்னைக்கும் அப்படி ஒடுனியா?”, என்று ஒரு பெண்மணி கேட்க அவளுக்கு திக்கென்று இருந்தது.
“அருவில குளிச்சிட்டு வந்ததை கேக்காம விட்டுட்டீங்களே? காரணம் இல்லாமலா இருக்கும்?”, என்று மற்றொரு பெண்மணி சொல்ல மங்கைக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள்.
“எல்லாம் காலக் கொடுமை. வேற என்ன செய்றது? தேனப்பன் கொடுத்த செல்லம் எங்க வந்து நிக்குது பாருங்க. இன்னைக்கு பெருசா நடக்க போகுது. என்னன்னு பாப்போம். சரி சரி எல்லாரும் அவங்க அவங்க ஆட்டைப் பாருங்க”, என்று ஒரு ஆள் சொன்னதும் அனைவரும் அங்கிருந்து கலைந்தார்கள்.
தலை குனிந்து நின்ற அக்கா அருகில் சென்று “நம்ம முருகன் அங்க அருவிக் கரைக்கு வந்துருக்கான் கா. அவன் வந்தது எனக்கு தெரியாது”, என்று வனமங்கைக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தான் குச்சி.
அடுத்து என்ன நடக்கும் என்று வனமங்கைக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே முருகன் என்பவன் தேனப்பனிடம் அவளை பெண் கேட்டான். தேனப்பன் மறுத்ததும் எப்போதும் அவரை முறைத்துக் கொண்டே திரிவான். நேற்று அவள் ஓடுவதையும், இன்று அவள் ஓடுவதையும் கண்டவன் பின்னால் சென்று வேவு பார்த்து அனைவரிடமும் சொல்லி விட்டான்.
ஒரு மரத்தடியில் அமர்ந்த வனமங்கைக்கு சுற்றி இருந்த அனைவரும் தன்னைப் பற்றி தான் தவறாக பேசுகிறார்கள் என்று புரிந்தது.