“இப்ப என்ன தான் பண்ணணும்னு சொல்ற? நான் போய் அவர் கிட்ட கேக்குறேன். திருடின்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேக்க சொல்றேன். அப்புறம் நீ சரியாகிருவ தானே?”
“நான் மூலிகை மட்டும் பறிக்கலை குச்சி”
“அக்கா”
“ஆமா டா, நான் உண்மையிலே திருடிட்டு தான் வந்தேன். உனக்கு ஒண்ணு தெரியுமா? நீயா சொல்ற வரைக்கும் நான் மூலிகை பறிக்க அந்த காட்டுக்குள்ள போனதோ, அவர் கையில சிக்கினது நான் தான்னோ அவருக்கு தெரியாது டா”
“என்னது??”
“ஆமா குச்சி. அன்னைக்கு மாட்டினது நான் தான்னு நீயா சொல்ற வரை அவருக்கு தெரியாது”
“நான் தான் உளறிட்டேனாக்கா?”
“ஆமா”
“அப்புறம் எதுக்கு அவர் உன்னை திருடின்னு சொன்னார்?”
“அது… அது வந்து… நான் சொன்னா நீ என்னை தப்பா நினைக்க கூடாது”
“என்னக்கா? நீ எனக்கு அம்மா மாதிரி. உன்னைப் போய் நான் எப்படி தப்பா நினைப்பேன்?”
“நான் அந்த சார் வீட்ல இருந்து ஒரு பொருளை எடுத்துட்டு வந்தேன் டா”
“என்னது? நீயா? என்னதுக்கா?”
“அது… அது… அவரோட போட்டோ”
“அக்கா…”
“ஆமா டா. ஆனா, அதை எதுக்கு எடுத்தேன்னு எனக்கே தெரியலை டா குச்சி”
“என்னக்கா சொல்ற?”
“அதை எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் மனசு உருத்திட்டே இருந்துச்சு. உன் கிட்ட சொல்லவும் சங்கடமா இருந்துச்சு. அதை திருப்பி அவர் வீட்லே வைக்க தான் உன் கூட வந்தேன். ஆனா அவர் அதை கண்டு பிடிச்சிட்டார். ஆனா அவருமே நான் அவரோட போட்டோவை எடுத்துருப்பேன்னு நினைக்கலை போல?”
“ஐயோ எனக்கு குழப்பமா இருக்கு? நீ ஒண்ணு சொல்ற, அவர் ஒண்ணு சொல்றார். நீ ஏன் அதை எடுக்கணும்?”, என்று குழப்பமாக குச்சி கேட்கும் போதே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற தேனப்பன் திரும்பி வந்தார்.
அக்காவும் தம்பியும் அவரை குழப்பமாக பார்க்க “கடந்த ரெண்டு நாளா என்ன நடந்துச்சு?”, என்று இருவரிடமும் கோபமாக கேட்டார் தேனப்பன்.
அவர் அப்படிக் கேட்டதும் அதிர்ச்சியாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? சந்தைல வச்சு மயங்கி விழுந்தியா குச்சி? அப்புறம் அந்த வனத்துறை அதிகாரி கூட நீங்க ஜீப்ல போனீங்களா? அது மட்டுமில்லாம நேத்து அந்த வனத்துக்குள்ளே போயிருக்கீங்க அப்படி தானே?”, என்று கோபமாக கேட்டார் தேனப்பன்.
“அது வந்துப்பா…. அவர் உதவி செஞ்சார் அதனால தான். நன்றி சொல்ல நேத்து போனோம்”, என்றான் குச்சி.
“இங்க பாருப்பா குச்சி. நம்ம ஜனம் சூதுவாது தெரியாதவங்க. ஆனா அவங்க அப்படி இல்லை. நம்மளுக்கு நல்லது செய்ய போறோம்னு சொல்லி இந்த காட்டுக்குள்ள நுழைஞ்சு கடைசில நம்மளையே ஒரு மூலைல உக்கார வச்சவங்க. நம்ம இடத்தை நம்ம வளத்தை எல்லாம் அபகரிச்சிட்டு இருக்குறவங்க. இன்னும் கொஞ்ச காலத்துல நம்ம குடியிருப்புகளைக் கூட அவங்க காலி பண்ணினாலும் பண்ணுவாங்க. அவங்க கூட எல்லாம் நாம சகவாசம் வச்சிக்க கூடாது கண்ணு. அப்பா உங்க நல்லத்துக்கு தானே சொல்வேன். உன் அக்கா எல்லாத்துக்கும் இரக்கப் படுறவ. அவ கண்டிப்பா வைத்தியர் ஐயாவுக்காக அந்த மூலிகை எடுக்க தான் போயிருப்பா. ஆனா நீ தான் குச்சி அவளைப் பாத்துக்கணும். இனி அவளை எங்கயும் அனுப்பக் கூடாது”
“சரிப்பா, இனி அங்க போக மாட்டோம். அக்காவையும் போக விட மாட்டேன்”, என்றான் குச்சி.
“சரி கண்ணு, கூட ஆடு மேய்க்கிற பயலுக நடந்ததைச் சொன்னதும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம மறைச்சிட்டீங்கல்ல? சரி போனது போகட்டும். இனி அந்த காட்டுப் பக்கமோ அந்த ஆத்துப் பக்கமோ ரெண்டு பேரும் போக கூடாது. கஞ்சி ஆருறதுக்குள்ள குடிங்க. நான் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
அவர் போகும் வரை வனமங்கை வாயைத் திறக்கவே இல்லை. குச்சியும் அக்கா மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவளைப் பார்த்த படி நின்றான்.
அப்போது “வனமங்கை.. குச்சி”, என்று வெளியே இருந்து குரல் கொடுத்தார் வைத்தியர்.
அவர் குரலை அடையாளம் கண்டு கொண்ட இருவரும் அவசரமாக வெளியே சென்றார்கள். “வாங்க வைத்தியர் ஐயா”, என்றாள் வனமங்கை.
“எப்படி இருக்கீங்க தாத்தையா?”, என்று கேட்டான் குச்சி.
“ரெண்டு பேருக்கும் இந்த கிழவன் நினைப்பு இப்ப தான் வருதா? என்னைப் பாக்கவே வரலையே?”, என்றார் அவர்.
“அது வந்து ஐயா”, என்று வனமங்கை இழுக்க “அக்கா தாத்தையாவுக்கு கஞ்சி ஊத்தி எடுத்துட்டு வா”, என்றான் சின்னவன்.
“சரி டா”, என்று சொல்லி விட்டு அவள் உள்ளே சென்றதும் “அக்கா இனி மூலிகை பறிச்சி கொண்டு வராது தாத்தையா?”, என்றான் குச்சி.
“என்ன குச்சி சொல்ற? அன்னைக்கு மூலிகை கொண்டு வந்தப்ப கூட வனமங்கை முகம் ஒரு மாதிரி தான் இருந்துச்சு. என்னன்னு கேட்டதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொன்னா. ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா, கொஞ்ச நேரம் பொறுங்க. நான் சொல்றேன்”, என்றவன் அமைதியாகி விட்டான். வைத்தியரும் குழப்பமாக அமர்ந்திருந்தார். அப்போது இருவருக்கும் வனமங்கை கஞ்சி எடுத்து வர இருவரும் அமைதியாக உண்டார்கள்.
பின் வைத்தியர் அங்கிருந்து கிளம்ப அக்காவிடம் சொல்லி விட்டு குச்சியும் அவருடன் சென்றான். அவன் தன்னைப் பற்றிச் சொல்லத் தான் அவருடன் செல்கிறான் என்று தெரியாமல் வனமங்கை உணவைத் துறந்து சோர்வுடன் படுத்துக் கொண்டாள்.
அவளுக்கு இந்த சோர்வு புதியது. அவளுடைய அன்னையின் இறப்பின் போது இருந்த வலியை இப்போதும் உணர்ந்தாள். அது மாதவனின் அதிகப் படியான பேச்சாளா? இல்லை இனி அவனைக் காண முடியாது என்ற தவிப்பாளா என்று தான் புரிய வில்லை.
வைத்தியர் என்ன நடந்தது என்று விவரம் கேட்டதும் நடந்த அனைத்தையும் சொன்னான் குச்சி. வனமங்கை எதற்காக மாதவனின் புகைப்படத்தை எடுத்து வந்தாள் என்ற கேள்விக்கு விடை குச்சிக்கு புரிய வில்லை என்றாலும் வைத்தியருக்கு புரிந்தது. சிறு வயதில் இருந்து அவளைப் பார்ப்பவர் ஆயிற்றே. இப்போது இருக்கும் அவளுடைய சோர்வுக்கு மாதவன் தான் காரணம் என்றும் புரிந்து கொண்டார்.
“குச்சி எனக்கு அந்த பையனைப் பாக்கணுமே?”, என்றார் வைத்தியர்.
“அவரை எதுக்கு தாத்தையா பாக்கணும்? அந்த ஆள் அக்காவைத் திட்டிட்டார். அக்கா இப்படி இருந்து நான் பாத்ததே இல்லை தெரியுமா? இப்ப இப்படி இருக்க அந்த ஆள் தான் காரணம்”
“ஆமா வனமங்கை இப்படி இருக்க அந்த பையன் தான் காரணம். நான் ஒண்ணும் இல்லைன்னு சொல்லலையே? ஆனா உன் அக்கா இப்படியே இருக்கணுமா? இல்லை பழைய படி மாறனுமா?”
“மாறனும் தாத்தையா. அக்கா கலகலன்னு இருந்தா தான் நல்லா இருக்கும். இப்படி அமைதியா இருந்தா நல்லா இல்லை”
“அப்படின்னா நான் அந்த பையனைப் பாக்கணும். ஆனா எப்படி? அவன் இடத்துக்கு நம்மளை விட மாட்டாங்க. அந்த பையன் எப்ப வெளிய வருவான்?”
“அவர் எப்ப வெளிய வருவார்ன்னு தெரியாது தாத்தையா. ஆனா நாம அவரை அந்த காட்டுக்குள்ள போய் பாக்கலாம்”
“எப்படி குச்சி? நம்மளைத் தான் உள்ள விட மாட்டுக்காங்களே?”
“அதெல்லாம் விடுவாங்க. நீங்க வாங்க. நான் கூட்டிட்டு போறேன். ஆனா நான் அவர் கிட்ட பேச மாட்டேன்”