Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 5 1

அத்தியாயம் 5 

உந்தன் மூச்சுக் காற்று

பட்டு உருகும் மெழுகாய்

நானும் எந்தன் காதலும்!!!



Advertisement

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. மாதவன் வனமங்கையின் நினைவில் கண் விழித்தான் என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ அவளைக் காண வேண்டும் போல் ஒரு வேகம் அவனுக்குள் இருந்தது.

Advertisement

ஆனால் நினைத்த நேரத்தில் ஒரு மலை ஜாதிப் பெண்ணைப் பார்ப்பது தவறு என்று அவன் புத்திக்கு உரைத்தது. அது இயலாத ஒன்று என்றும் அவனுக்கு புரிந்தது.

Advertisement

“கடவுளே அவளை என் கண்ணில் காட்டு”, என்ற வேண்டுதலோடு தான் படுக்கையை விட்டு எழுந்தான். அன்றைய காலை கடன்களை முடித்து விட்டு ஒரு டீஷர்ட் மற்றும் டிராக்ஷூட் அணிந்து வெளியே வந்தான்.

Advertisement

அவனைக் கண்ட வெண்ணிலாவின் கண்களில் ஆர்வம் அதிகமானது. “குட் மார்னிங் மாதவன், எங்க கிளம்பிட்டீங்க?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.

“குட் மார்னிங் வெண்ணிலா, சும்மா நடக்கலாம்னு கிளம்பினேன்?”, என்று சொல்லி அவளைக் கண்டு புன்னகைத்தான்.

“நானும் வரவா? காட்டை சுத்தி பாக்கணும் போல இருக்கு. ஆனா தனியா போக அண்ணா விட மாட்டிக்கான்”

“வந்தனாவை துணைக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே?”

“அவ சரியான பயந்தாங்கொள்ளி. எங்க கூப்பிட்டாலும் வரலைன்னு சொல்றா”

“எனக்குமே இங்க எதுவும் தெரியாது. சும்மா கொஞ்ச தூரம் தான் போவேன்”

“அந்த கொஞ்ச தூரம் நானும் வரேனே பிளீஸ்”, என்று கேட்டாள்.

அவள் கண்ணைச் சுருக்கி கெஞ்சிக் கேட்டது சிறு குழந்தையின் கெஞ்சலை நினைவு படுத்த “சரி வாங்க போகலாம்”, என்று சொன்னான். அவன் அப்படிச் சொன்னதும் அவளும் அவனுடன் நடந்தாள். போகும் போது மாதவனுடன் பேசும் ஆர்வம் வந்தது வெண்ணிலாவுக்கு. ஆனால் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக வந்தாள்.

“எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சாச்சா?”, என்று மாதவனே பேச்சை ஆரம்பித்தான்.

“ஆரம்பிச்சிட்டேன், ஆனா டிகிரி படிச்சதுக்கும் எக்ஸாம்க்கு படிக்கிறதுக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. கஷ்டமாவும் இருக்கு”

“ஆமா, அது அப்படி தான் இருக்கும். எக்ஸாம்க்கு லைன் பை லைன் படிக்கணும்ல? படிக்க ஆரம்பிச்சா ஈஸியா தெரியும்”

“ஹிம், சரி அதை விடுங்க. உங்க கிட்ட நான் ஒண்ணு கேக்கலாமா?”

“கேளுங்க வெண்ணிலா”

“வந்தனாவை மட்டும் வா போன்னு சொல்றீங்க? என்னை மட்டும் ஏன்…..?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

அவள் என்ன கேட்கிறாள் என்று புரிந்து கொண்டவன் “மரியாதையா கூப்பிடுறது நல்லது தானே?”, என்று கேட்ட படி அவளைப் பார்த்தான்.

கண்ணைச் சுருக்கி இமையை சற்று தூக்கி கேட்ட அவனது தோற்றம் அவளைக் கவர்ந்தது. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவள் முன் கை ஆட்டியவன் “ஹலோ மேடம் என்ன நின்னுட்டே கனவு காணுறீங்க?”, என்று கேட்டான்.

“வாங்க போங்கன்னு சொல்லாதீங்க சொல்றேன். நீங்க மேடம்னு வேற சொல்றீங்க?”, என்று சிணுங்களாக கேட்டாள்.

“சரி சரி இனி வெண்ணிலான்னே சொல்றேன் போதுமா?”, என்று இறங்கி வந்தான்.

“வா… போன்னு சொல்லணும்”, என்று அவள் விடாப் பிடியாக நிற்க “ஹா ஹா மரியாதை கொடுக்க கூடாதுன்னு மிரட்டுறது நீங்களாத் தான்….. சாரி சாரி…. நீயா தான் இருக்கும். போதுமா?”, என்று புன்னகையுடன் சொன்னான்.

அவள் முகம் அவனுடைய கேலியில் சிவந்தது. அவளது சிவந்த முகத்தைப் பார்த்தவனுக்கு வனமங்கை தான் நினைவுக்கு வந்தாள்.

அந்த காட்டில் தேவதை போல கண் முன் தோன்றியவளின் தோற்றம் அவன் மனக்கண்ணில் வந்து போனது. அவளது தாவணியைப் பற்றி இழுத்த போது அவிழ்ந்து விழுந்த அந்த நீண்ட கூந்தல் கூட இன்னும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

தன்னுடைய அறையில் தன்னுடைய கைக்குள் சிறு நடுக்கத்துடன் அடங்கி இருந்தவளை எண்ணிய போது அவனது தாபம் ஏனோ அதிகரித்தது. இது வரை அவனுக்குள் இப்படியாகப் பட்ட உணர்வுகள் எதுவும் எழுந்ததில்லை.

இனி அவளைக் காண முடியுமா? தன்னுடைய அதிகப் படியான பேச்சை அவள் மன்னிப்பாளா என்று விதவிதமான கேள்விகள் அவனுக்குள் எழுந்தது. அவளுடைய கருகுமணி மாலையை ஏன் சட்டைப் பையில் தூக்கிக் கொண்டு திரிந்தோம் என்று கூட அவனுக்கு தெரியவில்லை.

“ஹலோ சார் என்னை கனவு காணுறேன்னு சொல்லிட்டு நீங்க எங்க கனவுக்கு போய்ட்டீங்க?”, என்று வெண்ணிலா கேட்டதும் தான் நடப்புக்கு வந்தான்.

“ஒண்ணும் இல்லை வெண்ணிலா, வேற ஒரு யோசனை”, என்று சொன்னவனுக்கு என்ன முயன்றும் வெண்ணிலாவுடன் இயல்பான பேச்சு வரவில்லை. முழுவதுமாக வனமங்கையே அவன் மனதை ஆக்கிரமித்திருந்தாள். வெண்ணிலா அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் அவனுக்கு வனமங்கையைத் தான் நினைவு படுத்தினாள்.

அவன் அமைதியாக இருக்கவும் “என்ன ஆச்சு மாதவன்? உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள். “ஒண்ணும் இல்லை வெண்ணிலா. நீ வீட்டுக்கு போ. நான் என்னோட வீட்டுக்கு கால் பண்ணிட்டு வரேன்”, என்று சொன்னவன் அவளுடைய பதிலைக் கூட கேட்காமல் சென்று விட்டான். போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்ற வெண்ணிலா அவனிடம் சரியாக பேச முடியாத ஏமாற்றத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள்.

வனமங்கையை நினைத்துக் கொண்டே சென்ற மாதவனின் கால்கள் நேராக சென்று நின்றது அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் தான். எப்போதாவது அவள் இங்கே வந்து தனது கண்களுக்கு காட்சி தருவாளா என்று தேடினான்.

இவன் வனமங்கையை மனதால் தேடிக் கொண்டிருக்க அதே நேரம் வனமங்கையும் அவனுடைய நினைவில் தான் இருந்தாள். தன்னுடைய வீட்டுக்கு வெளியே கிடந்த குத்துக் கல்லில் எங்கேயோ வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

அவளை வியப்பாக பார்த்தான் குச்சி. எப்போதும் காலையில் தேனப்பன் ஆடுகளை பற்றிக் கொண்டு செல்லும் போது அவரிடம் செல்லம் கொஞ்சி வழி அனுப்பும் வனமங்கை இன்று வெறும் தலையாட்டலுடன் விடை கொடுத்தது குச்சிக்கு வியப்பாக இருந்தது.

தேனப்பனுக்கும் குழப்பம் தான் வந்தது. மகளை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு அவர் செல்ல குச்சி மெதுவாக அவள் அருகே வந்தான்.

“அக்கா…”, என்று அவன் அழைத்தும் அவள் அவனைக் கண்டு திரும்ப வில்லை. அவனுடைய அசைவிலே அவன் வருகையை உணர்பவளின் இந்த நிலை புதிது.

அவள் பதில் சொல்லாததால் “அக்கா”, என்று அழுத்தி அழைத்தான்.

“ஆன்”, என்ற சத்தத்தோடு திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் வனமங்கை.

“என்ன ஆச்சுக்கா உனக்கு? என்ன யோசிச்சிட்டு இருக்க?”

“ஒண்ணும் இல்லையே குச்சி”, என்று சொன்னவள் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“பொய் சொல்லாத, உனக்கு என்னமோ ஆச்சு. நீ நேத்துல இருந்து ஒரு மாதிரியா தான் இருக்குற?”

“அப்படி எல்லாம் இல்லை டா”

“என் கிட்ட நீ பொய் சொல்லுவியாக்கா?”, என்று அவன் தாழ்ந்த குரலில் கேட்டதும் அவள் கண்கள் கலங்கியது. அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் திணறினாள்.

“அப்பா கிட்ட கூட நீ சரியா பேசலை. அவருக்கே உன்னைப் பத்தி சந்தேகம் வந்துருக்கும். சாயங்காலம் வந்து அப்பா கேப்பார். அதுக்குள்ள நீ சரியாகனும். என்னன்னு சொல்லுக்கா”

“நிஜமாவே ஒண்ணும் இல்லை டா குச்சி”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“என் முகத்தைப் பாத்து ஒண்ணும் இல்லைன்னு சொல்லு பாப்போம். நேத்து அந்த சார் அப்படி பேசினதுல இருந்து இப்படி தான் நீ இருக்க. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆள் தான். அவர் உன்னை திருடின்னு சொன்னது தான் நீ இப்படி இருக்க காரணமா இருக்கும். அப்படித் தானே?”

“அவரை குறை சொல்லாத டா. தப்பு நம்ம மேல தான் டா”

“ஆமா தப்பு நம்ம மேல தான். நாம அந்த காட்டுக்கு மூலிகை எடுக்க போகணும்னு நினைச்சிருக்க கூடாது. போனது போகட்டும். ஆனா அதுக்கு நீ எதுக்கு இப்படி இருக்க? கண்டிப்பா நான் போய் அந்த ஆள் கிட்ட சண்டை தான் போடப் போறேன். அவர் திருடின்னு சொன்னது தான் நீ இப்படி இருக்க காரணம். ஏன்னா அதுக்கு முன்னாடி வரை நீ ஒழுங்கா தான் இருந்த”

“சண்டை எல்லாம் வேண்டாம் டா குச்சி. அவர் மேல எந்த தப்பும் இல்லை. அதே மாதிரி அவர் என்னை திட்டினதுலயும் தப்பு இல்லை. ஆனா அவர் அப்படிச் சொன்னதும் கஷ்டமா தான் இருக்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!