அப்போது உள்ளே இருந்து வந்த சாமி “இது உங்க பையனும் மருமகளுமா மா? பாக்க அம்சமான ஜோடியா இருக்காங்க”, என்று சொல்ல வெண்ணிலா முகம் மலர்ந்தது. ஆனால் அதைக் கேட்டு கூடைத் தணலை தலையில் கொட்டியது போல துடித்துப் போனாள் வனமங்கை. (usa2goquickstore.com)
அப்போது தான் அவர்கள் ஜோடிப் பொருத்ததைக் கண்டாள் கீதா. அவளுக்கும் திருப்தியை அளித்தது. மாதவனோ வனமங்கை முகத்தில் வந்து போகும் உணர்வலைகளைப் பார்த்த படி அதிர்ச்சியில் நிற்க “கல்யாணம் இன்னும் முடியலை சாமி. கூடிய சீக்கிரம் நடக்கும்”, என்று சொன்னாள் கீதா. அதைக் கேட்டு வனமங்கை கண்கள் கலங்கியே விட்டது. அதை திருப்தியாகப் பார்த்தாள் வெண்ணிலா.
“அம்மா நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கியா?”, என்று எரிந்து விழுந்த மாதவன் “ஐயா, எல்லாருக்கும் தீபாராதனை காட்டுங்க”, என்றான்.
அதன் பின் சாமி கும்பிட்டதும் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அனைவருக்கும் சுண்டல் பிரசாதமாக கொடுக்கப் பட்டது. அப்போது கை கழுவுவதற்காக சென்ற வெண்ணிலா நேராக வனமங்கை அருகில் சென்று “என்ன பொண்ணு, என்ன டா நம்மளைக் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப என் கூட ஜோடியா மாதவன் வந்துருக்கார்னு பாக்குறியா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போகுது. ஆண்ட்டி சொன்னதைக் கேட்ட தானே? நான் தான் மாதவனோட பொண்டாட்டி. உன்னை எல்லாம் நீ கண்ணாடில பாத்தது இல்லையா? எப்படி உனக்கும் அவருக்கும் பொருந்தும்னு நினைச்ச? சும்மா சும்மா அவரைப் பாத்து கண்ணுல தண்ணி விட்டுட்டு இருக்க? உன் தகுதி தரம் தெரிஞ்சு ஒதுங்கிறது உனக்கு நல்லது”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
அப்போது கை கழுவ வந்த மாதவன் “மங்கை”, என்று அழைக்கக் “போங்க இங்க இருந்து. இனி என் கண்ணுலே முழிக்காதீங்க. உங்க அம்மா பாத்தா பொண்ணையே கட்டிக்கோங்க”, என்று அவனிடம் அடிக்குரலில் சீறினாள்.
“என்ன டி ஆச்சு? அவ உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனா? அம்மா கிட்ட நான் பேசுறேன் மங்கை”
“வேண்டாம், யாரும் யார்க் கிட்டயும் பேச வேண்டாம். எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி என்னைத் தேடி இங்க வராதீங்க”, என்று சொன்னவள் “ஐயா நான் கிளம்புறேன். பிரசாதம் வீட்ல வந்து வாங்கிக்கிறேன்”, என்று சாமியிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அங்கிருந்து ஓடிப் போகும் வனமங்கையைப் பார்த்த கீதா “அந்த பொண்ணுக்கு எவ்வளவு முடி? முகம் கூட ரொம்ப அழகா இருக்குல்ல? குட்டியா கியூட்டா இருக்கா. நம்மளை மாதிரி சேலை கட்டினா ரொம்ப அழகா இருக்கும்”, என்று கீதா சொல்ல வெண்ணிலாவுக்கோ கீதாவின் பேச்சில் முகம் கருத்துப் போனது.
அம்மாவின் வெகுளித் தனமான பேச்சைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது மாதவனுக்கு. அவன் கீதாவை முறைத்துப் பார்க்கவும் “என்ன டா, எதுக்கு என்னை இப்படி பாசமா பாத்து வைக்கிற?”, என்று கேட்டாள்.
“இப்ப சொன்னதை அந்த பொண்ணு கிட்ட சொல்றதுக்கு என்ன? அந்த பொண்ணு முன்னாடி வேலை பாக்குறியான்னு கேக்குற? அவ சேலை கட்டை கிண்டல் அடிக்கிற? அவளுக்கு எப்படி இருந்துருக்கும்? அவ போன பிறகு இப்படி பாராட்டுற? இருக்கும் போதே சொல்லிருக்கலாம்ல?”, என்று சிடுசிடுத்தான்.
“எவன் டா இவன்? எதுக்கு எடுத்தாலும் சிடுசிடுன்னு இருக்க? அந்த பொண்ணை வேலை பாக்குறியான்னு கேட்டப்ப நீ என்னை திட்டிட்ட. அதான் அந்த பொண்ணு முன்னாடி அவளை பாராட்டின. அதுக்கும் நீ என்னைத் திட்டுவியோன்னு நினைச்சேன்”, என்று சொல்ல மாதவன் தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டான்.
மகன் தலையில் அடிப்பதைப் பார்த்தவள் “அந்த பொண்ணு எங்க போச்சு டா? நேர்ல போய் பாராட்டிட்டு வரட்டா?”, என்று கேட்டாள்.
“நீ ஒண்ணும் செய்ய வேண்டாம் மா. இது வரை செஞ்சதே போதும்”, என்றவன் “வெண்ணிலா உன் மனசுல நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க?”, என்று நேரடியாகவே கேட்டான்.
கீதா முன்னிலையிலே அவன் இப்படி கேட்பான் என்று தெரியாமல் அவள் திகைத்து விழித்தாள்.
“உன்னைத் தான் கேக்குறேன் வெண்ணிலா”
“எதுக்கு டா அந்த பொண்ணை மிரட்டிட்டு இருக்க? அவ என்ன பண்ணினா? அவ அமைதியா தானே இருக்கா?”, என்று கீதா கேட்டதும் “எனக்கு இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும் மா. அதான் கேக்குறேன்”, என்று அன்னைக்கு பதில் சொன்னாலும் அவன் பார்வை வெண்ணிலா புறமே இருந்தது.
“சொல்லு வெண்ணிலா, அவ கிட்ட என்ன பேசின?”
“சரி சொல்றேன்”, என்று அவனிடம் சொன்ன வெண்ணிலா கீதா புறம் திரும்பி “ஆண்ட்டி, எனக்கு உங்க பையனை ரொம்ப பிடிச்சிருக்கு. பாத்ததுல இருந்து நான் அவரை விரும்புறேன்”, என்றாள். அதில் கீதா முகம் மலர “ஷட் அப்”, என்று கத்தினான் மாதவன்.
“டேய் மாதவா, உனக்கு என்ன தான் டா பிரச்சனை? வெண்ணிலாவை அழகா இருக்கான்னு நீ தானே முதல்ல என் கிட்ட சொன்ன? அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. உங்க ஜோடிப் பொருத்தம் கூட அழகா இருக்கு டா. அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்ற?”
“அம்மா உனக்கு எப்படி சொன்னா புரியும்? என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா மா. அது இந்த வெண்ணிலாவுக்கே தெரியும். தெரிஞ்சும் இவ வேணுக்குன்னு பண்ணுறா. அவ நோக்கம் புரியாம நீயும் ஆடிட்டு இருக்க”
“என்ன டா சொல்ற? வேற பொண்ணை விரும்புறியா?”
“ஆமா மா”
“யாரு டா அது?”
“அதை நான் வீட்ல போய் சொல்றேன்,. ஆனா முதல்ல நீ இவ கூட பேசுறதை நிப்பாட்டு. இவளை நல்ல பொண்ணுன்னு நான் கூட முதல்ல நினைச்சேன். ஆனா இவ விசமா இருக்கா”
“நான் விசமா? என்னைப் பாத்தா இப்ப விசமா தான் இருக்கும்? அவளைப் பாத்தா மட்டும் உங்களுக்கு இனிக்குமா?”, என்று கோபமாக கேட்டாள் வெண்ணிலா. அவள் கோபத்தை வியப்பாக பார்த்தாள் கீதா.
“நான் ஆண்ட்டி கூட இருக்குறது போகட்டும். ஆனா அவங்க கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே? நீங்க யாரை லவ் பண்ணுறீங்கன்னு ஆண்ட்டிக் கிட்ட சொல்ல வேண்டியது தானே? இப்ப இங்க பெருக்கிக்கிட்டு இருந்த மலை ஜாதிப் பொண்ணைத் தான் லவ் பண்ணுறேன்னு தைரியமா சொல்ல வேண்டியது தானே? அவளை உங்க அம்மா கிட்ட அடையாளம் காட்ட உங்களுக்கு வெக்கமா இருக்கோ?”, என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள் வெண்ணிலா.
அதைக் கேட்டு அதிர்ந்து போன கீதா “என்ன டா இதெல்லாம்? நீ அந்த பொண்ணையா விரும்புற?”, என்று கேட்டாள்.
“ஆமா, மா அவ பேர் வனமங்கை. அவளைத் தான் விரும்புறேன். அவளை உனக்கு காட்ட தான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன். இந்த பிசாசால எல்லாம் சொதப்பிருச்சு”, என்று வெறுப்புடன் சொன்னான்.
“உண்மையாவே நீ அவளையா விரும்பின?”, என்று கீதா கேட்க அன்னையின் கேள்வி அவனுக்கு எரிச்சல் தர “ஆமா அவளுக்கு என்ன?”, என்று கேட்டான்.
“உன் புத்தி ஏண்டா இப்படி போகுது? நான் ஜாதி எல்லாம் பாக்க மாட்டேன் தான். ஆனா எனக்கும் மருமகள் எப்படி இருக்கணும்னு ஒரு கனவு இருக்கு. இந்த பொண்ணை எப்படி டா?”
“உன் கனவுக்கு நான் என்ன செய்ய முடியும் மா? எனக்கு வனமங்கையை தான் பிடிச்சிருக்கு. அவளும் என்னை விரும்புறா. இந்த பேய்தான் அவ கிட்ட ஏதோ சொல்லிருக்கா. அதான் அவ கோபப் பட்டு போயிட்டா”
“ஆண்ட்டி என்னை பேய் அது இதுன்னு சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்றாள் வெண்ணிலா.
“உண்மையை சொன்னா எரியுதோ?”, என்று மாதவன் அவளிடம் எகிற வெண்ணிலாவும் பதிலுக்கு கத்தினாள். அவர்கள் சந்தையைப் பார்த்த கீதா “எம்மாடி இவங்க ரெண்டு பேரும் எப்படி சண்டை போடுறாங்க? நம்ம மகனுக்கு இந்த வெண்ணிலா சரி பட்டு வார மாட்டா”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “சும்மா இரு டா. முதல்ல ரெண்டு பேரும் வண்டில ஏறுங்க. வீட்ல போய் எல்லாம் பேசிக்கலாம். சாமி கோவிலை அடைச்சிட்டார். இருட்ட வேற போகுது”, என்று சொல்லி பேச்சை முடித்து வைத்தாள். இல்லை இல்லை அவர்கள் சண்டையை முடித்து வைத்தாள். ஏனென்றால் அதற்கு மேல் வெண்ணிலாவின் முன் மகனிடம் தர்க்கம் நடத்த கீதா விரும்பவில்லை.
“என்ன இந்த ஆண்ட்டி சட்டுன்னு பேச்சை நிறுத்திட்டாங்க. அப்படின்னா அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்குவாங்களா?”, என்று எண்ணிய படியே ஜீப்பில் ஏறி அமர்ந்தாள் வெண்ணிலா.
மாதவனோ இறுக்கத்துடன் ஜீப்பை கிளப்பினான். வீட்டுக்கு சென்றதும் மூவரும் இறங்கினார்கள். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக்மல் “ஆண்ட்டி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?”, என வார்த்தைக்கு தேன் தடவியது போல கேட்டாள் வெண்ணிலா.
“ஆமா ஆமா இவ பெரிய இவ. இவ கிட்ட சொல்லிட்டு தான் முடிவு எடுக்கணும்?”, என்று திட்டிய மாதவன் அவளைக் கண்டு முறைக்க அவளோ பதிலுக்கு முறைத்தாள்.
இருவரையும் பார்த்த கீதா “என்னை மன்னிச்சிரு மா வெண்ணிலா. எப்பவுமே என்னோட மகன் ஆசைக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன். அவனுக்கு உன்னைப் பிடிக்கலையாம். அதனால நீயும் உன் மனசை மாத்திக்கோ. இப்ப போய் நிம்மதியா தூங்கு”, என்று சொல்லி விட்டு செல்ல திகைத்து போய் நின்றாள் வெண்ணிலா.
அவளை நக்கலாக பார்த்த மாதவன் “இத்தனை வருஷம் என்னை பெத்து வளத்த அம்மா. அவங்க எனக்காக பாப்பாங்களா, இல்லை நேத்து வந்த உனக்காக பாப்பாங்களா? அன்னைக்கு தெரிஞ்ச உன் அழகு இன்னைக்கு என் கண்ணுக்கு தெரியவே இல்லை. ஒரு வேளை அன்னைக்கு உன் மனசு அழகா இருந்திருக்குமோ என்னவோ? அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
ஜீப் சாவி வாங்க வந்த வெற்றி “நல்லா பல்ப் கொடுத்துட்டு போறாங்க போல? உனக்கு இது தேவை தான். நீ திருந்தவே மாட்டல்ல?”, என்று கேட்டு விட்டுச் சென்றான்.
அவனமானப் பட்ட உணர்வுடன் அப்படியே நின்றாள் வெண்ணிலா. தோற்றுப் போன வலி எழுந்தது. “கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா பாப்பா?”, என்று கேட்ட படி ராம் வர அவனுக்காக முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.
“ஆமா அண்ணா, இந்தா பிரசாதம். இந்த வருசமாவது உன் கல்யாணம் நடக்கணும்னு வேண்டிட்டு வந்தேன்”, என்று அவனிடம் நீட்ட அவளை வாஞ்சையாக பார்த்தவன் “என்னது உனக்கு முன்னாடி எனக்கு கல்யாணமா? அதுக்கு வாய்ப்பே இல்லை. உனக்கு கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து தாய் மாமன் சீர் செஞ்ச பிறகு தான் எனக்கு கல்யாணம்”, என்றான்.