அவன் பாசத்தில் நெகிழ்ந்தவள் “சரி சரி எனக்கு கல்யாணம் பண்ணிட்டே பண்ணு. ஆனா தாய் மாமன் சீர் செய்ய அண்ணியோட நீ வரணும்”, என்றாள்.
“அப்ப உனக்கு மாப்பிள்ளை பாக்க வா டா? கல்யாணத்துக்கு உன் மனசு தயாராகிட்டா?”
“இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். அதுக்கு அப்புறம் பாருண்ணா”, என்று அவள் சொன்னதுக்கே அவன் சந்தோஷப் பட்டுப் போனான். அவன் சந்தோசத்தில் அவளுடைய மன வலி கரைவதை உணர்ந்தாள். கரைவது மன வலி மட்டும் அல்ல. மாதவனின் நினைவுகளும் தான்.
வீட்டுக்குள் சென்றதும் கீதா அமைதியாக அமர்ந்திருக்க அவளுடைய காலடியில் சென்று அமர்ந்தான் மாதவன்.
“அம்மா உன் கோபம் எனக்கு புரியுது. ஆனா வனமங்கை ரொம்ப நல்லவ மா. அவ கிட்ட பேசினா உனக்கு பிடிக்கும்”
“எனக்கு பிடிக்கும் பிடிக்கலை அப்படிங்குறது இங்க பேச்சு இல்லை டா”
“அப்புறம் என்னமா உனக்கு பிரச்சனை? இத்தனை நாள் எனக்கு பொண்ணு பிடிக்கணும்னு தானே சொல்லிட்டு இருந்த? வாழப் போற எனக்கே பிடிச்சிருக்கு. அப்புறம் ஏன் நீ பிரச்சனை பண்ணுற?”
“வாழப் போறது நீ தான். ஆனா மலை ஜாதிப் பொண்ணு எப்படி டா நம்ம இனத்தோட வந்து வாழ்வா. இப்ப உன்னால அவங்க கூட அவங்க வீட்ல போய் சகஜமா வாழ முடியுமா? அது மட்டுமில்லாம நம்ம சொந்தக்காரங்க என்னல்லாமோ பேசுவாங்க. அதை விட அவங்க இனத்துல உன்னை ஏத்துக்குவாங்களா?”
அவனுக்கே அந்த பயம் இருப்பதால் அமைதியாக இருந்தான். “வேண்டாம் டா மாதவா. உனக்கு வெண்ணிலாவை பிடிக்கலைன்னா கூட பரவால்ல. அம்மா வேற பொண்ணைப் பாக்குறேன். அவளைக் கட்டிக்கிட்டு பீஸ் புல்லான வாழ்க்கையை நீ வாழனும் டா”
“இல்லை மா வேற பொண்ணு எல்லாம் வேண்டாம். என்னால அது முடியாது. இப்ப என்ன வனமங்கையை நான் கல்யாணம் பண்ணக் கூடாது அவ்வளவு தானே? சரி பண்ணலை. ஆனா எனக்கு கல்யாணம்னு ஒண்ணு கிடையவே கிடையாது. இனி அதைப் பத்தி பேசவே வேண்டாம்”
“மிரட்டுறியா மாதவா?”
“உன்னை மிரட்ட முடியுமா மா? நீ யாரு? உன்னை பிளாக்மெயில் பண்ண நான் அப்படிச் சொல்லலை. எனக்கு நிஜமாவே மனைவி அப்படிங்குற இடத்துல வேற யாரையும் வச்சுப் பாக்கவே முடியாது. அதான் உறுதியா சொல்றேன்”
“அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா. எத்தனை படம் பாத்துருப்ப? எத்தனை புக் படிச்சிருப்ப? அவங்க சில கட்டுப்பாடுகளோடு வாழுறவங்க டா. நம்ம கூட எல்லாம் கலக்க மாட்டாங்க. சில இனத்து மக்கள் கொடூரமானவங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். அவங்களை தாழ்த்தி சொல்லலை டா மாதவா. நம்ம பரம்பரையை ஆராய்ந்து பாத்தாலும் நாமளும் ஏதோ காட்டு வாசிங்க தான். ஆனா படிப்பறிவு நம்மளை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி வச்சிருக்கு. ஆனா அவங்க அதுல இருந்து இன்னும் வெளி வரலை. சரி படிச்ச மாப்பிள்ளைக்கு கட்டி வச்சா பொண்ணு நல்லா இருக்கும்னு உனக்கு பொண்ணு தருவாங்கன்னு உனக்கு தோணுதா? உங்க காதல் விஷயம் தெரிஞ்சா கவர்ன்மெண்ட் அதிகாரியா இருக்குறதுனால உன் மேல வேணும்னா கை வைக்காம இருக்கலாம். ஆனா அந்த பொண்ணைக் கொன்னுருவாங்க டா”, என்று எதார்த்ததை புரிய வைக்க முயன்றாள். ஆனால் காதல் என்பது எதார்த்தத்தை தாண்டிய உணர்வல்லவா?
அம்மா சொன்னது புரிந்தாலும் அவனால் வனமங்கையை விட முடியாதே. அதனால் “அவங்க சைட் எந்த பிரச்சனையும் இல்லைன்னா நீ அவளை மருமகளா ஏத்துக்குவியா மா?”, என்று கேட்டான்.
“ஏத்துக்கலாம் தான். ஆனா நம்ம வீட்ல வந்து அவ எப்படி வாழ்வா. ரெண்டு பேருக்கும் வாழ்க்கை முறையே வேற டா”
“பழகிக்குவா மா. நான் பழகிக் கொடுப்பேன்”
“உன் பிடிவாதத்தை மாத்த முடியுமா? ஏதாவது சிக்கலை இழுத்து வைக்காம இருந்தா சரி தான். உன் அக்கா கிட்ட நான் விஷயத்தை சொல்லிக்கிறேன். ஆனா உன் மாமா கிட்ட நீ தான் சொல்லணும். அது தான் மரியாதை”
“கடவுளைத் தான் வேண்டனும். சரி கல்யாணம் எப்படியோ முடிஞ்சிட்டுன்னு வை, அதுக்கப்புறம் இங்க எப்படி வேலை பாப்ப?”
“டிரான்ஸ்பர் கேட்டு லட்டர் அனுப்பனும் மா”
“சரி நான் போகும் போது கொடுத்து விடு. உன் மேலதிகாரி கிட்ட பேசு. பக்கத்துல கிடைக்கலைன்னா கூட கொஞ்ச நாள் வேற எங்கயாவது பாரு. கஷ்டப் பட்டு வாங்கின வேலை டா. பாத்துக்கோ”
“சரி மா, வாங்க சாப்பிட போகலாம்”, என்று சொல்லி அழைத்தான்.
“அப்ப அப்ப வாங்கன்னு மரியாதை வருது. மத்த நேரம் எல்லாம் கொன்னுருவேன்னு மிரட்டுற? போடா”
“அதெல்லாம் உரிமைல வரது. உன் கிட்ட நான் உரிமை எடுத்துக்காம வேற யார் உரிமை எடுத்துக்குவாங்களாம்?”
“பேசியே மயக்கிரு”
“ஹா ஹா, அம்மா, உனக்கு வனமங்கையை பிடிச்சிருக்கா?”
“அழகா தான் இருக்கா. இருந்தாலும்”
“அம்மா தாயே முதல்ல இருந்து ஆரம்பிக்காத. பசி வயிறைக் கிள்ளுது”
“சரி சரி வா,. அன்னம்மா இன்னைக்கு என்ன செஞ்சாங்கன்னு பாப்போம்”
“அம்மா, அந்த வெண்ணிலா கிட்ட ரொம்ப வச்சிக்காத மா”
“பாவம் டா, உன்னை விரும்பின பொண்ணு. உன்னை விட்டுக் கொடுக்க முடியாம அப்படி பேசிருக்கும். விடு”, என்று சொல்லி சாப்பிட அமர்ந்தார்கள்.
வனமங்கையோ வீட்டில் சுருண்டு போய் படுத்திருந்தாள். தான் அவனுக்கு இணை இல்லை என்ற எண்ணமே அவளை கவலையில் ஆழ்த்தியது. அவள் காதல் கானல் நீரானதை தாங்க முடியாமல் தனக்குள் இறுகிப் போனாள்.
வெண்ணிலாவும் மாதவனும் ஜோடியாக நின்ற காட்சியே அவள் நினைவில் வந்து அவள் நிம்மதியைக் குடித்தது.
அடுத்து வந்த நாட்களில் அவள் மனம் சோகத்தில் தத்தளிக்க அவளை எப்போது டா பார்ப்போம் என்று தவம் இருந்தான் மாதவன். அவளைக் காண கோவிலுக்கு செல்லும் நாளுக்காக காத்திருந்தான்.
அடுத்த நாள் காலையில் கீதா வெண்ணிலாவிடம் எப்போதும் போல் பேச்சுக் கொடுத்தாள். வெண்ணிலாவோ கீதாவுக்கு பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள். அவள் செய்கையில் திகைத்து போனாள் கீதா. அன்னை முகம் கண்ட மாதவனுக்கு சிரிப்பாக இருந்தது.
“என்ன டா இது? இவ்வளவு பெரிய பல்ப் கொடுத்துட்டா?”
“ஹா ஹா, நான் தான் சொன்னேன்ல? இவளைக் கல்யாணம் பண்ணினா நீயும் அவளும் இப்படி தான் முகத்தை திருப்பிக்கிட்டு அலையணும். நானும் இவ கிட்ட சண்டையைப் போட்டு டிரெஸ்சை கிழிச்சிட்டு ரோட்டுல தான் அலையனும்”, என்றான்.
“சரி சரி ரொம்ப பேசாத. இவ எப்படியோ போகட்டும். இவ யாரு நமக்கு? உனக்கு பிடிச்ச அந்த பொண்ணு எப்படி இருக்கான்னு பாப்போம். அவ மட்டும் முகத்தை திருப்பாமளா இருப்பா? நாளைக்கு வெள்ளிக் கிழமை அவளைப் பாக்க போவோமா டா?”
“நான் மட்டும் போறேன் மா. செம கோபத்துல இருக்கா. நான் சமாதானப் படுத்தின பிறகு நீ வந்து பார்”.
சொன்னது போல வெள்ளிக் கிழமை அவளைக் காண கோவிலுக்கு சென்ற மாதவன் அவளைத் தேடினான். அவள் எப்போதும் போல் கோவிலைப் பெருக்கிக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. அவனைக் காண வேண்டும் என்று அலை பாய்ந்த கண்களை பூமித் தாயிடம் மறைத்த படி தரையை பார்த்திருந்தாள். அவளைக் கண்டு கொண்ட மாதவன் அவள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். அவளோ தலை திருப்பாமல் தான் வேலையைத் தான் செய்து கொண்டிருந்தாள்.
“மங்கை”, என்று அவன் அழைத்தும் கூட அவள் நிமிர வில்லை.
“மங்கை உன்னைத் தான் கூப்பிடுறேன். காது கேக்குதா இல்லையா? அன்னைக்கு நடந்ததை மனசுல வச்சிக்காத டி. அது எதுவும் உண்மை இல்லை. அந்த பொண்ணு என்ன சொல்லிருந்தாலும் அது பொய் தான். அம்மா கிட்ட கூட சம்மதம் வாங்கிட்டேன் தெரியுமா?”, என்று அவன் சொன்னதும் அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் பேச்சு ஆறுதலைக் கொடுத்தாலும் அவள் எடுத்த முடிவு நினைவுக்கு வர “எது உண்மை எது பொய்ன்னு எனக்குத் தெரியலை. ஒரு வேளை நீங்க சொல்றது உண்மையா இருந்தா கூட என்னால உங்க கூட வாழ முடியாது. என் அப்பா எனக்கு வேற மாப்பிள்ளையை பாக்க ஆரம்பிச்சிட்டார். நீங்க வேற உயரத்தில் இருக்குறவங்க. நான் அப்படி இல்லை. அந்த பொண்ணு அன்னைக்கு உண்மையைத் தான் சொல்லுச்சு. அதனால எனக்கு நீங்க வேண்டாம்”, என்றவள் கோவிலுக்குள் சென்று விட்டாள்.
“இவளை எப்படி சமாதானப் படுத்த போகிறோம்?”, என்று திணறிப் போனான். பின் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட அவளோ அங்கே ஒருவன் இருக்கிறான் என்பதைக் கூட உணராதவள் போல நடந்து கொண்டாள்.
ஆனால் அவனைக் காண வேண்டும் என்று துடித்த கண்களை அடக்குவதற்குள் அவள் போராடியது அவளுக்கு தான் தெரியும். சாமி கும்பிட்டு விட்டு அவளுடைய பாராமுகத்தை தாங்க முடியாமல் அவன் சோர்வுடன் அங்கிருந்து செல்ல அப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது. ஜீப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தவன் ஜீப் கண்ணாடியில் அவள் முகம் கண்டான். அவள் மனது அவனுக்கு தெளிவாக புரிய கனத்த மனதுடன் அவளைத் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.
அவன் திரும்பிப் பார்த்தால் அவள் கண்ணீரை அடக்க கஷ்டப் பட வேண்டி இருக்கும் என்பதால் தான் அவன் திரும்பி பார்க்கவே இல்லை. அதுவும் அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது.
அன்று நடந்ததை கீதாவிடம் சொல்ல அவள் தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள். கீதா ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது.
“அந்த பொண்ணை சமாதான படுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து சீக்கிரம் கல்யாணம் பண்ணப் பாரு”, என்று சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பினாள். போகும் போது அன்னையின் கையில் வேலை மாறுதலுக்கான கடித்ததை மேலிடத்துக்கு அனுப்பச் சொல்லி கொடுத்தவன் “இதை அனுப்பிரு மா. நான் ஏற்கனவே போனில் பேசிட்டேன். வடக்கு சைட் தான் போடுவாங்க. பாத்துக்கலாம்”, என்றான்.
“சரி டா தைரியமா இரு. வா போகலாம்”, என்று சொல்லி விட்டு மகனுடன் கீதா கிளம்பி வெளியே வரும் போது வெண்ணிலா அன்னம்மாவுடன் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன மா கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்டாள் அன்னம்மா
“ஆமா அன்னம்மா, நான் போயிட்டு வரேன். பிள்ளையை கொஞ்சம் பாத்துக்கோங்க”, என்று சொன்ன கீதா வெண்ணிலாவிடம் தலையைத் கூட திருப்பாமல் சென்று விட்டாள். இப்போது வெண்ணிலா முகம் செத்துப் போனது. அவள் தவறும் அவளுக்கு உரைத்தது.
இது தான் கீதா. தன்னை மதிக்க வில்லை என்றால் அவர்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள். எப்படி மகனுக்கு பிடிவாதம் அதிகமோ கீதாவுக்கு வைராக்கியம் அதிகம். கணவன் இறந்தவுடன் தளராமல் பிள்ளைகளை தாங்கியவள். அவளை அவமதித்த வெண்ணிலாவை அவள் சும்மா விட்டு விடுவாளா? வெண்ணிலா செய்ததையே அவளுக்கு திருப்பிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டாள்.