அடுத்து வந்த நாட்களில் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் மாதவன். அவள் மீதான காதல் மழையை அவள் மீது அவன் பொழிய அவள் தான் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள். கடமையாக அவளை கவனிக்காமல் காதலுடன் அவளைக் கவனித்துக் கொண்டான். நிம்மதியாக சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை என்று தவறாக எண்ணினான் மாதவன்.
ஆனால் அவள் நிம்மதியாக இல்லை. எப்போதும் கலகலப்பாக இருப்பவள் இப்போதெல்லாம் ஏதோ யோசனையிலே இருந்தாள். வெகு நாட்கள் கழித்து தான் அதை கீதா கண்டு பிடித்தாள். ஆனால் கீதா எவ்வளவோ கேட்டும் அவள் வாயைத் திறக்கவே இல்லை. அதன் பிறகு தான் மகனிடம் சொன்னாள். அவனுக்கும் அதற்கு பிறகு தான் அவள் மாற்றம் புரிந்தது.
“ஹார்மோன் மாற்றம் தான் இவள் அமைதிக்கு காரணமா?”, என்று எண்ணினான். அவளிடமே கேட்கலாம் என்று எண்ணி “மங்கை”, என்று அழைத்தான்.
“ஆன்”, என்றாள். எப்போதும் “என்னங்க? ஏதாவது வேணுமா?”, என்று கேட்பவள் இன்று ஒற்றை வார்த்தையில் கேட்கவும் அவளை வியப்பாக பார்த்தான்.
“உனக்கு என்ன ஆச்சு மங்கை? எதையாவது நினைச்சு கவலைப் படுறியா?”
“இல்லையே?”
“அப்புறம் ஏன் இப்படி இருக்க?”
“எப்படி இருக்கேன்?”, என்று அவள் கேட்க அவன் தான் வாயை மூட வேண்டியதாக இருந்தது.
மீண்டும் அவள் அப்படியே இருக்க அவள் உடலும் மெலிய ஆரம்பித்தது. ஒரு நாள் இழுத்து பிடித்து அமர வைத்து காரணம் கேட்டான் மாதவன். அவன் தான் பிடிவாதத்துக்கு பேர் போனவன் ஆயிற்றே. அவன் பிடிவாதத்தில் தன்னுடைய வாயைத் திறந்தாள். அவள் தன்னுடைய பயத்தைச் சொல்ல அவனுக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. “இப்போதெல்லாம் குழந்தை ஹாஸ்பிட்டலில் தானே பிறக்கிறது? இவ என்ன இப்படிச் சொல்றா? அக்காக்கு கூட ரெண்டுமே ஆபரேஷன் தான். அப்படி இருக்க இவ இப்படி பயப்படுறாளே?”, என்று எண்ணியவன் அவளைப் பார்த்தான்.
அவளோ மழைநீருக்காக காத்திருக்கும் செடியைப் போல அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். “சரி உன்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக மாட்டேன் போதுமா? தேவையில்லாம பயப்படாதே. அது உனக்கும் குழந்தைக்கும் நல்லது இல்லை”, என்றான்.
“நிஜமா தான் சொல்றீங்களா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
பழைய வனமங்கையைப் பார்த்த சந்தோசத்தில் “ஆமா”, என்றான்.
“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையே?”
வயிற்றில் அவனது குழந்தை இருக்க, கண்களில் அவன் மீதான காதல் நிறைந்திருக்க அவள் மீது அவனால் கோபப் பட முடியுமா?
“எதுக்கு கோப படணும்? ஆனா வருத்தம் தான். இத்தனை நாள் இந்த பயத்தை என் கிட்ட சொல்லிருக்கலாம்ல? இனி என் கிட்ட எதையும் மறைக்க கூடாது சரியா?”, என்று கேட்டவனைக் கண்டு புன்னகைத்தாள் வனமங்கை.
அவனுக்கு கோபமில்லை என்பதே அவளுக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்தது. அவன் சொன்னதில் இத்தனை நாள் அவளை சுற்றி இருந்த பயமும் அவளை விட்டு அகன்றிருந்தது. அவன் மார்பில் தலை சாய்த்தாள். வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த மனைவியின் அருகாமையில் அவன் குழப்பமும் அவனுடைய ஆழ்மனதில் சென்று தங்கிக் கொண்டது. அவளை அனைத்துக் கொண்டவன் கணவனாக எல்லை மீற விருப்பத்துடன் அவன் கரங்களுக்குள் அடங்கினாள்.
மறுநாள் விடிந்த போது இத்தனை நாள் இல்லாத புதுப் பொலிவுடன் இருந்த மருமகளைக் கண்டு திகைத்தாள் கீதா. அதை அவளிடம் கேட்டால் மீண்டும் அப்படி மாறி விடுவாளோ என்று எண்ணி மகனிடம் காரணம் கேட்டாள். வனமங்கையின் பயத்தை பற்றி அவன் சொன்னதும் “விடு டா பாத்துக்கலாம்”, என்று மகனுக்கு தைரியம் சொன்னாள் கீதா. இருவருக்குமே என்ன நடக்கும் என்று குழப்பம் இருந்தாலும் வனமங்கையின் புன்னகை தவழும் முகம் நிம்மதியைக் கொடுத்தது. நாட்கள் வேகமாக நகர்ந்தது.
பெரிய வயிற்றுடன் குளித்து முடித்து ஈரத்தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு நெற்றியில் குங்குமம் மின்ன அவனுக்கு காபி கொடுத்த வனமங்கையின் அதீத அழகில் கவரப் பட்டான் மாதவன். அவளின் குடும்பப் பாங்கான அழகில் எப்போதும் போல் சொக்கிப் போனான்.
“நானே பிள்ளைக்காக விலகி இருக்கேன். இவ வேற மேலும் மேலும் அழகாய்ட்டு போறா? மனுஷன் அவஸ்தை இவளுக்கு புரியுதா?”, என்று முணுமுணுத்தவனை அவள் என்னவென்று கேட்க அவனோ வெளிப்படையாகவே அவளிடம் காரணம் சொன்னான். அதில் அவள் முகம் சிவக்க “என்னை ஒரு வழி ஆக்காம விட மாட்ட, என்ன டி? அப்படியே கொல்ற தெரியுமா?”, என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டான்.
ஒன்பதாம் மாதம் ஆரம்பித்ததும் அவளுக்கு சீமந்தம் செய்தான். ஊரில் இருந்து வனிதா குடும்பத்துடன் வந்திருந்தாள். சீமந்தம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது.
“டேய் மாதவா, நாள் நெருங்குது டா. எனக்கு என்ன செய்யன்னு ஒண்ணும் ஓடலை. மங்கை கிட்ட பேசிப் பாப்போமா?”, என்று கேட்டாள் கீதா.
“வேண்டாம் மா. இப்ப நாம பேசினா அது அவ மனசுல போட்டு உருட்டி அவ உயிருக்கே ஆபத்தா ஆகிரும். ரெண்டு குழந்தையை வேற தாங்கிட்டு இருக்கா. நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை”
“அப்படின்னா வேற என்ன செய்யப் போற?”
“ஒரு ரெண்டு நாள் பொறுங்க. சொல்றேன்”
“ரெண்டு நாள் என்ன? ரெண்டு மாசம் கூட நான் பொறுப்பேன். ஆனா உன் பிள்ளைகள் பொறுக்குமா? என்னமும் செய். வனிதா பிரசவத்துக்கு கூட நான் இப்படி பயப்படலை டா. கடைசி நேரத்துல என்னை பிரசவம் பாக்க வச்சிறாத. அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன் டா. கடவுளே என் வம்ஸத்தைக் காப்பாத்து”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
அடுத்த இரண்டு நாளில் ஏதோ யோசனையிலே இருந்தான் மாதவன். எங்கோ வெளியே சென்று விட்டான். காரணம் கேட்ட வனமங்கையிடம் சொல்லவும் இல்லை. வனமங்கைக்கும் இங்கே அருகே ஏதாவது சித்த வைத்தியச் சாலை இருக்கிறதா என்று அவனிடம் கேட்க ஆசை தான். ஆனால் அவன் அப்படி ஒன்று இல்லை என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுவானோ என்று பயந்து போய் பேசாமல் இருந்தாள். அவளுக்குமே என்ன ஆகுமோ என்று பயமாக இருந்தது.
சொன்ன படி இரண்டு நாட்கள் கழித்து வனமங்கை மற்றும் கீதாவை கிளம்பச் சொன்னான். எங்கே என்று கேட்டவர்களிடம் அவன் எதுவும் சொல்ல வில்லை. கீதாவிடம் எடுத்து வைக்க வேண்டிய பொருள்களையும் சொன்னான். சொந்தமாக ஒரு ஜீப் அவன் வாங்கியிருந்ததால் அதில் இருவரையும் ஏறச் சொன்னவன் தானும் ஏறி அமர்ந்து அமைதியாக ஓட்டினான்.
அவர்கள் தங்கி இருந்த காட்டருகே ஒரு மலை கிராமம் இருந்தது. அங்கே ஒரு சித்த வைத்திய சாலை இருந்தது. அங்கே தான் அவளை பிரசவத்துக்கு என்று அழைத்துச் சென்றான். அதைக் கண்டதும் தான் வனமங்கை முகம் ஒளிர்ந்தது. கீதாவும் நிம்மதியானாள்.
குழந்தை பிறப்பது வரை கீதாவும் வனமங்கையும் அங்கே தான் தங்கி இருந்தார்கள். மாதவன் மட்டும் வீட்டுக்கு போவதும் இவர்களை பார்க்க வருவதுமாக இருந்தான். ஆனால் அவனுக்கு நிம்மதி என்பது சுத்தமாக இல்லை.
“டாக்டர்ஸ்னாலயே எத்தனை பிரசவத்தை சரியா செய்ய முடியாம அம்மா குழந்தைன்னு இறந்துருக்காங்க. அப்படி இருக்க படிப்பறிவு இல்லாத இந்த பெண்கள் சரியா பிரசவம் பாப்பாங்களா? என் வனமங்கைக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் ஆகக் கூடாது”, என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருந்தான்.
மகனின் மனநிலை புரிந்த கீதா “உனக்கு கூட உன்னோட சின்ன பாட்டி தான் டா பிரசவம் பாத்தாங்க. கவலைப்படாதே நல்ல படியா நடக்கும்”, என்று ஆறுதல் சொன்னாள். ஆனால் அது கூட அவனிடம் செல்லு படியாக வில்லை.
அன்று காலையில் இருந்தே ஒரு மாதிரி இருந்தது வனமங்கைக்கு. வைத்தியரம்மா அவளை நடக்கச் சொல்லி இருந்தார். கீதாவிடம் இன்று குழந்தை பிறந்து விடும் என்றும் சொல்லி இருந்தாள். மாதவனும் அன்று லீவ் போட்டு வந்து விட்டான். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி வர அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். கீதாவும் உள்ளே தான் இருந்தாள். மாதவனோ உச்சக்கட்ட டென்சனில் வெளியே இருந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தைகள் இருவரும் நல்ல படியாக பிறந்தார்கள். வனமங்கைக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இயற்கையான உணவு முறையை கடை பிடித்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் பிரசவம் முடிந்தது.
“டேய் மாதவா, குழந்தை பிறந்துட்டு டா. வனமங்கையும் நல்லா இருக்கா. ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணு பிறந்துருக்கு டா. கொஞ்ச நேரம் கழிச்சு கொண்டு வந்து காட்டுறேன்”, என்று கீதா சொல்ல அதன் பிறகு தான் அவனுக்கு உயிரே வந்தது. இழுத்துப் பிடித்த மூச்சை அப்போது தான் ரிலாக்ஸாக வெளியிட்டான்.
சிறிது நேரம் கழித்து பிள்ளைகளையும் மனைவியையும் பார்த்தான் மாதவன். உடலும் உள்ளமும் சிலிர்த்தது. அவள் அவனைக் கண்டு நிறைவாக புன்னகைக்க “ஆமா இப்ப சிரி, அழகா இருந்து கொல்லுறன்னு சொல்லுவேன். இப்ப நிஜாமாவே செத்து பிழைச்சு வந்துருக்கேன் டி. என்னை கொன்னுட்ட நீ’, என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனைக் கண்டு சிரித்த வனமங்கை “எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு பிள்ளைகளை பெத்துக்குவோமா?”, என்று விளையாட்டாக கேட்க “ஆளை விடு தாயே. உசுரு போய் திரும்பி வந்துருக்கு. நான் இந்த விளையாட்டுக்கு வரலை. என் நிலைமை பாத்து தான் கடவுள் ரெண்டு பிள்ளைகளை ஒரே நேரத்துல கொடுத்துட்டார். நாம் இருவர், நமக்கு இருவர். அது போதும்”, என்று சொல்ல அவனைக் கண்டு அழகாக புன்னகைத்தாள் வனமங்கை.
அம்மா அப்பா இருவரையும் கலந்து செய்தது போல இருந்த குழந்தைகளை கண்டு அப்பா என்ற கர்வம் வந்தது அவனுக்கு. இருவரையும் ஒருங்கே தூக்கி வைக்க முடியாமல் திணறினான்.
அடுத்த நாளே அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். வனமங்கை ஓய்விலே இருக்க அம்மாவாக இருந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள் கீதா.
குழந்தை பிறந்த செய்தி கேட்டு வனிதா குடும்பத்துடன் பார்க்க வந்தாள். வெற்றி மூலமாக வைத்தியருக்கும் வனமங்கை வீட்டுக்கும் தகவல் சொன்னான் மாதவன். அவர்களுக்கும் சந்தோசமே. குழந்தைகளுக்கு மதிவாணன், தேன்மொழி என்று பெயர் வைத்தார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு குடும்பத்துடன் வனமங்கை வீட்டுக்குச் சென்றான். தேனப்பன் மற்றும் குச்சிக்கு குழந்தைகளைக் காட்ட அவர்களோ வெகுவாக சந்தோஷப் பட்டார்கள். குச்சி பெரிய பையனாக வளர்ந்திருந்தான். அரை வைத்தியனாகவும் ஆகி இருந்தான்.
குழந்தைகளைப் பார்க்கவும், மாதவன் கொடுத்த உரத்தில் மூலிகை அவரது தோட்டத்தில் வளர்ந்ததைச் சொல்லவும் அந்த குண்டு உடலை தூக்கிய படி ஓடி வந்தார் வைத்தியர். அவரும் அவர்களைக் கண்டு சந்தோஷப் பட்டார்.
பாரஸ்ட் ஆபீஸ் சென்ற போது வெற்றி, விஷ்ணுவைத் தவிர மற்ற அனைவரும் மாறி இருந்தார்கள். அன்னம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை ஒரு ஹோமில் சேர்த்து விட்டதாகவும் சொன்னார்கள். வெண்ணிலாவுக்கு வேலை கிடைத்ததையும் அவளுக்கு திருமணம் ஆனதையும் சொன்னான் வெற்றி.
அங்கிருந்தவர்களைப் பார்த்து பேசி விட்டு நிம்மதியாக மீண்டும் ஊருக்கு வந்தார்கள் அனைவரும். மாதவனுக்கு வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்றது. அனைத்தும் வனமங்கையாலும் அவனது அன்னையாலும் என்று சொன்னால் அது மிகையில்லை.
குழந்தைகளுக்கு ஆறு வயதாக இருந்த போது மாதவனுக்கு பதவி உயர்வோடு மீண்டும் தமிழ் நாட்டுக்கே மாறுதல் கிடைத்தது. அதன் பின்னர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேனப்பன் மற்றும் குச்சியைப் பார்க்கச் சென்றார்கள். வைத்தியருக்கு இப்போது உடல் நிலை சரியில்லாமல் போனதால் குச்சி தான் வருபவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறான். தேனப்பனும் ஆடுகளை விற்று விட்டு அதை மகனுக்கு கொடுத்து விட்டு அவனுடன் வந்து அவனுக்கு உதவியாக தங்கி விட்டார். இருவரும் சேர்ந்து தான் வைத்தியரைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
அதுவும் மதிவாணன் மற்றும் தேன்மொழி வந்து விட்டால் குச்சி அவ்வளவு சந்தோஷமாக இருப்பான். அக்கா மேலேயே அவ்வளவு பாசம் வைத்தவன் அவள் பெற்ற பிள்ளைகள் மீது வைக்க மாட்டானா?
மேலும் மூன்று வருடங்களுக்கு பிறகு எல்லாப் பொறுப்புகளையும் குச்சியிடம் ஒப்படைத்து விட்டு இந்த உலகை விட்டே சென்று விட்டார் மருத்துவர். அவருக்கு மகனாக இருந்து குச்சி தான் அனைத்துக் காரியங்களையும் செய்தான். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருந்ததால் மாதவனும் குடும்பத்துடன் அவர் இறுதி சடங்கில் கலந்து கொண்டான்.
எந்த தன்னலமும் இல்லாதவர் அடுத்தவர் நலனுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து மறைந்து போனார். அவர் உடல் மறைந்தாலும் அவரால் உயிர் பிழைத்தவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்