மறுநாள் கல்லூரிக்கு வந்த சந்தியாவின் முகத்தில் அத்தனை சோகம். எப்போது கதிரை விட்டு பிரிந்து வந்தாலும் இரண்டு நாட்களுக்குச் சந்தியா அப்படித்தான் இருப்பாள் என்பதால் சித்தார்த் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் சந்தியா அப்படியே இருக்க, சித்தார்த் அவளிடம் தனிமையில் விசாரித்தான். கதிரிடமே சொல்லவில்லை சித்தார்த்திடம் சொல்லும் விஷயம் இல்லை என்பதால், சந்தியா வேறு எதோ காரணம் சொல்லி சமாளித்தாள்.
சித்தார்த்துக்கு அவள் எதோ காரணம் சொல்லி சமாளிக்கிறாள் என்று புரிந்ததால், அனுவை விசாரித்தான். சந்தியாவும், அனுவும் ஒரு அறையில் தங்கியிருப்பதால் அவளுக்கு எதாவது தெரியலாம் என்று நினைத்தான்.
“கதிரோட எதுவும் பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியலை சித்து. ஹாஸ்டல்லதான் சந்தியாவை ரொம்பக் கிண்டல் செஞ்சு ஓட்டுறாங்க. ஒருவேளை அதனால அப்படி இருக்காளோ என்னவோ….” என்றாள் அனு.
சித்தார்த்துக்குப் புரியவேயில்லை கல்லூரியில் கிண்டல் கேலி சகஜம் தானே இதில் சந்தியா வருத்தப்பட என்ன இருக்கிறது என்று நினைத்தான். அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொண்ட அனு தயங்கித் தயங்கி “கிண்டல்னா சாதாரணமா இல்லை சித்து…. ரொம்பப் பர்சனல் விஷயம் எல்லாம் கேட்கிறாங்க…” என்றதும், சித்தார்த்தின் முகம் மாறியது.
“யாரெல்லாம்?” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.
அவனின் கோபத்தை உணர்ந்த அனு “சித்துச் சந்தியாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இந்த விஷயத்துல நீ சந்தியாவுக்குச் சப்போர்ட் பண்ணி பேசினா, உன்னையும் அவளையும் சேர்த்து வச்சுத் தப்பா பேசுவாங்க. பிரச்சனை இன்னும் பெரிசு தான் ஆகும். அதனால கண்டுக்காம விட்டுடுறது தான் நல்லது…” என்றாள்.
சித்தார்த் எதுவும் பதில் சொல்லவில்லை. அவன் அமைதியாக இருக்க, அனு அவனிடம் சொல்லிக்கொண்டு சென்றாள். சித்தார்த் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த சந்தியாவிடம் சித்தார்த் “லூசு எதாவது பிரச்சனைன்னா சொல்ல மாட்டியா. மனசுக்குள்ளயே வச்சு கஷ்டப்படுவியா…” என்றதும்,
சந்தியாவிற்கு அவன் எதைச் சொல்கிறான் என்று புரியவில்லை. அவளைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த் “ஹாஸ்டல்ல உன்னைக் கேலி பண்றதை தான் சொல்றேன். சொல்லியிருக்கலாம் இல்ல…” என்றவுடன், சந்தியா உனக்கு எப்படித் தெரியும் என்பதைப் போல் பார்க்க
“அனு சொன்னா…” என்றான்.
சந்தியா அமைதியாக இருக்க, சித்தார்த் “நீ ஹாஸ்டல்ல இருக்காம பேசாம ஒரு வீடு எடுத்து தங்கேன் சந்தியா. கூடத் துணைக்கு உங்க பாட்டிய கூட்டிட்டு வந்து வச்சுக்கோ.” என்று யோசனை சொல்ல,
“அதெல்லாம் சரி வராது சித்து. பாட்டி கிராமத்தை விட்டு இங்க வர யோசிப்பாங்க. அதோட கதிர் மாமா இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டங்க…” என்றாள் சந்தியா.
“அப்ப இதுக்கு என்னதான் வழி? நீ இப்படியே கஷ்டப்பட்டுட்டே இருப்பியா….”
“விடு சித்துக் கொஞ்ச நாள் போனா சரி ஆகிடும். நான் அதுக்குப் பீல் பண்ணலை. நான் கதிர் மாமாவுக்குக் கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டேன். அதுதான் எனக்குக் கவலையா இருக்கு.” என்றாள்.
“பேசினா தீராத பிரச்சனை எதுவும் இல்லை சந்தியா. அவர் கிட்ட பேசு…” என்று சித்தார்த் சொன்னதும் சந்தியா சரி என்றாள்.
கதிர் தானாகச் சந்தியாவை அழைக்கவில்லையே தவிரச் சந்தியா அழைத்தால், அது எந்நேரம் ஆனாலும் எடுத்துப் பேசுவான். அவளிடம் கணவன் என்ற உரிமையில் பேசும் பேச்சுக்களைத் தவிர்த்து, பொதுவாகப் பேசி வைத்து விடுவான்.
சந்தியா ஒவ்வொரு முறை அவனை அழைக்கும் போதும், அவனிடம் தான் அன்று அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தைச் சொல்லி விடத்தான் நினைப்பாள். ஆனால் எதோ ஒன்று சொல்லவிடாமல் தடுக்கும்.சந்தியா வழக்கம் போல் அன்றும் கதிரை அழைத்துப் பேசியவள், அவனின் ஒட்டாத பேச்சில் கோபம் வந்து, கதிர் பாதிப் பேசிக்கொண்டிருக்கும் போதே தொடர்பை துண்டித்து விட்டாள்.
கதிருக்கு சந்தியா வேண்டுமென்றே தொடர்பை துண்டித்தாள் என்று தெரியவில்லை. அதனால் அவள் மீண்டும் அழைப்பாள் என்று காத்திருந்தான். ஆனால் சிறிது நேரம் சென்ற பின்னரும் சந்தியா அழைக்கவில்லை என்றதும் கதிர் அவனே அவளை அழைத்தான்.
சந்தியா முதல் தடவை எடுக்கவில்லை. மீண்டும் கதிர் அழைத்ததும் எடுத்தாள். அவளுக்கு அழுகையில் தொண்டையை அடைத்துக்கொண்டு வாரத்தையே வரவில்லை.
“ஒரு நிமிஷம் இருங்க கதிர் வரேன்.” என்று கஷ்டப்பட்டுச் சொன்னவள் எழுந்து சென்று முகம் கழுவி, தண்ணீர் குடித்துவிட்டு வந்தாள்.
“சொல்லுங்க கதிர் எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று கேட்ட போது அவள் அழுதிருக்கிறாள் என்று கதிருக்குப் புரிந்தது.
“எதுக்கு இப்ப அழற? ஏன் போனை பாதியில வச்ச?” இப்படிக் கதிர் கேட்ட எந்தக் கேள்விக்கும் சந்தியா பதில் சொல்லவில்லை.
“எதுக்குடி என்னை இப்படிப் பேசாம வதைக்கிற? நீ தான போன் பண்ண. பிறகு எதுக்குப் பாதியில வச்ச?” என்று கதிர் கோபப்பட,
“தெரியாம பண்ணிட்டேன் சாமி. இனிமே பண்ணலை. நீங்க பொண்டாட்டி கிட்ட பேசுற மாதிரியா பேசுறீங்க. யாரோ தெரியாதவங்க கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க. இதுக்குப் பேசாமலே இருக்கலாம். உங்களுக்கு என்னைப் பிடிக்கலை…” என்று சந்தியாவும் பதிலுக்குத் தன் ஆத்திரத்தை காட்டினாள்.
“சந்தியா அநியாயமா பேசாத. என்னை என்னதான் பண்ண சொல்ற. புருஷன்னு உரிமை காட்டி நடந்தாலும் பிடிக்காம விலகி போனவ நீ தான். இப்ப நான் விலகி போற மாதிரி சொல்ற. உனக்கு என்னதான்டி பிரச்சனை?” என்று கதிர் எரிச்சலாகக் கேட்க, சந்தியா மெளனமாக இருந்தாள்.
“என்னைக் கொல்ற சந்தியா நீ. உனக்கு என்னோட கஷ்டம் புரியவே இல்லையா. நீ வேணும்னா வர்றதுக்கும், வேண்டாம்னா போறதுக்கும் நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா? இனி நீ இழுக்கிற இழுப்புக்கு எல்லாம் என்னால ஆட முடியாது. கண்டதையும் யோசிக்காம படிக்கிற வழிய பாரு. பிறகு இனி எனக்குப் போன் பண்ணாத. நீ பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன். என்னை மறந்துட்டுப் படிப்பை மட்டும் பாரு.” என்று கதிர் தொடர்பை துண்டித்து விட்டான்.
சந்தியா தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள். அவன் எதோ போனிலாவது பேசிக்கொண்டிருந்தான். இப்போது உள்ளதும் போனது. கதிர் சொன்னது போல் பிறகு சந்தியா அழைத்த போதும் எடுக்கவில்லை. நேரிலும் வந்து அவளைப் பார்க்க வரவில்லை.
சந்தியா படிப்பதில் முழுக் கவனம் செலுத்தினாள். உண்மையில் கதிருடன் பேசாமல் இருப்பது அவளை வேறு எந்தச் சிந்தனைகளுக்கும் அழைத்துச் செல்லாமல் இருந்தது. இல்லையென்றால் அவனுடன் பேசும்போது எல்லாம் அவனை விட்டு பிரிந்து இருக்கிறோமே, எப்போது அவனுடன் சேருவோம் என்று நினைக்கத் தோன்றும்.
சந்தியா அந்தத் தடவை நடந்த தேர்வில் அவள் கல்லூரியில் முதல் இடத்தைப் பிடித்ததும், அவளைக் கேலி செய்தவர்கள் கூட, திருமணத்திற்குப் பிறகும் அவள் நன்றாகப் படிப்பதை பார்த்து, தங்கள் கிண்டல் கேலியை கைவிட்டனர்.
சந்தியா வெற்றிகரமாக இறுதி வருட மருத்துவப் படிப்பில் அடி எடுத்து வைத்தாள். இப்போது அவள் படிக்கும் கல்லூரியின் மருத்துவமனையிலேயே அவள் இண்டர்ஷிப் சென்று கொண்டிருந்தாள். சித்தார்த் இறுதி வருடப் படிப்போடு மேற்படிப்புக்காகத் தயார் செய்து கொண்டிருந்தான்.
சந்தியாவிற்கு வாரத்தில் ஒரு நாள்தான் விடுமுறை என்பதால், வேதவல்லியும் துரையும் அவர்களே வந்து சந்தியாவைப் பார்த்து விட்டுச் செல்வார்கள்.கதிர் மட்டும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊர் சென்று தன் பெற்றோரை பார்த்து விட்டு வருவான். அப்போதும் அவன் சந்தியாவின் வீட்டிற்குச் செல்ல மாட்டான். வேதவல்லி தான் வந்து பார்ப்பார்.துரையும் கதிரை வீட்டிற்கு வா என்று அழைக்கவில்லை. நடப்பதை எல்லாம் பார்க்கும் போது வேதவல்லிக்கு தான் கவலையாக இருக்கும்.
மனக்கவலையோடு வேதவல்லிக்கு சில நாட்களாகவே உடல் நிலையும் சரியில்லை. மாதவிடாய் காலங்களில் அவருக்கு அதிக உதிரபோக்கும், வலியும் இருந்தது.மாதவிடாய் நிற்கும் சமயம் அப்படித்தான் இருக்கும் என்று அவராகவே நினைத்துக்கொண்டார். அதனால் மருத்துவரிடம் செல்லவுமில்லை, சந்தியாவிடமும் சொல்லவில்லை.
ஏற்கனவே கணவனைப் பிரிந்து இருக்கும் பெண்ணிற்கு மேலும் கவலை கொடுக்கவேண்டாம் என்று நினைத்தார். தானாகவே சரி ஆகிவிடும் என்று நினைத்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி கொண்டார்.
சுபாஷுக்குச் சென்னையில் வேலை கிடைத்து அவர்கள் குடும்பத்துடன் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர். காவேரியும், சுபாஷும் ரொம்பவும் அழைத்ததால், கதிர் தட்ட முடியாமல் வார இறுதியில் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.கதிர் விடியற்காலையில் வந்ததால், சுபாஷ் அவனைச் சிறிது நேரம் தூங்க சொல்லி ஒரு அறையைக் காட்ட, கதிரும் அங்கே சென்று உறங்கினான்.
கதிர் விழித்த போது மணி பத்தாகி இருந்தது. இவ்வளவு நேரமா தூங்கி விட்டோம் என்று நினைத்தவன், கட்டிலிருந்து எழுந்த போது வெளியே சந்தியாவின் குரல் கேட்டது.கதிருக்கு ஒரு நொடி இதயம் சந்தோஷத்தில் நின்று துடித்தது. தன்னவளை ஒன்றரைவருடங்கள் கழித்துப் பார்க்க போகும் ஆவலில் வேகமாகக் குளித்துத் தயாராகி வெளியே வந்தான்.
சந்தியாவுக்குக் கதிர் வந்திருப்பது தெரியாது. அவள் தருணுடன் ஹாலில் விளையாடிக்கொண்டிருக்க, கதிர் சென்று அவள் எதிரில் நின்றான்.எதிர்பாராமல் கதிரை பார்த்ததும் சந்தியாவின் விழிகள் கண்ணீரால் நிரம்பியது. சமையல் அறையிலிருந்து வெளியே வந்த காவேரி கதிரை பார்த்துவிட்டு “இரு அண்ணா காபி கொண்டு வரேன்…” என்று உள்ளே சென்றாள்.
கதிர் சென்று சந்தியாவின் அருகே அமர, அவள் தள்ளி அமர்ந்தாள். கதிரும் அவளோடு சேர்ந்து நகர்ந்தான். சந்தியா அவனைப் பார்த்து முறைத்தாள்.சந்தியா எழுந்துகொள்ளப் பார்க்க, கதிர் அவளை விடாமல் பிடித்துக்கொண்டான். அப்போது காவேரி காபியுடன் வர, சந்தியா எழுந்து சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“மச்சான் எங்க காவேரி?”
“அவர் கடைக்குப் போய் இருக்கார் அண்ணா. இப்ப வந்திடுவார்.” என்று காவேரி சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுபாஷ் உள்ளே நுழைந்தான்.
சுபாஷ் வந்ததும் சந்தியா வெளியே வந்தாள். சந்தியாவைச் சுபாஷ் அப்போது தான் பார்க்கிறான். “வா சந்தியா நாங்க கூப்பிட்ட போது எல்லாம் வரலை. இன்னைக்குக் கதிர் வந்ததும் தான் வந்திருக்க. கதிரோடதான் எங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தியா…?” என்று கேட்ட சுபாஷ், கதிர் சொல்லித்தான் சந்தியா வந்திருக்கிறாள் என்று நினைத்தான்.
காவேரியும் அப்படித்தான் நினைத்தாள். சந்தியா பதில் சொல்லாமல் சிரித்தே சமாளித்தாள். அவள் தற்செயலாகதான் அங்கே வந்திருந்தாள். அவளுக்கு அன்று விடுமுறை.காவேரி அனைவரையும் சாப்பிட அழைக்க, சந்தியா ஹாஸ்டல்ல சாப்பிட்டேன் என்று மறுக்க, காவேரி கதிருக்கும் சுபஷுக்கும் உணவு பரிமாறினாள்.
“காவேரி சந்தியாவுக்கும் டிபன் வை. அவ ஹாஸ்டல்ல சரியா சாப்பிட்டிருக்க மாட்டா…” என்று உரிமையுடன் சொன்ன கதிர், சந்தியாவைக் கையேடு அழைத்துக்கொண்டு சென்று தன் அருகில் உட்காரவைத்துக் கொண்டான்.
காவேரி முதலில் கதிரின் தட்டில் பூரி வைக்க, கதிர் அதை எடுத்து சந்தியாவின் தட்டில் வைத்தான். அடுத்து காவேரி தோசை ஊற்றிக் கொண்டு வந்தாள். அதையும் கதிர் சந்தியாவின் தட்டில் வைக்க, அவன் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுபாஷ் புன்னகையுடன் “ஏன் மாப்பிள்ளை உங்க பொண்டாடிக்கு நீங்க தான் பரிமாறனுமா? நாங்க பரிமாறினா ஆகாதா…” என்று கிண்டலாகக் கேட்டவன்,
சந்தியாவைப் பார்த்து “நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்க மா…” என்றதும்,
பார்த்தே வருஷம் ஆகுது, இதுல நாம ட்ரைனிங் கொடுத்தோமா என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தவள் வெளியே கஷ்டப்பட்டுப் புன்னகைத்தாள்.சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் சுபாஷுடன் பேசிக்கொண்டிருந்த கதிர், அவன் தங்கியிருந்த அறைக்குள் சென்று அவர்களுக்காக வாங்கி வந்த இனிப்பையும் மற்றும் தருணுக்காக வாங்கி வந்த விளையாட்டு சாமானையும் கொண்டு வந்து கொடுத்தான்.
“நானும் சந்தியாவும் வெளிய போயிட்டு வரோம். மதியம் எங்களுக்குச் சமைக்காத…” என்று காவேரியை பார்த்து சொன்ன கதிர், சுபாஷிடமும் சொல்லிக்கொண்டு சந்தியாவைப் பார்க்க, அவள் மற்றவர்கள் முன்பு ஒன்றும் சொல்ல முடியாமல் அவனுடன் சென்றாள்.
சுபாஷின் பைக்கில் இருவரும் சென்றனர். சந்தியா பேசாமல் அமைதியாக வர, சிறிது தூரம் சென்ற பின் கதிர் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.