அதே போல பத்தாவது படிக்கும் போது அவனுக்கு மதன் மூலம் ஒரு சினிமா வாய்ப்பு வந்தது. மகனை அதில் பாட வைக்கவா வேண்டாமா என்று நிறைய யோசித்தார். ராஜியிடம் கூட சொல்லத் தயங்கினார்.
இப்போது அவன் சினிமாவில் பாட ஆரம்பித்தால் அவனது படிப்பு வீணாக போகுமோ என்று பயந்தார். ஆனால் தனக்காக அவனுடைய ஆசையில் முழு மூச்சாக இறங்காமல் படிப்பிலும் கவனம் செலுத்தும் மகனின் ஆசை பெரியதாக தெரிய அவனை அழைத்தார்.
“என்னப்பா?”, என்ற படி வந்து அவர் அருகில் அமர்ந்தான் ராகவன். ராஜியும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தாள்.
“உனக்கு படத்துல பாட ஒரு வாய்ப்பு வந்துருக்கு ராகவா. என்னோட பிரண்டு தான் உன் வயசுல பாட ஒரு பையன் வேணும்னு சொன்னார். எனக்கு உன் நினைவு வந்துச்சு”, என்று சொல்லி அவன் முகம் பார்த்தார். அவன் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.
“ஆமா ராஜி, ஆனா படத்துல பாட ஆரம்பிச்சா இவன் படிப்பு என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு”
“கவலைப்படாதீங்க பா. என்னால படிப்பையும் பாட்டையும் பேலன்ஸ் பண்ண முடியும். பிளீஸ், இந்த வாய்ப்பை என்னை இழக்க வச்சிராதீங்க”, என்றான் ராகவன்.
அதே போல அவனை அந்த பாடலைப் பாட அனுப்பினார். அவரும் அவனுக்கு துணையாக சென்றார். முதன் முதலில் ஒரு பெரிய மியூசிக் டேரெக்டர் சேகர் முன்பு பாடுவது அவனுக்கு கொஞ்சம் படபடப்பைத் தந்தது. ஆனால் பல மேடைகளில் பாடிய அவன் அந்த பயத்தைக் கடந்து வந்தான்.
அவனை அழைத்த இசையமைப்பாளர் காலைக் காற்றே என்ற பாடல் அடங்கிய நோட்சை அவனுக்கு கொடுத்து அதற்கான மியூசிக்கையும் போட அவர் சொல்லிக் கொடுத்தது போலவே பாடினான்.
அவனுடைய குரலில் அந்த பாடல் இன்னும் அருமையாக இருந்தது. “பையன் அருமையா பாடுறான் ராகவன். பெரிய ஆளா வருவான் பாருங்க. இப்ப சின்னக் குழந்தைக்கான டோன் வருது. ஆனா காலேஜ் எல்லாம் முடிச்சதும் இவனைக் கையில பிடிக்க முடியாது”, என்று பாராட்டினார் இசையமைப்பாளர்.
அதன் பின் மீண்டும் அவன் படிப்பில் கவனம் செலுத்த அந்த படம் ரிலீசாகி அவன் பாடிய பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதற்கு பின்னரும் அவனுடைய வயதில் பாடும் குரல் தேவை என்றால் அவனைத் தான் அழைப்பார்கள். இப்போதும் அவன் அவ்வப்போது சினிமாவில் பாடல் பாடிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவன் தான் அந்த பாடல்களை எல்லாம் பாடினான் என்று மதன், ராஜி, சேகர் இந்த மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அந்த பாடல்களை பாடியவர் பெயரை படத்தில் போடும் போது ‘மதன்ராஜ்’ என்று தான் போடுவார்கள். அம்மா அப்பா பெயர் தான் போட வேண்டும் என்று சொல்லி விட்டான் ராகவன். அதில் மதனுக்கு திருப்தியே.
இப்போது வரை நான்கு சினிமா பாடல்களை அவன் பாடி இருக்கிறான். அந்த நான்கு பாடல்களும் பயங்கர வெற்றி பெற்றது. இதை யார் பாடியது என்று பல கேள்விகள் மக்கள் மத்தியிலும் சினிமா துறையிலும் உலா வந்தது. ஆனால் அவனின் வேண்டுகோளுக்காக சேகர் அவனைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார்.
அவன் பள்ளியில் பாடும் போது அவனுடைய பாடலை ரசிக்கும் ஆசிரியர்கள் கூட “சினிமா வாய்ப்புக்கு டிரை பண்ணு”, என்று சொல்வார்கள். சிறு புன்னகையுடன் அதை கடந்து விடுவானே தவிர ஏற்கனவே தான் சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறேன் என்று யாரிடமும் அவன் மூச்சு விட வில்லை.
தேன்மொழி சரியான ஓட்டை வாய் என்பதால் அதை அவளிடம் கூட யாரும் சொல்ல வில்லை. அமருக்கும் தெரியாது. ராஜி மற்றும் மதனுக்கு தான் தெரியும்.
இப்போதும் அவன் ஏதோ ஒரு பாடலுக்கு மெட்டு போட்டுக் கொண்டிருக்க ஸ்ருதியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அதில் எரிச்சலானதால் தான் அவள் தலையில் கொட்டினான்.
“ஏன் டா, அதுக்கு பிள்ளையை தலைல கொட்டுவியா? நீ பாட்டு பாடணும்னா கதவை பூட்டிருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டாள் ராஜி.
“நல்லா கேளு மா. இவனுக்கு பெரிய இவன்னு நினைப்பு”, என்று போட்டுக் கொடுத்தாள் தேன்மொழி.
“தேனு”, என்று ராகவன் அரட்ட “பாத்தியா மா எப்படி அரட்டுறான். இன்னைக்கு ஸ்ருதியை இவனுக்கு அறிமுகப் படுத்துறேன். ஒரு ஹாய் கூட சொல்லாம அவளையும் என்னையும் இன்சல்ட் பண்ணிட்டான். அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா?”, என்று தேன்மொழி கேட்க “என்ன டா இதெல்லாம்?”, என்று கேட்டாள் ராஜி.
“வீட்டுக்கு வர நேரம் ஆச்சு மா. அந்த டென்ஷன்ல இருந்தேன். அதான் அந்த பொண்ணைக் கவனிக்கலை”, என்று அன்னைக்கு பதில் கொடுத்தான்.
“இது தப்பு ராகவா. நீ சாதாரணமானவன் கிடையாது. நாளைக்கு பெரிய ஆளா வருவ. அப்ப உன் கிட்ட நிறைய பேர் பேச வருவாங்க. அவங்களையும் இப்படி தான் இன்சல்ட் பண்ணுவியா? அதை அவங்க தலைக்கனம் பிடிச்சவன்னு நினைக்க மாட்டாங்களா?”
“அம்மா அது டென்ஷன்ல….”
“இங்க பாரு ராகவா, எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நீ நீயா தான் இருக்கணும். தேனு ஒரு பொண்ணை உனக்கு அறிமுகப் படுத்துறான்னா நீ அந்த இடத்துல உன் தங்கச்சியை மதிச்சிருக்கணும். உன்னை அந்த பொண்ணு கிட்ட நின்னு பேசுன்னு சொல்லலை. ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு அந்த இடத்துல இருந்து வந்துருக்கலாமே?”
“சாரி மா”, என்று ராகவன் சொன்னதும் “சரி இனிமே இப்படி பண்ணாதே. இந்தா இந்த டீயைக் குடிச்சிட்டு போய் பிராக்டிஸ் பண்ணு”, என்றாள் ராஜி.
“சரி மா”, என்று சொன்னவன் அன்னையிடம் திட்டு வாங்க வைத்த தேன்மொழியை முறைத்தான். அவள் அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க அவனுக்கு தங்கையை நினைத்தும் அவள் அறிமுகப் படுத்திய ஸ்ருதியை நினைத்தும் எரிச்சல் வந்தது.
அப்போது அவன் தலையில் கொட்டு விழ “ஆ”, என்ற படி திரும்பினான். அங்கே அமர் தான் அண்ணனை முறைத்த படி நின்றிருந்தான்.
“ஏய் ஏன் டா என்னைக் கொட்டின?”, என்று ராகவன் கேட்க “நீ மட்டும் தேனைக் கொட்டினல்ல? அதான்”, என்று அந்த சிறுவன் சிரிக்க தேன்மொழி “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”, என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.
“இப்ப நீங்க ரெண்டு பேரும் கூட்டா? கூட்டுக் களவாணிங்களா? நாளைக்கு புராஜெக்ட் செய்யணும். அதை வாங்கித் தா, இதை வாங்கித் தான்னு சொல்லி வருவீங்கல்ல? அப்ப பாத்துக்குறேன்”, என்று சொன்ன ராகவன் மீண்டும் தேன்மொழி தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
“நீ விடு கா. அவனை அப்புறம் பாத்துக்கலாம்”, என்று சொல்லி தேனை சமாதானப் படுத்தினான் அமர். பிள்ளைகள் மூவரையும் சிரிப்புடன் வேடிக்கை பார்த்த படி அமர்ந்திருந்தாள் ராஜி.
அறைக்குள் பதுங்கிய ராகவனுக்கு உருவான எரிச்சல் மறைவேனா என்று இருந்தது. “அம்மா ஈஸியா நீங்க அவளைப் பாத்து நான் சிரிச்சிட்டு வந்துருக்கணும்னு சொல்றீங்க? ஆனா அவ பார்வை எப்படி இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா மா? இன்னைக்கு நான் அவளைப் பாத்து சிரிச்சிருந்தா தான் மா அது தப்பா போயிருக்கும். ஏற்கனவே காதல்னால ரெண்டு இழப்பை பாத்துட்டேன். இனி ஒரு தடவை அந்த விஷயம் என் வாழ்க்கையில வரக் கூடாது. வரவும் விட மாட்டேன். இன்னைக்கு நான் அந்த பொண்ணைப் பாத்து சிரிக்காததுனால அவ இனி என் பக்கமே வர மாட்டா. எனக்கு அது தான் வேணும். என்னால அடுத்தவங்களுக்கு எந்த கஷ்டமும் வரக் கூடாது. அதே நேரம் அந்த காதல்னால எனக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது”, என்று எண்ணியவன் தான் எழுதிய பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
எப்போதுமே அவன் கவனம் உடனே பாட்டில் சென்று விடும். இன்றோ அவனுக்கு சற்று சிரமமாக தான் இருந்தது. ஸ்ருதியின் கண்களில் இருந்த பாவனையே அவன் மனதில் உலா வந்தது. அவள் அணிந்திருந்த ஜோளி உடை கூட அவன் கண் முன் உலா வர சற்று திணறித் தான் போனான்.
ஏதோ அவள் மீது தன்னுடைய கவனம் செல்வது போல அவனுக்கே தோன்ற இனி அவளை எக்காரணம் கொண்டும் பார்க்க கூடாது என்று முடிவு எடுத்தான்.
அதற்கு பின்னர் தான் அவனால் பாட்டில் கவனம் செலுத்த முடிந்தது. அதே நேரம் ஸ்ருதியும் அவன் நினைவில் தான் இருந்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிய வில்லை. கையில் புத்தகைத்தை வைத்துக் கொண்டு வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இனி என் கிட்ட அவன் பேசவே மாட்டானா? எப்ப பாத்தாலும் முகத்தை திருப்பிட்டு தான் போவானா?”, என்று எண்ணி அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
“நான் ஏன் அவனைப் பத்தியே இவ்வளவு யோசிக்கிறேன்?”, என்று தனக்கு தானே கேள்வி எழுப்பினாள். “அவன் சாதாரணமா ஹாய் சொல்லிட்டு போயிருந்தா நான் இப்ப அவனைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டேன். அவன் ஏன் என்னை இன்சல்ட் பண்ணிட்டு போனான்? அதான் அவனையே நினைச்சிட்டு இருக்கேன்”, என்று அவளுக்கு அவளே விடையும் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் அவன் அவளைப் பார்த்து சிரித்திருந்தாலோ, அவளிடம் பேசியிருந்தாலோ அவள் இந்நேரம் சாதாரணமாக இருந்திருக்க மாட்டாள். நிச்சயம் அவன் மீது மையல் கொண்டிருப்பாள். அந்த உண்மையை அவன் புரிந்து கொண்டு தான் விலகிச் சென்றான்.
ஒற்றைப் பார்வையிலே அவளுடைய மனதை அவன் புரிந்து கொண்டதை இவள் அறிவாளா? இது காதலிக்கும் வயது இல்லை தான். ஆனால் அதை உணரத் துடிக்கும் வயது அல்லவா?
மற்ற ஆண்களாக இருந்திருந்தால் இவள் பார்த்த பார்வைக்கு பதில் பார்வைக் கொடுத்திருப்பார்கள். “என்ன இப்படி பாக்குற? என்னைப் பிடிச்சிருக்கா?”, என்று நேராகவே கேட்டிருப்பார்கள். ஆனால் ராகவன் அப்படிப் பட்டவன் இல்லை. பெண்களை பிடிக்காது என்று ஒதுங்கிப் போகும் ராகவன் பெண்களை வெறுப்பவன் அல்ல. தன்னால் அந்த பெண்மைக்கு தீங்கு வரக் கூடாது என்று ஒதுங்கிச் செல்பவன்.
கடைசி வரை ஸ்ருதியை விட்டு அவன் ஒதுங்கிச் செல்வானா? இல்லை அவனுடைய மனதில் இருக்கும் ரணத்தை அவள் உணர்ந்து விலகிச் செல்வாளா? இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இரவு உணவை முடித்து விட்டு தங்கை தம்பியுடன் மீண்டும் ஒரு சண்டையைப் போட்டு விட்டு ராகவன் நிம்மதியான நித்திரையை தழுவ அவனால் சலனப் பட்டிருந்த ஸ்ருதி அன்றைய தூக்கத்தை எப்படி அடைய என்று தெரியாமல் போராடினாள்.
“நாளைக்கு அவனைப் பாக்க முடியுமா? இப்ப வீட்ல போய் தேனு என்னைப் பத்தி அவன் கிட்ட பேசிருப்பாளா? கண்டிப்பா பேசிருப்பா. அவனும் நாளைக்கு என் கிட்ட பேசுவான். அப்படி பேசினா எனக்கு எப்படி இருக்கும்? அவனை கிட்ட பாத்தாலே எனக்கு படபடப்பா வருதே. பேசினா நான் அவ்வளவு தான்”, என்று எண்ணி வீணான கற்பனைகளை மனதுக்குள் வளர்த்துக் கொண்டாள்.