அவன் கத்தியதில் அவள் திணறி விழிக்க அமரும் அவள் கையை பயத்துடன் பற்றிக் கொண்டான்.
“ஒழுங்கா ஸ்கூல்க்கு போனோமா வந்தோமான்னு இருக்கணும். சும்மா அவ சொன்னா இவ சொன்னான்னு ஏதாவது என் கிட்ட வந்து பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன் தேனு”
“இப்ப என்ன ஆச்சுன்னு கத்துற? ஸ்ருதி என்னோட குளோஸ் பிரண்டு. அவ…”
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். கண்டவங்களைப் பத்தி எதுக்கு என் கிட்ட பேசுற?”
“அவ ஒண்ணும் கண்டவ இல்லை. என்னோட பிரண்டு”
“உன் பிரண்டுன்னா அதை உன்னோட வச்சிக்கோ. என் கிட்ட வந்து அவளைப் பத்தி பேசிட்டு இருக்காத”
“நீயும் அவளை…”
“ஐயோ, கடுப்பேத்தாம இங்க இருந்து போறியா? அவளும் அவ மூஞ்சியும். இன்னொரு தடவை அவளைப் பத்தி என் கிட்ட பேசின சப்புன்னு நாலு வச்சிருவேன். முதல என் ரூம்ல இருந்து போங்க ரெண்டு பேரும்”, என்று கத்த அமர் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.
“ஸ்ருதி பத்தி பேசினாலே இப்படி கத்துறான்? அப்புறம் எதுக்கு அவளுக்கு முத்தம் கொடுத்தான்? பிடிக்காம முத்தம் கொடுக்க முடியுமா? ஆனா அந்த லூசு இவனை பிடிச்சிருக்குற மாதிரி பேசுதே”, என்று குழம்பினாள் தேன்மொழி.
“அவன் சரியான லூசுக்கா. அவன் கிட்ட பேசாத. இரு அம்மா கிட்ட அவனைப் பத்தி சொல்லிக் கொடுக்குறேன்”, என்று அமர் சொல்ல அவன் கன்னத்தைக் கிள்ளிய தேன்மொழி “அப்படி எல்லாம் சொல்லக் கூடாது டா அமர். அம்மாவுக்கு தெரிஞ்சா அம்மா அவனைத் திட்டுவாங்க,. அவன் நம்ம அண்ணன் தானே? அவன் திட்டு வாங்கினா நமக்கு கஷ்டமா இருக்கும்ல?”, என்று தம்பிக்கு புரிய வைக்க முயன்றாள்.
“அவன் மட்டும் உன்னைத் திட்டுறான்”
“என்னைத் திட்டினாலும் நமக்கு எல்லாம் செய்றான் தானே? நம்மளை விட்டுட்டு அவன் தனியா ஒரு சாக்லேட் கூட சாப்பிட மாட்டான். நான் அவனுக்கு பிடிக்காததை பேசிட்டேன். அதான் திட்டிட்டான்”
“நீ ஸ்ருதி அக்கா பத்தி தானே பேசின? அப்புறம் ஏன் திட்டிட்டான்?”, என்று அமர் கேட்க தேன்மொழிக்கு அவனை எப்படி சமாளிக்க என்று கூட தெரியவில்லை.
“அன்னைக்கு சொன்னேன்ல அமர், ஸ்கூல்டே பங்ஷன்ல ஸ்ருதி சூப்பரா பாடினான்னு. அதைப் பாத்து ராகவனுக்கு கஷ்டமா போச்சு. அதான் அவளைப் பிடிக்கலை போல”, என்று சொல்லி தம்பியை சமாளித்தாள்.
“ஓ அப்படியா?”
“ஆமா, சரி வா. நாம படம் வரையலாம். அம்மா கிட்ட இதைச் சொல்ல கூடாது”, என்று அவள் கேட்க சரி என்னும் விதமாய் தலையை ஆட்டினான்.
அவர்கள் சென்றதும் எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் ராகவன். அவன் கோபம் எல்லாம் ஸ்ருதி மேல் தான் திரும்பியது. “அவ ஏன் தேவையில்லாம என்னைப் பத்தி தேன்மொழி கிட்ட பேசணும்?”, என்று எண்ணியவன் அதே நேரம் “அவ மட்டும் எப்படி என் குரலைக் கண்டு பிடிச்சா?”, என்ற கேள்வியும் எழுந்தது. பின் மனதை ஒரு நிலைப் படுத்தி படிக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் வழக்கம் போல நகர “அவங்க கிட்ட கேட்டியா தேனு? அவங்க தானே அந்த பாட்டைப் பாடினது?”, என்று ஆவலுடன் கேட்டாள் ஸ்ருதி.
“நல்லா கேட்டேன் போ. அதை கேக்க ஆரம்பிச்சதும் ஆ ஊன்னு கத்த ஆரம்பிச்சிட்டான்”
“அப்படியா?”
“ஆமா ஸ்ருதி, அவன் ஒரு லூசு. அவனைப் பத்தி எல்லாம் யோசிக்க கூட கூடாது. நாம உண்டு நம்மோட வேலை உண்டுன்னு இருக்கணும்”, என்று மறைமுகமாக எச்சரித்தாள்.
“ம்ம், சரி”, என்று அரை மனதாக சொன்னாள் ஸ்ருதி. ஆனாலும் அவன் தன்னைப் பற்றி பேசினால் கோபப் படுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அடுத்து வந்த நாட்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பரீட்சை ஆரம்பிக்க மற்றவர்களுக்கு லீவ் விட்டுவிட்டார்கள்.
அதன் பிறகு ஸ்ருதியால் ராகவனைப் பார்க்க முடியவில்லை. அதற்கு பின்னர் ஸ்ருதி மற்றும் தேன்மொழிக்கும் பரீட்சை நடக்க ஆரம்பித்ததால் மும்முரமாக படித்தார்கள். பரீட்சைகளை நல்ல படியாக எழுதி முடித்த ராகவன் தம்பி தங்கைக்கு படிக்கக் உதவுவதோடு அவனுடைய மியூசிக்கிலும் கவனம் செலுத்தினான்.
அனைவருக்கும் பரீட்சை முடிந்ததும் ஸ்ருதி அன்னையை அழைத்துக் கொண்டு லீவுக்கு சென்னை சென்றாள். அவர்கள் சென்னை வந்ததால் நவீன் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டான். ஸ்ருதிக்கு லீவ் சென்னையிலே கழிந்தது. இடை இடையே தேன்மொழிக்கும் போனில் அழைப்பாள். ஆனால் ராகவனைப் பற்றி கேட்க மாட்டாள். அவளுக்கு அவனைப் பற்றி அனைத்தையும் கேட்க ஆசை தான். கேட்டால் தேன்மொழி ஏதாவது தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது.
அடுத்து தேன்மொழி மற்றும் ஸ்ருதி இருவரும் பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைக்க அதே பள்ளியில் அமரும் ஏழாம் வகுப்பு சேர்ந்தான். அமருக்கு ஸ்ருதியை மிகவும் பிடித்து விட்டது. ஸ்ருதிக்கும் தான். ராகவனைப் போலவே தோற்றத்தில் இருக்கும் அந்த குட்டித் தம்பியை அவளுக்கும் பிடித்து விட்டது.
ராகவனுக்கு ரிசல்ட் வந்து நன்றாக மார்க் வாங்கி இருந்தான். அவனுக்கு சென்னை கவர்ன்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைத்தது. அவன் முதல் வருடம் செல்ல ஆரம்பிக்க நவீன் இரண்டாம் வருடம் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தான். வாசு சென்னையிலுள்ள வேறு ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.
ராகவன் எங்கு படிக்கிறான் என்றெல்லாம் ஸ்ருதிக்கு தெரியாது. அவள் தேன்மொழியிடம் கேட்க தயங்கி கேட்காமல் இருக்க அவள் மறக்க வேண்டிய விஷயத்தை நினைவு படுத்தக் கூடாது என்று அவனைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தாள் தேன்மொழி
ஆனாலும் தயங்கிய படியே சில நேரம் “அமருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்? உனக்கு என்ன பிடிக்கும்? உங்க அண்ணனுக்கு என்ன பிடிக்கும்?”, என்று கேட்பாள் ஸ்ருதி.
தன்னுடைய அண்ணனை பற்றி கேட்க தான் அவள் இப்படிச் சுற்றி வளைக்கிறாள் என்று புரிந்து கொண்ட தேன்மொழி அவன் ஒரு வித்தியாசமான ஜந்து டி., அவன் கதை நமக்கு எதுக்கு?”, என்று அந்த பேச்சை தவிர்த்து விடுவாள்.
தேன்மொழியும் ஸ்ருதியும் இப்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ருதியின் தந்தைக்கு டிரான்ஸ்பர் வந்தது.
மீண்டும் பள்ளியை மாற்ற வேண்டும் என்ற பேச்சு வீட்டில் ஆரம்பிக்க ஸ்ருதி தன்னால் வர முடியாது என்று சொன்னாள். ஆனால் வீட்டில் எவ்வளவோ சொல்ல அவள் அதைக் காது கொடுத்து கேட்க வில்லை.
“ஸ்ருதி ஏன் இப்படி பண்ணுற? உன்னோட பழைய ஸ்கூல்ல தானே அப்பா சேக்க போறாங்க? அப்புறம் என்ன?”, என்று கேட்டாள் வேணி.
“அந்த ஸ்கூலை விட எனக்கு இங்க தான் பிடிச்சிருக்கு. நான் எங்கயும் வர மாட்டேன்”
“உன்னை விட்டுட்டு எப்படி டி நாங்க போறது? சரி நான் உனக்கு துணைக்கு இருக்கலாம்னு பாத்தா அங்க அண்ணனும் அப்பாவும் சாப்பாடுக்கு என்ன பண்ணுவாங்க?”
“நீ போ மா. நான் ஹாஸ்டல்ல இருந்துக்குறேன். ஆனா நான் இந்த ஸ்கூல்ல தான் படிப்பேன்”, என்று தீர்மானமாக சொன்னாள்.
“அது என்ன இந்த வயசுலே உனக்கு இவ்வளவு பிடிவாதம்? எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம். ஏற்கனவே படிச்ச ஸ்கூலுக்கு தானே உன்னை அனுப்ப போறோம்? ஒழுங்கா கிளம்பி இரு. இன்னைக்கு டீசி வாங்கப் போகணும்”, என்று சொல்லி விட்டு வேணி அங்கிருந்து செல்ல ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் ஸ்ருதி.
இப்போது ராகவன் எங்கே இருக்கிறான் எங்கு படிக்கிறான் என்று கூட அவளுக்கு தெரியாது. அப்படி இருக்க அவன் தன்னுடைய தொடர்பில் இருக்க வேண்டும் என்றால் அது தேன்மொழியுடன் பேசினால் மட்டும் தான் நடக்கும். இவள் சென்னைக்கு போய் விட்டால் அதன் பிறகு தேன்மொழியுடன் இருக்கும் நட்பு கெட்டு விடும். உண்மையிலே அவளுக்கு தேன்மொழியைப் பிரியவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் ராகவனைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் சென்னைக்கு போக மறுத்தாள்.
அறைக்குள்ளே அழுது கொண்டிருந்தவள் எவ்வளவோ யோசித்தும் இதை தடுக்க முடியாததால் தன்னுடைய பென்சில் டப்பாவில் இருந்த பிளேடை எடுத்து கையை வெட்டிக் கொண்டாள்.
தன்னை மீறி அப்படி ஒரு காரியத்தை எளிதாகச் செய்து விட்டாள் தான். ஆனால் அதற்கு பிறகு தான் அதன் வீரியம் புரிந்தது. தன்னுடைய கையில் இருந்து ரத்தம் ஊத்த அதைப் பார்த்தவளுக்கு பயத்தில் மயக்கம் வந்து விட்டது. அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
“ஏன் பிள்ளை கிட்ட கோபப் படுற வேணி? அவளுக்கு பிடிச்ச ஸ்கூல்லயே அவ படிக்கட்டும். அவ தான் ஹாஸ்டல்ல இருந்துக்குறேன்னு சொல்றால்ல? இனி அவளைக் கஷ்டப் படுத்தாத. அழுதுட்டு இருப்பா. போய்ச் சமாதானப் படுத்து”, என்றார் தேவேந்திரன்.
மகளிடம் இருந்து சத்தம் வரவில்லை என்றதும் அவளைத் தேடிப் போன வேணி அவள் இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“என்னங்க இங்க வாங்க”, என்று அவள் காத்த தேவேந்திரன் உள்ளே சென்று மகளைப் பார்த்து அதிர்ந்து விட்டார்.
அவசரமாக ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் பட்டாள். கையில் லேசான வெட்டு தான் என்பதால் காப்பாற்ற பட்டாள் ஸ்ருதி. அதற்கு பின்னர் தான் பெற்றவர்களுக்கு நிம்மதியானது. ஆனால் மகளின் மனதில் இருப்பது மட்டும் அவர்களுக்கு புரியவே இல்லை.
கண் விழித்ததும் தாய் தந்தையைக் கண்டு அவள் அழ வேணியோ அவளை முறைத்துப் பார்த்தாள். தேவேந்திரன் தான் மகளை அனைத்துக் கொண்டு அமைதியாக ஆறுதல் சொன்னார்.
அன்று மாலை ஆனதும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தேன்மொழி அன்று ஸ்ருதி எதனால் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்க தேவேந்திரனை அழைத்தாள்.
அதை எடுத்தவர் “சொல்லு மா”, என்றார்.
“மாமா எங்க இருக்கீங்க? ஸ்ருதி ஏன் ஸ்கூல்க்கு வரலை? அவ எங்க?”
“அது பெரிய கதை மா. உன் பிரண்டு ஸ்கூல் மாத்தப் போறோம்னு பயந்து கையை அறுத்துகிட்டா”
“ஐயோ என்ன சொல்றீங்க? அவளுக்கு என்ன ஆச்சு?”
“காப்பாத்தியாச்சு மா. நீ இங்க ரயில்வே ஹாஸ்பிட்டல்க்கு வர முடியுமா? நீ வந்து பேசினா அவ கொஞ்சம் சரியாவா. உங்க வீட்ல பேசவா மா?”
“அம்மா கிட்ட சொல்லிட்டு நானே வரேன் மாமா”, என்று சொல்லி போனை வைத்த தேன்மொழி “அம்மா ஸ்ருதிக்கு உடம்பு சரி இல்லை. ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்காங்கலாம். நான் போய்ட்டு வரட்டா?”, என்று கேட்டாள்.
“சரி டி, இங்க பக்கத்துல தானே? பாத்து போயிட்டு வா. என்னோட போனை எடுத்துட்டு போ. எதுன்னாலும் அப்பாக்கு கால் பண்ணி பேசு. இங்க அமருக்கு வேற உடம்பு சரி இல்லை. இல்லைன்னா நான் உன் கூட வந்துருப்பேன்”, என்றாள் ராஜி.
“நான் பத்திரமா போயிட்டு வந்துருவேன் மா”, என்று சொல்லி விட்டு கிளம்பிய தேன்மொழி ஹாஸ்பிட்டல் வந்து தோழியை முறைத்துப் பார்த்தாள்.
“தேனு”, என்று ஸ்ருதி சந்தோஷமாக அழைக்க “என்ன டி இதெல்லாம்?”, என்று கோபமாக கேட்டாள் தேன்மொழி.