அடுத்த நாள் எப்போதும் போல பிறந்தது. ஹாஸ்டல் சென்று சேர்ந்ததும் பேகை ஒதுங்க வைத்தவனின் கண்ணில் விழுந்தது அந்த கிஃப்ட்.
ஆர்வமாக அதை கையில் எடுத்தான். ஸ்ருதி என்று மட்டும் அதில் இருக்க அவனுக்கு என்ன உணர்வு வந்தது என்று கூட தெரியவில்லை.
அதை பிரிக்க ஒரு மனம் ஆவல் கொண்டது என்றால் கட்டாயம் வில்லங்கம்மா தான் இருக்கும். பிரிக்காத என்று எச்சரித்தது மற்றொரு மனம்.
இரண்டு மனதுடன் அவன் போராடிக் கொண்டிருக்க அவனது நண்பன் விஷ்ணு அங்கு வந்தான். “என்ன கிஃப்ட் மச்சான்?“, என்று கேட்ட படி அதை வாங்க அதில் ஸ்ருதி என்று இருந்தது.
“யார் டா இது?”
“தேனு ஃபிரண்ட்”
“மச்சி தங்கச்சியோட ஃபிரண்ட் கிட்ட இருந்து கிஃப்டா? உள்ள என்ன டா இருக்கும்? எனக்கு ஆர்வமா இருக்கு. பிரி டா”, என்று சொல்ல சிறு புன்னகையுடன் பிரித்தான்.
அதில் அவன் விரும்பி பார்த்த கிஃப்ட் இருக்க அவன் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தது. விஷ்ணுவோ மீண்டும் அந்த அட்டையில் எதையோ தேடினான்.
“என்ன டா தேடுற?”, என்று கேட்டான் ராகவன்.
“இல்லை அந்த பொண்ணு ஏதாவது எழுதி வச்சிருக்கான்னு பாக்குறேன்?”
“என்ன எழுதணும்? அதான் ஸ்ருதின்னு அவ பேர் எழுதிருக்காளே?”
“இல்லை டா வேற ஏதாவது?”
“வேற ஏதாவதுன்னா?”
“லவ் லட்டர்”
“லூசு, அவ லவன்த் தான் படிக்கிறா?”
“அதனால என்ன? உன்னோட ரெண்டு வயசு தானே சின்னவ?”
“கண்டதை யோசிக்காம காலேஜ் கிளம்பு”, என்று சொல்லி விட்டுச் சென்றான் ராகவன். ஆனால் அவன் மனதுக்குள் “எனக்கும் ஸ்ருதிக்கும் மூணு வயசு தானே வித்தியாசம்?”, என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.
அன்றே ஸ்ருதியை ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். ஸ்ருதியின் குடும்பம் மீண்டும் சென்னைக்கு சென்றது. நவீன் வீட்டில் இருந்து காலேஜ் சென்றான். ஸ்ருதி மட்டும் ராகவனுக்காக ஹாஸ்டலில் இருந்தாள்.
ஸ்ருதிக்கு ஹாஸ்டல் வாசம் பழகி விட்டது. நாட்கள் அப்படியே நகர்ந்தது. அது மட்டுமில்லாமல் இப்போது அவள் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருந்தது. அவ்வப்போது ராகவனின் நினைவுகள் தலையை நீட்டும். அவன் தனக்கு கிடைக்க வேண்டும் என்றால் தானும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அவள் எடுத்த உறுதி அவளுக்கு உதவி செய்தது.
ஸ்ருதி படிப்பில் கவனம் செலுத்தினாள் என்றால் ராகவனோ கல்லூரியில் பிரபலமடைந்து கொண்டிருந்தான். அவன் குரல் வளம் அனைவரும் மயக்கும் படி இருக்க அனைவருக்குமே அவனது பாட்டு உயிராகிப் போனது.
ராகவன் இப்போது மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தான். அப்போது இன்டர் நேஷனல் லெவல் மியூசிக் காம்பெட்டிசன் நடக்க போவதாக தகவல் வந்தது.
அந்த விளம்பரம் கல்லூரி நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருப்பதைப் பார்த்தவனுக்கு அதில் பங்கு கொள்ளவா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.
வீட்டில் கேட்கவும் அவனுக்கு தயக்கம் தான். படித்து முடித்த பிறகு அவன் என்ன செய்தாலும் மதன் கேட்க போவதில்லை. ஆனால் படிக்கும் போதே கேட்டால் என்ன சொல்வாரோ என்று தயக்கமாக இருந்தது. அவர் படத்தில் தன்னை பாட விடுவதே பெரிய விஷயம் என்னும் நிலையில் மேலும் அவரை சங்கடப் படுத்த வேண்டுமா என்று தோன்றியது.
அந்த போட்டிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் வரைக்குமே அவன் அதற்கு பெயரைக் கொடுக்க வில்லை. அவனுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கூட அவனிடம் “பெயர் கொடு ராகவா”, என்று சொல்லி விட்டுச் சென்றார்கள். அவனுடைய நண்பர்களும் அதையே சொல்ல அவனோ என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் திணறினான்.
“இன்னும் என்ன டா யோசனை? இந்த போட்டில நீ ஜெயிச்சா நம்ம காலேஜ்க்கே பெருமை டா. உன் குரலுக்கு கண்டிப்பா இந்த அவார்ட் கிடைக்கும். அப்புறம் படத்துல எல்லாம் உனக்கு வாய்ப்பு கொடுப்பாங்க”, என்றான் விஷ்ணு.
“அப்பா ஏதாவது சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு டா. இது வரைக்கும் எனக்கு பல விசயத்துல சுதந்திரம் கொடுத்துருக்காங்க டா. ஆனா இப்ப நான் இதுல கலந்துக்கிட்டா ரொம்ப நாள் காலேஜ்க்கு லீவ் போட வேண்டியது இருக்கும். அதுல என் படிப்பு கூட பாதிக்க படலாம். ஆனா அப்பா கேட்டது இந்த டிகிரியை முடிக்கணும்னு தான்”
“நீ லீவ் எடுக்குற இந்த நாள்ல இங்க பாடம் நடத்தி கிளிச்சிரப் போறாங்களா? இந்த செமஸ்டர் இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு. அதெல்லாம் பிக்கப் பண்ணிக்கலாம் டா. இது நல்ல வாய்ப்பு ராகவா, யூஸ் பண்ணிக்கோ”
“சரி யோசிக்கிறேன். சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்குல்ல?”, என்று சொல்லி நண்பனைச் சமாளித்தான். அன்று மதிய உணவு இடைவேளை முடிந்ததும் கல்லூரி முதல்வர் அவனை அழைப்பதாக தகவல் வந்தது.
குழப்பத்துடன் அங்கே சென்றவன் “சார் வரச் சொன்னீங்களா?”, என்று கேட்டான்.
“ஆமா ராகவன். வா பா வந்து உக்காரு”, என்றார் சிதம்பரம். அவன் அமைதியாக அவர் எதிரே சென்று அமர்ந்தான்.
“இன்னும் மியூசிக் காம்பெட்டிசன்க்கு உன்னோட பேர் கொடுக்கலையா பா? நம்ம காலேஜ்ல இருந்து கலந்துக்க போறது நீ மட்டும் தான். நீயும் இல்லைன்னா எப்படி பா?”
“இல்லை சார்… அது வந்து”
“உனக்கு டேலண்ட் இருக்கு ராகவன். உன்னால கண்டிப்பா இதுல ஜெயிக்க முடியும். இந்த ஹோல் கேம்பசே உன்னோட குரலுக்கு மயங்கி கிடக்குறோம். அப்புறம் ஏன் உன் பேரைக் கொடுக்கலை”
“இல்லை சார், அதுக்கு நிறைய லீவ் எடுக்கணும்”
“லீவ் பத்தி எல்லாம் ஏன் கவலைப்படுற? அதை நான் பாத்துக்குறேன். ஓடின்னு ஒண்ணு எதுக்கு இருக்கு? அட்டண்டன்ஸ் பத்தி எல்லாம் வொரி பண்ணாத. கண்டிப்பா நான் உன் பேரை கொடுக்க தான் போறேன்”
“சார் வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கவா?”
“தாராளமா கேளு. இந்தா என்னோட போன்ல இருந்தே பேசு”, என்று சொல்லி போனைக் கொடுத்தார்.
அதில் இருந்து மதனுக்கு அழைத்தான். அதை எடுத்த மதன் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.
“அப்பா நான் ராகவன் பேசுறேன்”
“ராகவா நீயா? இது யார் நம்பர் பா?”
“எங்க டீன் நம்பர். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“என்னப்பா சொல்லு”
“இல்லைப்பா, இன்னும் இருபது நாள்ல இங்க ஒரு பெரிய மியூசிக் காம்பெட்டிசன் நடக்க போகுது. அங்க ஏற்கனவே படத்துல வந்த சினிமா பாட்டு எல்லாம் பாடக் கூடாது. நம்மளே ஒரு பாட்டு எழுதி அதுக்கு டியூன் போட்டு பாடணும். அதுக்கு என்னைச் சேரச் சொல்லி டீன் சார் சொல்றாங்க. அதான் உங்க கிட்ட கேக்கலாம்னு”
“என்ன ராகவா இதை எல்லாம் கேட்டுட்டு இருக்க? இது உன்னோட கனவுக்கான ரெண்டாவது படி. இப்பவே உனக்கு பேரும் புகழும் வந்துருக்க வேண்டியது. எனக்காக தான் இன்னும் நீ தான் சினிமால பாடுறன்னு யாருக்கும் சொல்லாம இருக்க. அதுவே எனக்கு குற்ற உணர்வா இருக்கு. இங்க பாரு ராகவா. நான் முழுமையா உன்னை நம்புறேன். உன்னால வாழ்க்கையிலயும் உன் கனவுலயும் ஜெயிக்க முடியும். இன்னும் ஒரு வருசத்துல இஞ்சினீயரிங்க் முடிச்சிருவ. அதுக்கப்புறம் உனக்கு ஒரு லைப் வேணும்னா நீ இப்பவே அதை ஆரம்பிக்கணும். தைரியமா இந்த புரோகிராம்ல கலந்துக்கோ. நீ தான் மதன்ராஜ் அப்படிங்குற பேர்ல பாட்டு எல்லாம் பாடினன்னு இந்த உலகத்துக்கு தெரியட்டும்”
“அப்பா”, என்று ஆனந்தமாக அதிர்ந்தான். இதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டுமாம்?
“ஆமாப்பா, இந்த வயசுல உனக்கு கிடைக்க வேண்டிய அங்கிக்காரம், பேர், புகழ் என்னால கெட்டுப் போகக் கூடாது. இனி யார் கிட்ட வேணும்னாலும் சொல்லு. மீடியாக்கு கூட தெரியட்டும்”
“நிஜமாவாப்பா?”, என்று கண்கள் மின்னக் கேட்டான்.
“ஆமா டா, தைரியமா உன் முகத்தை மக்களுக்கு இனி காட்டு. அப்புறம் சேகர் சார்க்கு அடுத்த படத்துல ஏதோ ஒரு பாட்டு பாடனுமாம். எனக்கு கால் பண்ணினாங்க. அவர் டேட் சொன்னதும் உனக்கு சொல்றேன். போய் பாடிக் கொடுத்துட்டு வந்துரு”