நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“மலர் கிளம்பியாச்சா? வா போகலாம்.” என்று ஆறுமுகம் தன் மனைவியை கூப்பிட்டான்.
“இதோ வந்துட்டேங்க.” என்று கூறியபடி புடவையின் தலைப்பை அவசர அவசரமாக சரி செய்தபடி அறையிலிருந்து வெளியில் வந்தாள் மலர்.
“சரிங்க அத்தை. நாங்க போயிட்டு வரோம்.” என்று பார்வதியிடம் கூறிவிட்டு
மலரும் ஆறுமுகமும் வெளியில் வந்தனர்.
ஆறுமுகம் தன்னுடைய பைக்கை எடுத்து ஸ்டார்ட் பண்ணினான்.
பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. பலமுறை அதை உதைத்து ஸ்டார்ட் பண்ண முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. அப்போது தெருவில் கார் வரும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினர்.
மாதவன் தான் அவனது காரில் வந்து கொண்டிருந்தான்.
இவர்களை பார்த்ததும் இறங்கினான்.
பலமுறை உதைத்து சோர்வாகி வியர்த்து விறுவிறுத்து போயிருந்த ஆறுமுகத்தை வினோதமாக பார்த்த மாதவன்.
“என்ன ஆச்சு அண்ணா ?இப்படி வேர்த்து இருக்கு?” என்று கேட்டான் அக்கறையாக.
“அதை ஏண்டா கேக்குற? இந்த பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது .”என்று பைக்கை மீண்டும் உதைத்படி கூறினான் ஆறுமுகம்.
“சர்வீசுக்கு விடனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே. இன்னும் விடலையா அண்ணா?”
“இல்லைடா மாதவா. அறுபதாம் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டிய வேலை இருக்கு இல்லையா பைக் தேவைப்படும். இன்னும் விடல. நாளைக்கு விடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.”
“சரி பரவாயில்லை அண்ணா. நீங்க யார் வீட்டுக்கு போறீங்க?”
“தணிகாசலம் மாமா இருக்காங்க இல்ல அவங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போயிட்டு இருக்கேன். அப்படியே அந்த பக்கம் இருக்கிற இன்னும் இரண்டு பேருக்கும் வைத்துவிட்டு வரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்.”
“ஓ அந்த பக்கமா? எனக்கு அந்த பக்கம் ஒரு வேலை இருக்கு. நானே உங்களை அங்க டிராப் பண்ணி பிக்கப் பண்ணிக்கிறேன். வாங்க போகலாம்.” என்று கூப்பிட்டான்.
“சரி மாதவா நல்லதா போச்சு.” என்று இருவரும் அவனது வண்டியில் ஏறிக் கொண்டனர்.
காரை அந்த பெரிய வீட்டு வாசலில் நிறுத்தினான் மாதவன். நிறுத்தியவன்
“நான் என்னோட வேலையை முடிச்சுட்டு பத்து நிமிஷத்துல உங்களுக்கு கால் பண்றேன்.” என்று கூறிவிட்டு இருவரையும் இறக்கி விட்டு சென்றான்.
“வாங்க வாங்க.” என்று மலரையும் ஆறு முகத்தையும் பார்த்த தணிகாச்சலம் அழைத்தார்.
“ரேணுகா இங்க பாரு யாரு வந்திருக்கான்னு.” என்று உள் நோக்கி குரல் கொடுத்தார் தணிகாசலம்.
“உட்காருங்க.” என்று அந்த வீட்டு ஹாலில் போட்டு இருந்த ஊஞ்சலை காட்டினார் தணிகாச்சலம்.
உள்ளிருந்து வெளியே வந்த ரேணுகா
“வாமா மலர்.” என்று கூறியபடி ஒரு மயில் தோகை போட்டிருந்த புது பாயை விரித்து போட்டார்.
மலர் அதில் உட்கார்ந்தாள்.
“ நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று கூறியவர் உள்ளே சென்று ஐந்து நிமிடத்தில் காபியுடன் வந்தார்.
காபியை இருவரும் எடுத்துக் கொண்டனர்.
பிறகு ரேணுகா மலர் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“சொல்லு மலர், ஆறுமுகம் எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தார்.
“நாங்க நல்லா இருக்கிறோம் அத்தை.”
“உன் பையன் பெயர் என்ன ?”என்று கேட்டார்
“ஆதித்யா சித்தி.” என்றாள் மலர்.
“நல்ல பெயர்.” என்றார் ரேணுகா.
மலர் தான் எடுத்து வந்திருந்த வெள்ளித் தட்டை எடுத்து அதில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ மற்றும் பத்திரிகை வைத்து ஆறுமுகம் மலர் இருவரும் சேர்ந்து தணிகாச்சலம் பேணுகா இருவருக்கும் பொதுவாக வெள்ளித் தட்டை நீட்டினர்.
“அப்பா அம்மாவுக்கு அறுபதாம் கல்யாணம் வைத்திருக்கிறோம் மாமா. நீங்க அவசியம் குடும்பத்தோட வரணும்.” என்று ஆறுமுகம் மலர் இருவரும் சேர்ந்து கூறினர்.
“ஓ அப்படியா? உங்க அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? அதானே பார்த்தேன். உங்க கல்யாணத்துக்கு கூப்பிட உங்க அப்பா அம்மா இங்கே வந்திருக்காங்க.
அதுக்கு அப்புறம் இப்பதான் நீங்க ரெண்டு பேரும் இங்கே வரீங்க. அடிக்கடி வந்து போனால் தானே சொந்தம் வளரும்.” என்றார் தணிகாசலம்.
“அதுக்கு என்ன மாமா வந்துட்டா போச்சு.” என்று தன் ஒன்றுவிட்ட மாமன் முறையான தணிகாசலம்e திடம் கூறினான் ஆறுமுகம்.
“நீங்க ரெண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டு தான் போகனும்.” என்றார் ரேணுகா.
“இல்லை அத்தை. வீட்ல இருந்து கிளம்பும் போதே சாப்பிட்டுவிட்டு தான் வந்தோம். இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடறோம்.” என்றான் ஆறுமுகம்.
“சரி அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா இங்க சாப்பிடனும் என்றார் ரேணுகா.
ஆறுமுகத்தின் கைபேசி ஒலித்தது. ஆறுமுகம் கைப்பேசியை எடுத்து
“மாதவா பத்திரிக்கை வச்சாச்சு. நீ வா.” என்று கூறி போனை வைத்தான் .
“உன் தம்பி மாதவனா?” என்று கேட்டார் தணிகாச்சலம்.
“ஆமாம் மாமா. உங்க கல்யாணத்தில் நான் அவரை பார்த்தேன். அதுக்கப்புறம் நான் அவரைப் பார்க்கவே இல்லை. “ என்றார் தணிகாச்சலம் .
“ஆமா மாமா அவன் இப்போ அப்பாவோட பிசினஸை எடுத்து நடத்திக்கிட்டு இருக்கான். அதனால் வெளியில் எங்கேயும் சுத்தறது கிடையாது. அவனுக்கு வேலையே சரியா இருக்கும்.” என்று தன் தம்பியின் பொறுப்புணர்ச்சியை பெருமையாக கூறினான் ஆறுமுகம்.
“ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். இப்போ அண்ணாமலை ஸ்டோர்ஸ் இந்த ஏரியாவில் நல்ல பெயர் வாங்கி இருக்கு. சின்னதா இருந்த கடையை பெருசா விரிவு பண்ணி இருக்கீங்க போல இருக்கு. நானும் அந்த பக்கம் போகும்போது பார்க்கிறது உண்டு. கடைக்கு போய் உங்க அப்பாகிட்ட பேசணும்னு நினைப்பேன். ஆனால் எங்கப்பா எனக்கு வேலை சரியா இருக்கு. அதனால அப்படியே போயிடுவேன்.”
“ஆமா மாமா அதை எல்லாம் பண்ணினது என் தம்பி தான் எம்.பி.ஏ படித்து முடிச்சிட்டு நல்லா ப்ளான் பண்ணி பிஸ்னஸ் செய்யறான்.”
“லாபம் வருதா?” என்று சந்தேகமாக கேட்டார் தணிகாச்சலம்.
“நல்ல லாபம் வருது மாமா.” என்றான் ஆறுமுகம்.
“அப்ப சரிதான்.”
அப்பொழுது வீட்டின் முன்பு கார் வந்து நின்றது
“மாதவன் வந்துட்டான்னு நினைக்கிறேன். சரி நாங்க கிளம்பறோம்.” என்று கூறியபடி மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தான்.
மலரும் அந்தப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு எழுந்தாள்.
“இவ்வளவு தூரம் வந்துட்டு உங்க தம்பி உள்ள வராம போகப் போகிறாரா? நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க இங்கேயே இருங்க.” என்று கூறிய தணிகாச்சலம் வாசல் நோக்கி நடந்தார்.
“தன்னை நோக்கி நடந்துவரும் தனிe காய்ச்சல் அதை பார்த்ததும் தன்னிடம் ஏதோ பேச வருகிறார் என்று நினைத்த மாதவன் காரை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கினான்.
“என்ன தம்பி இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராம வெளியே நிக்கறீங்க? உள்ள வாங்க.” என்று அழைத்தார்.
“பரவாயில்லை மாமா.” என்று சற்று தயங்கினான். மாதவன்
“என்ன தம்பி? நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு இப்படி யோசிக்கிறீங்க? வாங்க.” என்று வற்புறுத்தவும் மாதவன் இதற்குமேலும் மறுப்பது மரியாதையாக இருக்காது என்று நினைத்து அவருடன் வீட்டுக்குள் வந்தான்.
“உக்காருங்க” என்றார் தணிகாச்சலம்.
“வாங்க தம்பி.” என்றார் ரேணுகா.
“நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வர்றேன்.” என்று கூறிவிட்டு சமையலறை சென்றார் ரேணுகா.
“நீங்க தான் இப்போ அண்ணாமலை ஸ்டோர் எடுத்து நடத்துவதா உங்க அண்ணன் இப்ப தான் சொன்னார். ரொம்ப சந்தோஷம் தம்பி. நீங்க இன்னும் நன்றாக வளரணும். என்றார் தணிகாச்சலம்.
“தேங்க்ஸ் மாமா.” என்றான் மாதவன்.
வீட்டின் முன்பு ஒரு ஸ்கூட்டி வந்து நின்ற சத்தம் கேட்டது.
சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் மெல்லிய கொலுசொலி சத்தத்துடன் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.
“அம்மா” என்று கத்தி கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்த அவள் ஹாலில் உட்கார்ந்திருந்த இவர்களை பார்த்ததும் தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு அவர்களை பார்த்து புன்னகைத்து
“வாங்க வாங்க” என்று சம்பிரதாயமாக கூறி விட்டு நழுவி சமையலறைக்குள் சென்றாள்.
“யாருமா இது?” என்று தாயை கேட்டாள்.
“நம்ம சொந்தக்காரங்க.” என்று அவளிடம் கூறிவிட்டு காபி டம்ளரை தட்டில் வைத்து எடுத்து வெளியே வந்த ரேணுகா அதனை மாதவனிடம் நீட்டினார்.
அவன் அவரை பார்த்து புன்னகைத்தபடி எடுத்துக்கொண்டான்.
“ரூபா” என்று உள்நோக்கி குரல் கொடுத்தார் தணிகாச்சலம்.
அப்போது அந்த பெண் ஹாலிற்கு வந்தாள்.
“இவள் தான் என் பொண்ணு ரூபவதி.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவளும் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தாள்.
“காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கா.” என்று கூறினார் தணிகாசலம்.
“அப்படியா” என்று கேட்டுக்கொண்டான் ஆறுமுகம்.
மலர்
“ரூபா இங்கே வந்து உட்காரு.”. என்று தன் பக்கத்தில் இருந்த இடத்தை காண்பித்தாள்
அவளும் வந்து மலர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“இந்த வருஷம் காலேஜ் முடிக்க போகிறாள். நல்லா படிப்பா. வேலைக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கா. நான் தான் அனுப்பனுமானு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று கூறினார் தணிகாச்சலம்.
“இதுல என்ன இருக்கு மாமா ?வேலைக்கு போகணும்னு ஆசை பட்டா அனுப்பி வைக்கலாமே.” என்று கூறினான் மாதவன்.
“நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் தம்பி.” என்று கூறினார் தணிகாச்சலம்.
அவர் கூறியதை கேட்டதும் மலருக்கு ஏதோ தோன்றியது. எனினும் அமைதியாகவே இருந்தாள்.
“சரிங்க மாமா நாங்க இன்னும் இரண்டு பேருக்கு பத்திரிகை வைக்கணும். கிளம்புகிறோம்.” என்றான் ஆறுமுகம்.