Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 17

கீதம் 💜 17

” கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி..,
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி..,”

இசையோடு இணைந்து பாடி கொண்டே காரில் வந்து கொண்டிருந்தான் ஆரவ்.  இரவே கிளம்பியவன் அடித்து ஊற்றிய மழையில் காலையில் செல்லலாம் என சகுந்தலா வற்புறுத்தியதால் அங்கேயே தங்கி விட்டான். காலையில் எழுந்து ஊருக்கு சந்தோசமாக திரும்பி வந்து கொண்டு இருந்தான். தனியே மனதோடு அவளோடு . ” இன்னைக்கு உன் முகத்தை பார்த்தாலே நான் கண்டுபிடிச்சுருவேன். என்கிட்டே எதையும் மறைக்க முடியாது. அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் அப்பாட்ட நேத்து சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப சந்தோசம். நீ பதில் சொன்னவுடனே அம்மாகிட்ட சொல்லலாம்னு சொல்லிட்டார். பட் மேரேஜ் மட்டும் இப்போ பண்ண முடியாது. ரெண்டு பேரும் படிச்சு முடிச்சப்புறம் தான்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். சோ அதுவரை நான் லவ் பேர்ட்ஸ் மாதிரி காதல் வானத்துல பறந்துட்டு இருக்க போறேன். என்னோட மொத்த காதலையும் உன் மேல் மழையா பொழிஞ்சு திக்கு முக்காட வைக்க போறேன். இப்படி ஏதேதோ பிதற்றியபடி வண்டியை ஓட்டி கொண்டு இருந்தான்.

**



Advertisement

உள்ளம் துடித்து கொண்டு இருந்தாலும் உதடுகள் எப்போதும் போல் புன்னகையை தான் சுமந்து கொண்டு இருந்தது. அவளின் பலவருட வாடிக்கை அல்லவா, யாராலும் அவளின் துயரத்தை கண்டறிய முடியவில்லை. காலையில் எப்போதையும் விட சீக்கிரமே பணிக்கு வந்து இருந்தாள் நந்திதா.

மறக்க வேண்டும் என நினைத்து, அதனை  மறந்து, அவனை மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் நினைத்து கொண்டே இருந்தாள். “”வேணாம்னு முடிவு பண்ணிட்டு, அப்புறம் எதுக்கடி அவரை நினச்சு ஏங்கிட்டு இருக்கிற. மறந்துட்டு நிதர்சனத்தை உணர்ந்து உன் வேலையை மட்டும் பாரு. பெருசா அவன்ட வேண்டாம்னு சொன்ன, இப்போ என்னவாம், போடி போ ” என அவள் மனசாட்சியே அவளை கேலி செய்தது.

தடுமாறும் மனதை தேற்றி கொண்டு டாக்டர் ரூமில் நின்று இருந்தாள். அன்று அத்தனை கூட்டம். டாக்டர்.ரவி வேறு அதிகாலையில் தான் ஒரு சர்ஜரி முடித்து உறங்க சென்று இருந்தார். மற்ற மருத்துவர்களும் வேறொரு மருத்துவமனைக்கு அவசர கேஸ் என்று சென்று இருந்தனர்.

Advertisement

ஆரவ் இருந்த இந்த சிறிது நாளில் அவன் காலை ஒன்பது மணிக்கு வந்து விடுவான். இன்பேசன்ட் ரவுண்ட்ஸ் எல்லாம் முடித்து விட்டு பத்து மணிக்குள் நாற்காலியில் அமர்பவன் அடுத்தடுத்து வரும் அனைத்து நோயாளிகளையும் புயல் வேகத்தில் பரிசோதனை முடித்து அனுப்பி விடுவான். அவன் தந்தையை மட்டும் பிரத்தேகமாக காண வருபவர் மட்டுமே எஞ்சிய நிலையில் இருப்பர்.

Advertisement

அவனும் இல்லாமல் கூட்டம் அலைமோத பதில் சொல்லியே ஓய்ந்தாள். இன்று காலையில் வந்து விடுவான் என்று தான் சொல்லி இருந்தனர். ஆனால் பத்து மணி ஆகியும்  அவனை காண முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவளிடம்

” நந்து, டாக்டர் ஆரவ் சார் இன்னும் வரலையா? எப்போ வருவார் ” என கேட்ட சக நர்சிடம்,

தனக்கும் அவன் வேண்டும், நோயாளிகளுக்கும் அவன் வரவு அத்தியாவசிய தேவை என்ற ஆதங்கத்தில், ” அவர் ஒன்னும் இங்கே வர வேண்டாம். அந்த ஊரையே கட்டிட்டு அழட்டும். அங்க என்ன தான் இருக்கோ ” என கோபமாக பதில் கூறியபடி கதவை திறக்க, அவளின் நாயகனே எதிரில் நின்றான். அவனை கண்ட நொடி சந்தோசத்தில் துள்ளி குதித்த, அவள் மனதை அவள் கண்களின் பூரிப்பே, அந்த நொடி பொழுதில் அவனிடம் கடத்திவிட்டது.

Advertisement

கண்டுகொண்டவனோ ” யாரை கட்டிக்கிட்டு சிரிக்கணும்னு சொல்லு. இப்போவே ரெடி ” கண் சிமிட்டி புன்னகை ததும்ப அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெதுவே சொல்ல, “நானே லூசு மாறி உன்னை நினைச்சு தவிச்சுட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா ” என மனதில் எண்ணி கொண்டு

“இ.. இல்லை சார், பேசன்ட் எல்லாம் ரொம்ப சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்கனு ஜூலி சிஸ்டர்ட்ட சொல்லிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்ல.” வேறு ஏதோ பேசி மழுப்பினாள்.

அவளின் தடுமாற்றமே அவள் நிலையை உணர்த்திவிட்டது.
“மவளே! நீ என்னை தேடணும்னு தானே விட்டுட்டு போனேன். மேடமுக்கு பல்பு எரிஞ்சுருச்சு. இனி டோன்ட் ஒரி. பீ ஹாப்பி தான். ”  எண்ணி கொண்டே

” ஹ்ம்ம். சீக்கிரம் பார்த்து முடிச்சுருவோம். சிரித்து கொண்டே சென்று சுழல் நாற்காலியில்  அமர்ந்தவனின் குழி விழும் கன்னத்தில் மீண்டும் விழுந்து எழுந்தாள்.

அதன்பின் இருவரும் சந்தோசமாகவே  தங்களை பணியில் ஆழ்த்தி கொண்டனர்.

வீறிட்டு அழும் குழந்தையை சமாதானம் செய்து தட்டி கொடுத்தபடி பெண்மணி இவன் முன் வந்து அமர ” என்னாச்சு, குட்டி தங்கம் ஏன் அழுகுறீங்க? , சிறுவனின் தலையை மெதுவே வருடி அன்பாய் கேட்க.

” ஊஉம்ம் .., ஊஉம்ம்., என மெதுவே திரும்பியவன் ” தததாத்தா ஊசி போட்டுடுவாங்க   ,”  தேம்பியபடி மீண்டும் அழுகையை தொடர .

” நல்லா பாருங்க,  இங்கே தான் தாத்தா  காணுமே? ” அப்புறம் என்ன ? என அவனுடன் சிறு குழந்தை குரலில் ஆரவ் மிமிக்ரி செய்ய.

கண்களை கசக்கி கொண்டு மீண்டுமாய் அறை முழுவதும்  ஒரு நொடி தேடி பார்த்தவன் ” ஆமாம்ம், காணோம்.,”  என்றுவிட்டு ” அப்போ ஊசி இல்லல இன்க்கு ” என கையை விரித்து காட்ட அவனை பார்த்து இதழ் விரிய சிரித்து கொண்டு இருக்கையில்.

“செல்லத்துக்கு ஊசி எல்லாம் போட கூடாதுனு அங்கிள் சொல்லிட்டாங்க. அதனால் இன்னிக்கு இல்லை.” நந்துவின் பதில் வர

” அங்கிள் சொல்லக்கூடாதுனு பாட்டி சொல்லிருக்காங்க . உன்கு ஒன்னும் தெரில, மாமா தான் சொல்ணும். ” தன் பதில் சரியா என தெரிந்து கொள்ள தாயின் முகவாயை பற்றி கொண்டு சிறுவன் கேட்க.

” நீ என்ன சொன்னாலும் இப்போ சரினு தாண்ட சொல்லுவேன். உன்னை கட்டி மேய்கிறதுக்கு இன்னைக்கு உங்கப்பன் கூட வரல. ” மனதிலே எண்ணியவர்  ” ஆமாம்டா., செல்லம்,” என்றார் குழந்தையின் அழுகையை சமாளித்து விட்டதில் திருப்தியான அன்னை.

அன்னையின் பதில் கேட்டு நந்துவிடம் திருப்பி,  வாயை கோணி காட்டி சிரிக்க.

” நீ எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான் ” பதிலோ பையனிடம்,  பார்வையோ  நந்துவிடம் இருந்தது.

” சரி . குட்டி தங்கம் பேரே சொல்லலையே? ” ஸ்டெத் வைத்து சோதித்தபடி கேட்க.

” ராஜா” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

” குட் நேம். இப்போ சொல்லுங்க., என்னாச்சு .,” என்க, அவனோ  பார்வையை திருப்பி தன் தாயை நோக்க ,”  நைட்ல இருந்து ரொம்ப காய்ச்சல்., சளியில் மூச்சு விட கூட முடியாம தவிச்சுட்டான்., சார்., “

” நேத்து எத்தனை ஐஸ்கிரீம் சாப்பிட்டீங்க? “

” நான் ஒண்ணுமே சாப்பிடல. அம்மா தான் ரெண்டு சாப்பிட்டாங்க.”

” அப்போ உனக்கு மாத்திரை தரேன். அம்மாவுக்கு ரெண்டு ஊசி போட்ருவோம்.., அப்போ தான் இனிமே சாப்பிட மாட்டாங்க.” என்றவன் கண் காட்ட. அவனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டு ஊசியோட வந்தார் ராணி சிஸ்டர்.

அவரிடம் ப்ரெஷகிரிப்சன் கொடுப்பதுபோல தெரியாமல் ஊசியை வாங்கி கொண்டு, “ராஜா செல்லம், அம்மாட்ட நேத்து எப்படி ஐஸ் கேட்டிங்க., எனக்கு பண்ணி காட்டுங்க ” அவனோ  தலையை திருப்பி தாயை பார்த்து  “இப்படித்தான் கேட்டேன் ” என முத்தம் கொடுத்து முடிக்கையில்,  வலி தெரியாமல் ஊசியை குத்தி விட்டு நல்ல பிள்ளை போல அமர்ந்து இருந்தான் ஆரவ். அவனின் செய்கையில் சிரிப்பு வந்தாலும் பாடாய்ப்படுத்தும் மகனை ஆர்ப்பாட்டம் செய்யாமல் அனுப்பி வைத்து விட்டவனிடம் நன்றி கூறி கிளம்பி விட்டார்.

அந்த சிறுவன் சென்றபிறகும், இவன் பார்வை நந்துவிடமே இருக்க, தலையை திருப்பி முகத்தை மறைத்து கொள்ள பெரும்பாடு விட்டாள். நோயாளிகளை பார்த்து விட்டு, மற்ற அலுவலக வேலைகள் பேசி என பொழுதும் இனிதே  நகர்ந்தது.

அவன் வந்தது மனதை மகிழ்ச்சியில் தள்ளினாலும், ஏதோ ஒரு நெருடல் நெஞ்சில் ஏற்பட்டது. அதற்கேற்ப அவன் பார்வையும், நடத்தையும் மாறி இருந்தது. எப்போதும் மேடம்  என்றே கூப்பிட்டு வேலைகளை சொல்பவன் நந்திதா என்றே அழைத்து வேலை வாங்கினான். இத்தனை நாள் கண் பார்த்து பேசி இருந்தாலும் இன்று அதில் வேறொரு உணர்வும் தொக்கி நின்றதை உணர முடிந்தது. தனியே அகப்படவே கூடாது என அவன்புறம் வராமலே இவள் வேலைகளை செய்து கொண்டு இருக்க, விதி ராணியின் மூலம் அவர்களை சிக்க வைத்தது.

” சிஸ்டர், நீங்க மட்டும் தான் மதியம் op பார்க்க இருக்கீங்க. எங்களுக்கு ரெண்டு கேஸ் இருக்கு. சாப்பிட்டு அப்படியே OT பிரிப்பரேஷன் போயிருவோம். இன்னைக்கு மட்டும் மேனேஜ் பண்ணுங்க. ப்ளீஸ் மாத்திவிட ஆள் இல்லைப்பா”  என்றவளிடம் தலையை தான் ஆட்ட முடிந்தது

அவளிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்த ராணி மீண்டும் திரும்பி, ” நாலு மணி போல் அனஸ்தட்டிக் Dr. பார்த்திபன் சார் வந்தா மேல அனுப்பிருங்க. நம்ம சார் தான் அசிஸ்ட் பண்ண போறாரு. அப்புறம் சர்ஜனுக்கும் கால் பண்ணி ரிமையின் பண்ணிருங்க. ஆரவ் சார் மட்டும் இங்கே இருப்பாரு. பார்த்துக்கோங்க ” என்றவளிடம் ” என்னை சிக்க வச்சிட்டு போறதுக்கு இன்னும் எத்தனை பேருடி வருவீங்க” மைண்ட் வாய்ஸ்   சத்தமில்லாமல் அழுதது.

” இவரோட தனியா நான் மட்டும் இருக்கனுமா. செத்தேன். தள்ளி இருந்தா கூட சைட் அடிக்கலாம். முன்னாடி நின்னா என்ன பண்ண முடியும் ..,” யோசித்து கொண்டு இருக்க, இவள் மனம் புரிந்தவன் போல ” நீங்க ஒர்க் பாருங்க. கேஸ் வந்தா மட்டும் இங்கே வரலாம் ” என்று விட்டான்.

” ஹ்ம்ம்.,”  என்று தலையை மட்டும் அசைத்தவள் எப்போதும் போல் அவனின் ரூமுக்கு எதிரே இருக்கும் மீன் தொட்டியில் தெரியும் அவன் பிம்பத்தை கண்டு கொண்டே, டிஸ்சார்ஜ் சம்மரி டைப் செய்ய ஆரம்பித்தாள். அவ்வப்போது அங்கே நோக்க அவன் பார்வையும் அந்த தொட்டியிலேயே இருந்ததை கண்டு., ” என்னாச்சி, எப்பவும் புக் படிச்சிட்டு இருப்பாரு. இப்போ ஏதோ பலமான யோசனையில இருக்காரு ” என அவளுக்கும் பல யோசனைகள் மனதில் ஓடின. சிறிது நேரத்தில் யாரோ தன் பக்கத்தில் வருவது போல தோன்ற நிமிர்ந்து பார்க்க ஆரவ் நின்று இருந்தான்.

” என்ன சார். ஏதாவது வேணுமா? ” என மெல்லிய குரலில் கேட்க

நான் என்ன கேட்டாலும் கொடுப்பியா என எதிர் கேள்வி அவனின் கண்ணில் தெரிந்தது.

அவன் பேசுவதற்குள் இன்டெர்காம் சிணுங்க ” ஒன் மினிட் ” என்றப்படி அவளை பார்வையால் வருடி கொண்டு சிரிக்கும் கண்கள் மின்ன சென்றான்.

அரை மணி நேரம் கடந்தும் அவன் வெளிவரவில்லை. மீண்டும் யோசனை முகம் மட்டுமே மௌனமாய் ஆட்சி செலுத்த, அந்த அமைதியை குலைக்கும் வண்ணம்

” கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா…,
இல்லை ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..,”  என ரிங் டோன் இசைக்க திடுக்கிட்டு திரும்பி, ” எந்த பக்கி இப்படி வச்சிருக்கோ தெரியலையே! ” என்றப்படி ட்ராவில் போனை தேடி எடுத்து சைலன்ட்டில் போட்டு விட்டு, எந்த பாட்டை கேட்டாலும் பின்னணியில் நாமும் பாடுவோமே, அது போல இவளும் முனங்கி கொண்டு தலையசைத்து பாடினாள்.

” போலாமா! ” என எதிரில் குரல் கேட்க

” ம்ம்ம். போலாமே! ” என தன்னை அறியாமல் பதில் சொல்லிவிட்டு தான் நாக்கை கடித்து, ” அய்யோ லூசு, இவர் முன்னாடி போய் இப்படி பாடிட்டேனே என்ன நினைப்பாரு”  என விழி விரித்து பார்க்க

” லெட்ஸ் கோ ! “.. என கூறியபடி தனக்கென அமைத்த  புதிய அறைக்குள் புகுந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!