கடம்பன் குன்று
பகுதி – 4
நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாயும் வேகமாக உருண்டோடின.
விகர்ணன் புலியாருடன் சேர்ந்து அந்த மூலிகை வனத்தினை கட்டியாளும் பொறுப்பை செம்மையாகச் செய்து வந்தான்.
குன்றைச் சுற்றியிருந்த “மதிமயக்கி” மரத்தின் வாசனையை நுகராமல் இருக்க புலியார் சொல்லிக் கொடுத்தபடிக்கு, ஆழ்வல்லிவேரினை வாயினுள் அதக்கிக் கொண்டு வலம் வருவான்.
தம்பிக்கு உதவியாக தமையன் கர்ணனும் அவ்வப்போது உடன் வருவான். ஆனால் சிறிது நாட்களிலேயே கர்ணனுக்கு வெறுமனே காட்டைச் சுற்றித் திரிவது பிடிக்காமல் போயிற்று.
“விகர்ணா, சித்தர் உன்னிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கு பிரத்யோகமாக ஒரு காரண காரியம் இருத்தல் வேண்டுமென்று தோன்றுகிறது. இக்காட்டைச் சுற்றிவரும் போது உனக்கு சலிப்போ, கோபமோ, அயர்வோ உண்டாவதில்லை என்று நான் கண்டிருக்கிறேன். அதே சமயம், உன் போல என்னால் இக்காட்டை சலிப்பில்லாமல் சுற்றித் திரிய இயலவில்லை.”
“சில நாட்களில் பழகிவிடும் அண்ணா! இதோ இன்றைக்கு புலியாருடன் சேர்ந்து சிவப்புகொடிமுல்லைப் பூஞ்சோலைக்குச் செல்லப் போகிறோம். மற்ற கொடிகளைப் போல மரத்தின் தண்டுகளில் படராமல், இக்கொடியானது மரத்தின் வேர்களின் மூலம் படரும். இவ்வதிசய கொடிமுல்லைப் பூக்களைக் காண ஆர்வமாக இருக்கின்றது. செல்வோமா அண்ணா” என்றான் விகர்ணன்.
“இல்லை விகர்ணா! இதில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை என்பதே உண்மை. இது எனக்கான பணி அல்லவென்று தோன்றுகிறது. நானும் அன்னையும் பழையபடிக்கு அரசரின் குதிரை கொட்டகைக்கு வேலைக்குச் செல்லலாம் என்று நினைக்கிறோம்”
“அன்னையுமா?”
“ஆம் விகர்ணா, நீயோ காட்டிலேயே சுற்றித் திரிகிறாய். இரவு கூட வீடு திரும்புவதில்லை. நான் மட்டும் கொட்டகைக்கு வேலைக்குச் சென்றுவிட்டால் அன்னை தனியே வீட்டிலிருக்க வேண்டுமல்லவா?”
“ஆம். அதுவும் நல்ல யோசனை தான். அன்னையை உன்னுடன் அழைத்துச் செல்வது உத்தமம்.” என்ற விகர்ணனின் பேச்சு சற்றே மனம் நோகும்படிக்கு இருந்தது.
காடுகளில் சுற்றித் திரிந்த சில வருடங்களிலேயே அவன் சுபாவம் மாறிப் போய்விட்டாற் போலத் தோன்றியது. உறவு, பாசம் என்பனவற்றையெல்லாம் துறந்தவன் போல நடந்து கொள்வதும், எவர் மீதிலும் மிகுந்த அக்கறை காட்டாமல் “எல்லாமே அவரவர் கர்மவினைப்படி நிகழும்” என்ற சிந்தாந்தமும் கொண்டு நடக்கத் துவங்கியிருந்தான் விகர்ணன்.
அன்னையின் மீதும் தமையனின் மீதும் அக்கறை இல்லாமல் இல்லை. ஆயினும், அவன் பணிக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கத் துவங்கியிருந்தான்.
கர்ணனுடன் அவன் தாயார் ஆவினன் மன்னனின் குதிரைக் கொட்டகைக்குச் சென்று விட, விகர்ணன் வீடு என்றொன்று உள்ளதென்பதே மறந்து போனவனானான்.
காட்டில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை உண்டு பசியாற்றினான். அவனுடன் சுற்றித் திரிந்த புலியாரோ மாமிச வாடை கூட நுகராமல் காற்றை சுவாசித்தே பசியாறிக் கொண்டது.
“நான் மேரு மலையில் புலிப்பாணியாருடன் சென்ற பொழுது, அங்கே ஒரு பழத்தினை புசிக்க நேர்ந்தது. அக்கனியை உண்டவருக்கு, மூப்பில்லை, பிணியில்லை, பசியுமில்லை” என்று பதில் சொன்னது புலியார்.
விகர்ணன், காட்டிலேயே வாழத் துவங்கினான். தன் பங்கிற்கு, மற்ற இடங்களில் அலைந்து திரிந்து கிடைத்தற்கரிய மூலிகைகளைக் கொணர்ந்து அவ்வனத்தில் நட்டு வைத்து பாதுகாத்தான்.
இப்படியாக, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டிருக்க, பாலகனாக இருந்த விகர்ணன் திடமிக்க இளைஞனானான். அக்காட்டில் இருக்கும் ஒவ்வொரு குகையும், சுனையும், மிருங்கங்களும், பட்சிகளும் இவனுக்கு அத்துபடியாயிருந்தன.
ஒரு நாள் புலியாருடன் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு, வித்யாசமான வாடை ஒன்று தாக்கியது.
“ஏன் புலியாரே! எனக்கு எங்கிருந்தோ திருநீற்றின் வாடை வருகிறதே! உமக்கு ஏதேணும் வருகிறதா?” என்று சுற்றும் முற்றும் கவனமாக ஆராய்ந்தபடிக்கு வினவினான்.
“இல்லையே விகர்ணா! திருநீர் பச்சிலைச் செடிகள் கூட அருகில் இல்லையே. பிறகெப்படி உனக்கு வாசனை வரும்?” என்றது புலியார்.
“இல்லை புலியாரே! நிச்சயமாக எனக்கு வாசனை வருகிறது. இருங்கள் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றவன் ஒரே ஓட்டமாக அச்சிறு குன்றின் மீதேறி நாற்பக்கமும் கண்களைப் படறவிட்டான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, முன்னர், சித்தர்கள் வேலை பார்த்த இடத்திலிருந்து மெல்லிய புகையும், தீப்பிழம்பும் தோன்றமளித்தன.
“சித்த புருஷர்கள் திரும்ப வந்துவிட்டனர் போலவே” என்று ஆனந்தத்துடன் கூக்குரலிட்டபடிக்கு, அவ்விடத்தினை நோக்கி விரைந்தான் விகர்ணன். அவன் கணிப்பு வீண் போகவில்லை. குன்றினை நோக்கி வேகமாகச் சென்ற விகர்ணனைத் தொடர்ந்து புலியாரும் அவன் பின்னூடே சென்றது.
மூச்சிரைக்க வேதிகை குகையின் வாயிலைத் தொட்டு நின்ற விகர்ணனை, “வா, என் வனக்காவலா!” என்று புன்னகையுடன் வரவேற்றார் புலிப்பாணி சித்தர். “வணங்குகிறேன் ஐயனே” என்று புலிப்பாணியாரின் கால்களில் விழுந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் விகர்ணன்.அவன் போலவே, புலியாரும், தன் எஜனானின் வரவினால் உண்டான மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
“வனத்தினையும், நாம் சேகரித்த மூலிகைகளையும் திறம்பட நல்ல முறையில் இத்தனை வருடங்கள் காவல் காத்திருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. அத்தோட நிறைய புதிய அரியவகை மூலிகைகள் கூடத் தென்படுகின்றனவே. நல்ல முயற்சி விகர்ணா” என்று மனதாற பாராட்டினார் புலிப்பாணியார்.
“அது என் பாக்கியம் ஐயனே. தங்களின் குரு, போகர், மேரு மலையிலிருந்து வந்துவிட்டாரா ஐயனே. திரும்ப நாம் நவபாஷாண சிலைகள் செய்யப் போகிறோம் அல்லவா?” என ஆவலுடன் வினவினான் விகர்ணன்.
“ஆம், விகர்ணா. போகர் தன் தவத்தினை முடித்துக் கொண்டு வந்துவிட்டார். திரும்ப நம் வேலைகளைத் துவங்கும் காலமும் வந்துவிட்டது. அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ள வேண்டும். இம்முறையும் உன் உதவி கட்டாயம் தேவை விகர்ணா. குழந்தை வேலப்பர் சிலையும், தண்டாயுதபாணி சிலையும் செய்து முடித்தாயிற்று அல்லவா. இனி, மூன்றாம் சிலையான “ராஜ அலங்கார சண்முகர்” சிலை மட்டுமே பாக்கியுள்ளது”
“ஆகட்டும் ஐயனே! ஸ்ரீசண்முகர் சிலை வடிக்க என்னென்ன பொருட்கள் வேண்டுமென்று தாங்கள் கட்டளை இட்டால் போதும். இக்காட்டின் எந்த மூலையில் அப்பொருள் இருப்பிணும், அதை நொடிப்பொழுதில் கொணர்ந்து சேர்க்க வேண்டியது என் கடமையாகும்.”
“நல்லது விகர்ணா. இப்போது சென்று சித்தர்களுக்குத் தேவையான வஸ்துக்களைக் கொண்டு சேர்க்கும் வேலையைக் கவனி. இரவு, இரண்டாம் ஜாமத்திற்கு மேல், அசிலாம்பாலை இலைகளைச் சேகரிக்கவேண்டும். அதற்கு உன் உதவி எனக்குத் தேவை” என்று விகர்ணனுக்கு கட்டளைகளைப் பிறப்பித்தார் புலிப்பாணியார்.
இப்படியாக, அடுத்து வந்த வாரங்களில் விகர்ணன் தன் புலியாரின் துணையுடன், அக்காட்டினுள் அலைந்து திரிந்து, புலிப்பாணியார் கேட்ட பொருட்களைச் சேகரிப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தான்.
முன்னர் செய்த இரு சிலைகள், சூடு தணியப் பெற வேண்டும் என்பதற்காக குளிர்ச்சியான மணலில் புதைக்கப்பட்டிருந்தன. பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய காலம் வரையிலும் அவை மணலில் இருப்பதே உத்தமம் என்று போகர் கட்டளையிட்டிருந்தார்.
அச்சிலைகள் செய்யும் போது, விகர்ணன் பாலகனாக இருந்தான். அதனால் சிலை வடிக்கும்போது அவற்றை அருகில் இருந்து காணும் பாக்கியம் அப்போது அவனுக்கு கிட்டவில்லை.
ஆனால், இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ராஜ அலங்கார ஸ்ரீசண்முகர் சிலையினை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் அவனுக்கு பெரு வியப்பை உண்டாக்கியது. அதை விடவும், அச்சிலையின் மேல் அவனுக்கு ஒரு வித பிரேமையே தோன்றியிருந்தது.
“இது என் உதவியால் உருபெறும் சிலை. நானே உருவாக்கியது போல எவ்வளவு ஆனந்தமாக உள்ளது.” என்று விகர்ணனுக்குத் தோன்றியது. அதிலும், பாஷாணங்களைக் கட்டும் போது வெளிப்படும் நச்சுக் காற்றை சுவாசிக்காமல் இருக்கவென, ஆழ்வல்லிவேரினை மென்று கொண்டே போகர் வடிக்கும் சிலையினை சற்றே தூரத்திலிருந்து கண்ணாறக் கண்டு களிப்பான் விகர்ணன்.
சர்வ லட்சணங்களும் பொருந்திய ராஜ அலங்கார ஸ்ரீ சண்முகர் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் விகர்ணனுக்கு கண்கள் கலங்கும். இரண்டு அடி உயரம் கொண்டிருந்த ஸ்ரீ சண்முகரின் முகத்தில் தென்பட்ட ஒளியும், கருணையும், கையில் பிடித்திருந்த வேலையும், தரிசிக்க தன் இரு கண்களும் போதவில்லையே என நினைப்பான். இச்சிலையினைப் பாதுகாப்பதே தன் பிறவிக்கான பலன் என்ற அளவிற்கு அச்சிலையின் மீது பைத்தியமாகிப் போனான் விகர்ணன்.
பல மாத முயற்சியின் பயனாக சண்முகர் சிலை முடிவு பெறும் நிலையை எட்டியிருந்தது. சிலையினைக் குளிர்விக்கும் பொருட்டு, வேதிகை ஊற்றின் ஓரத்தில் பள்ளம் தோண்டி புதைத்தனர் சித்தர்கள்.
சிலைகள் செய்து முடித்துவிட்ட பின்னர், அவை எங்கே பிரதிஷ்டை செய்யப்படப் போகின்றன என்பது பற்றியே சித்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வர். அவர்களது பேச்சு, விகர்ணனுக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. முதல் இரு சிலைகளை எங்கே பிரதிஷ்டை செய்யப் போகின்றனர் என்பது பற்றி அவ்வளவாக விகர்ணன் ஆர்வம் காட்டவில்லை.
அவன் அக்கறை முற்றிலுமே, தான் அருகிருந்து வடித்தெடுத்த தன்பிரியத்திற்குரிய ஸ்ரீசண்முகர் எங்கே அருள்பாலிக்கப் போகிறார் என்ற செய்தி சேகரிப்பதிலேயே கழிந்தது.
“ஏன் புலியாரே! சிலையை எங்கே பிரதிஷ்டை செய்யப் போகின்றனர் என்று ஏதேணும் கேள்விபட்டீரா?” என்று வேதிகை ஊற்றின் அருகே ஒருகற்பாறையில் அமர்ந்தபடிக்கு தன் துணைவனாகிப் போயிருந்த புலியாரிடம் வினவினான் விகர்ணன்.
புலியாருக்கு, ஸ்ரீசண்முகர் சிலை மீது விகர்ணன் காட்டிய அதீத அக்கறையும், அன்பும் வியப்பைக் கொடுத்தது. “சிலை வடிக்க உதவி செய்ததுடன் நம் வேலை முடிந்து போய்விட்டது அல்லவா விகர்ணா. கொடுத்த வேலையைத் தோய்வில்லாமல் திறம்பட முடித்து விட்டோம்.”
“முடித்துவிட்டோம். முடித்துவிட்டோம். ஆனாலும், சிலையினை எங்கே பிரதிஷ்டை செய்யப் போகின்றனர் என்று தெரிந்து கொண்டால், சிலையின் அருகிலேயே என் வசிப்பிடத்தை மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா புலியாரே”
“நீ பேசுவது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது விகர்ணா. சிலைகள் என்றுமே செய்தவனிடமோ, செய்யப்பட்ட இடத்திலோ தங்குவதேயில்லை. எங்கோ செய்யப்பட்டு, எங்கோ பிரதிஷ்டை செய்யப்படும். இதைப் பற்றி நீ அதிகம் கவலை கொள்ளாதே விகர்ணா”
“என்ன புலியாரே இப்படி சொல்லிவிட்டீர். அச்சிலையினைப் பாதுகாப்பது மட்டுமே நான் பிறப்பெடுத்ததற்கான பயன் என்று நான் கருதுகிறேன். நீங்களானால் என்னை கவலை கொள்ள வேண்டாம் என்று சொல்கிறீரே” என்ற விகர்ணனின் பேச்சைக் கேட்ட புலியாருக்கு மனதில் சிறிய சஞ்சலம் குடிகொண்டது.
“எதன் மீதும் அதிக பற்று கொள்ளாமல் இருத்தலே என்றும் நலம் பயக்கும் விகர்ணா. இதை நீ இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லையே. இதை நீ உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று எண்ணியது புலியார்.
புலியாரின் எண்ணத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. முதலில் வடித்த இரு நவபாஷாண சிலைகளையும் பிரதிஷ்டை செய்யும் நேரமும் காலமும் வந்துவிட்டது என்று சித்தபுருஷர் போகர் ஒரு நாள் உரைத்தார். அவர் அறிவுரைப் படி, ஒன்று போல் காட்சியளிக்கும் இரு குன்றுகள் இருக்கும் இடத்தினைத் தேடி பயணித்தனர்.
போகர் மனக்கண்ணில் தோன்றியது போல, அவர்கள் குடில் அமைந்திருந்த வேதிகை ஊற்றில் இருந்து சில காத தூரத்தில் தொடர்ச்சியாக நீண்டிருந்த பல மலைகளுக்கு நடுவில், அடர்ந்த காட்டின் மத்தியில் அமைந்திருந்தன அவ்விரு மலைகள். பார்ப்பதற்கு உருவத்தில் ஒன்று போலவே தோற்றமளித்த அவ்விரு மலைகளில், மேற்குப் பக்கமிருந்த மலையில் செவ்வாய் கிரகத்தின் பூரண சக்தி விழுவதைக் கணித்த போகர், மேற்கு மலையில் தண்டாயுதபாணியின் சிலையை நிறுவிடலாம் என்று முடிவெடுத்தார்.
அதன் படிக்கு, தன் சீடரான, புலிப்பாணியாரைக் கொண்டு “காரிய சித்தியோகம்” நடைபெறச் செய்து, மேற்கு பக்க மலையில் தண்டாயுத பாணி சிலையினை நிறுவினார்.
அச்சிலையினை நிறுவும் போதே, “குழந்தை வேலப்பர்” சிலை சென்று சேரும் இடமும் போகரின் அகக் கண்ணில் தோன்றியிருந்தது. தண்டாயுதபாணி சிலை நிறுவிய இரட்டை மலைகளின் பின்னால் படர்ந்து விரிந்திருந்த தொடர்ச்சி மலைகளின் கூட்டத்தினைக் கடந்து, சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருந்த போதிலும், சமதளமாக பாறைகள் நிரம்பிய அப்பகுதியினை நோக்கி அடுத்து பயணித்தனர்.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பாதுகாப்பான அரனைத் தோற்றுவித்திருக்க, சமதளப் பாறைகள் முழுக்க, ஊதா வண்ணப் பூக்கள் மூடியிருந்தன அவ்விடத்தில்.அங்கு சென்று சேரும் போதே பூக்களில் இருந்து எழுந்த நறுமணமும், அச்சூழலின் ரம்யமும் மனதிற்கு பேரின்பம் அழித்தன.
அந்த அழகிய பூக்கள் நிரம்பிய பாறையின் மீது, “குழந்தை வேலப்பர்” சிலையினை நிறுவினார் போகர்.
“இரு சிலைகளும் தங்களுக்கான இடத்தை தேர்ந்தெடுத்து விட்டன. இனி நம் ஸ்ரீ சண்முகர் சிலை மட்டுமே மீதமுள்ளது. அதை எங்கே பிரதிஷ்டை செய்யப் போகின்றனரோ” என்று வெகு ஆர்வமாகக் காத்திருந்தான் விகர்ணன். ஆனால் அவன் மனம் மகிழும்படிக்கு சிலையினை எங்கே நிறுவப்போகின்றனர் என்பது பற்றி எந்த தகவலும் அதன் பின்னர் எழவேயில்லை. இன்னமும் சிலை, வேதிகை ஊற்றின் ஈரப் படுக்கையிலேயே துயில் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு நாள், சித்த புருஷர்கள் மத்தியில் சற்றே சலசலப்பு தோன்றியிருந்தது. அன்றைய தின வேலையைச் செய்து கொண்டிருந்த விகர்ணனின் கவனத்திலும் இந்த விஷயம் பதிந்தது.
“என்ன எல்லாரும் இன்று இவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்கள்.ஒருவழியாக ஸ்ரீசண்முகரை நிறுவப் போகும் இடம் பற்றிய குறிப்பு போகர் பெருமானுக்கு கிட்டிவிட்டதா?” என்று ஆவல் ததும்ப தன் துணைவனான புலியாரிடமிருந்து விஷயம் தெரிந்து கொள்ள விரைந்தான். விகர்ணனை சோதிக்கும் விதமாக அன்று அவன் கண்களுக்குப் புலியார் எங்குமே தென்படவில்லை. வழக்கமாக அமரும் இடங்களில் எல்லாம் தேடிச் சோர்வடைந்த விகர்ணன், ஆயாசமாக அக்கற்பாறையில் அமர்ந்தான்.
அப்போது அவ்வழியாக இரு சித்தபுருஷர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே நடந்து வந்தனர். சோர்வாக அமர்ந்திருந்த விகர்ணனைக் கண்டதும், அவர்களில் ஒருவர், “என்ன விகர்ணா! நீ பிரயாணத்திற்குத் தயாராகவில்லையா? தனிமையில் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறாய்?” என்று வினவினார்.
“வணங்குகிறேன் பெருமானே! என் துணைவன் புலியாரைக் காலையில் இருந்து பார்க்க இயலவில்லை. எங்கே சென்றிருப்பார் என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்” என்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு பதிலும் மொழிந்தான் விகர்ணன்.
“உனக்கு செய்தி தெரியாது போலிக்கிறதே! போகர், தன் சீடர்களுடன் சீன தேசம் செல்ல ஆயத்தமாகிறார். அதனால், புலியார் அவர் எஜமானனுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.” என்றார் சித்தர்.
“சீன தேசமா? எனக்குத் தெரியவில்லையே ஐயனே! இன்னமும் ஸ்ரீசண்முகர் சிலையை பிரதிஷ்டை செய்யவில்லையே! அதற்குள் ஏன் இந்த திடீர் பிரயாணம்? சிலையை என்ன செய்யப் போகின்றனர் ஐயனே” என்று வினவினான். ஸ்ரீசண்முகர் என்ன ஆவாரோ என்ற கவலை அவன் குரலில் இழையோடியது.
“இதில் என்ன சந்தேகம் விகர்ணா! ஸ்ரீசண்முகர் சிலையையும் தங்களுடன் எடுத்துச் சென்று விடுவர் தானே. போகும் வழியில் எங்கேணும் நிறுவினாலும் உண்டு. அல்லது சீன தேசத்தில் நிறுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இது போன்ற சிலைகள் தங்கள் வசிப்பிடத்தைத் தாங்களே நிர்மானித்துக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவை என்று நீ அறிவாய் தானே விகர்ணா” என்று கூறிய சித்தர்,விகர்ணன் பதிலேதும் சொல்லாதது கண்டு,
“இதோ உன் துணைவன் உன்னைத் தேடிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். உன் ஐயங்களைத் தீர்க்கும் வல்லமை வாய்க்கப் பெற்ற புலியார் வருகிறார்.” என்று சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த புலியாரைச் சுட்டிக் காட்டி மொழிந்துவிட்டு சித்தபுருஷர்கள் இருவரும் விடை பெற்று அவ்விடம் விட்டு அகன்றனர்.
விகர்ணன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்த புலியாரின் முகம் வழக்கத்திற்கும் மாறாக மிகவும் வாட்டத்துடன் காணப்பட்டது. “எங்கே சென்றீர் புலியாரே? தங்களைக் காணாமல் நீண்ட நேரம் தேடினேன். இந்த சித்த புருஷர்கள் ஏதேதோ சொல்கிறார்களே, அதெல்லாம் நிஜம்தானா புலியாரே” என்றான் விகர்ணன்.
விகர்ணனின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லாத புலியார், விகர்ணனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே அருகில் வந்து அவன் எதிரில் நின்றார். அவர் நின்ற தொனியில் இருந்தே சித்த புருஷர்கள் கூறிய விஷயம் உண்மையென்று விகர்ணனுக்கு விளங்கியது. உண்மை நிலைமை புரிபட, விகர்ணனுக்கு அடக்க முடியாத அளவிற்கு கோபம் எழுந்தது.
“இது எங்கணம் நியாயம் புலியாரே? இங்கே விளைந்த மூலிகைளைக் கொண்டு இத்தனை மாதங்கள் கடுந்தவமிருந்து வடித்த சிலையினை எப்படி வேறு தேசத்திற்கு கொண்டு செல்லலாம். அது இந்நாட்டின் உடமை அல்லவா? போகர் ஏன் சிலையினை சீன தேசம் கொண்டு செல்ல முடிவெடுத்தார் புலியாரே?”
“விகர்ணா. உன் கேள்விகள் சிறுபிள்ளைத்தனமானவை என்பதை உனக்கு எங்கணம் புரியவைக்க என்று எனக்கும் விளங்கவில்லை. சித்தர்களுக்கு அனைத்து நாடும், மக்களும் ஒன்று தான். என் நாடு, என் மக்கள் என்று போகர் நினைத்திருந்தால், அவர் சினதேசத்தில் இருந்து நம் நாட்டிற்கு வந்திருக்கவே மாட்டாரல்லவா.”
“புலியாரே! இது மிகவும் அநியாயம். இச்சிலையினை வடிக்க எத்தனை எத்தனை மூலிகைகள், எரிபொருட்கள் என இந்தக் காடு முழுவதிலும் மழை வெயில் பாராமல் அலைந்து சேகரித்தித்து, அதனை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பாக வைத்திருந்து. நாம் அரும்பாடுபட்ட உழைத்ததெல்லாம் வீணாகப் போகிறதே. இதை எங்கணம் பொறுப்பது”
“உன் கோபம் அநாவசியமானது விகர்ணா. இதை நீ புரிந்து கொள்ல வேண்டும். ஸ்ரீசண்முகர் சிலையினை சீன தேசம் கொண்டு போவது என்று போகர் தானாக முடிவெடுக்கவில்லை. இன்னமும் துல்லியமாகச் சொல்வதென்றால், அவர் நிஷ்டையில் இன்னமும் அச்சிலை எங்கே பிரதிஷ்டையாகப் போகிறது என்று தெரியவில்லை என்பதே உண்மை” என்று புது விஷயத்தைப் பகிர்ந்தார் புலியார். இதைக் கேட்கவும் ஆச்சர்யத்தில் விகர்ணனின் கண்கள் பெரிதாக விரிந்தன.
“என்ன சொல்கிறீர்கள் புலியாரே? இன்னமும் போகர் பெருமானின் அகக்கண்ணில் சிலையை நிறுவப் போகும் இடம் தோன்றவில்லையா? இச்செய்தியை அல்லவா தாங்கள் முதலில் சொல்லியிருக்க வேண்டும். இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.” என்று மகிழ்ச்சி பொங்க வினவினான் விகர்ணன்.
“இரு விகர்ணா, இரு. நான் சொல்வதை முழுமையாகக் கேள். அதற்குள் அவசரப்பட்டு நீயாக ஒரு முடிவை எடுக்காதே. அது நல்லதல்ல. போகர் பெருமான் சீன தேசம் நோக்கிப் பயணமாகிறார். அது உண்மை தான். இங்கே தன் கடமை முடிவு பெற்றுவிட்டதாகவும், தங்கள் தேசம் வந்துவிடும் படியும் அவர் உள்ளுணர்வு சொல்லுகிறது. அதன் படிக்கு போகர் தன் நாட்டிற்குப் பயணமாகிறார். அவர் வடித்த சிலையை அவர் தன்னுடன் எடுத்து செல்வதில் என்ன பிழை கண்டாய் நீ விகர்ணா.”
“இல்லை புலியாரே, என் மனம் இதற்கு கொஞ்சமும் ஒப்பவில்லை. இங்கிருக்கும் மூலிகைகளைக் கொண்டு, இங்கே அருந்தவம் புரிந்து செய்யப்பட்ட சிலை நம் மக்களுக்கு அல்லவா பயன்பட வேண்டும். அயல் தேசம் எடுத்துச் செல்வது எப்படி தர்மமாகும்?”
“தர்ம அதர்மத்திற்கு இங்கே எந்த இடமும் இல்லை விகர்ணா. உனக்கு ஸ்ரீசண்முகர் சிலையின் மீதிருக்கும் பேரன்பை நானறிவேன். அதன் பொருட்டே நீ கோபம் கொள்கிறாய் என்பதும் எனக்கு விளங்குகிறது. பார் விகர்ணா, சிலையை சீன தேசத்தில் நிறுவப் போவதாக எந்த தகவலும் இல்லை. போகர் தன் சிலையை, தன்னுடன் எடுத்துக் கொண்டு பயணிக்கிறார். அவ்வளவே. பயணம் மேற்கொள்ளும் போது சிலை எங்கே வேண்டுமானாலும் பிரதிஷ்டை செய்யப்படலாம் விகர்ணா. உன் ஆசை போலவே நம் நாட்டிலேயே அச்சிலை பிரதிஷ்டை அடையவேண்டும் என்று பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கும்.”
“இல்லை புலியாரே.என்னைச் சமாதானம் செய்ய தாங்கள் என்னென்னவோ சொல்கிறீர்கள். ஆக மொத்தம், போகர் பெருமான், தன் சீடர்களுடன் சீன தேசம் நோக்கிப் பயணமாகிறார். அத்தோடு சிலையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு செல்கிறார். இதில் வேறுபாடு இல்லை தானே புலியாரே” என்ற விகர்கணின் கேள்விக்கு புலியார் உடனடியாக பதில் சொல்லவில்லை.
விகர்ணன் கோபமாக அவ்விடம் விட்டு அகன்றான். அவன் கோபத்தின் காரணம் புரிந்திருந்த போதும், விகர்ணனைச் சமாதானப் படுத்தும் வழி தெரியாது அமைதியாக விகர்ணன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் புலியார்.
******
அடர் இருள் போர்த்திருந்த அவ்வாற்றுப் படுக்கையின் மீது சலசலத்துச் சென்ற சிறிய நீர் ஊற்று, சந்திரனின் ஒளியில் மெல்லிய வெள்ளி வெளிச்சத்தை பாய்ச்சியபடிக்கு இருந்தது.
நடுஜாமம் கடந்துவிட்டிருந்த ராத்திரி வேளையில் “டொங்க் டொங்க்” என்று மெல்லியதாக எழுந்து கொண்டிருந்த சத்தத்தை நீரோடையின் சலசலப்பு வெளியே கேட்காதவாறு செய்திருந்தது.
யாரும் வந்துவிடுவார்களோ என்ற அச்சமேதும் சிறிதும் இல்லாமல், விகர்ணன் ஊற்றின் அருகே ஸ்ரீசண்முகர் சிலை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உளியை வைத்துவிட்டு மண்டியிட்டு கைகளாலேயே அவ்விடத்தினைத் தோண்டி சிலையினை மண்ணிலிருந்து வெளியே எடுத்தான்.
“இன்னமும் இரண்டு நாட்கள் சிலை மண்ணில் இருத்தல் நலம். பாஷாண சிலையின் சூடு முழுவதுமாகத் தணிய இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுகின்றன. அதன் பின்னர், சிலையுடன் நாம் பயணம் மேற்கொள்ளலாம்” என்று போகரும் ,அவர் சீடர்களும் முடிவெடுத்திருந்தனர்.
இதைக் கேள்விபட்டவுடனேயே விகர்ணனின் மனதில் அந்த எண்ணம் உருவாகியிருந்தது. “ஸ்ரீசண்முகரை” எப்படியும் இந்நாட்டிலேயே தக்கவைத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசையின் காரணமாக, சிலையினை சித்தர்கள் எடுத்துச் செல்லும் முன்னர், தான் கைப்பற்றிவிட வேண்டுமென்று எண்ணம் கொண்டான்.
அதனால், வேகவேகமாக சிலையினை வெளியே எடுத்தான். சிலையினை விகர்ணன் தொட்டவுடனேயே வெதுவெதுப்பாக இருந்தது. சிலையில் இருந்து சூடு வெளிபடுவது தெரிந்து, தன் மேலங்கியில் சிலையினை மூடி, சிலை இருந்த குழியில் ஒரு மரக்கிளையை ஒடித்து வைத்து, குழியினை திரும்ப மூடினான். யாரை ஏமாற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறான் என்று அவனுக்குமே தெரியவில்லை. மனதில் நினைப்பதைக் கூட உணரும் திறமுள்ள சித்த புருஷர்கள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணமோ, சிலையினை விகர்ணன் அபகரித்துவிட்டான் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரியாமல் போகப் போவதில்லை.
ஆனாலும், ஒரு உந்துதலில், விகர்ணன் சிலையினை வெளியே எடுத்திருந்தான். சிலையினை எடுத்த பின்னர், அடுத்து என்ன செய்யவென்று தெரிந்திருக்கவில்லை.
சிலையினை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவன், சுற்றிலும் கவனம் பதித்துவிட்டு, ஊற்றின் அருகேயிருந்து வெளிபட்டான். சிலையைத் தான் திருடி விட்ட செய்தி கேள்விபட்டவுடன் சித்தர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விகர்ணனால் யூகிக்க இயலவில்லை. அப்போதைக்கு அவன் மனதில் சிலையினைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாகத் தோன்றியது.
அந்த எண்ணம் வலுபட, சுற்றும் முற்றும் கவனிக்காமல், எங்கே செல்வது என்ற எந்த இலக்குமில்லாமல் நடந்தவனின் கால்கள், ஒரு வேரில் சட்டென சிக்குண்டன. சுதாரித்து விகர்ணன் எழுவதற்குள்,அவன் சற்றும் எதிர்பாராவண்ணம் அவனை மீண்டும் கீழே தள்ளி அவன் மீது பாய்ந்து நின்றது அக்கால்கள்.
தன் மார்பின் மீது அழுந்திய வலுமிக்க கால்களைத் தட்டிவிட்டு, விகர்ணன் மெல்ல கையூன்றி எழுந்து கொள்ள முயற்சிக்க, அவனைக் கோபம் மின்னும் கண்களுடன் பார்த்துக் கொண்டு, தன் கோரைப் பற்களைக் காட்டி பயங்கரமான உருமலை வெளியிட்டது அந்தப் புலி.
“நீ செய்வது தவறு என்று உனக்கே தெரியும் விகர்ணா. சிலையின் மீது நீ கொண்டுள்ள அதீத ஆசையின் காரணமாக இப்படி யோசிக்காமல் செயலாற்றுகிறாய் என்று எனக்குத் தெரியும். அதனால் உன்னை மன்னித்துவிடுகிறேன். சிலையை உரியவரிடம் ஒப்படைத்துவிடு” என்று விகர்ணனைப் பார்த்து உருமியது புலி.
“புலியாரே! மன்னித்துவிடுங்கள். சிலை இம்மண்ணில் உருவானது. இங்கே தான் நிலை பெறும். என்னைத் தடுக்காதீர்கள். வழி விடுங்கள். நான் சென்றுவிடுகிறேன்”
“விகர்ணா, இத்தனை வருடம் பழகிய உற்ற துணைவன் என்ற முறையில் கடைசி தடவை உன்னை எச்சரிக்கிறேன். சிலையை எடுத்த இடத்தில் வைத்துவிடு. அது தான் உனக்கு நன்று”
“நிச்சயம் வைக்க மாட்டேன் புலியாரே. தங்களை வீழ்த்திவிட்டுத் தான் நான் சிலையை எடுத்துச் செல்ல இயலும் என்றால், அதையும் நான் செய்யத் துணிந்துவிட்டேன்.” என்ற விகர்ணன்,தன் மேலங்கியைக் கழற்றி, தன் முதுகில் சிலையை வைத்து இறுக்கமாகப் பிணைத்தான். சிலையிலிருந்து வெளிபட்ட சூடு அவன் முதுகுத் தண்டில் பாய்ந்தது. அதை அலட்சியம் செய்து, கால்களின் கீழே கிடந்த கொம்பினை எடுத்து அழுத்தமாக நிலத்தில் ஊன்றி, தன் மீது பாயத் தயாராக நின்றிருந்த புலியினை எதிர் கொள்ளத் தயாரானான் அவன்.
******