மதன் சற்று நகர்ந்து போனதும் மீண்டும் பார்வதியும் லதாவும் பேச்சை துவங்கினர் .
“லதா மதன் சொன்னதை கேட்டியா ” என்க அதற்கு லதா “ம்ம் கேட்டேன் ஒருவகையில் அவர் சொல்றது சரி தானே “என்றாள் பதிலாக.
“உண்மை தான் லதா..என்னோட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கோ . கல்யாணம் பண்றப்ப , கல்யாணம் பண்ண போறேன் அப்படிங்கிற ஆசை மட்டும் தான் இருந்துதே தவிர இந்த வாழ்க்கை நமக்கு செட் ஆகுமா ஆகாதா அப்படிங்கிற சிந்தனை துளி கூட வரலை. எல்லாம் பார்த்துக்கலாம் அப்படிங்கிற நம்பிக்கையில் கல்யாணம் பண்ணிட்டு போனேன் ஆனால்…. அந்த சந்தோஷம் எல்லாம் அன்னையோட போய்டும் அப்படிங்கிறது போனப்பிறகு தான் தெரிஞ்சது. தொட்டதுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிற குடும்பம்,என்ன காரணம் கிடைக்கும்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி தேடுவாங்க, இதுக்கு இடையில் தனிஷ்க் பிறந்தான். சரி அப்போவாது புரிதல் உண்டாகும்னு பார்த்தேன் இல்லை, அவருக்கு அவரோட குடும்பம் மட்டும் தான் முக்கியம்,என் உணர்வுகள் முக்கியமில்லை…சரி இனி இது நமக்கு வேணாம்னு முடிவு பண்ணி சட்டப்படி பிரிஞ்சிட்டேன். அப்பாவோட பிஸினஸ் யூனிட் இங்க இருக்கிறதுனால சிங்கப்பூர் வந்துட்டோம். என்று தன் கதையை நினைவு கூர்ந்தபடி கூறினாள் பார்வதி.
“உங்க கதை இப்படினா என் கதை வேற மாதிரி. ஹனிமூன் கோவா போனப்ப இந்த வாழ்க்கை இதே போல ஆனந்தமாக இருக்கும்னு நினைச்சேன் ஆனா என் வாழ்க்கை அப்படி இல்லை, என் ப்ரண்டு வருண் கூட பேசினாக்கூட கோபப்படுவாரு ,அவர் என்கிட்ட எதிர்பார்த்தது என்னன்னு கூட எனக்கு புரியாது ,திடிர்னு கிளம்பி ஊருக்கு போவாரு , திடுதிடுப்புனு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்குன்னு வந்து நின்றாரு, உண்மையை சொல்லனும்னா ஒரு இரண்டு மூன்று மாசமா தான் அவர்கிட்ட மாற்றத்தை பார்க்கிறேன்” என்றாள் லதா.
ஸோ இதெல்லாம் பார்க்கிறப்ப மதன் சொல்றது சரி தானே என்று இருவரும் புன்னகையித்துக் கொண்டனர்.
“அப்படியே மதன் மித்ரா கல்யாணம் பண்ணாலும் அந்த லைஃப் சந்தோஷமா தான் இருக்கும்னு தோணுது ” என்றாள் லதா.
“எப்படி சொல்ற” – பார்வதி.
“இது தான் என் ஆளு இப்படி தான் நடந்திக்கிறாருன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்றப்ப அந்த வாழ்க்கை சந்தோஷமா தானே இருக்கும் “? – லதா.
“இல்லை லதா,,சப்போஸ் இதே கப்புல்ஸ் கல்யாணம் பண்ணா அது கமிட்மென்ட் மாதிரி தான் இருக்குமே தவிர இப்போ இருக்கிற சந்தோஷம் இருக்கும்னு எனக்கு தோணலை ” என்றாள் பார்வதி.
“ஆனால் பார்வதி ,அவங்களுக்குன்னு ஒரு வாரிசு வேணும்ல ? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தா தானே முறையா இருக்கும் ” என்றாள் லதா.
“ஹாஹா லதா நீங்க இன்னும் அதே பழைய தாட்ஸ் கூடவே ட்ராவல் பண்றீங்க,லுக் லதா, புருஷன் இல்லைனா பொண்ணுங்களுக்கு வாழ்க்கையே இல்லைன்னு பெரியவங்க சொல்வாங்க ஆனால் பாருங்க உங்க பார்வதியா உங்க தோழியா உங்க கண் முன்னாடி நான் தனியா வாழ்ந்துட்டு தானே இருக்கேன் ? என்றாள் பார்வதி
சற்று அமைதியாக நின்றாள் லதா…மீண்டும் அமைதி விலகியது.
“இங்க பாருங்க லதா , இப்படி இருந்தா தான் அது சரி, இது தான் முறை , இது தான் சந்தோஷம்னு யாரும் முடிவு பண்ண முடியாது. இவ்வளவு ஏன் பங்கஜம் அம்மாக்கு வாரிசு இல்லை ஆனால் இன்னைக்கு கோபியை தன் மகனாவும்,உங்களை மருமகளாவும் அவங்க நினைச்சு கொண்டாடுறது கண்ணு முன்னாடி பாக்குறீங்க தானே?” என்று பார்வதி நிறுத்தினாள்.
“ஆமா பாரு சொல்லப்போனா எனக்கு என் சொந்த மாமியாரை விட இவங்களை ரொம்ப பிடிக்கும். ஸோ ஸ்வீட் ” என்றாள் லதா.
“ஹாஹா ஆமா லதா . நம்மள சுத்தி இருக்கிற பயோலஜிக்கல் உறவுகள் மட்டும் தான் உறவுகள் அப்படின்னு கிடையாது,நம்ம ஒருத்தர்கிட்ட பழகுறப்ப ஒரு மன அமைதி கிடைக்கும் அப்படினாலே அது உறவு தான்… ” என்று சொல்லி இருவரும் கார்டனில் இருந்து நகர ஆரம்பித்தனர்.
(ஒரு வாரம் கழிந்தது )
கனகாவின் வயிறு சற்று மேடாக இருந்தது. இன்னும் சில மாதங்களில் பிரசவம் ஆகிவிடும். கார்த்திக் அவளை மெதுவாக அணைக்க முற்பட்டு தோற்றுப் போனான் .
“ச்ச உன்ன ஹக் பண்ண கூட முடியலை கனகா” என்றான் வருத்தமான முகத்தை வைத்துக்கொண்டு.
“ஹாஹா…நோ ரொமான்ஸ் ஓகே ” என்று தன் விரலை காண்பித்து கூறினாள் கனகா.
“ம்ம் முடியாது…” என்று குழந்தைபோல் சிணுங்கியவனை தோள் மீது சாய்த்து . குழந்தை வர வரைக்கும் பொறுமையா இருங்க. நீங்க பண்ண காதலுக்கு அடையாளமா தானே இந்த பரிசு நமக்கு வந்துருக்கு . ஸோ இப்போ நமக்கு இந்த பேபி தான் முக்கியம்” என்க அவனும் சரி என்று தலையசைத்தான் .
கனகா எல்லா வேலையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று அமரும்போது கதவு தட்டும் சத்தம்.
“யார் அது கதவு தட்டுறது ” என்று எழுந்து வந்து பார்க்க அங்கு தாம்பூல தட்டுடன் அவள் தாய் தந்தை நின்றிருந்தனர் .
“அ…அம்மா என்று”அழுகையோடு வரவேற்றாள்.
“எப்படி கன்னு இருக்க “- அவள் அம்மா.
“நல்லாருக்கேன் இரு மா அத்தை மாமாவை அழைச்சிட்டு வந்திடுறேன் ” என்று எழுந்து அவள் அத்தை மாமாவை அழைத்து வந்தாள். இரு சம்மந்திகளும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
“இவ்வளவு நாள் உங்க மகளை பார்க்கனும்னு தோணவே இல்லையா உங்களுக்கு” – மீனாட்சி.
“அப்படி இல்லைங்க,அவ பண்ணதுல எங்க சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப கோபமா இருந்தாங்க ,அதனால் அவங்களை மீறி இவக்கூட உறவு கொண்டாட முடியலை. ஒரு கட்டத்தில் இவ தான் முக்கியம்னு அவங்களை மீறி இப்ப இவளை பார்க்க வந்துருக்கோம் மாசமா வேற இருக்கான்னு கேள்வி பட்டோம் . அதான் எங்க வீட்டுக்கு முறைப்படி மாப்பிள்ளை பொண்ணை அழைச்சிட்டு போலாமேன்னு வந்தோம் ” என்று கனகாவின் தாயார் கூறினார்.
“அது சரி நமக்கு பிள்ளைங்க வாழ்க்கை தானே முக்கியம் . எங்களுக்கும் இதெல்லாம் வருத்தம் தான் ஆனால் வேற வழியில்லை..சரி அதெல்லாம் விடுங்க உங்க மக மருமகனை அழைச்சிட்டு போங்க ” என்றார் மீனாட்சி.
“ரொம்ப தேங்க்ஸ் அத்தை” என்றாள் கனகா.
“தேங்க்ஸ் எல்லாம் வேணாம் மா நீ உன் அப்பா அம்மாவோட சேர்ந்ததே எங்களுக்கு சந்தோஷம் தான். அதே சமயம் நீ மாசமா இருக்கிற இந்த நேரத்தில் உன்னை இது செய் அது செய்ன்னு வேலை எதாவது நான் சொல்லிருந்தா மன்னிச்சிடு,உன்னை சுருசுருப்பா வச்சிக்க தான் அப்படி சொல்வேன் ,நீ ஒரே இடத்தில் இருந்தின்னா எதாவது யோசனை வரும் அதான் மன்னிச்சிடு என்னை ” என்று மீனாட்சி சொன்னதும்.
“ஐயோ பரவாயில்லை அத்தை அதுல போய் என்ன இருக்கு விடுங்க,சரி அப்போ நான் கிளம்புறேன் , என்னங்க நீங்களும் என் கூட வந்து தங்குங்க ” என்று கார்த்திக்கை எதிர்நோக்கி கேட்டாள்.
“ம்ம் வரேன்” என்று அவனும் கிளம்பினான். இவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு மீனாட்சி வெறுச்சோடி இருக்கும் வீட்டை நோக்கி கண்கலங்கி நின்றாள்.
‘எத்தனை புள்ளை பெத்தாலும் ஒரு நாள் அவங்க வாழ்க்கை தேடி போய்டுறாங்கல ‘ என்று நினைத்து வருந்தினாள்.
“வருத்தப்படாத மீனாட்சி நான் இருக்கேன்ல,புருஷன் பொண்டாட்டி உறவு தான் கடைசி வரை அது உனக்கு தெரியாதா என்ன ? ஆமா நீ ரொம்ப நாளா அந்த காட்டூர் அம்மன் கோவில் போகனும் சொல்லிட்டு இருப்ப தானே ?, நாளைக்கு போவோம் . நீ நிம்மதியாக இன்னைக்கு ரெஸ்ட் எடு , சமையல் எதுவும் பண்ண வேணாம் நைட்டுக்கு நான் ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன்” என்றார் மீனாட்சி கணவர் ( கோபி தந்தை)
கணவன் மனைவி வாழ்க்கை வயதான பின்பு தான் உண்மையான புரிதலுக்கு வரும் என்பது நிதர்சனம்.
அவர் கூறியது போல் மறுநாள் காட்டூர் அம்மன் கோவில் போவதற்கு பஸ் பயணம் மேற்கொண்டனர். போகும் வழியெல்லாம் மீனாட்சியும் கணவரும் பேசிக்கொண்டு சென்றனர்.
அதே நேரம் அதே நொடி….
அதே பேருந்தில்…
பூங்கொடி என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தாள். ரொம்ப நேரம் போனில் பேசியவாறு இருந்தாள். முப்பது வயதை எட்ட சில நாட்கள் தான் என்றாலும் இன்னும் கல்லூரி போகும் பெண் போல இளமையாக தோற்றம் அவளிடம் இருந்தது. காட்டூர் வந்ததும் அவளும் இறங்கினாள்.
இவர்களும் இறங்கிவிட்டு எதர்ச்சையாக அவளை பார்த்தனர்.
“என்னங்க இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே”,
“அட ஆமா ” என்றபடி இருவரும் அந்த பெண்ணை நோக்கி நடந்தனர்.
“அம்மாடி நில்லு “என்று அவளை நிறுத்தி
“நீ நீ ….அந்த வள்ளி பொண்ணு தானே , அந்த பேங்க் மேனேஜர் வீட்ல உங்க அம்மா வீட்டு வேலை பார்ப்பார்களே ” என்று மீனாட்சி கேட்டதும் ஆமாங்க நான் வள்ளி பொண்ணு தான் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்” என்றாள் பூங்கொடி.
“ஒன்னுமில்லை மா உன்னை பார்த்ததும் எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் வந்து கேட்டோம். ” என்று மீனாட்சி சொன்னதும். சரி என்றவள் சற்று தூரம் நடந்துவிட்டு மீண்டும் மீனாட்சியை நோக்கி வந்து…
“அ…அம்மா இப்போ எங்க குடும்பம் ரொம்ப கஷ்டத்தில இருக்கு மூத்த அக்காவுக்கும் இளைய அக்காவுக்கும் கல்யாணம் பிரசவம்னு பார்த்து கையில் காசு எதுவும் இல்லை…உங்க வீட்ல வேலை எதாவது சொன்னிங்கன்னா வந்து செய்வேன். காட்டூர்ல தான் எங்க வீடு ,எனக்கு படிப்பறிவு எதுவும் கிடையாது. பத்தாங் க்ளாஸ் தான். வேலை தந்தீங்கன்னா உங்க வீட்லயே தங்கி செய்து தருவேன் மூன்று வேலை சோறு மாசம் 3000 தந்தீங்கன்னா போதும் ” என்றாள் பூங்கொடி.
‘என்னடா இது திடிர்னு வேலை கேக்குதே ‘ என்று மீனாட்சி யோசிக்கும் போது.
“அடியேய் , உனக்கு உதவியா இருந்துட்டு போகட்டும் வேலை செஞ்சிட்டு, வேலைக்கு நாளைல இருந்து வரச்சொல்லிடு ” என்று கணவர் சொன்னதும் தைரியம் வந்தது அவளுக்கு.
“சரிமா நாளைல இருந்து நீ தாராளமா வேலைக்கு வரலாம் ” என்று சொல்லிவிட்டு நிம்மதியாக கோவிலுக்கு சென்றார் மீனாட்சி.
கோவிலை நெருங்கியதும் ஒரு வித மன அமைதி அவருக்கு கிடைத்தது குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் மீனாட்சி.
யார் இந்த பூங்கொடி, இந்த கதையில் இவருடைய பயணம் என்ன? தொடரும்.