கள்வன் – 4
“நான் கூட அந்தத் தம்பியை அலட்சியமாகத் தான் நினைத்தேன். ஆனால் எவ்வளவு எளிமையான பேச்சு, சமூக அக்கறை. நல்ல பையன்.” என்ற மெச்சுதலுடன் உணவருந்திக் கொண்டே அஜய் புகழ் பாடினார் ரமேஷ்.
“டாக்டர் என்ன சொன்னார் என்று இன்னமும் சொல்லவில்லை ஆனால் இதே புகழை வந்ததிலிருந்து பாடுகிறீர்கள்.” என்று கீதா சலித்துக் கொண்டே சப்பாத்தி எடுத்து தம் பிள்ளைகளின் தட்டை நிறைத்தார்.
“இல்லை கீதா. பாப்பா சொன்ன போது ஏதோ வயதானவராக இருக்கக்கூடும் என்று தான் நினைத்தேன். பார்த்தால் நம் பாப்பாவை விட ஐந்தாறு வயது தான் கூடுதலாக இருக்கும்.”
“சரி சரி… உங்கள் பாப்பாவை பற்றி காலையில் ஒன்று பேசினோமே நியாபகம் இருக்கிறதா இல்லை மறந்து விட்டீர்களா?” என்று அர்த்தமாய் கீதா கேட்க ரமேஷ் ஒரு நிமிடம் தயங்கி பின் இனியா புறம் திரும்பினார்,
“பாப்பா உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்…” என்றவர் தன் மனைவியின் முறைப்பை கண்டுகொண்டு “உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.” என்று மாற்றிக் கொண்டார்.
“இருந்தாலும் நீ அப்பாவை ரொம்பத் தான் மிரட்டி வைத்திருக்கிறாய்மா…” அவர்களின் அந்தச் சின்னப் பார்வை பரிமாற்றத்தை கவனித்து கேலி பேசினாள் இனியா.
“அடியேய் வாயாடி… எங்களுக்கு கொஞ்சம் விடுதலை கொடுடி…” இனியா ஆரம்பித்த கேலியை கெட்டியாய் பிடித்துக்கொண்டு அதையே அச்சாராமாய் இட்டார் கீதா.
“என்ன விடுதலை? என்ன சம்மந்த சம்மந்தமில்லாமல் பேசுற?”
“கீதா நீ சும்மா இரு… பாப்பா அம்மா உனக்கு கல்யாணம் செய்யலாம்னு யோசிக்கிறா. நீ என்ன சொல்ற?” மனைவியை அடக்கி பெண்ணிடம் நேரடியாக விஷயத்தை போட்டுடைத்தார்.
“என்ன கல்யாணமா? அதற்குள்ளா? அப்பா…” சிணுங்கினாள் மகள்.
“நான் பாப்பானு கூப்பிடுவதால் நீ இன்னும் சின்ன பெண் இல்லையே பாப்பா. உன் வயது பெண்களுக்கு எல்லாம் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் நேரத்திற்கு செய்யணும்டா…” ரமேஷ் எடுத்துரைக்க முகம் சுருக்கினாள் இனியா.
“ஆமா… ஆமா… இன்னும் கொஞ்ச நாளானால் உங்க பாப்பா பீப்பாய் ஆகிடுவா… சீக்கிரம் அவளை ஒரு இளிச்சவாயன் கிட்ட தள்ளி விட்டுடுங்க…” காலையில் அம்மாவிடம் அக்காவிற்கு பரிந்து பேசியதற்கு நேர் எதிராய் கேலியில் இறங்கினான் தம்பி.
“டேய்… யாரு பீப்பாய்? நீ புல்டோசர் அடியில் விழுந்து எழுந்து அப்பளமாகி இருப்பதால் நான் பீப்பாயா? ஐம் அட் கரக்ட் வெயிட்.” என்று வாதிட்ட தமக்கை,
[the_ad id=”6605″]அவள் உரைத்தது போலவே சரியான உயரத்தில், ஒல்லியும் இல்லாமல், பூசினார் போலும் இல்லாமல் மிதமான மெருகேறிய உடல்வாகு. சென்னையின் தகிக்கும் ஆதவனின் உபயத்தால் மாநிறத்தில் மிளிரும் தங்கத்தகடு. தமிழக மண்ணுக்கே உரித்தான கலையான வதனம் கீதாவின் சிரத்தையால் வழுவழுவென மேடுபள்ளமில்லாமல் ஒளிர்ந்தது. மிதமான சிகை, மெல்லிய இழையோடிய வில் போன்ற திருத்திய புருவங்கள், அதன் நடுவே எப்போதும் பழிப்பு காட்டும் சிறிய பொட்டு, தீர்க்கமான விழிகள், கொஞ்சமே கொஞ்சம் சப்பையாகிய மூக்கை தொடர்ந்து செதுக்கிய இதழ்கள். பேரழகி இல்லை என்றாலும் குறைகூற இயலா ஒரு தோற்றம் தான் அவள்.
“ரெண்டு பேரும் உங்கள் சண்டையை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். இங்கே பார் இனியா உன்னிடம் அனுமதி கேட்கவில்லை, தகவல் தான் சொல்கிறோம்.” என்று ஒரே போடாய் போட்டார் கீதா.
“அம்ம்மா இது சர்வாதிகாரம்.” குமிறினாள் மகள்.
“இருந்துவிட்டு போகிறது. நீ சும்மா தட்டிக்கழிக்க பார்க்கிறாய். விட்டால் உன் அப்பாவும் உனக்கு ஒத்து ஊதுவார்.”
“அப்படியில்லை அம்மா… இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் இருக்கிறேனே.” கெஞ்சு குரலில் மகள் கிறங்க மனம் இளகிவிட்டது அந்த தாய்க்கு.
மகளை நெருங்கி அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவர், “நீ பயப்படும் அளவிற்கு இன்றே எல்லாம் கைகூடி வந்து முடிந்து விடப்போவதில்லை இனியா. மாப்பிள்ளை என்ன பக்கத்து தெருவிலா இருக்கிறார்? முதற் படியே இப்போது தான் எடுத்து வைக்கப் போகிறோம். நமக்கு தோதாய் வரன் அமைய வேண்டும், உனக்கு பிடிக்க வேண்டும், அவர்களுக்கும் பிடிக்க வேண்டும், பின்னர் தான் திருமண சடங்கே துவங்கும். இப்போது ஆரம்பித்தால் தான் ஓரிரு வருடங்களில் நல்ல இடம் அமையும். அதுவரை இங்கே தானே இருக்கப் போகிறாய்…”
“அதில்லை அம்மா…”
“அம்மா… எனக்கென்னவோ நீங்கள் தகவல் சொல்வது போல் தெரியவில்லை, அவள் தகவல் சொல்லக் காத்திருப்பது போல் தெரிகிறது. எதற்கும் காதையும், கண்ணையும் நன்றாக தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். போகிற போக்கில் அவளே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டு கமுக்கமாக இருக்கப் போகிறாள்,” என்று விஷமத்துடன் இடையிட்டான் இனியன்.
இனியாவோ அவன் கேலியில் கடுப்பாகி பல்லை கடித்தாள், “டேய் எருமை… உடம்பு முழுக்க கொழுப்புடா உனக்கு.”
“ஆமாமா நிறையா இருக்குனு சொல்லிக்கிட்டாங்க. உனக்கு வேண்டுமா?”
“ஷ்… இனியன்… பாப்பா அம்மா சொல்வதை கேளுமா.” மகனை கண்டித்து மகளை பணிந்தார். அவருக்குமே இப்போது கீதா கொடுக்கும் அழுத்தம் சரி என்றே பட்டது. கீதா சொல்வது போல் திருமணம் என்பது ஒன்றும் நம் விரல் நுனியின் ஒரே சொடுக்கில் நடந்து முடிந்து விடப் போவதில்லை. அதுவும் பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் காலம் தாழ்வு ஏற்படுவது சகஜம் தானே.
தந்தையே வலியுறுத்தவும், அவளுக்கும் அதை எதிர்க்க பெரிதாக காரணங்கள் ஒன்றும் இல்லை. வாழ்க்கையின் புது அத்தியாயத்திற்கு நாமும் தயாராவோமே, என்ன தான் நடந்து விடப் போகிறது பார்த்துவிடலாம் என்றதொரு திராணி பிறக்க தன் அன்னையின் கண்களை சந்தித்தாள், “என்னவோ செய்யுங்க…”
முடிவு என்னவோ சொல்லிவிட்டால் தான் ஆனாலும் மனம் ஒப்பவில்லை. அது ஏனென்று கூட அவளால் இனம்காண முடியவில்லை.
“நீ மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே இனியா. எப்போதும் போல் ரிலாக்ஸாக இரு. எதுவும் உடனே நடந்து விடப் போவதில்லை.” என்று ஆறுதல் சொன்ன தாய்க்குத் தெரியவில்லை நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்… நாம் ஒரு கணக்கு போட்டால் நமக்கு மேல் இருப்பவன் வேறு ஒரு கணக்கை ஏற்கனவே கூட்டி பெருக்கி தீர்த்து வைத்திருப்பான்… இன்னாருக்கு இன்னார் என்பது மேலோட்டமாக பார்க்க மனிதன் தெரிவு செய்தது போல் இருப்பினும் அது என்றுமே மனிதக் கணக்கு அல்லவே…
“என்னங்க இன்றைக்கு தான் டிமிக்கி கொடுத்து விட்டீர்கள். இப்போது உங்கள் பாப்பாவே ஒத்துக் கொண்டாயிற்று. நாளை காலையிலேயே நாம் சென்று இவள் விவரங்களை பதிவு செய்துவிட்டு வரலாம். இனியா உன்னுடைய புகைப்படம் ஒன்று கொடுடி. நல்லதாய் கொடு இல்லையென்றால் இனியனுடன் சென்று இப்போது எடுத்து வந்துவிடு.” குரலில் ஒரு துள்ளல், முகத்தில் ஒரு தனிப் பொலிவு, மனமோ தன் மகளுக்கு பொருத்தமான மணாளனுக்கு என்னனென்ன குணாதிசயங்கள், தகுதிகள் இருக்க வேண்டுமென்று கற்பனைக் குதிரை தறிக்கெட்டு ஓடியது.
“அம்மா உலகம் விரல் நுனியில் இருக்கும்போது நீ என்ன வெளியில் சென்று பதிவு செய்ய வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். நாம் மேட்ரிமோனியல் சைட்டில் போடலாம். நமக்கு எப்படி வேண்டுமோ அப்படி முன்னுரிமை கொடுத்தால் முடிவுகள் வந்து கொட்டப் போகிறது.” டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினான் இக்கால இணைய இளைஞன்.
அதை சடுதியில் மறுத்தார் அக்கால அம்மா, “டேய் டேய்… நாம் என்ன ஷாப்பிங்கா செய்கிறோம்? நெட்டில் வருவதையெல்லாம் நம்ப முடியாது. காலம் வேண்டுமென்றால் மாறிவிட்டு போகட்டும். அதற்காக எல்லாம் என் பொண்ணு வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது.”
“கீதா அவன் சொல்வதை செய்து தான் பார்ப்போமே. அதுவும் நீ விரும்பியபடி உடனே பார்க்க ஆரம்பிக்கலாம். எதுவும் வரன் தோதுப்பட்டால் வெளியில் விசாரிக்கலாம்.” இனியனின் ஆலோசனையை ஆதரித்து மகளின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டார் ரமேஷ்.
“என்னவோ அப்பாவும், பிள்ளையும் சொல்கிறீர்கள். அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம்.”
கீதா அனுமதி அளித்த அடுத்த பதினைந்தாவது நிமிடம் மடிக்கணியை விரித்துக் கொண்டு அதை சூழ்ந்து கொண்டனர் மூவரும். இனியா இவற்றை எல்லாம் ஒரு கடுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். உடனே நடக்காது, உடனே வரன் அமையாது என்று சொல்லிவிட்டு அனைவரும் சேர்ந்து சதி செய்வது போன்றிருந்தது அவளுக்கு.
[the_ad id=”6605″]“ஏய் இனியா என்ன யாருக்கோ வந்த விருந்து போல் பத்து மைல் தள்ளி உட்கார்ந்து இருக்கிறாய், இங்கே பக்கத்தில் வா. உனக்கு எப்படி மாப்பிள்ளை வேண்டும் என்று நீ தானே சொல்ல வேண்டும்.” என்று இனியன் சொன்னதும் வந்ததே ஒரு எரிச்சல், அதில் அவன் பொசுங்காதது அதிசயம் தான். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தவர்களை வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் இப்போதே பார்க்க வைத்து விட்டானே என்ற கடுப்பு அவள் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்தது.
“உடனே நடக்காது நடக்காது என்று சொல்லிவிட்டு இப்போது என்ன எல்லோரும் சேர்ந்து கும்மியடித்து என்னை இங்கிருந்து சீக்கிரம் துரத்தப் போறீங்களா?” என்று ஆத்திரத்தில் அவள் கத்தினாலும் அவள் கண்ணின் ஓரம் கட்டுபடாமல் துளி நீர் கசிந்தது.
ஏனோ அனைத்தும் தன்னை மீறி நடப்பதாய் ஒரு பிரம்மை அவளுக்கு. அதுவும் உண்மை தானே, எதிர்பாரா நேரத்தில் தான் முக்கால்வாசி திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. திருமணம் என்றதும் எத்துணை ஆனந்தம் வருகிறதோ அதே அளவுக்கு வேதனையும் வந்து ஒட்டிக்கொள்கிறது பெண்ணிற்கு.
நன்கு விஸ்தாரமாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கும் மரத்தை பிடுங்கி வேறு இடத்தில் நட்டு அங்கு அவள் விருட்சம் ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. பிறந்ததிலிருந்து தன் வீடு என்று மிடுக்காய் சுற்றி வந்த வீடு அம்மா வீடாகி விடுகிறது மணமானதிற்கு பின். பெண்களுக்கே உரித்தான சில பிரத்தியேகமான குணங்களால் கணவன் வீட்டில் சட்டென தன்னை பொருத்திக் கொள்கிறாள் பெண்ணவள்.
இப்படி இருக்கையில் திருமணப் பேச்சு என்று வரும்போது கிலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக் கொள்ளும். அதற்கு இனியாவும் விதி விலக்கல்ல.
“பாப்பா உன்னை அப்படியெல்லாம் விட்டு விடுவோமா? என்ன சின்ன பிள்ளை போல கண்ணை கசக்கிட்டு இருக்க?” ஆறுதல் சொல்ல நினைத்த தந்தையின் குரலும் பிரிவிற்கான அச்சாரம் உணர்ந்து உடைந்தே வந்தது. கணவன் என்று ஒருவன் வந்தவுடன் நாளடைவில் அவனே மையமாகிப் போகிறான் பெண்ணிற்கு, அந்த உரிமைப்படியில் தந்தை ஒருபடி கீழே இறங்குவது மறுக்கமுடியா உண்மை.
“அடடா என்னதிது… எதற்கு இப்போது எமோஷனல் சீனுக்கு போறீங்க? ஏய் இனியா பாரு அப்பா விட்டால் அழுத்துடுவார் போலிருக்கு.” இனியன் சூழ்நிலையை இலகுவாக்க முயல,
“சும்மா அப்பாவை கிண்டல் பண்ணாதடா…” என்ற இனியா தன்னை சமன் படுத்திக் கொண்டாள்.
“அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இப்படி சீன் போட்டால் பின்னர் என்ன செய்வார்களாம்? நீ என்னவோ செவ்வாய் கிரகத்திற்கு போவது போல் பில்ட் அப் கொடுக்கிறாய்…”
“ச்சீ… போடா… உனக்கு என்னோட வருத்தம், கவலையெல்லாம் புரியாது.” என்றவள் கண்ணோரம் உதிரக் காத்திருந்த உவர்ப்பு நீரை சுண்டு விரலால் சுண்டி விட்டாள்.
“எங்கே இந்த வீட்டு குலதெய்வம்… அம்மா தாயே… கீதா நீயும் கண்ணை கசக்கிடாத. நாமெல்லாம் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் தாங்குகிற ஆள். இந்த வீக் பீசுங்க மாதிரி அழுது கிழுது வச்சிராத…” என்று இனியன் கூறவும் அதில் பொதிந்திருந்த அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு யாரும் பார்க்காத வண்ணம் கண்ணை முந்தானையில் துடைத்துக் கொண்ட கீதா,
சூழ்நிலையை உணர்ந்து தங்கள் பிளானை மாற்றினார், “சரி சரி… எல்லோரும் தூங்கப் போங்க.”
“ஏன்… ஏன்? சரியான சர்வாதிகாரி அம்மா நீ… நீ கல்யாணத்திற்கு ஒத்துக் கொள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் எல்லாவற்றையும் மூட்டை கட்ட வேண்டுமா… அதெல்லாம் முடியாது… டேய் இனியா நீ அக்கௌன்ட் க்ரியேட் பண்ணுடா… என்னைப் போல் ஐ.டியில் இருப்பவரோ இல்லை என் வேலை நேரங்களை புரிந்து நடந்து கொள்ள ஏற்ற வேலை செய்பவரை பாரு… ” என்றது வேறு யாருமல்ல இனியாவே தான்.
[the_ad id=”6605″]இவ்வளவு நேரம் முடியாது, என்னை துரத்துகிறீர்கள் என்று முறுக்கிக் கொண்டவள் தன் வார்த்தைகளால் பெற்றவர்களின் விழிகளில் கோர்த்த நீரை கண்டு இறங்கி வந்து விட்டாள், உணர்வுக் குவியலை என்றுமே விரும்பாத சுதந்திரப் பறவை இனியா.
“ம்கூம்… இப்போதே இப்படி… இன்னும் என்னென்ன படுத்தப் போகிறார்களோ…” என்று முணுங்கிக் கொண்டே அக்கவுண்ட் கிரியேட் செய்து அவள் விபரங்களை பதிவு செய்தான் இனியன்.
அவனை சுற்றி மூவரும் சூழ்ந்துக் கொள்ள, அவன் தேவையான எதிர்பார்ப்புகளை தட்ட, அந்த இணையதளம் பலவித முடிவுகளை கொடுத்தது.
இந்த பையன் நல்லாயில்லை, நம்ம இனியாவுக்கு செட் ஆக மாட்டான் என்று பலவற்றை ஒதுக்கிக் கொண்டே வந்த ரமேஷின் பார்வையும், கீதாவின் பார்வையும் ஓர் இடத்தில் நிலைகுத்தி நின்றது. என்ன ஒன்று இரு விழிகளும் நேர்கோட்டில் அல்லாமல் வெவ்வேறு வரன்களை நோட்டமிட்டது.
“டேய் இனியா இந்த பையனைப் பாரேன்… நம்ம இனியாவுக்கு ஏத்த மாதிரி இல்லை. அந்த பையன் டீடைல்ஸ் எடுடா…” என்றனர் இருவரும் ஆர்வமாய் வெவ்வேறு போட்டோவை காட்டி.
இனியன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு, மடிக்கணினி புறம் திரும்பி அதில் இருந்த பெயர்களில் அவர்கள் சுட்டிக் காட்டியவற்றை படித்தான்.
“இன்பன்…
அஜய்ரத்னம்…
ஹேய் சூப்பரா இருக்குல்ல பெயர் பொருத்தம் இனியா, இன்பன்- ஐஸ்கொயர்.”
“ஏன் அஜய்க்கு என்ன குறைச்சல்? நல்ல பையன். நான் சொன்னேன்ல அந்த டாக்டர் இவர் தான் அது…” என்று மகனின் கூச்சலுக்கு அங்கலாய்த்தார் ரமேஷ். அவரின் மனதில் தான் அஜய்ரத்னம் சிம்மாசனமிட்டு எப்போதோ அமர்ந்து விட்டானே…
ஆனால் இனியாவின் மனம் தான் இந்த படலத்தை சற்றும் விரும்பவில்லை. ஒரே நேரத்தில் இருவர் பெயரை தன்னுடன் இணைத்து பேசுவது முற்றிலும் கசப்பை கொடுத்தது. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணங்கள் அனைத்திலும் இது போன்றதொரு நிலை வருவதற்கு தொன்னூறு சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது என்ற அறியாமை அவளை முரண்டியது. அதுவும் பல்வேறு வரன்களோடு ஒப்பிட்டு, அதை குத்திக் கிளறி நன்றாக தெரிந்த பின்னே திருமணம் முடிவாகிறது.
ஆனால் காதல்… சிறிய ஸ்பார்க் போதும் காதல் தீ பற்றிக்கொள்ள…
சிறுசிறு பேச்சுகளோ… அக்கறையுடன் கூடய பார்வை பரிமாற்றங்களோ… சன்னமான மென்னகை கூடப் பலநேரங்களில் போதுமானது காதல் பிணி அண்டிக்கொள்ள…
இவளோ காதல் என்று இதுவரை சிந்தித்ததுமில்லை, ஒருவரும் அவளை அப்படி சிந்திக்க வைத்ததும் இல்லை. ஆனால் சிந்தித்து இருக்கலாமோ என்று ஏனோ அந்தக் கணம் தோன்றியது அவளுக்கு.
அம்மா ஒருவனையும், தந்தை ஒருவனையும் கைக்காண்பிக்க இவள் தேர்ந்தெடுக்கப் போவது யாரையோ?!
*^*^*