மனதிற்கு சந்தோசம் என்றாலும் கஷ்டம் என்றாலும் நம் மனம் தேடும் இடங்களில் ஒன்று கோவில், கோவிலுக்கு செல்லும் முன் ஆயிரம் எண்ணங்கள் மனதினில் ஓடினாலும் இறைவன் சன்னிதானத்தின் முன் கைகூப்பி நிற்கையில் மனம் வெற்றுக் காகிதம் போல் இறைவன் ஒருவனையே மனதினுள் நினைக்கும்.
அது போல் நேத்ராவின் தாய், தந்தை, அண்ணனுடன் விநாயகர் சன்னிதியில் கைகூப்பி சிப்பி இமைகளை மூடி நின்றிருந்தாள் நேத்ரா.
கத்தரிப்பூ வண்ணத்தில் மெல்லிய தங்கச் சரிகை வைத்த பட்டுப்புடவையில் எளிமையான அலங்காரத்தில் தலை நிறைய மல்லிகைச் சரத்துடன் தேவ லோகத்துக் கன்னிகை போல் காட்சியளித்தாள் நேத்ரா.
இறைவன் சன்னிதானத்தில் பிராத்தனையை முடித்த நேரத்தில் தான் நளன் அவன் தாய், தந்தை மற்றும் வினோத்துடன் கோவிலுக்குள் வந்து கொண்டிருந்தான்.
கருநீல நிற முழுக்கை சட்டையும் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தவனது கம்பீரத்தை இந்த உடை மேலும் எடுத்துக் காட்ட, குனிந்து வினோத்திடம் பேசிக்கொண்டு வந்தவன் நேத்ராவைக் கண்டதும் பேச்சை நிறுத்தி அவளை விழிகளால் கபளீகரம் செய்தான்.
பின் கார்திகேயனிடம் “அப்பா அவங்க தான் நேத்ரா அண்ட் பேமிலி” என்றான்.
“ஓ நமக்கு முன்னாடியே வந்துட்டாங்களா” என்றவர் வேகமாக முன்னே சென்று நேத்ராவின் தந்தை ஈஸ்வரமூர்த்தியிடம் வலக்கையயை நீட்டியவாறு “கார்த்திகேயன் நளனோட அப்பா” என்ற அறிமுகத்துடன் கைகுலுக்கினார்.
பெரிய இடம் எப்படி இருப்பார்களோ என்ற பதட்டத்தில் இருந்த ஈஸ்வரமூர்த்தி கார்த்திகேயனின் எதார்த்தமான பேச்சில் அகமகிழ்ந்தார்.
நளனின் தாய் நந்தினியும் நேராக நேத்ராவிடம் சென்றவர் நேத்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு “நேத்ரா, மஹாலக்ஷ்மி மாதிரி இருக்க மா, எனக்கு உன்னை பாத்தவுடனே ரொம்ப பிடிச்சுப் போச்சு” என்றவர் நேத்ராவின் நாடி பிடித்துக் கொஞ்சினார்.
நேத்ராவின் மனநிலையே இவர் தான் நளனின் தாயா என்ற அலசலில் இருந்தது
ரேணுகாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நந்தினி “சீக்கிரம் வந்துட்டீங்களா?” எனவும், “இல்லங்க இப்போ தான் வந்தோம்” என்றார் ரேணுகா. பெண்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க,
நளனோ நேத்ராவின் மேல் கண்ணாக இருந்தான். வினோத்தும் நந்தனும் பேசிக் கொண்டிருக்க, நளனின் பார்வை உணர்ந்த நந்தன் “என்ன மச்சான் நேத்ரா கிட்ட பேசணுமா?” எனவும்,
“ம்ம் ஆமா” என்றான் நளன்.
சிரித்துக் கொண்டவன் “சரி இருங்க நான் போயி கூட்டீட்டு வரேன்” எனவும்,
“இல்ல நானே போயி பேசிக்கிறேன்” என்ற நளன் எழுந்து நேத்ராவை நோக்கிச் சென்றான்.
நளன் இவ்வாறு கூறியவுடன் நளனை வேற்று கிரகவாசியைப் போல் பார்த்த நந்தனை “என்ன நந்தன் உங்களுக்கு நளன் புதுசா தெரியுறானா? அவன் அப்படித்தான், அவனோட முடிவை கொஞ்சம் கூட தயக்கமில்லாம அவன் தான் எடுப்பான். அதுக்கு அப்புறம் யாரையும் அவனோட விஷயத்துல தலையிட அனுமதிக்க மாட்டான்” என்றான் நளனைப் பார்த்துக் கொண்டே.
நளனின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, “சம்மந்தி ஏதோ என்னால முடிஞ்ச அளவு நேத்ராவுக்கு நகை சேத்து வச்சிருக்கேன், அதுக்கு மேல என்னால முடியாது…” என்று தயங்கி தயங்கி பேசவும்,
அவர் தோள் மேல் கைபோட்ட கார்த்திகேயன் “சம்மந்தி என்னோட பையன் நளன் இருக்கானே, அவனுக்கு நான் சம்பாதிச்சு வச்சிருக்கிற சொத்து பத்தெல்லாம் தேவை இல்லையாம், அவனுக்கு அவனோட சொந்த உழைப்புல அவனே சம்பாதிக்கிறது தான் வேணுமாம்,
ஏன் சொல்றேன்னா என் கிட்டவே இப்படி சொல்றவன் அவன் கட்டிக்க போற பொண்ணு, அதுவும் விரும்பி கட்டிக்க போற பொண்ணுகிட்ட என்ன எதிர்பாப்பான்னு நீங்களே சொல்லுங்க” எனவும்,
அவர் கூற வருவது புரிந்த ஈஸ்வரமூர்த்திக்கு நளன் மேல் மரியாதை தான் தோன்றியது.
“சரி வாங்க, நாம போயி முகூர்த்தத்துக்கு நாள் குறிச்சிடலாம்” என்ற கார்த்திகேயனும் ஈஸ்வரமூர்த்தியும் எழுந்து நந்தினி, ரேணுகா, நேத்ரா அமர்ந்திருக்கும் இடத்திற்கு வரவும், நளன் அங்கு வரவும் சரியாக இருந்தது.
கார்த்திகேயனும் ஈஸ்வரமூர்த்தியும் செல்வதை பார்த்த நந்தனும் வினோத்தும் கூட நேத்ரா அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.
நேத்ரா, ரேணுகா மற்றும் நந்தினிக்கு இடையில் கீழே அமர்ந்திருக்க, நேராக நேத்ராவிடம் சென்ற நளன் அவள் முன் வலக்கையயை நீட்டினான்.
நளன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் தன்னை நோக்கி வருவதையும் உணர்ந்த நேத்ரா, “ஐய்யோ இவங்க பார்வையே சரியில்லையே, அன்னைக்கு அண்ணாவை மீட் பண்ணும்போது பண்ணுன மாதிரி எதாவது ஏடாகூடம் பண்ணுனா என்ன பண்றது” என்று மனதினுள் யோசித்துக் கொண்டிருந்தவள், வெளியில் சிரித்த முகமாக காட்சியளித்தாள்.
நேத்ராவின் மீது பார்வையை பதித்து அவள் முன்பு வந்தவன், அவன் கையை அவள் புறம் நீட்டவும் கண்களால் மறுத்தாள்.
அவள் தயக்கத்தை உணர்ந்த நளன், அவனே குனிந்து நேத்ராவின் வலக்கையயைப் பிடித்துத் தூக்கினான்.
நேத்ராவை நிற்க வைத்தவன் அவள் முன் மண்டியிட்டு அவள் வலக்கை மோதிர விரலைப் பிடித்து நேத்ராவிற்கென்று அவன் தேடிப்பிடித்து வாங்கிய வைர மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான்.
மோதிரத்தை அணிவித்தவன் நேத்ராவின் கையில் இதழ் பதித்து அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான். நேத்ராவின் மனநிலையைக் கணித்தவன் சிரித்துவிட்டு எழுந்து நேத்ராவை அவன் இடக்கை தோள் வளைவுக்குள் நிறுத்தினான்.
நளன் நேத்ராவை தூக்கியது முதற்கொண்டு அனைத்தையும் வினோத் அவனது கைபேசியில் புகைப்படமாக படம் பிடித்துக் கொண்டான்.
நளன் மற்றும் நேத்ராவை ஜோடியாகக் கண்ட இரு குடும்பத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
தந்தையிடம் திரும்பிய நந்தன் “அப்பா கல்யாண தேதியை இன்னைக்கே முடிவு பண்ணீடலாம் பா” என்றான் தெளிவான முடிவுடன், நேத்ராவைப் பார்த்து சிரித்துக் கொண்டே.
பெரியவர்கள் பேசி அடுத்து வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தனர். அடுத்த முகூர்த்தம் இன்னும் இரு வாரங்களில் இருக்க திகைத்து விழித்த ஈஸ்வரமூர்த்தியிடம்,
“சம்மந்தி நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் நீங்க உங்க சொந்த பந்தங்களோட எங்க வீட்டு மருமகளை கூட்டீட்டு வந்தீங்கன்னா அதுவே போதும்” என்றார் கார்த்திகேயன்.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேற, திருமணத்திற்குத் தேவையான வேலைகளில் கவனம் செலுத்துவதில் இருவாரங்களும் இறக்கை கட்டிப் பறந்தன.