கதிரவன் தன் கதிர்களை உலகுக்குப் பரப்பி வெகுநேரம் கழிந்திருக்க பெண்ணவள் மன்னவனின் மார்பில் ஆழ்ந்த துயில் கொண்டிருந்தாள்.
தன் கைவளைவுக்குள் பூக்குவியலாய்க் கிடந்தவளின் முகத்தில் தன் விரல் கொண்டு கோலமிட்டவனின் விரல்கள், அவனால் வதைக்கப்பட்ட ரெத்தமென சிவந்த உதடுகளில் நிலைத்தது.
ஹனி… என்று அழைத்தவன் அவன் சீண்டல்களை மீண்டும் அவளிடம் தொடரவும், பட்டென கண்களை திறந்து “அம்மு ப்ளீஸ்…” என்றவள் அவனிடமிருந்து விலகி வேகமாக குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
மஞ்சத்திலிருந்து எழுந்து அவளைப் பின் தொடர்ந்தவன், குளியலறையில் அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு தான் விட்டான். இப்படியாக பத்து நாட்களை அந்த அழகிய தீவில் கழித்தவர்கள், அதாவது ஹோட்டல் அறையில் கழித்தவர்கள் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு யாரையும் வர வேண்டாம் என்றவன், கேப்பில் நேத்ராவுடன் ஏறினான். வாகனம் நளன் வீடு செல்லும் வழியில் செல்லாமல் வேறு புறம் திரும்பவும்,
“அம்மு நாம எங்க போறோம்? வீட்டுக்கு போகலையா” என்ற நேத்ராவிடம்,
நேத்ராவின் தோளைச்சுற்றி கை போட்டிருந்தவன் “வெய்ட்… இன்னும் கொஞ்ச நேரம் தான்” என்றான் நளன்.
வாகனம் அனைத்து வசதிகளையும் கூடிய ஒரு விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட்டினுள் நுழையவும் நளனின் கண்களை சந்தித்தவள் “நாம யாரையாவது பாக்க வந்திருக்கோமா” என்றாள்.
தலையை இருபுறமும் ஆட்டி இல்லை என்றவன் “கொஞ்ச நேரம் அமைதியா வா ஹனி” என்றான் கெஞ்சல் மொழியில்.
நேத்ராவை லிப்ட்டினுள் அழைத்துச் சென்றவன், லிப்ட் அவன் தேர்வு செய்த தளத்தில் நின்றதும் நேத்ராவின் கைபிடித்து அழைத்துச் சென்றான். ஒரு அப்பார்ட்மென்டின் முன் வந்ததும் அவள் கைகளைத் திறந்து ஒரு சாவியைக் கொடுத்தான்.
ஒன்றும் புரியாமல் பார்த்தவளிடம் “ம்ம் ஓபன் தி டோர்” என்றான் மர்மப் புன்னகையை உதட்டோரம் உதிர்த்தபடி.
கதவைத் திறந்தவளின் தோள் மேல் கைபோட்டு இருவரும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தனர்.
நேத்ரா கண்களை அகலத்திறந்து நளனைப் பார்க்கவும், “இனிமே நாம இங்க தான் இருக்கப் போறோம், திஸ் இஸ் அவர் நியூ ஹோம், என்னோட சம்பாத்தியத்துல நானே வாங்குனது, புடிச்சிருக்கா?” எனவும்,
“ரியலி, என்று கண்களை விரித்தவள், ரொம்ப அழகா இருக்கு அம்மு” என்றுவிட்டு நளனை கட்டியணைத்தவள் பின் வீட்டை பார்வையிட்டாள்.
விசாலமான லிவிங் ரூம், அதில் ஓபன் ஐலேண்ட் கிட்சன், மூன்று அறைகள், அதில் ஒன்று மாஸ்டர் பெட் ரூம் அவர்களுக்காக, லிவிங் ரூமில் ஒரு பெரிய பால்கனி, பால்கனியின் ஸ்லைடிங் டோரைத் திறந்தவளுக்கு, வெளியே சென்னை மாநகரின் பெருமளவு உயர்ந்த கட்டிடங்கள் கண்ணுக்குத் தெரிந்தது.
வெளியிலிருந்து வந்த சில்லென்ற காற்று மேனியைத் தழுவ மனமார புன்னகைத்தவள் “அம்மு ரொம்ப அழகா இருக்கு” என்றவள் நளனைக் கட்டிக் கொண்டாள்.
பின்னிருந்து நேத்ராவின் கண்களை தன் இரு கைகள் கொண்டு மூடியவனை “ஹே அம்மு என்னாச்சு, என்ன பண்றீங்க” என்றாள்.
“ச்சு கொயட்டா வா ஹனி” என்றவன் அவர்களது மாஸ்டர் பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றான், பின் நேத்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து அவள் கண்களைத் திறந்தான். பின்னிருந்து அணைத்த படியே நேத்ராவின் தோளில் நாடி பதித்தவன் அவள் முகத்தைப் பார்த்தான்.
வாய் பிளந்தபடி கண்கள் தெறித்து விழுமளவு விழித்தவளை புன்னகையுடன் ரசித்தவன், அவள் காதருகில் குனிந்து “ஹனி ஐ லவ் யூ சோ மச்” என்றான் கிசுகிசுப்பாக.
“ஐ லவ் யூ டூ… என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இந்த போட்டோ எப்படி? என்றாள் நளனின் தோளில் கிளி போல் தொற்றிக் கொண்டு.
நளனும் நேத்ராவும் ஹனிமூனில் க்ரூஸ் ஷிப்பில் செல்லும் போது ஒரு வெளிநாட்டவர் எடுத்த அழகிய புகைப்படத்தை அங்கே பெரிய அளவில் பிரேம் செய்து மாட்டியிருந்தான் நளன்.
நளன் வெள்ளை நிற காலர் வைத்த பீச் ஷர்ட்டின் முதல் மூன்று பட்டன்கள் திறந்து விடப் பட்டிருக்க, சாம்பல் நிற கால் ட்ரௌசரில், குளிர் கண்ணாடியை உயர்த்தி தலையில் மாட்டியிருந்தவன் நேத்ராவின் முகம் பார்த்து முத்துப் பற்கள் தெரிய காதலுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவன் முகம் பார்த்தபடி அவன் கைவளைவுக்குள் நின்றிருந்த நேத்ரா, வெள்ளை வண்ண ஸ்லீவ் லெஸ் மாக்ஸி பீச் உடையில் நளனை அவனுக்கு மிஞ்சாத காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவர் கண்களிலும் காதல் பொங்க நின்றிருந்த அந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு வெளிநாட்டவர் அவர்கள் முழு உயரத்திற்குப் புகைப்படக் கருவியில் படம் பிடித்துக் காண்பிக்க, அவரிடமிருந்து அந்தப் படத்தை வாங்கியிருந்தான் நளன்.
வீட்டில் ஏற்கனவே சோஃபா, கட்டில், என அனைத்தும் சகல வசதிகளுடன் அதனதன் இடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்க, கிச்சனுக்கு தேவையான மளிகை பொருட்கள் மட்டும் அதனதன் இடத்தில் அடுக்கப்படாமல் இருந்தது.
“ஹனி எனக்கு ஒரு காஃபி போட்டு தரியா, ஸ்ட்ரோங்கா? ப்ளீஸ்” என்றவன் அவன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கட்டிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த ஒர்க் ப்ளேஸில் அமர்ந்தான்.
கணவன் தன்னிடம் முதன் முறை கேட்ட காஃபியை மறுக்க முடியாமல், வேகமாக தலையை உருட்டியவள் கிச்சனுக்குள் சென்றாள். வீடு முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க சோஃபா கூட உயர் ரக மெட்டீரியலில் வெள்ளை வண்ணத்தில் இருந்தது.
கிச்சன் மேடையைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ், மற்றும் கப்போர்ட் வேலைப்பாடுகள் முதற்கொண்டு அனைத்தும் பால் வண்ணம் கொண்டு அழகாக இருந்தது.
“இவ்வளவு வெள்ளையா இருக்கே இதுல எப்படி சமைக்கிறது” என்று நினைத்துக் கொண்டு இருந்தவளிடம்,
“ம்ம் கருப்பா இருந்தா மட்டும் உன்னால சமைக்க முடியுமா என்ன, ஒரு சூடு தண்ணி கூட ஒழுங்கா உனக்கு போட தெரியாது” என்று எள்ளி நகையாடியது மனசாட்சி.
“ஆமால்ல, இப்போ என்ன பண்றது…” என்று யோசித்தவள் அவள் தாய்க்கு கால் செய்தாள்.
போனை அட்டென்ட் செய்த ரேணுகா “தங்கம் எப்படி இருக்க டா, ஊர்ல இருந்து வந்துடீங்களா” எனவும்,
“அதெல்லாம் வந்தாச்சு மா, எனக்கு இப்போ எப்படி காஃபி போடணுன்னு சொல்லு மா” என்றாள்.
ப்ரிஜிஜில் இருந்த பாலை எடுத்து பக்குவமாக வெட்டி பாலைக் காய்ச்சியவள், “எத்தனை ஸ்பூன் காஃபி பவுடர் போடணுன்னு கேக்கலையே, சரி கொஞ்சம் தாராளமாவே போடுவோம், அவங்க தான் ஸ்ட்ரோங்கா கேட்டங்கள்ல”
என்றவள் காஃபித் தூளை தாராளமாக அள்ளிப் போடவும், பால் ஒரே கருப்பாக மாறியது.
“என்ன கறுப்பாயிருச்சு, ஐயோ…இப்போ என்ன பண்றது” என்று தலையில் கைவைத்து யோசித்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் “ஹனி… “என்ற நளனின் குரல் கேட்டது.
“ஹா…” என்றவள் பதிலேதும் கூறாமல் திருதிருவென விழித்துக் கொண்டு அங்கேயே நிற்கவும் “ஹனி என்ன பண்ற ஏன் இவ்வளவு நேரம்…?” என்றவன் பால் சட்டியை எட்டிப் பார்க்க அது ஒரே கருப்பாக இருந்தது.
“நான் காஃபி தானே கேட்டேன், ஏன் சாக்லேட் கேக் பண்ணியிருக்க ஹனி” என்றவனை முறைத்தவள்,
“இது தான் காஃபி” என்றாள். “ஓ இது ஹனியோட நியூ வெர்ஸன்ஆ…?” எனவும்,
அவன் மார்பில் குத்தியவள், அம்மு எனக்கு நெஜமாவே சுத்தமா சமைக்க தெரியாது” என்றாள் அவன் மார்பின் ரோமங்களை விரல்களால் கோலமிட்டுக் கொண்டே,
நேத்ராவை அவனோடு சேர்த்து கட்டி அணைத்தவன் “ஓ ரொம்ப வசதியா போச்சு…” என்றான். புரியாமல் பார்த்தவளிடம்,
“அது இந்த கிச்சன் ஏன் ஒப்பனா வச்சிருக்கேன் தெரியுமா? என்றவனிடம், “ஏன்?” என்றவளை மேலும் தன்னோடு இறுக்கியவன்
“ஏன்னா நான் வீட்ல இருக்கும் போது நீ எப்பவும் என்னோட கண் பார்வையிலேயே இருக்கணும், நீ பாட்டுக்கு சமைக்கிறேன்னு சொல்லி கிச்சனுக்குள்ளயே இருந்துகிட்டேன்னா? இப்போ நோ ப்ரோப்ளம், உனக்கு சமைக்க தெரியாது, சோ எப்பவும் என் கூட தான் இருப்ப” என்றவன் அவள் கழுத்து வளைவில் முத்தமிட,
நளனை கஷ்ட்டப்பட்டு அவளிடமிருந்து பிரித்தெடுத்தவள் “அதெல்லாம் சரி அப்போ எப்படி சாப்பிடுறது” என்றவளிடம்
அவன் கால் சட்டையில் வைத்திருந்த போனை உயர்திக் கட்டியவனிடம்,
“ஆன்லைன்லயா? எத்தனை நாளைக்கு அம்மு அப்படி சாப்பிட முடியும், நாம பேசாம அங்க அத்தை, மாமா கூடவே போயி இருக்கலாம்ல, அதுவுமில்லாம எனக்கு சமைக்க மட்டும் இல்ல எதுவுமே செய்ய தெரியாது, வீடு வேற ஒரே வெள்ளையா இருக்கு, சின்ன தூசு பட்டாலும் நல்லாத் தெரியும், கண்டிப்பா டெய்லி ஒரு ஆள் சுத்தம் பண்ணியே ஆகணும் ” என்று சிணுங்கியவளை ஒதுக்கி நிறுத்தியவன்,
அடுப்பில் நேத்ரா போட்டிருந்த காஃபியை எடுத்து சிங்க்கில் ஊற்றிவிட்டு அதை கழுவ ஆரம்பித்தான்.
அவன் பாத்திரம் கழுவுவதை எட்டிப் பார்த்தவள் “உங்களுக்கு இதெல்லாம் கூட செய்ய தெரியுமா” என்று ஆச்சரியமாக வினவியவளிடம்,
“ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், படிக்கும் போது நானும் வினோத்தும் தான் ஒரே ரூம்ல இருந்தோம், அப்போ வினோத் சமைப்பான் நான் எதாவது சின்ன சின்ன வேலைகளை செய்வேன்” என்றவன், வேறு பாலை எடுத்து ஊற்றி அடுப்பை பற்ற வைத்தான்.