வேகமாக மற்றொரு குளியல் அறைக்கு செல்ல நினைத்தான், ஆனால் ஏற்கனவே அங்கு ஈஸ்வரமூர்த்தி குளித்து கொண்டிப்பது ஞாபகம் வந்தவனாய்,
“ஜாலியோ ஜிம்கானா என்று பாடிக்கொண்டிருந்தவளை குட்டிப்பிசாசு நீ வெளிய வா… இன்னைக்கு மட்டும் எனக்கு லேட் ஆகட்டும் உனக்கு இருக்கு,
ஜாலியோ ஜிம்கானாவா இன்னைக்கு உன்னை ரெண்டுல ஒண்ணு பாக்காம விடப்போறதில்ல டெய்லி இதே வேலையா போச்சு ” என்று நேத்ரா குளித்துக் கொண்டிருந்த குளியல் அறை வாசலில் காத்திருந்தான்.
குளித்து முடித்து வெளியில் வந்த நேத்ராவின் இடக்கையை மடக்கி பின்னால் பிடித்து முறுக்கிய நந்தன் “இனிமே பொய் சொல்லுவியா பொய் சொல்லுவியா” என்று தலையில் கொட்டினான்.
வலி தாங்காமல் “அம்மா என்னை நந்தன் அடிக்கிறான் ம்மா” என்று அவன் கைகளில் இருந்து விடுபட போராடி துள்ளிக் குதித்தாள் நேத்ரா.
நேத்ராவின் சத்தத்தில் அங்கு வந்த ரேணுகா “டேய் டேய் விடு டா அவளை, கையை ஒடைச்சுப்புடாத” என்று இருவரையும் பிரித்து வைத்தார்.
“நேத்ரா நீ போயி கிளம்பு, டேய் நந்தா உனக்கு நேரமாகுது பாரு நீ போயி குளி” என்று அனுப்பி வைத்தார் இருவரையும்.
ஆஆ என்று தலையை தேய்த்துவிட்டவள் வேகமாக அவலறைக்குள் ஓடி மறைந்தாள். உள்ளே சென்றவள் கிளம்பி வெளியே வருவதற்குள் டைனிங் டேபிளில் அவளுக்கு பிடித்தமான பூரியும் குருமாவும் காத்திருந்தது.
கிளி பச்சை வண்ண சுடிதாரில் மெல்லிய தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் இருந்த உடையை அணிந்திருந்தவள் பூரியைக் கண்டதும் “ஐய் அம்மா பூரி, என் செல்ல அம்மா…” என்று ரேணுகாவின் கன்னம் பிடித்து இடம் வலம் ஆட்டி கொஞ்சியவள் பூரியை ஒரு கை பார்த்தாள்.
இது ஆறாவது பூரி என்ற எண்ணிக்கையில் இருந்தவளை ஆபீசுக்கு கிளம்பி வெளியில் வந்த நந்தகுமரன் நேத்ராவை கண்டு முறைத்தான்.
அவன் முறைப்பை சட்டை செய்யாதவள் பூரியை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
நந்தன் பின்னே வந்த ஈஸ்வரமூர்த்தியுடன் உண்ண அமரவும் அங்கே அமைதி குடிகொண்டது.
உண்டு முடித்த நேத்ராவிடமிருந்து தட்டை வாங்கிய ரேணுகா “கையை தட்டிலேயே கழுவு நேத்ரா, நான் எடுத்துக்கிறேன்” என்றார்.
உடனே கோபம் கொண்ட ஈஸ்வரமூர்த்தி “ரேணுகா அவளுக்கு இப்படியே செல்லம் கொடுத்து கொடுத்து தான் அவளை இப்படி உருப்படாம ஆக்கி வச்சிருக்க, வயசுப்பையன் அவனே அவன் சாப்பிட்ட தட்டை கழுவும் போது இவளுக்கு என்ன வந்தது” என்று கத்தினார்.
“ஏன் என் மக கஷ்டப்பட்டு வேலைக்கு போறா அவளுக்கு நான் செய்யாம யாரு செய்யுவா” என்ற ரேணுகா அவர் செயலில் பிடிவாதமாக நிற்க,
“அவளோட வாழ்க்கை கெட்டுப்போனதுக்கு காரணம் நீ தான், நீ மட்டும் தான், அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ” என்றவர் இரு பூரிகளோடு காலை உணவை முடித்துக்கொண்டு வெளியேறினார்.
“அவரு கெடக்காரு நீ கிளம்புடா தங்கம், பாத்துப் போ, வனிதா வருவாளா” என்றார்.
வனிதா அவள் கல்லூரித் தோழி, கல்லூரி முதல் வருடத்திலிருந்து அவள் நெருங்கிய தோழி இருவரும் வனிதாவின் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு ஒன்றாக சென்று திரும்புவார்கள்.
கல்லூரி முடித்த பின்பு இருவருக்கும் இரு வேறு கம்பெனிகளில் வேலை கிடைக்க, வனிதாவின் ஆபீஸ் நேத்ராவின் ஆபீஸை கடந்து செல்லும் வழியில் இருப்பதால் நேத்ராவை இறக்கி விட்டே அவள் அலுவளுக்கு செல்வாள் வனிதா.
“அப்படியா அப்போ நீ எப்படி போவ?” என்ற ரேணுகாவிடம்
அவள் அண்ணன் நந்தனை கண் காட்டினாள் நேத்ரா.
“இரு இரு நான் பேசுறேன்” என்ற கஞ்சாடை காட்டிய ரேணுகா,
“நந்தா போகும் போது நேத்ராவ இறக்கிவிட்டுட்டு போயிடு பா” என்றார்.
“என்ன… அதெல்லாம் முடியாது, இன்னைக்கு எனக்கே லேட் ஆயிடுச்சு ஒரு குட்டி பிசாசால” என்றான் அவன் தோள் பையை மாட்டிக்கொண்டே,
“டேய் டேய் பாவம் டா அவ, அவளுக்கும் இன்னைக்கு மீட்டிங் இருக்காம்” என்ற ரேணுகாவிடம்,
“அவளுக்கு மீட்டிங் நா அவ தான் வேகமா எந்திருச்சு கிளம்பணும், அவளுக்கு பதிலா எல்லா வேலையையும் நீ செய்யுற மாதிரி, மீட்டிங்கும் அவளுக்கு பதிலா நீ அட்டெண்ட் பண்ண முடியாதில்லை” என்று பொரிந்தான்.
முகத்தை சுருக்கிய ரேணுகாவிடம் “சரி சரி மூஞ்சை தூக்காத அவளை வர சொல்லு, கேப்பும் போயிடுச்சு நான் எப்படியும் பைக் ல தான் போகணும் அப்படியே அவளையும் இறக்கி விட்டுடறேன், சீக்கிரம் வர சொல்லு” என்றவன் வெளியே நடந்தான்.
நேத்ராவை அவள் வளாகத்தில் இறக்கி விட்டவன் “பாத்து போ” என்று விட்டு கிளம்பிவிட்டான்.
உள்ளே சென்ற நேத்ரா நேராக அவள் இருக்கைக்கு சென்றாள். அங்கே அவள் டீமில் யாரும் இல்லாமல் இருக்கவும்,
“ஐயோ எல்லாரும் மீட்டிங் போயிட்டாங்க போலவே, இப்போ நாம போறதா வேண்டாமா, போனாலும் திட்டு விழும் போகலைன்னாலும் திட்டுவிழும், போனா ஒரு அட்டனன்ஸ் ஆவது கிடைக்கும்” என்று நினைத்தவள் தயங்கித் தயங்கி கான்பெரென்ஸ் அறையினுள் நுழைந்தாள்.
அவள் “எக்ஸ் கியூஸ் மீ” என்று உள்ளே நுழைவதற்கும்
“ஓகே வீ வில் எண்ட் ஆப் திஸ் செஸன்” என்று காண்டீபன் முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
நாற்பது வயது மதிக்கத்தக்க காண்டீபன் “வாங்க மேடம், என்று மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தவர், சரியா மீட்டிங் முடியிற நேரத்துக்கு வந்திருக்கீங்களே! என்ன எனி மோர் கொஸ்டின்ஸ்? அப்படின்னு கேக்க வந்தீங்களா” என்றார் கடித்த பற்களினூடே,
அவர் கேட்டதில் க்ளுக் என வாய்பொத்தி சிரித்தவளை “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ், கம் டு மை ரூம்” என்றவர் கான்பெரென்ஸ் அறையை விட்டு வெளியேறினார்.
காண்டீபன் வெளியே சென்றவுடன் அவள் டீம் மேட்ஸ் அனைவரும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டு வெளியே சென்றனர்.
“ம்ஹ்ம் இப்போ இந்த காண்டாமிருகத்த போயி பாக்கணுமா, ஹ்ம்ம் சரி போயி பாப்போம்” என்றவள் ஆழ மூச்செடுத்து ஆள்காட்டி விரலை மடக்கி அறைக்கதவைத் தட்டினாள்.
“எஸ் கம் இன்…” என்ற பதிலில் உள்ளே சென்றவளை மேலிருந்து கீழ் அளவெடுத்தார் காண்டீபன்.
“அது வந்து ஸாரி சார்….” என்றவளை கை உயர்த்தி தடுத்தவர்,
“உன்னோட சாரிய நீயே வச்சுக்கோ, எனக்கு அதுக்கு பதிலா ஒரு காபி போட்டு கொடு” என்ற காண்டீபனை வேற்றுகிரகவாசியை போல் பார்த்து வைத்தாள் நேத்ரா.
சரி எப்படியோ விட்டா போதும் என்றவள் காப்பி போடும் இடத்தைத் தேடினாள்.
அவள் தேடுவதை உணர்ந்த காண்டீபன் “அங்க உள்ள ஒரு ரூம் இருக்குல்ல அங்க இருக்கு” என்றார்.
சரி என்று தலையாட்டி உள்ளே சென்றவள் காபி போடுவதற்கு பாத்திரத்தை எடுத்தாள் “எப்படி காப்பி போடணுன்னே தெரியாதே, சரி நாமளா குடிக்க போறோம், எப்படியோ போடுவோம் குடுச்சுட்டு சாகட்டும்” என்றவள் அவள் கைவண்ணத்தை ஆரம்பித்தாள்.
சில நொடிகளில் தன்னருகில் அரவம் உணர்ந்தவள் திடுக்கிட்டுத் திரும்பவும் “ஹேய் ஹேய் நான் தான் பயப்படாத” என்ற காண்டீபன்
நேத்ராவை கூர்ந்து பார்த்துக்கொண்டு “இந்த சுடிதார் உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்றார்.
முகத்தை சுருக்கியவள் “தேங்க்ஸ் சார்” என்றுவிட்டு வேகமாக காப்பியை கலங்கினாள்.
“இரு இரு என்ன அவசரம் பொறுமையா, கையில பட்டுட போகுது” என்றவர்,
“நேத்ரா நீயும் எத்தனை தடவை தான் லேட்டா வருவ நானும் உன்னை எத்தனை தடவை தான் எக்ஸ்கியூஸ் பண்றது, அதுனால கொஞ்சம் என்னைய அட்ஜெஸ் பண்ணேனா நானும் நீ பண்ற தப்பெல்லாம் கண்டுக்க மாட்டேன் என்ன சொல்ற” என்றவர் நேத்ராவின் கை பிடித்திருந்தார்.
“ம்ம்… என்ன சொல்றேனா, கொஞ்சம் கையை எடுங்க சார் சொல்றேன்” என்றவள் காண்டீபன் கையை விட்டதும் சப்பென்று அவர் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
அவள் அறைந்தவுடன் “நேத்ரா…” என்று கத்திய காண்டீபனை,
“சீ… நீயெல்லாம் ஒரு மனுஷன், பொண்ணுங்க தப்பு பண்ணா… உடனே அவங்கள உங்க ஆசைக்கு அடிபணிய வைப்பீங்க, இதுவே உன்னோட பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா, உங்கள மாதிரி ஆளுகளெல்லாம் திருத்தவே முடியாது” என்றவள் வேகமாக வெளியேறினாள்.
மூச்சுவாங்க அவளிடத்தில் அமர்ந்தவள் ரிஸிங்நேஷன் லெட்டருடன் திரும்பி வந்தாள்.
“இந்தாங்க நீங்களும் உங்க வேலையும்” என்று லெட்டரை காண்டீபன் முகத்தில் விசிறியடித்தாள்.
“நேத்ரா இதுக்கான கான்சீக்குவேன்ச நீங்க கண்டிப்பா பேஸ் பண்ணி தான் ஆகணும்” என்று கத்தினார்.
“கண்டிப்பா சார் உங்களை மாதிரி ஆளுங்கள பேஸ் பண்றதுக்கு, அது எவ்வளவோ பரவாயில்லை” என்றவளிடம்
“பொழைக்க தெரியாத பொண்ணா இருக்கியே மா…” என்று தொடங்கியவரை கை உயர்த்தி வேகமாக தடுத்தவள்,
அதே வேகத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தாள்.
அவள் சென்றவுடன் தன் இருக்கையில் அமர்ந்த காண்டீபன் இதெல்லாம் சகஜம் என்பது போல் அவர் வேலையைத் தொடர்ந்தார்.
நேத்ரா, காண்டீபனின் அனுபவத்தில் எந்த எண்ணிக்கையில் இருப்பவளோ! அவர் மட்டுமே அறிவார்.