ஞாயிறன்று காலை வேகமாக விழிப்புத் தட்டியவுடன் நளனின் கையணைப்பிலிருந்து மெதுவாக எழுந்தவள், அவனை அசைக்காமல் அவள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தன் தாய்க்கு அழைத்தாள்.
“தங்கம் எழுந்துட்டியா, நானும் அப்பாவும் அங்க தான் வந்துட்டு இருக்கோம், உனக்கு பேசணுன்னு நெனச்சேன் நீ தூங்கீட்டு இருப்பியேன்னு தான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசலான்னு இருந்தேன் அப்படியே மறந்துட்டேன்” என்ற ரேணுகாவிடம்,
“அப்படியா ஏம்மா முன்னமே சொல்லலை” என்று சலித்துக் கொண்டவள், சரி வாங்க” என்றாள் சந்தோஷமாக.
அடுத்த அரை மணி நேரத்தில் ரேணுகாவும் ஈஸ்வரமூர்த்தியும் வந்துவிட அவர்களை ஆவலாக வரவேற்றவள், ஹாலில் அமர வைத்தாள்.
“எங்கம்மா மாப்பிள்ளையை காணோம்?” என்ற தந்தையிடம்,
“இன்னைக்கு சண்டேல பா லேட்டா தான் எந்திரிப்பாங்க, இருங்க நான் எழுப்புறேன்” என்றவளை,
“ஐயோ வேண்டாம் மா மாப்பிள்ள தூங்கட்டும், அவங்க எழும் போது எழுந்து வரட்டும்” என்றார்.
“நேத்ரா நல்லா இருக்கியா? மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காரா” என்ற ஈஸ்வரமூர்த்தியிடம் நேத்ரா பதில் சொல்லும் முன்,
“ஏன் இல்லை, அதான் பாத்தாலே தெரியுதே, இவ்வளவு பெரிய வீடு, வேலைக்கு ஆளு, புள்ளைய சமைக்க கூட விட மாற்றாரு போல” என்றார் ரேணுகா மெச்சுவது போல்.
“ஆமாமா சமைக்க சொன்னாலும் உம்பொண்ணு அப்படியே சமைச்சு கிளிச்சு போடுவா, புள்ளைய வளத்து வச்சிருக்கா பாரு, எதோ மாப்பிள்ளை நல்லவரா இருக்கப் போயி விட்டுவச்சிருக்காரு இல்லன்னா கஷ்டம் தான்” என்றார் ஈஸ்வரமூர்த்தி.
“ம்ம் ஏன், என் புள்ள எதுக்கு சமைக்கணும், எம்புள்ள தான் கைநெறையா சம்பாரிக்கிறா வேணும்னா சமைக்கிறதுக்கு கூட ஆள் வச்சுக்கலாம்” என்ற ரேணுகாவை முறைத்தவர்,
“இவளை கெடுக்குறதே நீதான், அம்மா நேத்ரா மாப்பிள்ளை தான் வேலைக்கு பிடிச்சா தானே போக சொன்னாரு, நீ எதுக்கு மா கஷ்டப்படுறே” என்றவரிடம்,
“வேலைக்கு போறதுலல்லாம் கஷ்டமில்லை அவளுக்கு, நீங்க பேசாம இருங்க” என்ற ரேணுகா,
நேத்ராவிடம் “தங்கம் அம்மா நித்தம் சொல்றதை தான் இப்பவும் சொல்றேன். வேலைய மட்டும் விட்டுடாத, அப்புறம் கடைசி வரைக்கும் அம்மா மாதிரி வீட்டு வேலை மட்டும் தான் செய்யணும்” என்றார் ரேணுகா.
தினமும் தாயுடன் போனில் பேசும் நேத்ரா இங்கு நடப்பது அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்வாள்.
“அம்மா விடும்மா வீடு எப்படி இருக்கு?” என்ற நேத்ராவிடம்,
“ம்ம் ரொம்ப நல்லா இருக்கு என்ன சிலதை அங்க இங்க மாத்தி வச்சா நல்லா இருக்கும்” என்றார் ரேணுகா வீட்டை சுற்றிலும் பார்வையிட்ட படி.
ரேணுகாவின் பேச்சில் கோபமுற்ற ஈஸ்வரமூர்த்தி “நீ எதுக்கு மாத்துற? இது அவங்க வீடு அவங்க விருப்பப்படி எப்படிவேனா இருந்துட்டு போகட்டும், அவங்க விஷயத்துல நீ தலையிடாத” என்று அதட்டினார் ஈஸ்வரமூர்த்தி.
“அதெப்படி நீ வாடா தங்கம்” என்றவர் நேத்ராவுடன் சேர்ந்து சில பொருட்களை ஆங்காங்கு மாற்றி வைத்தார். நேத்ராவின் அறைக்கு வந்தவர் அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை கையில் எடுக்கவும், அவரை அறையை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தவள்,
“அம்மா, அந்த போட்டோ அங்கேயே இருக்கட்டும் எடுக்காத” என்றாள் நளனை புரிந்தவளாக.
“அந்த போட்டோ எவ்வளவு அழகா இருக்கு, அதை ஹால்ல மாட்டுனா தான் நல்லா இருக்கும்” என்றவர் ஹாலில் அதை மாட்டினார்.
லிவிங் ரூம் சோஃபாவில் கோபமாக அமர்ந்திருந்த நளன் ஈஸ்வரமூர்த்தியையும் ரேணுகாவையும் கண்டதும் “வாங்க மாமா வாங்க அத்தை” என்றான் புன்னகை முகமாக.
அவர்கள் இருவரிடமும் நன்றாக பேசியவன், அவர்கள் சென்றவுடன் நேத்ராவை அழைத்தான், “ஹனி என்ன பண்ணிவச்சிருக்க? ஏன் எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்க?” என்றான்.
“அது….அது… என்றவள் நான் மாத்தலை” எனவும்
கடினமான முகத்துடன் “நீ மாத்தலைனா பின்ன யாரு மாத்துனா?” என்றான்.
“அம்மா…” என்று எதோ சொல்ல வந்தவளை,
“ஸ்டாப்… என்று தடுத்தவன் உங்க அம்மா சொன்னாங்கன்னா உனக்கு எங்க போச்சு புத்தி? இடியட், லிசன் வேற எதை வேணாலும் எங்க வேணாலும் மாத்தி வச்சுக்கோ, ஆனா இந்த போட்டோவை என்னை கேக்காம யாரும் தொடக்க கூடாது” என்றவன் மீண்டும் பெட் ரூமில் அதே இடத்தில் மாட்டினான்.
நளன் திட்டியவுடன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், சிறிது நேரத்தில் அவளாகவே வந்து நளனிடன் மன்னிப்பு வேண்டினாள்.
நேத்ரா சிறுவயது முதல் தன் தாயின் சொல்படி வளர்ந்தவள், அவள் தாய் எது சொன்னாலும் அப்படியே கேட்பாள். இப்போது கணவன் என்று ஒருவன் வந்தவுடன் அவன் கூறுவதைக் கேட்பதா? அல்லது தாயின் பேச்சைக் கேட்பதா? என்பதில் பெருத்த குழப்பம் அவளுக்கு.
ரேணுகாவுக்கோ நாம் தான் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை, தன் மகளாவது தன் ஆசையை தீர்க்க வேண்டும், என்பதுதான். அதில் தவறொன்றும் இல்லை, ஆனால் நேத்ராவை அவளுக்கென்று ஆசை கனவு இப்படி எதுவும் இல்லாமல் தன்னுடைய கனவினை நேத்ராவின் மேல் திணித்து வளர்த்திருக்கலாம்,
ஆனால் மருமகன்? நளனோ சிறுவயது முதல் அவன் ஆசைப்பட்டதை, தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதை தானாக முடிவெடுத்து செயலாற்றும் திறன் கொண்டவன். நேத்ராவையும் அப்படி இருக்குமாறு கூறியிருப்பவன்.
இப்போது சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபர் (கணவன் மனைவிக்கு இடையில் அனைவரும் மூன்றாம் நபர் தானே) வந்து நளனின் கனவுகளை தடுப்பதை விரும்புவானா? பொறுத்திருந்து பார்ப்போம்…