Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 22
அத்தியாயம்-22
நேத்ராவை கூட்டிக் கொண்டு நளனும் அவளும் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்த ரேணுகா, நேத்ராவிடம் “தங்கம் அம்மா சொல்றதை கேப்பியா மாட்டியா?” என்றார், சோபாவில் அமர்ந்திருந்த நேத்ராவின் தாடை பிடித்து.
Advertisement
மனம் முழுவதும் நளனையே சுற்றி வர யோசனையாக அமர்ந்திருந்தவள் “என்னம்மா சொல்லுங்க” என்றாள்.
முகத்தை நேத்ராவிடமிருந்து வேறு புறம் திருப்பியவர் “தங்கம் இந்த குழந்தை வேண்டாம், கலைச்சிடலாம்” என்றார்.
Advertisement
Advertisement
சோபாவில் இருந்து படாரென்று எழுந்தவள் “அம்மா என்ன பேசுற நீ, இது எனக்கும் அவருக்கும் பொறக்கப்போற முதல் குழந்தை, இது எங்களோட காதலுக்கு சாட்சி, இதை எப்படி? எதுக்கு?” என்றாள் மனதின் குழப்பத்தை முகத்தில் காட்டி,
“தங்கம், இந்த மாதிரில்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் இன்னும் மூணு நாலு வருஷம் கழிச்சு கல்யாணம் வைச்சுக்கலாம்னு சொன்னேன், தங்கம் குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் உன்னால குழந்தையை விட்டுட்டு வேலைக்குப் போக முடியாது,
Advertisement
அப்புறம் குழந்தைக்காக ஆறு மாசம், ஒரு வருஷம் ஆகும். இப்படியே உன்னால வேலைக்கே போக முடியாது, எனக்கும் இப்படித்தான் ஆச்சு நந்தன் பொறந்ததுக்கு அப்புறம், அம்மா உனக்கு ஹெல்ப் பண்ணுவேன் தான்.
ஆனா உனக்கு இப்போ தான் இருவத்திமூணு வயசாகுது, இன்னும் எத்தனையோ வருஷம் இருக்கு, குழந்தை எப்போ வேணாலும் பெத்துக்கலாம், ஆனா உன்னோட கெரியர் போச்சுன்னா, உங்க சுப்ரியா மேடம் சொன்ன மாதிரி கஷ்டம்,
அதுனால அம்மா சொல்றத கேளு, அம்மா எப்பவும் உன்னோட நல்லதுக்கு தானே சொல்லுவேன்” என்றார் ரேணுகா அவரது விளக்கமாக,
தாயைப் பற்றி தெரிந்த நேத்ராவிற்கு நளனைப் பற்றி தெரியாதா என்ன “அது சரிம்மா ஆனா என்ன முடிவுன்னாலும் அவரு கிட்ட கேட்டுட்டு பண்ணலாம் அது தான் சரியா வரும்” என்றாள் நேத்ரா தாயின் முகம் நோக்கி.
தான் இவ்வளவு எடுத்துரைத்தும் புரிந்து கொள்ளாத நேத்ராவிடம் “ம்ஹ்ம் நான் சொல்றது உனக்கு புரியலை, உன்னோட வீட்டுக்காரரு கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, அதுனால அம்மா சொல்றதைக் கேளு,
ரெண்டு மணி நேரத்துல எல்லாம் முடிஞ்சிரும், அப்புறம் நீ எப்பவும் போல இருக்கலாம், இந்த விஷயம் உனக்கும் எனக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது, அம்மாவும் யார் கிட்டயும் மூச் விட மாட்டேன், நீயும் சொல்லாத ” என்றார் பெரிய திட்டத்தை எளிமையாக விளக்கும் பொருட்டு.
எந்த ஒரு சிறு காரியம் என்றாலும் தாயின் பேச்சைக் கேட்டு நடக்கும் நேத்ராவுக்கு, தாய் தனக்கு நல்லது தான் செய்வாள் என்ற உறுதி இருந்தாலும், நளன் மீது அவள் கொண்ட உண்மையான காதல் அவளை அதை செய்யவிடாமல் தடுத்தது.
தாய் செய்யச் சொல்லும் காரியம் அவர்களது காதலுக்கு எவ்வளவு முரண்பாடானது என்று தெரிந்தும் ரேணுகாவிற்கு சரி சொன்னாள் நேத்ரா.
பெருமூச்சொன்றை வெளியேற்றிய ரேணுகா “சரி நீ தூங்கு மாப்பிள்ளை வந்தா நான் உனக்கு தலை வலின்னு சொல்லிக்கிறேன், நாளைக்கு காலையில நாம ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்றவர் நேத்ரா விழித்திருந்தால் நளனிடம் எதாவது சொல்லக்கூடும் என்றுணர்ந்து, பாலில் சிறிய தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தார்.
நேத்ரா உறங்கியதை உறுதி செய்து கொண்டவர், நளன் வரும் வரை காத்திருந்து அவனிடம் நேத்ராவுக்கு தலைவலி என்றுவிட்டு அவர் வீட்டுக்கு கிளம்பினார்.
படுக்கை அறையில் சென்று பார்த்தவனோ குளித்து உடைமாற்றி பின்னிருந்து நேத்ராவை அணைத்துக் கொண்டு படுத்தவன் அப்படியே உறங்கியும் போனான்.
காலை கண் விழித்தவன் இன்னமும் நேத்ரா உறங்கிக் கொண்டிருக்க, நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன் சாதாரணமாக இருக்கவும், சரி தூங்கட்டும் என்று நினைத்து அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டு நெற்றியில் முத்தமிட்டு, ஆபீஸ் கிளம்பிச் சென்றான்.
ஹாஸ்பிடலுக்கு நேத்ராவை அழைத்துச் சென்ற ரேணுகா நேத்ராவின் வயிற்றில் துளிர்த்த சிறு மொட்டை மலர விடாமலே அழித்திருந்தார்.
டிஅன்சி முடிந்து ஹாஸ்பிடலில் கண்விழித்த நேத்ரா அவள் வயிற்றை தடவிப் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
ரேணுகாவோ அழும் நேத்ராவைத் தேற்றி ஆறுதல் மொழிகள் கூறவில்லை, ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ.
பின்பு மதிய நேரம் தாண்டி நேத்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தவர், அவளுக்கு உணவு கொடுத்து உறங்கச் செய்தார். அன்று வீட்டிற்கு மத்தியானம் தாண்டி எதோ வேலையாக வந்த நந்தன், நேத்ராவைக் காணவும் அவளிடம் சென்றான்.
கட்டிலில் முழங்கால்களைக் கட்டி அமர்ந்திருந்தவளிடம் சென்றவன் “ஹே குட்டி பிசாசு, எப்போ வந்த” என்றான்.
தலைநிமிர்த்தி நந்தனைக் கண்டவளின் கண்களைக் கண்டவன் எதுவோ சரி இல்லை என்பதை உணர்ந்து, நேத்ராவின் அருகில் அமர்ந்தான்.
“நேத்ரா என்னாச்சு அழுதியா, ஏன்?” என்றான்.
நந்தன் நேத்ராவிடம் வினவவும் “அண்ணா என்று அவனைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தவள், அனைத்தையும் கூறி முடித்தாள்.
அண்ணா எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்குண்ணா, என்னால எப்படி இந்த விஷயத்தை அவருகிட்ட சொல்லாம இருக்க முடியும்” என்று அழுது கரைந்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட நந்தனுக்கு கோபம் தலைக்கேற வீடே அதிரும்படி “அம்மா….” என்று அலறினான்.
அந்த நேரம் பார்த்து ஈஸ்வரமூர்த்தியும் வீட்டினுள் நுழைய, “நந்தா என்னப்பா, ஏன் இப்படி கத்துற? என்றவர் நேத்ராவைப் பார்த்து, நேத்ரா நீ எப்போ மா வந்த?” என்றார் நேத்ராவிடம்.
நந்தன் விட்டால் ரேணுகாவை பார்வையாலேயே பொசுக்கிவிடும் வேகத்தில் இருந்தவன், ஈஸ்வரமூர்த்தியிடம் “அப்பா உங்க மனைவி என்ன காரியம் பண்ணீட்டு வந்திருக்காங்க தெரியுமா?” என்றவன் நடந்ததைக் கூற,
ஈஸ்வரமூர்த்தி அறைந்த ஒரு அறையில் மூலையில் சென்று அமர்ந்திருந்தார் ரேணுகா. “ஏண்டி உன்னைய என்ன சொன்னேன், அவங்க குடும்ப விஷயத்துல தலையிடாதான்னு சொன்னேனா இல்லையா? இப்போ நம்ம பொண்ணோட வாழ்க்கையை நீயே கெடுத்திட்டியே டி பாவி,
சரி, சும்மா சின்ன சின்ன விஷயத்துல தலையிடுறன்னு நானும் சும்மா இருந்தேன். மாப்பிள்ளைக்கு நீ சின்ன விஷயத்துல தலையிடுறதே பிடிக்கலை, நேத்ராவோட முகத்துக்காகத் தான் எதுவும் சொல்லாம பேசாம இருந்தாரு, இப்போ இவ்வளவு பெரிய காரியத்தை பண்ணீட்டு வந்திருக்க,
இந்த விஷயம் மட்டும் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?” என்றவர் ஏதோ பேச வந்த ரேணுகாவை பேசவிடாமல் அடி வெளுத்தார்.
நேத்ராவிடம் “அவ தான் கூறு கேட்டு போயி அப்படி சொல்றான்னா, உனக்கு எங்கம்மா போச்சு அறிவு?” என்றவர் சோர்ந்து போய் அமர்ந்துவிட,
இரு மனதாக இருந்த நேத்ராவோ இப்போது தான் செய்தது மாபெரும் பிழை என்று உறுதிப்படுத்தி இருந்தாள்.
நந்தனோ “நேத்ரா வா கிளம்பு, அவரா தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி மச்சான் கிட்ட மொதல்ல எல்லாத்தையும் சொல்லி மன்னிப்புக் கேளு” என்றவன் நேத்ராவை கூட்டிக்கொண்டு அவள் அப்பார்ட்மெண்டிற்குச் சென்றான்.
