அருந்ததீ அருண் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது வந்து பார்த்துவிட்டு சென்றார். இவர்கள் போலீஸ் கேஸ் என்று போனது முட்டாள்தனம் என்றார்.அண்ணன்கள் மூளையில் ஏற்றியதை வந்து பேசுகிறார் என்று புரிந்தாலும் “அப்ப என்ன கஷ்டப்படுத்தினவங்கள சும்மா விட சொல்றீங்களா” என்று கேட்டான் மகன்.
அருந்ததீ “அப்படி இல்லடா கண்ணா பிரைவேட்டா டீல் செய்திருக்கலாம் இப்படி போனா அவங்க பேர் கெடும், அப்புறம் நம்ம பேர் கெடுக்க பார்ப்பாங்க அதான்…”
“அம்மா நான் நியாயமா இருக்கேன். எனக்கு வர பிரச்சனையை நியாயமாதான் டீல் பண்ணுவேன்” ஆணித்தரமாக பேசினான் அருண்.
அருந்ததீக்கு மகன் வளர்ந்துவிட்டான் என்று தோன்றியது. எப்போதும் உணரும் வலியுடன் “இங்க பிசினஸ்ல பல நேரம் அநியாயமா நடந்துக்கிற மாதிரி இருக்கும்டா கண்ணா பார்த்து இரு” என்று அவன் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றுவிட்டார். துக்கத்தை எதிர்கொள்ளாமல் கடந்து செல்லும் பழக்கம் உடையவர் அம்மா என்று அறிந்தும் ஒரு நொடி அவர் ஆறுதலுக்கு மனம் ஏங்கியது.
தமயந்தி மூலம் நடந்த எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பூமிக்கு அருண் நினைத்து பாவமாக இருந்தது. மூவரில் அருண் மீது இவளுக்கு தனி அக்கறை உண்டு. ஆனால் அருண் அண்ணா தானே என்று இவள் இளகினால் மற்ற இரண்டும் கூடவே தொத்திக்கொண்டு வரும். இப்பொது பூமிக்கு ‘எங்க போனாலும் இவனுங்க தொல்லை தாங்கலையே ஆண்டவா’ என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் நிலை. இவனுங்களோட பழக்கம் வேண்டாம் என்று தமயந்திக்கு இன்னமும் அழுத்தி சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டுமோ என்றே தோன்றியது. தமயந்திக்கு அவளுக்கு பிடித்த விளையாட்டு தவிர எதிலுமே தயக்கம். ‘ஸ்டார்டிங் ட்ரபிள்’ என்பார்களே அது மிகவும் அதிகம். இயல்பிலேயே விளையாட்டில் ஆர்வம் இருப்பவளுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டு,என்றாலும் அது அவள் ஒரு காரியத்தில் இறங்கும்வரை வெளியே வரவே வராது. அதிலும் மனிதர்களை நம்புவதற்கு மிகவும் சிரமப்படுவாள். ஒருவரிடம் சென்று பேசினால்தான் காரியம் நடக்கும் என்றால் அந்த காரியத்தை தமயந்தி செய்வது சந்தேகமே!
அன்று அவர்கள் தியேட்டர் விட்டு வெளியே வந்து அவளுக்கு பிடித்தது போல டி-ஷர்ட் வாங்க மாலுக்கு சென்றனர். தமயந்தி இல்லாத நேரம் அருகில் வந்தவன் “அவளை அவ இஷ்டப்படி விடலாம் தானே” என்றான். யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போலவே எந்த விதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் நின்றாள் பூமிகா. அப்போதும் அவன் “ப்ளீஸ் பூமி பேசு” என்று கெஞ்சும் குரலில் கேட்கவும் அவன் புறம் திரும்பவிட்டாள். ஹ்ம்! ஒரு நொடி ஒரே நொடி மட்டுமே அவளால் அவனை தவிர்க்க முடிந்தது. என்ன கேவலமான மனம் இது!!
அவள் முகத்தை பார்த்தவன் கண்களின் நீர் பளபளப்பு இன்னமும் அழுத்தமாக நினைவில் நிற்கிறது. எப்போதும் போல அவனுக்கே உரிய பொறுமையான குரலில் “தமயந்தி எங்களோட பழகட்டும் இவ்ளோ செலெக்ட்டிவாதான் பேசுவேன் பழகுவேன்னு இருக்கிற ஆள் எம்பிஏ படிச்சு வேஸ்ட். நாளைக்கு வேலைக்கு போய் இப்படியெல்லாம் இருக்க முடியாது தானே” என்றான். இவளுக்கு தெரியதாமா! இவன் சொல்லித்தான் அது தெரியணுமா அவளுக்கு!! எரிச்சல் உண்டானது.கணநேரம் பேசாமல் அவன் முகத்தை மட்டுமே பார்த்தவள் பதில் சொல்லாமல் விலகி நடந்து வந்துவிட்டாள்.அன்றிலிருந்து அவனுக்கு என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் என தினம் யோசிப்பாள்.
திருவாரூர் வந்தது இசை பயணத்திலுமே நல்ல மாற்றம். அவள் அம்மா ஆசைப்பட்டது போல இசை கச்சேரி ரம்மியமாக நடக்குமென நம்பிக்கை அவளுக்கே வந்திருக்கிறது. சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் பயிற்சியிலேயே இருக்கிறாள். கணவன் மனைவி இரண்டு பேரும் மாற்றி மாற்றி அவளுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டே இருக்க மற்ற சிந்தனை எழுவது அரிதிலும் அரிது.அப்பவும் அவனை பற்றிய சிந்தனை மட்டுமே எழுகிறதே அதுதான் ஆத்திரம். பதில் பேசாது அவள் பார்த்த நேரம் அவனும் அவளை நேராக பார்த்தான். அவனுக்கு தன் மேல் பிரியம் என்று அவள் அறிந்த நாள் முதல் இன்று வரை அவளை பார்க்கும்போதெல்லாம் அந்த பார்வையில் அன்பும் ஆர்வமும் கலங்காது தெரிகிறது. அன்றும் தெரிந்தது. பைத்தியம் பிடித்தது. திரும்பவும் சென்னை செல்லவேண்டுமே, அவனை பார்க்கவேண்டுமே என்று சங்கடம் உண்டானது.
தமயந்திக்கு புதுப்பழக்கம் ஒன்று தொற்றி இருக்கிறது. அது அருணுடன் தினம் ஒரு மணி நேரம் ஃப்ரீ பையர் விளையாடுவது. அவனாக மெசேஜ் செய்வான் விளையாடலாமா என்று கேட்டு, இவளும் உடனே ஓகே என்று பதிலளித்துவிட்டு லாகின் செய்ய ‘சுட்டு தள்ளுவது’ தொடங்கிவிடும்.
அருணுக்கு நிறைய வேலைகள். தினம் ஒரு பேங்க், ஆடிட்டர், வக்கீல் என்று ஒவ்வொருவரிடம் சென்று அவன் தொழில் சம்மந்த வேலைகள் முடிக்க வேண்டும். ஆனாலும் ஃப்ரீ பையர் விளையாடுவது மட்டுமே அவனுக்கு அந்த நாளை சிறப்பித்தது.
கல்லூரியில் நாட்கள் அசைன்மெண்ட்,டெஸ்ட்,பிரசன்டேஷன் என்று நெம்புகோல் வைத்து நெம்பவது போல சென்றாலும் தமயந்திக்கு எதுவுமே பெரிதாக தெரியவில்லை. அதுதான் கண்களில் மட்டும் பேசுபவன் இப்போதெல்லாம் கிண்டலாகவும் அவளிடம் பேசுகிறானே. சிரஞ்சீவியின் வாயாடலுக்கு தக்க பதில் அவனிடமிருந்து வருகிறதே.
எப்போதும் போல சிந்தனையை தூண்டும் விதமாக வகுப்பை நடத்திக்கொண்டிருந்த சுஷ்மா “இங்க ஒரு ரூமர் இருக்கு இல்லையா. போன்ஸ்லே பிரின்சஸ் படிக்கறாங்கன்னு. ஒரு வேளை நெஜமாலுமே அந்த பிரின்சஸ் இருந்தா,அவங்கள பாதுகாக்கறது உன் பொறுப்புன்னு ஒரு பிஸ்னஸ் கொடுத்தா நீங்க எப்படி காப்பாத்துவீங்க” என்று கேள்வி கேட்டார்.
பலர் ‘ஆயுத படை அமைத்து காப்பாத்துவேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்க சிரஞ்சீவி “த்ரீ லேயர்ஸ் ப்ரொடெக்ஷன் மேம், புல்லட் ப்ரூப் ஜாக்கெட் மேம், அலாரம் மேம்” என்று தமயந்தியுடன் சேர்ந்து கிண்டலாக மாற்றி மாற்றி சொல்ல சுஷ்மா தமயந்தியை எழுப்பி “ஆயுதம் இல்லாம எப்படி காப்பாத்துவ” என்று கேட்டார்.
யோசித்தவள் தயங்கி தயங்கி “இந்த க்ளாஸ்ல அஞ்சு பொண்ணுங்கதான் இருக்காங்க. அஞ்சு பேரையும் பிரின்சஸ்ன்னு கூப்பிட்டா திட்டம் போடாம சட்டுன்னு அட்டாக் பண்ண வரவனுக்கு யார் பிரின்சஸ்ன்னு தெரியாம குழம்பும் இல்லையா. சோ பிரின்சஸ்ஸ காப்பாத்த டைம் கிடைக்கும். அதிலும் அஞ்சு பொண்ணுங்களும் ஒரே இடத்தில இல்லாம் பசங்களுக்கு நடுல இருக்காங்க. சோ உங்க பக்கத்துல இருக்கிற பிரின்சஸ் உங்க பொறுப்புன்னு பசங்களுக்கு பிஸ்னஸ் ஷேர் பண்ணுவேன்” என்றாள்.
சுஷ்மா “சரி வேற என்ன செய்வீங்க”
தமயந்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமாளித்தாக வேண்டுமே! தீடிரென இப்ப நான் கேட்ட கேள்வியில் உங்க இன்டெர்னல் மார்க் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. தோன்றியதை பேசினாள். “தெரிஞ்சு பிரின்சஸ்ஸ தூக்க வரவனை ஆரம்பத்துல தடுக்க முடியலைன்னா கஷ்டம் அண்ட் அவ்ளோ கஷ்ட்டப்பட்டு நீங்க படிக்கணுமா பிரின்சஸ்ன்னு கேட்டு நானே அவங்கள ஊர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்துருவேன்” என்றாள்.
அங்கிருந்த அத்தனை பேரும் சிரிக்க, சுஷ்மா “ரைட். நீங்க உங்க பிஸ்னஸ்ல வரவு செலவு பார்த்து வரவுக்கு மீறி செலவு ஆகும்போது தயங்காம பின்வாங்கலைன்ன லாஸ் ரொம்ப பெருசா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவர் அன்றைய பாடம் முடிந்தது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
தமயந்தி சிரஞ்சீவியிடம் “வேற எப்படி பிரின்சஸ்ஸ காப்பாத்த முடியும்” என்று கேட்டாள்.
சிரஞ்சீவி “நீ சொன்னதை தான் செய்யமுடியும் வேற எதுவும் செய்ய முடியாது” என்றான்.
தமயந்திக்கு என்ன செய்திருக்கலாம் என்று சிந்தனையே மனதில். மதிய சாப்பாட்டு மேஜையிலும் அவள் அதையே பேச
பூர்ணிமா “பிரின்சஸ்க்கு தன்னை காப்பாத்திக்குற அளவுக்கு சண்டை போட தெரிஞ்சிருக்கும். ஷூட் பண்ணவெல்லாம் தெரிஞ்சிருக்கும். நீ ரொம்ப யோசிக்காத”
தமயந்தி “இருக்குமா”
பூர்ணிமா “கண்டீப்பா சொல்லிக்கொடுப்பாங்க.அதுவும் நம்மளால மத்தவங்களுக்கும் ஆபத்து வரும்ன்னு தெரியறப்ப பிரின்சஸ்ஸும் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் பரவால்லன்னு சண்டை பயிற்சிக்கு போவாங்க”
தமயந்தி “அப்படியா”
பூர்ணிமா “ஆமா அப்படித்தான் போனேன்” என்று சொல்ல ஆண்கள் அதிர்ந்து பார்க்க தமயந்தி வாய் பிளக்க பூர்ணிமா மெதுவான குரலில் “நான் தான் போன்ஸ்லே பிரின்சஸ்.ஆனா கவலைப்படாதே என்னால ஆபத்து எல்லாம் வராது” என்று தெரிவித்தாள்.
தமயந்தி “இப்போ இந்த விஷயத்தை வெளில சொல்ல கூடாதா. ஒரு வேளை நான் உளறிட்டா என்ன ஆகுறது”
பூர்ணிமா “எதுவும் ஆகாது. எனக்கு பிரின்சஸ் ஸ்டேட்டஸ் இல்லாம சாதாரண ஆளாக இருக்க ஆசை அதுக்காகதான் வெளில சொல்லல”
தமயந்தி “சரிசரி அப்போ நானும் வெளில சொல்லல” சமாதானம் ஆனாள்.
பூர்ணிமா ஆசையாக “இந்த வீக்கெண்ட் மால் போலாமா. புதுசா திறந்து இருக்காங்கல்ல அதுக்கு போலாமா வரியா” கேட்டாள்
தமயந்திக்கு இம்முறை கொஞ்சம் மூளை வேலை செய்தது. “யாரெல்லாம் போறது” கேட்டாள்
“நான் வந்தா இவங்க மூணு பேரும் என் கூட வருவாங்க.எனக்கு இவங்க தான் பாதுகாப்பு” என்றாள் பூர்ணிமா.
தமயந்திக்கு பூர்ணிமா இவர்கள் மூவருடன் காலேஜுக்கு காரில் வருவதும் போவதும், மதிய வேளைகளில் சாப்பிடுவதும், ஏன் அன்றைக்கு அருண் பிரச்சனையின் போது கூட பூர்ணிமா வகுப்பறையை விட்டு வெளியே வராமல் ஒரே இடத்தில் இருந்ததும் ஏன்னென்று இப்போது புரிகிறது.
பூர்ணிமா “நான் வெளில பப்ளிக் பிளேஸ் போறதுக்கு எல்லாம் ரெண்டு நாள் முன்னாடி அப்பா, சீப் செக்யூரிட்டி கிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கணும் தமயந்தி. நீ இப்போ ஓகே சொன்னா நாம இன்னிக்கே பெர்மிஷன் கேட்க கரெக்ட்டா இருக்கும்” என்றாள்.
தமயந்திக்கு ஆச்சிரியம் மிகுந்தது. இவ்வளவு இருக்கா என்ற கேள்வி எழுந்தது. ஓகே போகலாம் என்றாள். மூவர் கூட்டணியுடன் வெளியே போவதை பூமி தடுப்பாள் தான் ஆனால் பூர்ணிமா பாவமே!!
உணவில் விஷம் கலந்து அருண் மருத்துவமனையில் அட்மிட் ஆகவும் பூர்ணிமாவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இன்னமும் அதிகம் ஆகின. லோக்கல் பாதுகாப்பு என கபிலன் அவர் ஆட்கள், நாசிக் அரண்மனையிலுருந்து ஷேடோ பாதுகாப்பு ஆட்கள், இதில் போலீஸ் டிபார்ட்மென்ட் பாதுகாப்பு என பல விதமான பாதுகாப்பு அவளுக்கு இப்போது. சுதந்திரம் என்பது துளியும் இல்லாமல் எந்நேரமும் கழுத்தை இறுக பிடித்து மூச்சுவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு. நடந்த சம்பவம் எந்த வகையிலும் இவளுக்கு சம்பந்தமற்றது என்று கபிலன் நிரூபித்து, போலீஸ்ஸும் தெரிவிக்கவும் தான் அரண்மனை பாதுகாப்பு துறை அவள் நடமாட்டத்திற்கு ரிலாக்ஸ் செய்திருக்கிறது. அதை அவள் வீண் செய்யப்போவதில்லை.
பூர்ணிமா “என்ன காய்ஸ் போலாம் தானே”கேட்க மூவரும் போலாம் என்றே சொல்ல தமயந்திக்கு குஷி ஆனது.
தமயந்தி தயங்கி தயங்கி “அந்த மால்ல ஒரு ஷாப்புக்கு… நான் மாடலிங் பண்ணிருக்கேன்…. என் போட்டோ அங்கங்க ஒட்டிருக்கும் சொன்னாங்க…” தகவலாக சொல்ல வர
பூர்ணிமா “ஓகே”
தமயந்தி“அதான் ஜஸ்ட் சொல்லி வைக்கிறேன்”
“அவ்வளவுதானா…” என்று கிண்டலாக கேட்க
தமயந்தி “ல்ல.. அருண் போட்டோவும் இருக்கும்”
சிரித்தவள் பூர்ணிமா “அருண் சொன்னான் தம்ஸ். உன் போட்டோ பார்க்கத்தான் அந்த மாலுக்கு நாம போறதே” என்றாள்
அருணுடன் சேர்ந்து அவர்கள் மாடலிங் செய்த கடைக்கு போவாள் என்றே நினைக்கவில்லை. மால் வாசலிலேயே தமயந்தி முழுக்க முழுக்க அந்த ப்ராண்ட் ஷூ, ஷார்ட்ஸ், வாட்ச், டி-ஷர்ட் அணிந்துகொண்டு பாஸ்கெட் நோக்கி பால் எரியும் போட்டோ பெரிதாக மாட்டி இருந்தார்கள். தமயந்திக்கு அந்த போட்டோ பார்க்கவே வெட்கமாக இருந்தது. இதில் கடை முழுக்க அவள் முகமும் அருண் முகம் சில பல எடிட்டிங் வேலை செய்யப்பட்டும் ஒட்டி இருந்தது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடுவது இதுதானா என்ற நிலையில் மிதந்தாள் தமயந்தி. சிலர் போட்டோவில் இருக்கும் பெண்ணென அடையாளம் கண்டுகொண்டு நீதானா கேட்டு பாராட்டிவிட்டு செல்ல எங்கே இருக்கிறோமென தெரியாத நிலை.
அருண் சின்ன வயதிருந்தே மாடலிங் செய்பவன். நிறைய எனர்ஜி ட்ரிங்க், பிஸ்கேட், சாக்லேட் பேக்கிங் அட்டையில் அவன் முகம் வந்திருக்கிறது. ஸ்கூலில் காலேஜில் கிண்டல் தொடங்கவும் போட்டோஷூட் மட்டுமே இனி டீவி விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான். போட்டோஷூட்டிலும் அவன் முகத்தை சட்டென அருண் என்று கண்டுபிடிக்காத மாதிரி மாற்றிவிட சொல்லுவான். இந்த முறையும் அப்படி சொல்லித்தான் போட்டோஷூட் சென்றான். ஆனால் மால் முழுக்க தமயந்தியின் முகம் பார்க்கும்போது அசல் முகமே இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
பூர்ணிமா “உனக்கு மாடலிங் நல்லா வருது தமயந்தி நீ அதுல இன்னமும் கவனம் செலுத்தலாம்”
தமயந்தி “ஐயோ நீங்க வேற.அந்த லைட், டஸ்ட் எல்லாம் வேண்டாம்பா. நான் காசுக்காக போனேன். இன்னும் ரெண்டு மூணு சீசன் ஷூட்டிங் இருக்கு.அது முடிஞ்சா நான் அந்தப்பக்கமே போகமாட்டேன்பா”
பூர்ணிமா “உன் உயரம், உடல்வாகு கூடவே சின்னதா சிரிப்பு. நல்லா இருக்கு. கன்டினியூ பண்ணு நல்ல காசு,புகழ் எல்லாம் வரும் ”
தமயந்தி வேகமாக முடியாது என்று தலையை ஆட்டியவள் “நான் எம்.பி.ஏ முடிச்சிட்டு பேங்க் இல்ல பைனான்ஸ் கம்பெனியில போய் வேலை பார்ப்பேன். சினிமா, மாடலிங், டான்ஸ் எல்லாம் என் வகையே கிடையாது” என்றாள் அழுத்தமாக
காலம் சிரித்தது.