சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தங்கள் உடைமைகளுடன் கனடாவிலிருந்து இந்தியா வந்து இறங்கினர், நளன் மற்றும் வினோத் இருவரும்.
மனதில் ஏதேதோ எண்ணங்கள் பேரலையாய்த் தோன்ற, ஒருவித படபடப்புடன் நின்றிருந்தான் நளன்.
லக்கேஜ் பெல்ட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜை எடுத்து இரு ட்ரொலிகளில் அடுக்கிக் கொண்டிருந்த வினோத் நளன் அருகில் வந்தான்.
நளன் நின்றிருந்த விதத்திலேயே அவன் மனநிலையை புரிந்து கொண்டவன், அவன் தோள் தொட்டு கண்களை மூடி திறந்தான் ஆறுதலாக.
“டேய் நளா, அப்பா வந்திருப்பாங்க, வா போகலாம் மூஞ்சியை ஏன்டா இப்படி வச்சிருக்க, நல்லா சிரிச்சுகிட்டு தான் வாயேன், சிரிச்சா உன்னோட பல்லெல்லாம் விழுந்திருமா என்ன?” எனவும்,
“சரி சரி வா போகலாம்” என்ற நளன் அவன் ட்ரொலியை வினோத்திடமிருந்து பெற்றுக் கொண்டும், அதை ஏர்போட்டின் வாயிலை நோக்கி துள்ளிக் கொண்டும் சிரித்த முகமாக தன் தந்தையைக் காணச் சென்றான்.
அவன் சிரித்த முகத்தை பார்த்து “யப்பா சாமி எப்படிப்பா இப்படி உடனே முகத்தை மாத்துற, என்னாலலாம் முடியாது” என்ற வினோத்தும் நளனுடன் சேர்ந்து நடந்தான்.
வெளியே நளனின் தந்தை கார்த்திகேயனும் வினோத்தின் தந்தை சக்கரவர்த்தியும் தங்கள் மகன்களின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
தங்கள் மகன்களின் தலைகளைக் கண்டவுடன் எங்கிருந்து தான் கண்களில் கண்ணீர் சுரக்குமோ, இரு தந்தைகளின் கண்களிலும் கண்ணீர் தானாக சுரந்தது.
என்ன தான் நவீன வீடியோ கால் வசதிகள் வந்தாலும் இடைப்பட்ட தூரம் தூரம் தானே… தான் பெற்ற பிள்ளைகளை இரு வருடம் கழித்து கண்டத்தில், இரு தகப்பன்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி.
கண்களை துடைத்த வண்ணம் கார்த்திகேயனும் சக்கரவர்த்தியும் தங்கள் பிள்ளைகளை கட்டி அணைத்துக் கொண்டனர்.
வாய் பேசாத மொழியை கண்களும் கைகளும் தலை முதல் கால் வரை பிள்ளைகளின் சுகத்தை அலசுவதில் தெரிந்தது அவர்களின் ஏக்கம்…
பின் நால்வரும் ஒரே காரில் ஏறி நளனின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
வினோத்தின் தாய் கற்பகவள்ளி அவனின் பத்து வயதில் இறந்துவிட, வினோத் தனிமையில் தவித்தான். சக்கரவர்த்தி காலை வினோத் எழும் முன் வீட்டை விட்டு தொழிலை பார்க்கச் செல்பவர், அவன் இரவு தூங்கிய பின்பே வீடு வந்து சேர்வார்.
பகலை பள்ளியிலும் மற்ற நேரங்களை வீட்டு வேலையாட்களிடமும் கழித்த வினோத் தாயன்புக்காக ஏங்கினான்.
சக்கரவர்த்தியும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.
ஒரு நாள் அவன் நண்பன் நளன் வீட்டிற்குச் சென்றவன், நளனின் தாய் நந்தினியின் தாய்ப் பாசத்தால் அவரிடம் ஒட்டிக் கொண்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை, இரவு உறங்கும் நேரத்தைத் தவிர, அதிக நேரத்தை நளன் வீட்டில் தான் செலவழிப்பான் வினோத்.
சக்கரவர்த்தியும் எப்படியோ தன் மகனுக்கு தனிமை நீங்கியதிலும், அதோடு தாய் பாசம் கிட்டியதிலும் அவரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்.
நந்தினியை அம்மா என்று அழைப்பவன், கார்த்திகேயனை அங்கிள் என்று அழைப்பான்.
தன் மகனின் விருப்பம் தெரிந்த சக்கரவர்த்தி இப்போதும் நளன் வீட்டிற்க்கே அழைத்துச் செல்கிறார்.
அங்கே வீட்டின் வாசல் முன் நின்றிருந்த நந்தினி தன் மகன்களின் வரவுக்காக காத்திருந்தார்.
வாயிலில் கார் சத்தம் கேட்டவுடன் “திலகா ஆராத்தி எடுத்துட்டு வா சீக்கிரம்”, என்று குரல் கொடுக்கவும் வேலையாள் திலகம் ஆரத்தி கரைத்து எடுத்து வந்து நந்தினியிடம் கொடுத்தார்.
காரிலிருந்து இறங்கிய நளனையும் வினோத்தையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்த நந்தினி தன் கையால் பொட்டிட்டு, வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
உள்ளே சென்றவர் தன் இரு மகன்களையும் கட்டிக்கொண்டு கண்ணீரோடு உச்சி முகர்ந்தார்.
சோபாவில் கார்த்திகேயனும் சக்கரவர்த்தியும் அமர்ந்திருந்தவர்கள் “நந்தினி போதும் அழுதது இப்போ தான் புள்ளைங்க வந்திருக்காங்க, போயி ரெப்ரெஷ் பண்ணீட்டு வரட்டும்” என்றார் கார்த்திகேயன்.
சக்கரவர்த்தியும் “ஆமா ம்மா தங்கச்சி வினோத் அங்க இருந்து கிளம்பும்போதே உன்னோட கையால சாப்பிடப் போறேன்னு சொல்லிகிட்டே இருந்தான்” என்றார்.
பின்னர் குளித்து ரெப்பிரேஷ் ஆகி வந்தவர்களுக்கு தடபுடலான விருந்து நந்தினியின் கையால் பரிமாறப்பட்டது.
“அம்மா நானே சமைச்சு நானே சாப்பிட்ட என்னோட நாக்குக்கு இன்னைக்கு தான் உயிர் வந்திருக்கு” என்று சப்புக்கொட்டி சாப்பிட்டான் வினோத்.