முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க,
சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன் விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள் குளிர் காற்றினால், கைகளை மடக்கி மார்பின் குறுக்கே கட்டியவளை, பின்னிருந்து அவன் அணிந்திருந்த ஜெர்க்கினுள் சேர்த்து அணைத்திருந்தான் ஒருவன்.
ஆறடி உயரமும், காற்றில் ஆடும் சிகையும், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பும் அவன் அவளை அணைத்ததில் அவனுடன் ஒன்றிய அவளது முதுகுப்புரமும், அவன் அளவாக திருத்தப்பட்ட மீசை அவள் கழுத்தில் குறுகுறுப்பூட்ட, குளிர் காற்றில் சில்லிட்டிருந்த அவள் மேனி அவனின் செயலால் சூடேறியது.
ம்ம்ம் என்று முனகியவள் முன்னே திரும்பி அவன் அகன்ற மார்பில் தன் மலர் கைகளால் குத்தினாள். பின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் …
பார்த்தவள் “அம்மு…” என்று அடித்துப் பிடித்துக் கொண்டு வேகமாக எழுந்தாள்.
“ஐயோ என்ன இது பகல்ல தான் அவரோட ஞாபகமா இருக்குன்னா, இப்போ கனவுலயும் அவரு தானா” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
அருகிலிருந்த போன் ஒலியெழுப்பி அவள் சிந்தனையைக் கலைக்க, அதில் ஒளிர்ந்த வனிதாவின் பெயரைக் கண்டவள்,
“ஹா… வனிதா, எழுந்துட்டேன் டி” என்றாள்.
“ம்ம் சரி நேத்ரா, உன்னை எழுப்ப தான் கால் பண்ணேன், சீக்கிரமா கிளம்பி இன்டெர்வியூக்கு வந்துடு, லேட் பண்ணீடாத டி ப்ளீஸ், நீ இன்டெர்வியூ முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு, ஆல் தி பெஸ்ட் டி பை ” என்றவள்
“என்னடி சத்தத்தையே காணோம் இருக்கியா” எனவும்
“ம்ம்ம் இருக்கேன், தேங்க்ஸ் வனிதா, நான் கரெக்ட் டைமுக்கு வந்துடுறேன்” என்றவள் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து இளமஞ்சள் சுடிதாரில் உயரக் கட்டிய போனிட்டெய்லுடன் மாடர்ன் தேவதை போல் கிளம்பி வந்தவளை,
“என்ன குட்டி பிசாசு இன்டெர்வியூவுக்கு ப்ரீபேர் பண்ணீட்டியா? இல்ல சும்மா டைம் பாஸுக்காக இன்டெர்வியூ போறியா” என்று
மேஜையில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்த நந்தன் வம்புக்கு இழுக்கவும்.
“அம்மா பாருங்கம்மா…” என்று ரேணுகாவை அழைத்தாள் நேத்ரா.
“டேய் நீ சும்மா இரு டா, பாவம் புள்ள நைட் பூராம் படிச்சுக்கிட்டு இருந்துச்சு” என்றார்.
“என்ன நைட் பூராம் படிச்சாளா, நம்புற மாதிரி இல்லையே” என்றவன் எழுந்து வந்து நேத்ராவின் பின் தலையை தொட்டு அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தவனை,
“டேய் நெட்டை குரங்கு என்ன டா பண்ற… விடுடா” என்று விலகி நின்றாவள் சிலும்பியிருந்த முடிகளை நேராக எடுத்துவிட்டாள்.
“இல்லை… நைட் புல்லா படிச்சன்னு அம்மா சொன்னாங்க, அதான் பின்னாடி எதாவது ஒளிவட்டம் தெரியுதான்னு பாத்தேன்” என்றான் கண்களால் நேத்ராவின் பின் மண்டையை நோட்டமிட்டவாறு,
மீண்டும் “அம்ம்ம்ம்மா…” என்று அழுத்தமாக கத்தியவளை,
“டேய் நந்தா அவளே டென்ஷனா இருக்கா, அவளை ஏன் டா வம்பு பண்ற” என்ற ரேணுகாவிடம்
“சரி சரி சீக்கிரம் கிளம்ப சொல்லு, நானே கொண்டு போயி விட்டுடறேன்” என்றான் நந்தன்.
பின் சீக்கிரம் உணவு உண்டு கிளம்பியவளை, அவனுடன் அழைத்துச் சென்றான்.
போகும் வழியில் அந்த நிறுவனத்தின் முகவரியைக் கேட்டவன், ஒரு நொடி பிரேக் இட்டு நேத்ராவைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் ‘என்ன’ என்பது போல் தலையை ஆட்டவும், ‘ஒன்றுமில்லை’ என்றவன் நேராக அந்த நிறுவனத்தின் வாயிலில் வந்து நிறுத்தினான்.
வண்டியிலிருந்து இறங்கி வந்தவளை “இங்க தான் வனிதா வேலை பாக்குறாளா” என்றான்.
“ஆமாண்ணா ஏன்?” என்றாள் நேத்ரா.
“இல்லை இந்த கம்பெனி யாரோடதுன்னு உனக்கு தெரியுமா” என்றான் சீரியசாக.
அவளும் சீரியசாக முகத்தை வைத்தவள் நந்தன் அருகில் வந்து “ஏண்ணா… உனக்கு தெரிஞ்சவங்க கம்பெனியா இது? ஐயோ ரொம்ப நல்லதா போச்சு, ப்ளீஸ் ணா நீயே இந்த இண்டெர்வியூ எல்லாம் இல்லாம, ஏதாவது பேசி வேலை வாங்கிக்கொடேன், காலம் முழுக்க உன்னை அண்ணான்னு மட்டும் தான் கூப்பிடுவேன்” என்றாள் கண்களை உருட்டி.
“கொழுப்பு… என்றவன் சரி எதாவது எமெர்ஜென்சின்னா கால் பண்ணு, ஆல் தி பெஸ்ட்” என்றவனுக்கு நன்றி உரைத்து உள்ளே சென்றாள் நேத்ரா.
உள்ளே சென்றவள் நேராக ரிசெப்சனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ, ஐ கேம் ஹியர் போர் அன் இன்டெர்வியூ, மே ஐ நோ வேர் இட்ஸ் கோயிங் ஆன்?” என்றாள்.
“சுயர், மேம் மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்” என்ற அந்த ரிசெப்சன் பெண்ணிடம்
“நேத்ரா, நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்றாள்.
“எஸ் மேம்…” என்று அப்பெண் இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு வழியைக் கூறியவுடன் அப்பெண்ணிற்கு நன்றியுரைத்துவிட்டு இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு நடந்தாள்.
இன்டெர்வியூ நடக்கும் அறைக்கு முன்னே வந்தவள், அவளுக்கு முன்பே பத்து பேர் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
“என்ன நாமளே சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கோம் இங்க நமக்கு முன்னாடி இதனை பேரு உக்காந்திருக்காங்க, நமக்கு வேலை கிடைச்ச மாதிரி தான், ரொம்ப சின்சியர் சிகாமணிகளா இருப்பாங்க போலயே” என்று நினைத்தவள் அங்கு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தாள்.
“இந்த இன்டெர்வியூலாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ தெரியலை, இங்க உக்காந்திருக்கவங்கள்லாம் பாத்தா ரொம்ப தைரியமா இருக்க மாதிரி இருக்கு, நாம மட்டும் தான் பயப்படுறோமா?” என்று தன்னுள் பேசியவள்,