சந்தியா வெற்றிகரமாக இரண்டாம் வருட படிப்பை முடித்து விடுமுறைக்கு தன் கிராமத்திற்க்கு சென்றாள். அவளைப்பார்த்ததும் அவள் வீட்டினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். சென்ற ஆண்டு அவள் இரண்டு முறை மட்டும் தான் ஊருக்கு வந்திருந்தாள்.
சந்தியா ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வந்ததால், வீட்டில் அனைவரிடமும் செல்லம் கொஞ்சிக்கொண்டு திரிந்தாள். சந்தியா வந்திருப்பதால் அன்று மதியம் அவர்கள் வீட்டில் விருந்து தடபுடலாக இருந்தது.
அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு அருந்தும் போது, சந்தியா அவள் சென்று பெரியசாமியை பார்த்துவிட்டு வந்ததைப் பற்றிச் சொல்ல, அதைக் கேட்டதும் சந்தியாவின் அப்பா துரையின் முகம் மாறியது. சந்தியா அதைக் கவனிக்காமல் பேசுவதைத் தொடர்ந்தாள்.
“மாமா இப்ப முன்ன மாதிரி இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் கதிர் மாமா தான். அவங்க அப்பாவை அவங்க எப்படிப் பார்த்துக்கிறாங்க தெரியுமா…” என்றாள் பெருமையாக,
அதுவரை மெளனமாக இருந்த துரை “நான் தான் அவங்க உன் மேல சடவா இருக்காங்க. அங்க போகாதேன்னு சொன்னேன்ல…” என்றார் கோபத்தை அடக்கிய குரலில்.
அப்போதும் அதைப் புரிந்துகொள்ளாத சந்தியா “மாமா உடம்பு முடியாம இருக்கும் போது, நானும் அதே ஊர்ல இருந்திட்டு எப்படிப்பா பார்க்காம இருக்க முடியும்? பெரிய மாமா என்கிட்டே நல்லாத்தான் பேசினாங்க, அத்தை தான் முதல்ல சரியாவே பேசலை, இப்ப அவங்களும் என் கிட்ட நல்லா பேசுறாங்க…” என்றாள் மகிழ்ச்சியாக,
அவள் பேசப்பேச துரையின் முகம் கடுமையாக மாறியது. அவர் “கதிர் எப்படி உன்கிட்ட நல்லா பேசுறானா?” என்றார் ஒரு மாதிரி குரலில்,
சந்தியா கதிர் பேசவில்லை என்று சொன்னால் தன் அப்பா கோவிப்பாரோ என்று பயந்தாள். அதனால் “நல்லா பேசுறாங்களே….” என்றாள்கதிரை விட்டுக்கொடுக்காமல்.
அவ்வளவு தான் தன் முன்னால் இருந்த தட்டை தள்ளிக்கொண்டு கோபமாக எழுந்த துரை வேதவல்லியை பார்த்து “உங்க அண்ணன் குடும்பத்துக்கு மான ரோஷமே கிடையாதா, நான் தான் அன்னைக்கு அவ்வளவு சொன்னேனே, உன் பொண்ணுக்கு வேற ஜாதிக்காரன கல்யாணம் செஞ்சா, என் பொண்ணை உன் பையனுக்குத் தரமாட்டேன்னு. அப்புறம் எந்த முகரைய வச்சிக்கிட்டு உன் அண்ணனும், அண்ணன் மகனும் என் பொண்ணுக்கிட்ட பேசுறானுங்க, என் மகளை மயக்கி உங்க அண்ணன் மகன் கல்யாணம் செய்யப் பார்க்கிறானா…..”
“அது நான் உயிரோட இருக்கும் வரை நடக்காது. உன் அண்ணன் குடும்பத்தோட உறவு முறிஞ்சது, முறிஞ்சதுதான் தான். நான் அதை வெளிய காமிக்காம இருக்கிறதே பெரிசு, இதுல உங்க அண்ணனுக்கு என்னோட சம்பந்தம் செய்யும் ஆசை வேற இருக்கா….” என்று காட்டுக் கத்தலாக துரை கத்த,
வேதவல்லியும், அவர் மாமியாரும் பதற்றத்தோடு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்க, சந்தியா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள். அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை. தன் அப்பாவா இப்படிப் பேசினார் என்று,
அதிர்ச்சியில் இருந்து சந்தியா விலகும் முன் “இனி ஒரு தரம் நீ உங்க மாமனை பார்க்க போறது தெரிஞ்சது. நீ படிச்சு கிழிச்சது போதும்னு, இப்பவே ஒரு மாப்பிள்ளைய பார்த்து கட்டிவச்சிருவேன், ஜாக்கிறதை….” என்று துரை கோபத்துடன் சந்தியாவிடம் சொல்ல,
தன் மனதில் இருப்பதைச் சொன்னால் அவள் அப்பா புரிந்துகொள்வார் என்று நினைத்த சந்தியா “நீங்க தானப்பா, கதிர் மாமாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி தரப்போறதா சொன்னீங்க, சின்ன வயசுல இருந்து நான் அதையே மனசுல நினைச்சிட்டு இருக்கேன்.” என்றாள் மெதுவாக,
“உன்னைக் கதிருக்குக் கல்யாணம் பண்ணப்போறதா, உன் கிட்ட நான் எப்ப சொன்னேன்…? நாங்க எதோ பெரியவங்க எங்களுக்குள்ள பேசிகிட்டோம். அது இப்போ இல்லைன்னு ஆகிடுச்சு. நீ படிச்சு முடிச்சதும், நான் உனக்கு டாக்டர் மாப்பிள்ளையே பார்த்து கட்டிவைக்கிறேன்.” என்றார் திமிராக,
உண்மையில் கதிரிடமோ, சந்தியாவிடமோ யாரும் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்யப்போகிறோம் என்று நேரடியாகச் சொன்னதில்லை தான். ஆனால் இவர்கள் பேசியதை நம்பி மனதில் ஆசையை வளர்த்துக்கொண்ட நாங்கள் முட்டாளா என்று சந்தியாவிற்கு ஆத்திரம் வர, அவள் தன் அப்பாவை எதிர்த்து பேச துணிந்தாள்.
அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த வேதவல்லி, அவள் கையைப் பிடித்து அழுத்தி “இப்ப எதுவும் பேசாதே….” என்றவர் தன் கணவரிடம் திரும்பி “அவளுக்கு என்ன தெரியும்? அவ சின்னப் பொண்ணு. நாம பேசினதை வச்சு சொல்றா, நீங்க சொன்னா கேட்கப்போறா….” என்றவர்,
தன் கணவருக்கு வேறு தட்டு வைத்து உணவு பரிமாற, சந்தியாவும் மேலும் எதுவும் பேசாமல் மௌனமானதால், துரையும் அமைதியாகச் சாப்பிட உட்கார்ந்தார். துரை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் சென்று வெளியே சென்றதும், தன் அம்மாவை தேடிச்சென்ற சந்தியா அவர் மடியில் விழுந்து கதறி அழுதாள்.
“அப்பாவாம்மா இப்படிப் பேசுறார். என்னால நம்பவே முடியலை. நான் கதிர் மாமா என்னோட பேசுறாங்கன்னு சொன்னது பொய். அவங்க என்னோட பேசுறதே இல்லமா. காரணம் தெரியாம இத்தனை நாள் நான் கதிர் மாமாவை தப்பா நினைச்சிட்டு இருந்தேன்…” என்றாள் விசும்பியபடி,
அவள் தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்த வேதவல்லி “அவன் எப்படிப் பேசுவான்? மான ரோஷம் உள்ள எவனுமே, உங்க அப்பா பேசின பேச்சை கேட்ட பிறகு பேசுவானா…” என்றார் விரக்தியாக.
சந்தியா தலை நிமிர்ந்து தன் அம்மாவின் முகத்தை கேள்வியாகப் பார்க்க, “உங்க மாமா, காவேரியை அந்தப் பையனுக்குகே கல்யாணம் செஞ்சு வைக்கபோறேன்னு சொன்ன மறுநாள், உங்க அப்பா என்னையும் வந்து உங்க அண்ணன் கிட்ட பேசுன்னு கூட்டிட்டு போனார்.” என்றவர் கடந்தகால நினைவுக்குச் சென்றார்.
வேதவல்லியும் தன் கணவர் சொல்லிக்கொடுத்தபடி தன் அண்ணனிடம் சென்று “காவேரி நம்ம சொன்னா கேட்கும்ணே, நம்ம ஆளுங்களையே யாரவது மாப்பிள்ளை பார்த்து கட்டிவச்சிடலாம்.” என்றார்.
“நீ சொல்றது சரி தான் மா, ஆனா இவங்க கல்யாணம் வரை போய்ட்டாங்க, இந்நேரம் அந்த விஷயம் கண்ணு, காது, மூக்கு வச்சு. நம்ம ஊர் முழுசும் தெரிஞ்சிருக்கும். இப்ப போய் நான் வெளிய சென்ற நாளைக்கு அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு பிரச்சனை ஆகும். அதனால பாதிக்கபடப் போறது நம்ம பொண்ணு வாழ்க்கை தான். நாம விஷயத்தை மறைச்சு வச்சுக் கல்யாணம் பண்ணிட்டோம்ன்னு நம்ம குடும்பத்தையும் ஏசுவாங்க.”
“ஊர் உலகத்துல காதலிக்கிறவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா..?” என்று துரை யாரிடமோ சொல்வது போல் சொல்ல,
“இல்லை தான். எனக்கு மத்தவங்களைப் பத்தி தெரியாது. என் வீட்ல தப்பு நடந்துடுச்சு, அதை நான் மறைக்கிறதுனால மட்டும் நடந்தது இல்லைன்னு ஆகிடுமா. என்னோட முதுகுக்குப் பின்னாடி பேசுறவங்க, நான் காவேரிய அந்தப் பையனுக்கே கல்யாணம் பண்ணிவச்சா, என் முகத்துக்கு நேரா பேசப்போறாங்க அவ்வளவு தான் வித்யாசம்…”
“என்னால வேற இடத்தில என் பொண்ணைச் செஞ்சு நாளைக்கு அசிங்கமா பேச்சு வாங்க முடியாது. அதுக்கு என் பொண்ணு விரும்புச்சு, நான் அதே பையனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சேன்னு இருந்திட்டு போகட்டும்.” என்றார் பெரியசாமி உறுதியாக,
அந்த இடத்தில் இப்போது கனத்த அமைதி நிலவியது. சிறிது நேரம் யோசனையில் இருந்த துரை அங்கிருந்த கதிரை பார்த்துக்கொண்டே “அப்படியா சரி நீங்க உங்க முடிவுல உறுதியா இருக்கீங்க, அப்ப நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க. நீங்க வேற ஜாதியில சம்பந்தம் பண்ணா, நான் என் பொண்ணு சந்தியாவைக் கதிருக்கு கொடுக்கமாட்டேன்…” என்று ஒரு இடியை இறக்கினார்.
அவர் எதிர்பார்த்தது போல் கதிர் முகம் உடனேயே இருண்டது. பெரியசாமி, வேதவல்லி இருவருக்குமே அதிர்ச்சி தான்.
“இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம் மாப்பிள்ளை…” என்றார் பெரியசாமி புரியாமல்,
“நீங்க உங்க பொண்ணுக்கு வேற ஜாதியில கல்யாணம் பண்ண பிறகு, நானும் உங்க வீட்ல என் பொண்ண குடுத்தா, நானும் அந்த ஜாதிகார பயலுக கூட உறவு கொண்டாட வேண்டி இருக்கும். என்னால அது முடியாது. நீங்க உங்க பொண்ணுக்கு உங்க இஷ்டப்படி கல்யாணம் செய்யுங்க, நான் என் பொண்ணுக்கு என் இஷ்டப்படி பார்த்துக்கிறேன்.” என்றார் துரை.
“இப்படிப் பேசினா எப்படி மாப்பிள்ளை நியாயம்…? நாம அவங்க சின்ன வயசுலையே பேசி வச்ச விஷயத்தை இப்ப திடிர்னு மாத்தினா, சின்னச் சிறுசுங்க மனசு கஷ்டப்படாதா..?” என்றார் பெரியசாமிதணிவாகவே,
“நீங்க நியாயம் பேசுற தகுதியை இழந்தாச்சு மச்சான். உங்க பொண்ணு வேணா உங்க பேச்சை கேட்காம இருக்கலாம். ஆனா நான் என் பொண்ணை அப்படி வளர்க்கல. சந்தியா நான் சொன்னா கேட்பா….” என்று உறுதியாகச் சொன்ன துரை கதிரை பார்த்து “உன் குடும்பத்து புத்தியை என் பொண்ணுக்கிட்ட காமிக்க நினைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்றார் கடுமையாக,
“அது என்னப்பா என் குடும்பத்து புத்தி?” என்று பெரியசாமி புரியாமல்கேட்க,
“காதலிச்சு வீட்டுக்கு தெரியாம ஓடிப்போறது. என் பெண் கிட்ட பேசி மயக்கி உங்க பையன் காரியம் சாதிச்சிடலாம்னு நினைக்க கூடாது இல்லையா….” என்று துரை சொன்னபோது, பெரியசாமி, கதிர் இருவரையுமே அவரின் பேச்சு சுட்டது. அதுவும் கதிர் ஏற்கனவே சில நாட்களாக ஏகப்பட்ட மன உளைச்சலில் இருந்தவன், துரையின் பேச்சால் மேலும் வேதனையில் வாடினான்.
பெரியசாமிக்கு அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. மகள் வாழ்க்கையைப் பார்க்கபோய் மகன் வாழ்கை பலி ஆகிறதே என்று அவருக்குக் கவலையாக இருந்தாலும், அவரால் துரை பேசிய பேச்சிற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“கதிர் மாதிரி ஒரு பையனை வேண்டாம்னு சொன்னா, உனக்குத் தான் கொடுப்பினை இல்லைன்னு அர்த்தம். அதுக்குப் பிறகு உன் இஷ்டம். ஆனா, என் பையன் உன் பெண்ணை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டான்…” என்றார் தன் மகன் மேல் இருந்த நம்பிக்கையில்.