Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 8

கருவின் குரல்
அத்தியாயம் 8

தேவா அவன் பெற்றோர் அமைத்து கொடுத்த வாழ்வை வாழ ஆரம்பித்தான்.
இப்போது ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறான்.
அவனுடைய வாழ்க்கை வெளியில் பார்க்கும்போது அழகாக இருந்தது. கார்களும், பார்ட்டிகளும், கௌரவமும் நிறைந்தது.
அவனுடைய பெற்றோர்கள் பெருமையுடன் தலையை உயர்த்தி நடந்தார்கள்.
ஆனால் தேவாவுக்கு மட்டும் எதிர்பார்த்த சந்தோசம் இல்லை.
அவன் திருமண வாழ்வு வெறும் பகட்டாகவே இருந்தது; துளி கூட காதல் மைதிலி இடம் அவன் உணரவே இல்லை.

மைதிலி எப்போதும் தனது உலகத்தில் மூழ்கி இருப்பாள். சோஷியல் மீடியா, ஷாப்பிங், நண்பர்கள், ஸ்பா, பார்ட்டி.
அவள் தேவாவிடம் கேட்பது எப்போதும் அவளுடைய தேவைகளுக்காகத்தான்:“இந்த பிராண்டு பாக்ஸ் ஆடர் பண்ணி கொடுங்க”, “அடுத்த வாரம் மாலத்தீவுக்குப் போலாம்”, “நேற்று டயமண்ட் செட் விலையை கேட்டீங்களா?”
ஆனால் ஒருமுறை கூட அவள் தேவாவின் கண்களில் உள்ள வெறுமையைப் பார்க்கவில்லை.

அவனுக்கு உடம்பு முடியவில்லை என்றாலும் கூட, அவள் தேவையை முடித்த பின்தான் அவனை கவனிப்பாள்.
அந்த அலட்சியம் அவன் இதயத்தில் ஏதோ ஒன்றை உடைத்தது.
அவன் மெதுவாக சோபாவில் அமர்ந்து கண்களை மூடி, எங்கே அவன் வாழ்வு தோல்வியடையத் தொடங்கியது என்று எண்ணினான்.
அவனது மனதில் அந்த நினைவு மட்டும் தெளிவாக வந்தது
ஜானகி அவனுக்காக ஆசையாய் கையை சுட்டுக்கொண்டே செய்த மீன் குழம்பின் வாசனை, அவளது சிரிப்பு, அவளது மென்மையான அரவணைப்பு.அவன் மனதில் ஒரு சின்ன வலி கிளப்பியது.



Advertisement

ஜானகி பற்றிய செய்தியை அவ்வப்போது தன் நண்பன் அருண் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“ஜானகி எப்படி இருக்கா?” என்று கேட்டான் மெதுவாக.
அருண் சற்றே அமைதியாக இருந்தான்.”பிறகு அவள் நன்றாக தான் இருக்கிறாள். உடம்பு சுருண்டு போச்சு… ஆனா மனம் பலம் அதிகமா இருக்கு. சில நேரம் சிரிப்பாள், ஆனா அந்த சிரிப்பின் பின்னாலே நிறைய வலி இருக்கு தேவா,” என்று அமைதியாக கூறினான். ஒரு நொடிக்கு அவன் மூச்சு மேலே ஏறி இறங்கியது போல இருந்தது.

அந்த இரவு தேவாவுக்கு தூக்கம் வரவில்லை.
அவன் மைதிலி பக்கம் திரும்பிப் பார்த்தான்.
அவள் போனில் மேக்ஸி ட்ரைஸை ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தாள்.அவள் கண்களில் ஒளி இருந்தது, ஆனால் அவனது வாழ்க்கையில் இருள் மட்டுமே.

அவன் மனதில் நிதானமாக ஒரு உண்மை பதிந்தது.
“எளிமையாக வாழ்ந்தாலும், மனம் புரிந்த ஒருத்தியுடன் இருந்த அந்த ஒரு மாதம் தான் தனது வாழ்நாள் சொர்க்கம்,” என்று. அவளது நினைவுகள் அவனது தண்டனையாக மாறின.

Advertisement

அவன் தன் தவறை உணர்ந்தான், ஆனால் அதை சரி செய்ய முடியாத நிலை.ஒரு முறை ஜானகியைப் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.
ஆனால் தன் பெற்றோரின் முகம், தன் தற்போதைய வாழ்க்கை, தன் மனைவி என எல்லாம் அவனைக் கட்டிப் போட்டது.

Advertisement

அவன் தன்னை தானே தண்டிக்கத் தொடங்கினான்.
பணம் இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆனால் அமைதி இல்லை.அவன் சிரிக்கும் போதும் கண்களில் நீர் வந்தது.
அவன் மனைவியுடன் இருந்தாலும், மனதில் ஜானகி நிழல் போல் வந்தாள்.அவனது மனம் சொன்னது “நான் பணத்துக்கு அடிமை ஆனேன், உண்மையான காதலை இழந்தேன்.”

அவனது வாழ்க்கை இப்போது ஒரு பொலிவான சிறையாக அவனுக்குத் தோன்றியது.அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.அவனது மகள் அவளைப் போலவே இருப்பதாக அருண் கூறியதிலிருந்து, மகளின் நினைவு வேறு வாட்டி எடுத்தது.

ஜானகியின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் பெயராக மாறியது.

Advertisement

வைத்திரியில் இருந்து திரும்பிய பிறகு, மருதாசலம், ஈஸ்வரி, கோகுல் மூவரும் அவளை வேறு மாதிரி பார்த்தனர்.
அந்த வீட்டில் தானும் மகளும் பெற்றவர்களுக்கு பாரம் என்று அவள் உணர்ந்தாள்.
அது ஜானகிக்கு கவலையை தந்தது, ஆனாலும் அவள் மகளின் முகம் அந்தச் சிறிய முகம் அவளது ஒவ்வொரு நாளின் உயிர் மூச்சாய் மாறிவிட்டது.அவள் முகத்தில் ஒரு சொர்க்கச் சிரிப்பு இருந்தது.எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்தச் சிரிப்பு ஜானகிக்கு புதிய உயிர் தந்தது.

மூன்று மாதம் கடந்து விட்டது.
பிள்ளையின் ஒவ்வொரு செலவுக்கும் வீட்டில் உள்ளவர்களின் கையை எதிர்பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை.
அவர்களும் வேண்டா வெறுப்பாக செய்தனர்.
குடும்பத்தில் யாரும் குழந்தையை தங்கள் மனத்தில் ஏற்கவில்லை.

மருதாசலம் கூறினார்,
“இந்தக் குழந்தையால் நம்ம மானம் போய் விட்டது! ஊரில் தலைகாட்ட முடியவில்லை!”
ஈஸ்வரி குழந்தையை கண்களால் பார்ப்பதை கூட தவிர்த்துக் கொண்டாள்.
கோகுல் குடும்பத்தின் அழுத்தத்தால் நிதானமாய் விலகி விட்டான்.
இனியும் வீட்டில் உட்கார அவளால் முடியவில்லை.
ஏதாவது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
தத்தி தத்தி நடை பழகி, “அம்மா”, “அம்மச்சி”, “அப்பிச்சி”, “மாமா”என ஒவ்வொரு உறவையும் அழகாக மழலை மொழியில் பேச ஆரம்பித்து விட்டாள் அனிஷ்.ஆனால் அந்த கொஞ்சும் மழலையை யாரும் அரவணைக்கவில்லை.
காலம் தன்னுடைய வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அத்தை மகளான பிரியாவை கோகுலுக்கு ஆடம்பரமாக திருமணம் முடித்தார்.
திருமணத்திற்கு ஜானகியை யாரும் கூப்பிடவில்லை.
அவளும் அவளது மகளும் வீட்டில் இருக்கும் சேர், ஷோபா போன்றுதான்.

அந்த நிலையில் ஜானகிக்கு பொள்ளாச்சியில் பிரபலமான மலர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கேஷியராக ஒரு வேலை கிடைத்தது.மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம்.அவள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்,
ஏனெனில் அவளுக்கு அவள் மகளின் பால், டயப்பர், சிறு செலவுக்கு அது பெரிதும் தேவைப்பட்டது.

ஒவ்வொருநாளும் காலை வேலைக்கு செல்லும் முன் அவள் அனிஷ்காவை கையில் பிடித்து, மெல்ல முத்தமிட்டு சொல்வாள்
“அம்மா ஒரு நாள் முழுக்க உன்னை விட்டுப் போக வேண்டியிருக்கு… ஆனா என் இதயம் இங்க தான் உன்னுடன் இருக்கும்…”
என்று கண்ணீர் துடைத்துக் கொண்டு குழந்தையை பிரியாவிடம் கொடுப்பாள்.

முதலில் பிரியாவும் குழந்தையை நன்றாக கவனித்துக்கொண்டாள்.ஆனால் குடும்பத்தில் ஜானகிக்கான அலட்சியம் அவளிடமும் ஊறிவிட்டது.
அவள் குழந்தையை கவனிப்பதை கடமையாகவே பார்த்தாள்.

அவ்வப்போது வேலைக்கு நடுவில் பிரியாவிற்கு போன் செய்து,
“அனிஷ் சாப்பிட்டாளா? பால் குடித்தாளா?” என்று கேட்டால்,
அவள் சலிப்புடன், “குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது, எப்பவும் அழுது கொண்டே இருக்கு!” என்பாள்.
அவளது வார்த்தைகளில் ஒரு அலட்சியம், ஒரு புறக்கணிப்பு தெரிந்தது.

ஜானகி வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது, முதலாவது அவள் செய்யும் செயல் அனிஷ்காவை மடியில் வைத்து கொஞ்சுவது.
அவள் முகம் பிரகாசமாக மாறும்.
முழு நாளும் மந்தமான, அழுகை நிறைந்த முகம் கொண்டிருந்த குழந்தை, அம்மாவை பார்த்த உடன் சிரிக்கும்.
அந்த சிரிப்பு, அந்த நிமிடம் ஜானகிக்கு தாயாக இருப்பதின் அர்த்தத்தை நினைவூட்டும்.
ஜானகி மெல்ல மெல்ல கவனித்தாள் அனிஷ்கா யாரிடமும் அவ்வளவாக ஒட்டவில்லை.
பிரியாவிடம் இருந்தால் அழுவாள்.அவளுக்கு சாப்பாடு கூட சரியாக கொடுக்கப்படவில்லை.
சில நாட்களில் அவளது உடல் மெலிந்தது.
அவளது சிறிய விரல்கள் தளர்ந்து போனது.

ஒருநாள் ஜானகி வேலை முடித்து சீக்கிரம் வீடு வந்தாள்.
அவள் கதவைத் திறந்தவுடன், குழந்தை பசிக்காக அழுது அழுது சோர்ந்து போனது.
யாரிடம் கேட்பது என தெரியாமல் தரையில் சுருண்டு படுத்து அழுதது.பிரியா சமையலறையில் யாரிடமோ போன் பேசி சிரித்துக்கொண்டிருந்தாள்.அந்த காட்சியை பார்த்தவுடனே ஜானகியின் உள்ளம் உடைந்தது.

அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அழுதாள்.
பாலை காய்ச்சி கொடுத்தாள்.
ஒரு மிடரு கூட இல்லாமல் முழுவதும் குடித்தது.
அவள் அந்த இரவு முழுவதும் தூங்கவில்லை.
அனிஷ்காவை தன் மார்பில் சாய்த்து மெல்ல தட்டி தூங்க வைத்தாள்.
“என் மகளுக்கு ஏன் இந்த நிலைமை…? உனக்காகத்தான் அம்மா வாழ்றே… நீ மட்டும் தான் என்னோட உலகம்…” என்று உறங்கும் குழந்தையின் முகம் பார்த்து கூறுவாள்.

அடுத்தடுத்து, அவள் வீட்டில் இருப்பது கூட சுமையாக மாறியது.
மாருதாசலம் கடைக்கு போட்டியாக சில கடைகள் அந்த பகுதியிலேயே புதிதாக ஆரம்பித்தனர்.
அதனால் வியாபாரத்தில் சிறு சறுக்கல்.
ஈஸ்வரி அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்,
“இந்தப் பிள்ளை வந்ததுக்கு அப்பறோம் நமக்கு ராசியே இல்லை! எல்லாமே துடைச்சுட்டே போகுது! இது எப்போ நம்மள விட்டு தொலைஞ்சு போதோ அப்போதான் நிம்மதி.”

ஜானகி ஒவ்வொரு முறை இந்த வார்த்தையை தாயின் வாயில் இருந்து கேட்டதும் கேட்டதும், முகத்தை திருப்பி அமைதியாக அழுவாள்.

மூன்று வருடங்கள் கடந்து விட்டது. தேவாவிற்கு அதுல்யா என்ற மகள் பிறந்தாள்.
இங்கு அனிஷ் வளர வளர குறும்பும் சேர்ந்து வளர்ந்தது.பிரியாவிற்கு மித்ரன் என்ற மகன்.
அவனின் விளையாட்டு பொருளை அனிஷ் தவறுதலாக உடைக்க ஆரம்பித்தது பிரச்சனை.
மெல்ல மெல்ல வீட்டில் குழந்தையை ஆசிரமத்தில் விடலாம் என்ற பேச்சு எழுந்தது.

பிரியா அனிஷைப் பற்றி கோகுலிடம் புலம்பினாள்.
“அந்த சின்ன குரங்கு நம்ம வாழ்க்கையிலிருந்து விலகினா நல்லதுன்னு நினைக்கிறேன்…” என்று.

இரவு நல்ல இடியுடன் மழை.
ஜானகி மகளுக்கு ஸ்வெட்டர் மாட்டிக் கொண்டிருந்தாள்.அன்று என்ன வெல்லாம் சாப்பிட்டேன்,என்ன விளையாடினேன் என மழலை மொழியில் அபிநயத்துடன் ஒப்பித்துக்கொண்டிருந்தாள் அனிஷ்.கோகுலும் பிரியாவும் மருதாசலத்திடம்,
“நாங்கள் தனிக்குடித்தனம் போகிறோம்,” என்றனர்.

ஈஸ்வரி அதிர்ந்து,
“ஏன் என்ன ஆச்சு பிரியா? எனக்கு இருக்கிறது ஒரே பையன். வெளிலே பொண்ணு எடுத்தா குடும்பத்தை பிரிச்சுருவாளோனு நினைச்சுதா உன்னை சொந்ததுலே கட்டுனோம். நீ ஏன் இப்படி சொல்றே?” என்றாள்.

“பின்ன என்னம்மா, அவள் எவ்ளோ நாள்தான் அந்த கேடு கெட்டவனுக்கு பிறந்த பிள்ளைக்கு எல்லாம் செய்வா? ஒன்னு நாங்க இந்த வீட்டிலே இருக்கனும், இல்ல அந்த புள்ளை இருக்கனும்,” என்று ஆவேசமாக கூறினான் கோகுல்.

ஜானகி முதன் முதலில் வீட்டில் இருப்பவர்களை எதிர்த்து பேச ஆரம்பித்தாள்.
“இந்த வீட்டில் எனக்கு இருக்க உரிமை இல்லையா?” எனக் கேட்டாள்.
பதிலுக்கு பிரியா எகிறினாள்.
இருவரும் மாறி மாறி ஏதோதோ பேசினர்.
நிலைமை கைமீறி, கோகுல் ஜானகியை அடித்து விட்டான்.

அனைவருக்கும் அதிர்ச்சி.
யாரும் ஒரு வார்த்தை கூட கோகுலை கேட்க வில்லை.
அனிஷிற்கு என்ன புரிந்தது என தெரியவில்லை.
“மம்மி, நீ அழாதே… நா ஆசிரமத்திற்கு போறே…” என்று சொல்ல, மகளை அணைத்துக் கொண்டு அழுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு.

ஜானகி இனியும் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என முடிவெடுத்தாள்.
ஆனால் எங்கே போவது தெரியவில்லை.

அவள் மனதில் ஒரு தீர்மானம் தோன்றியது
“இனிமேல் யாரையும் சார்ந்து இருக்க கூடாது.
இந்தக் குழந்தையையும், என் வாழ்க்கையையும் நான் தான் காப்பாத்தணும்.”

அந்த நிமிடம் முதல் ஜானகி தாயாக மட்டும் இல்லாமல், வீர பெண்ணாகவும் மாறினாள்.
அவள் தன் குழந்தையின் சிரிப்பை மீட்டெடுக்க தீர்மானித்தாள்.

— கருவின் குரல் ஒலிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!