இன்று பாப்பாவுக்கு பிறந்த நாள். மூன்று அரை முடிந்து நாலு தொடங்கும் நாள். நேற்றுதான் கையில் ஏந்தி ஆரத்தி எடுத்து கொண்டு வந்தது போல இருந்தது. நாட்கள் மாதங்களாக மாறி, இதோ நான்கு வருடங்கள் ஆகிறது.
தேவதை. அனைவரின் வாழ்வையும் மாற்றி அமைத்த தேவதை. மழலையில் தாத்தா என்று அழைத்த போது உலகமே மறந்து போனது அவள் தாத்தாவிற்கு. அம்மாவில் இருந்து மாமா வெகு சுலபமாக கற்றுக் கொண்டாள் போலும். முதலில் சொன்ன வார்த்தையே மாமா தான். மற்றவர்களுக்கு எப்படியோ வெற்றியின் வாழ்க்கையில் பூ பூக்க வைத்தவள். எந்த பிடிப்பும் இல்லாதிருந்தவனுக்கு நான் இருக்கிறேன் என்று இவன் விரலை அழுத்தி பிடித்து கொண்டவள் . ‘ஆமா எதுக்கு வீட்டுக்கு போகணும்?’
மலர் திருமணமாகி சென்றதன் பிறகு யோசிக்காத நாளே இல்லை. வீட்டின் நினைவு வரும்போதெல்லாம் வெறுப்பும் சேர்ந்தே வரும். இவள் வந்ததன் பிறகு எல்லாமே மாறியது. யார் சொன்னாலும் கேட்காமல் குட்டி ஜட்டியுடன் சுற்றி கொண்டிருப்பவளை வெற்றி வந்து சட்டை போட்டு விட்டு உயர தூக்கி ஒரு சுற்று சுற்ற வேண்டும். இப்போதும் அப்படிதான். எத்தனை களைப்பாக இருந்தாலும் அவளுக்கு என்று பத்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி வர வேண்டும். அல்லது ஒரு ரூபாய் மிட்டாயாவது மாமன் வாங்கி வந்து விட வேண்டும். மாமனுக்கு வாயில் சொல்லாத கட்டளை. குட்டி மகாராணியின் கட்டளை. தந்தை வந்ததும் “அப்பா” என்று ஓடிப் போய் கட்டி கொள்வாள். மாமன் வந்ததும், “என்ன வாங்கிட்டு வந்த?”பாக்கெட்டை துழாவுவாள்.
அன்னை அருகில் இருக்கும் பேக்கரியில் இருந்து கேக் வாங்கி குடுத்தாலும் மாமன் வாங்கி வரும் மிட்டாய்தான் அவளுக்கு இன்னும் ருசி. இவள் பிறந்ததில் இருந்து வெற்றி எங்கும் வெளியில் தங்குவதில்லை. காஞ்சியில் இருக்கும் அத்தை எத்தனை முறை அழைத்து விட்டார்?
“பாப்பாவை விட்டு எங்கும் வெளியில் தங்க மாட்டேன்” வெளிப்படையாகவே சொல்லி விட்டான். காலை சென்றால் இரவில் வீட்டுக்கு வந்து விடுவான். வித்யாவின் பழக்கம் ஆரம்பித்த பின் இப்போதெல்லாம் வேறுஎங்கும் செல்வதில்லை.
பாப்பாவுக்கு பரிசு வாங்க வித்யாவும் வெற்றியும் சென்றார்கள். அவன் அழகான மஞ்சள் நிற பிராக் வாங்கினான். வித்யா அழகான மஞ்சள் நிற ப்ராக் அணிந்த பார்பி பொம்மை வாங்கினாள் .
“எப்படி டா இருக்கு?”
“உன்னை மாதிரியே இருக்கு” சொன்னவன் குரலிலும், உடல் மொழியிலும் ஏதோ ஒரு புது வித மாற்றம். நொடியில் இவள் முகம் சிவந்து லேசாக மூச்சு வாங்கியது. வெற்றி, இதுவரை வெளிப்படையாக இதுவரை தன் உணர்வை காட்டியதில்லை. ஆனால் இப்போது….அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“வெற்றி! நாம் கடைல இருக்கோம்” தலை குனிந்து முகத்தை காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் . தன் மகள் இத்தனை அழகாக வெட்கப்படுவாளா? அடடா! காயத்ரி பார்க்கவில்லையே? முகம் நிமிர்த்தி அவள் கன்னத்தில் அழகாக ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது.
“ இது ஓகேவா மேடம்?”
விற்பனை செய்யும் பெண்ணின் குரல் கலைத்தது. உண்மையில் இவர்களின் காதல் நாடகம் பார்த்தவளுக்கும் வெட்கம் வந்து விட்டது.
தலை தூக்கி பார்த்தான். ஒரு பக்கம் முழுவதும் கரடி பொம்மைகளாக இருந்தது. மறுபுறம் முழுவதும் பார்பி பொம்மைகளாக இருந்தது. பொம்மைகள் மட்டுமல்ல. அதற்கென்று தலை வாரும் சீப்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை வைத்திருந்தார்கள்.
“எனக்கு என்னடா வாங்கி தர போற?”
அவள் கேட்டதும் அவன் சங்கடமாக நெளிந்தான். “அது மேடம் நான் உங்களுக்கு நாளைக்கு வாங்கி தரவா?”
“ஏண்டா தங்கச்சி பொண்ணுக்கு மட்டும்தான் வாங்குவியா? எனக்கு ஒன்னும் இல்லையா?”
உரிமையாக அவன் சட்டையில் கை விட்டு பணத்தை எண்ணினாள் . பணம் கம்மியாகத்தான் இருந்தது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டாள் .
பில் போட்டு விட்டு வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். வீட்டிற்கு வந்து கைப்பையை ஆணியில் மாற்றும்போது தான் கவனித்தாள் அதில் ஒரு பெண் பொம்மை போட்ட கீ செயின் மாட்டி இருந்ததை. பார்பி பொம்மை இல்லை. ஆனாலும் இந்த பொம்மை பெண்ணும் அழகாகவே இருந்தாள் . நொடியில் புரிந்தது அது யாருடைய வேலை என்று.
அவளை விட்டு விட்டு அவளின் அழைப்புக்காகத்தெரு முனையில் காத்திருந்தான் வெற்றி.
உடனேயே அழைப்பு வந்து விட்டது.
“என்னடா? கிப்டு எல்லாம் வெய்ட்டா இருக்கு?”குரல் கொஞ்சம் கொஞ்சியதோ?
அவள் ஆமாம் என்று ஜிமிக்கி ஆட தலை ஆட்டுவதை பார்க்க விரும்பியவன் அப்படியே வீடியோ காலுக்கு மாறினான்.
அவனை அவள் ஏமாற்றவில்லை. அவன் கொடுத்த பரிசுக்கு பதிலாக ஒரு எச்சில் முத்தம் கொடுத்தாள் . அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கை பேசி அதை வாங்கி கொண்டது.
“எங்கடா இருக்க?”
“இங்கதான் உங்க வீட்டு முனை(யி)ல”
“கிளம்பு லேட்டாகிட போகுது ” கொஞ்சல் மொழியில் விரட்டினால், அவன் எப்படி போவான்?
“மேடம்! “
“ம்”
“அது இன்னொன்னு கிடைக்குமா?”
“இப்ப இல்ல” வேண்டுமென்றே அலட்டிக் கொண்டாள் .
“சீக்கிரம் போ. உங்க மலரக்கா காத்திருக்கும்”. அவன் போலவே பேசினாள் .
மலர் என்ற பெயரை கேட்டதும் தான் எங்கிருக்கிறோம் என்று நினைவு வந்தவனாக அவசரமாக கிளம்பினான்.
காதலிக்கு தெரியாதா ? மந்திரித்து விட்டவனை எப்படி வெளியில் கொண்டு வர வேண்டும் என்று?
தம்பி வருவதற்குள் ரெடியாகி விட வேண்டும். மாலையிலேயே வேகமாக வீட்டு வேலையை முடித்தாள் . நல்ல வேளையாக தந்தை வீட்டிற்கு செல்வதற்கு மாமியார் ஒன்றும் சொல்லவில்லை. சென்று விட்டு அடுத்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் வந்து விட போகிறாள் என்பதாலோ என்னவோ?
“எந்த உடை போடலாம்?”சுடிதார் எல்லாம் வெளுத்து போய் இருந்தது. புடவை? சென்ற வருட சீட்டில் கொடுத்த புடவை? பெரிய பெரிய பூக்கள் போட்டு அடர் பச்சை நிறத்தில் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்றாகவே இருந்தது. முக்கியமாக அவளிடம் இருந்த அரக்கு வர்ண ரவிக்கை அதற்கு சரியாக இருக்கும். வெளியில் எடுத்து வைத்து விட்டு முகம்,கை கால் கழுவிக் கொள்ளப் போனாள் . அதற்குள் வீட்டிற்கு வந்த நாத்தனார் அதை எடுத்து மேலே போட்டுக் கொண்டு ஆடி ஆடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாங்க அண்ணி. இந்த புடவை எனக்குன்னே செஞ்ச மாதிரி இருக்குல்ல?”
அவள் பேசுவது புரிந்தது.
“அது வந்து… இப்ப நான் வெளில போடறதுக்கு எடுத்து வச்சுருக்கேன்”
“உங்களுக்கு இல்லாத புடவையோ? கேட்ட உடனே உங்க தம்பி வாங்கி குடுக்கும். உங்க மூஞ்சிய பார்த்தே உங்க வீட்டுக்காரரு வாங்கி குடுப்பாங்க. எனக்கு வாங்கி கொடுக்க யாரு இருக்கா?”
“வாடி! எப்ப வந்த?’
கேட்டுக் கொண்டே வெளியில் சென்றிருந்த மாமியார் வந்தார்.
“அவ புடவைய எதுக்குடி மேலே போட்டுட்டு நிக்கற?”
அவளும் அவள் நாத்தனாரும் நாளை வெளியில் எங்கோ சொல்கிறார்களாம். அதற்கு உடுத்த வேண்டுமாம் இந்த புடவை.
வேறு ஏதாவது நல்லதாக புடவை இருக்கிறதா? தேடிக் கொண்டிருந்தவளுக்கு இவள் சொன்ன விஷயம் காதில் கேட்டது. மனதில் வந்த கோபம் இளக்காரமாக உதட்டில் வந்தது. எதுவாகஇருந்தாலும் மனதில் நினைத்து கொள்வதுடன் சரி எதையும் வாய் விட்டு சொல்வதில்லை. தந்தைக்கு பயந்து பயந்து வாயை மூடியே இருந்து பழக்க பட்டவளுக்கு மாமியார் வீட்டில் அதுவே வசதியாகி போனது. மாமியாருக்கும் தான். என்ன சொன்னாலும் சரி, ஏன் அடித்தாலும் கூட வாயை திறந்து எதிர்த்து பேசாத மருமகள் யாருக்கு கிடைப்பாள்? முதலில் எல்லாம் அப்படி நினைத்து சந்தோஷம் கொண்டிருந்தவளுக்கு இப்போதெல்லாம் அவளுக்கு குழந்தை இல்லை என்பது பெரிய விஷயமாக தெரிய ஆரம்பித்தது. மகனுக்கு அடுத்த கல்யாணம் செய்யலாமா? பேசுவதற்குத்தான் மகளை அழைத்திருந்தார். இது எதுவும் அறியாத மலர் ஆட்டோ சத்தம் கேட்டதும், கையில் கிடைத்ததை அவசரமாக உடுத்திக் கொண்டு வந்தாள் .
வீட்டிற்கு வந்த மகளை தந்தை உட்பட அனைவருமே நன்றாகவே வரவேற்றார்கள்.
“வா மலர். மாமா வரல?” தங்கையிடம் இருந்தும் சம்பிரதாயமான வார்த்தை வந்தது.
அடுத்த நிமிடமே சமையல் அறைக்குள் அக்காவை அழைத்து சென்றவள்,
“என்னக்கா இது? இப்டி வந்து நிக்கற. கட்டிக்க நல்ல புடவை கூட இல்லையா?”
நெற்றியில் சிறு ஸ்டிக்கர், காதில் தெரிந்தும் தெரியாமலும் சிறு தோடு, கழுத்தில் வேறு செயின் எதுவும் இல்லாமல் ஒற்றை மஞ்சள் கயிற்றுடன் வந்து நின்றவளை பார்த்தவளுக்கு கோபம் வந்தது.
அவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டு வெற்றி வந்து விட்டான்.
“ஏன் நீதான் அம்புட்டு ட்ரெஸ் வாங்கி வச்சுருக்க இல்ல? அக்கா தானே குடு”
மலருக்கு அவமானமாக இருந்தது.
“பெரியம்மா! இந்தாங்க! கையில் ஒரு சமோசாவை திணித்து விட்டு ஓடினாள் குழந்தை.
தங்கை கொடுத்த ஆடையையும் அணிகலனையும் ஆசையாகவே
உடுத்தி இருப்பாள் அவள் ஆசையுடன் கொடுத்திருந்தால். அவள் வேண்டா வெறுப்பாக தரும்போது?
“இருக்கட்டும் புவி. என்ன யாரு பாக்க போறாங்க.கேக் கேட் பண்ணும்போது நான் இங்கையே இருந்துக்கறேன். நான் வெளில வர மாட்டேன் “
“என்னவோ பண்ணு போ” தலையில் அடித்துக் கொண்டு வெளியில் சென்ற தங்கையை அதட்ட வெற்றியும் பின்னோடயே போனான். அவன் கையை பிடித்து இழுக்க கொண்டாள் மலர்.
“இன்னிக்கி பாப்பா சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதானே” அதே காரணத்துக்காக அவனும் தன்னை அடக்கிக் கொண்டான்.
தான் வாங்கி வந்த பரிசை அக்கா வாங்கியது போல மற்றவர்கள் முன் கொடுத்து விட்டான்.
வாயில் கேக்கை ஊட்டிய தங்கை மகளை ஆசையுடன் ஆசிர்வதித்தாள் மலர். அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அங்கு நிற்க கூட பிடிக்கவில்லை. கிளம்பி விட்டாள் . வெற்றிக்கும் புரிந்தது. போகும் வழியில் மாவு, தேங்காயை வாங்கி கொண்டாள். மதியம் கூட சரியாக உன்னவில்லை. பயங்கரமாக பசித்தது. சிறு சமோசாவும் அரை டம்பளர் டீயும் எப்படி போதும்? வீட்டிற்கு சென்று முதலில் இரண்டு தோசைகளை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
செருப்பை வாயிலில் அவிழ்க்கும் போதே,
“மாவு வாங்கிட்டு வந்துட்டியா?முதல்ல எனக்கு தோசை சுட்டு குடு”
“சரி” வயதில் பெரியவர் அவருக்கு கொடுக்காமல் எப்படி? “அண்ணி முதல்ல எனக்கு சுட்டு குடுங்க. அவங்க வந்துருவாங்க.வீட்டுக்கு போகணும்”
அடுத்து வந்த கணவன்.
தனக்கு? இருக்கிறதே கழுவி வைக்க வெறும் பாத்திரம். தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டாள் . இரவில் அருகில் வந்த கணவன் மீது கோபம் வந்தது.
ஏன்?
ஒரு நாள் கூட “நீ சாப்பிட்டியா? கேட்டதே இல்லையே?”அவள் கண்களில் வந்த கண்ணீரை கூட தன் செயலில் மட்டுமே குறியாக இருந்தவன் வழக்கம் போலவே வேலை முடிந்ததும், உறங்க ஆரம்பித்தான்.
இவள் கண்ணீரை துடைக்க, வாய் நிறைய பேச வைக்க யாரோ ஒருவன் வருவான். இனிதான் பிறக்க போகிறானா என்ன?
அக்காவை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தாலும் வெற்றிக்கு மனம் அமைதி அடையவில்லை. புவி,கணவன், மகள் மூவரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டார்கள். அப்பாவுக்கும், தம்பிக்கும் கூட தோசை பார்சல் வாங்கி வந்திருந்தார்கள். நிச்சயம் மலர் சாப்பிட்டு இருக்க மாட்டாள். அக்காவை நினைத்த தம்பிக்கும் உணவு உண்ண தோன்றவில்லை. அதையும் தந்தையிடமே கொடுத்து விட்டான். தாத்தாவும் பேத்தியும் இன்று கீழேயே உறங்கி இருந்தார்கள். வயதானவருக்கு உடல் களைப்பு என்றால், குழந்தைக்கு அங்கும் இங்கும் ஓடி ஆடியது களைப்பு போல. ஹோட்டலில் இருந்து வரும்போதே தந்தையின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள். மலரை பற்றி நினைத்து கொண்டிருந்தவனுக்கு ஏனோ தன்னை தானே மன்னிக்க முடியவில்லை. அக்கா படும் வேதனை அவனால் தாங்க முடியவில்லை.
மனம் ஏனோ தன்னவளின் குரலை கேட்க வேண்டும் போல மனம் ஏங்கியது. அவன் மனதில் அழைத்து அவளுக்கும் கேட்டதோ !
“ஹை டா ” உரிமையுடன் அழைத்தாள் .
“ஹலோ மேடம்”
“இன்னிக்கு பங்க்ஷன் எப்பிடிடா நடந்துச்சு?”
“பங்கஷன் என்ன பங்க்ஷன். வீட்டுல இருக்கற நாலுபேரு அவங்க தாத்தா பாட்டி பக்கத்து வீட்டு அக்காங்க ரெண்டு பேரு”
“மலர் அக்கா வரல?”
“வந்துச்சு வந்துச்சு. அது இல்லாமலா?”
“என்னடா குரலே ஒரு மாதிரி இருக்கு”
“அது வராமலேயே இருந்திருக்கலாம். நான்தான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு அறிவே இல்ல”
“என்னாச்சு?”
“அவளுக்கு வசதி இல்லன்னு எல்லாரும் அசிங்க படுத்தறாங்க மேடம். அது இல்லன்னா நாங்க ரெண்டு பேருமே இல்ல. யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க”. அவனையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
இவளுக்கும் பதட்டமாக இருந்தது. அவன் அத்தனை எளிதில் கண்ணீர் சிந்துபவன் அல்லவே.
அந்த நிமிடம் அவனுக்கு தோள் கொடுக்க வேண்டும் போல இருந்தது.
“இருடா ! கவலைப்படாத. அக்காவுக்கு நாம ஏதாவது வழி பண்ணலாம்”
“என்னால முடிஞ்சா இந்த நிமிஷம் அத தூக்கிட்டு வந்துருவேன். புருஷனுக்கும் அப்பாவுக்கும் பயந்து பயந்து தினம் தினம் சாகுது. ஒரு பக்கம் அவ மாமியார், இன்னொரு பக்கம் குடிச்சுட்டு வந்து அடிக்கற புருஷன். அது வாழ்க்கையே வீணா போச்சு”
“சரிடா கவலை படாத. சீக்கிரமே ஏதாவது வழி பண்னலாம் .
மலராக முடிவெடுக்காத வரையில் எதுவும் நடக்க போவதில்லை. அவனுக்குத் தெரியும் இருந்தாலும் வித்யாவின் வார்த்தைகள் அவனுக்கு ஓரளவு சமாதானம் ஆனது.
“சரி அதெல்லாம் இருக்கட்டும். போட்டோ எடுத்தியா?”
“இதோ அனுப்பறேன்”
“வேண்டாம் வேண்டாம். நாளைக்கு உன் கூட சேர்ந்து பார்த்துக்கறேன்”
“சரி”
“என்னடா சரி? கொஞ்சம் சிரி டா “
“குட் நைட் மேடம்” லேசான சிரிப்புடன் கூறினான்.
“அவ்வளவுதானா?”
“வேற என்ன மேடம்”
“போடாங். உனக்கு வயர் கான்க்ஷன் கொடுத்து பல்பு எறிய வைக்கறதுக்குள்ள எனக்கு வயசாகிடும்.
அவள் சொல்வதும் கேட்பதும் அவனுக்கு புரியாமல் இல்லை. இருப்பினும் இருவர் வீட்டிலும் பேச வேண்டும். தான் செய்வது தவறு. மூளைக்கு புரிந்தாலும் அவளை தள்ளி வைக்க மனதிற்குத் தான் தெரியவில்லை. மூளைக்கும் மனதிற்கும் நடுவில் அவன் படும் பாடு பரிதாபமே.
காலையில் புத்தம் புது மலர் போல அவள் கேட்டில் இருந்து வெளியில் வரும்போது அள்ளி எடுத்து முத்தம் கொடுக்க தோன்றும். குட் மார்னிங்கோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய கஷ்டம்?
அடுத்த நாள் காலையில் அவளுடன் சேர்ந்து புகைப்படங்களை பார்த்தான். அதில் எதுவும் மலர் இல்லை.
“மலரக்கா எங்க?”
“அது கிச்சனை விட்டு வர மாட்டேன்னு சொல்லிடுச்சு”
“ஓ ! வேற ஏதாவது போட்டோ இருக்கா?”
வேறு புகைப்படத்தை காட்டினான். பளிச்சென்று இருந்தாள். பழைய காலத்து ஸ்ரீ தேவி சாயல் இருந்தது. இத்தனை அழகான மனைவி இருந்தும் அவள் கணவன் எப்படி வேறு பெண்களிடம் உறவாடுகிறான்? வித்யாவுக்கு புரியவில்லை.
“உங்க அக்கா ரொம்ப அழகா இருக்காங்க. இன்னும் அவங்களுக்கு இன்னும் சின்ன சின்ன விஷயங்கள் முகத்துல செஞ்சா போதும். சினிமா நடிகை போலவே இருப்பாங்க.
அவள் சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது. தனக்கு அடுத்து அக்காவை பற்றி யோசிக்கும் ஒரு பெண்.