Skip to content
Post Views: 1,658
” பாப்பு குட்டி ” அழைத்த தந்தையின் குரலில் வித்தியாசத்தை, தயக்கத்தை மகளால் உணர முடிந்தது. ” என்னப்பா சொல்லனும், சொல்லுங்க பீரியா தான் இருக்கேன்” அவளே பேச்சினை தொடங்கினாள்.
” அதுடா… ” சற்றே தயங்கி ” வர்ற வெள்ளி கிழமை, பொண்ணு பார்த்துட்டு அன்னைக்கே உனக்கு நிச்சயம் பண்ணனும்னு சொல்லி மாப்பிள்ளை வீட்டுல கேக்குறாங்க. என்ன சொல்லன்னு அப்பாக்கு தெரியலடா. தட்டவும் முடியல… “
Advertisement
” என்னப்பா திடிர்னு, நேத்து நைட் தானே கிளம்பி வந்தேன். அப்போ ஒன்னுமே சொல்லல.”
Advertisement
” நம்ம ஜானகி அத்தை வீட்டு கல்யாணத்துல உன்னை பார்த்து இருக்காங்க. ரொம்ப பிடிச்சி போச்சாம். ஜாதகம் கேட்டாங்கன்னு நேத்து கொடுத்தோம். இன்னைக்கு காலையில கால் பண்ணி நல்லா பொருந்தி இருக்கு, உடனே நிச்சயம் பண்ணலாம்னு ஒத்தை கால்ல நிக்குறாங்க. ஜானகி அத்தை தங்கச்சி பையன் தான் மாப்பிள்ளை. படிச்ச, அழகான, நல்ல வேலையில் இருக்காரு . நல்ல செல்வாக்கான குடும்பம்.
Advertisement
அதுவுமில்லாம உங்க பெரியப்பாவுக்கும் ரொம்ப தெரிஞ்சவங்கலாம். அதனால் இதையே முடிப்போம்னு உங்க அம்மா கூட சொல்றா. எல்லாரும் பிரியப்பட்டாலும் எனக்கு என் பொண்ணு விருப்பம் தான்னு சொல்லிட்டேன். அப்போ உடனே பார்த்து பேசுவோம்னு வம்படியா சொல்ராங்க. மாத்தி மாத்தி போன் வேற வந்துட்டு இருக்கு. மாப்பிள்ளை போட்டோ, டீடெயில்ஸ் அனுப்புறேன். நீ பார்த்துட்டு என்னனு சொல்லு பாப்பு ? “
Advertisement
அத்தனை உறவுகள் வற்புறுத்தியும் தன் சம்மதம் கேட்கும் தகப்பனிடம் ” உங்க இஷ்டம்பா. உங்களுக்கு பிடிச்சா எனக்கும் கண்டிப்பா பிடிக்கும். பிடிக்கலன்னா பிடிக்காது, யூ ஆர் மை பெஸ்ட்பா. நீங்க தப்பா முடிவு எடுக்க மாட்டிங்க, உங்க முடிவு தான் என் முடிவும் ” என்பதாய் பேசி முடித்தவள் போட்டோவை பார்த்ததும் தன் முடிவினை உடனே கூறி விட்டாள்.
*****
காரணங்கள் இன்றி வருவது தானே காதல். காதல் வந்தாலும் காரணமும் தெரியாதே, காரியமும் புரியாதே. எந்த நொடி காதல் ஒருவன் மனதில் தோன்றும் என அறிந்தவன் இங்கே யார்? மொட்டு விரியும் மலரின் அழகிய நொடியை செடி தான் அறிந்திடுமா? அந்த மலர் தான் உணர்ந்திடுமா? அப்படித்தான் அவன் மனதில் அவள் எந்த நொடி புகுந்திட்டால் என அவனும் அறியாமல் இருக்கிறான்.
வானில் தூவும் மழை துளியின் ஒற்றை துளி சங்கை சென்றடைந்து நல்முத்தாய் மாறுவது போல, அவன் எண்ண சிறையில் அவளும் அடைப்பட்டாள்.
அடுத்தவன் காதலுக்கு எல்லாம் கவிதை எழுதி கொடுத்து தூது செல்வான். வீட்டிற்கும் போய் பேசி பார்த்து, பிரச்சனை முடித்து எத்தனையோ காதலையும் வாழ வைத்தான். ஆனால் தான் விரும்பும் பெண்ணவள் எங்குள்ளாள் தெரியாது. எப்படி உரைப்பதும் தெரியாமல் தவித்து நின்றான்.
முடியுமிடம் தெரியாமல் தான் பித்து பிடித்து அலைக்கிறான். சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்து நாட்கள் நகர்ந்தோட, அவன் வானம் மட்டும் ஒளியை தொலைத்து விட்டு இருளில் உலன்றது.
சாய்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தவனோ இலக்கின்றி அங்குமிங்கும் நடை பயின்று தன் மனதை சமன் செய்ய, உறக்கம் மட்டும் விழியை தழுவவேவில்லை.
தேடி வரட்டும் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி சென்று விட்டாள். அவன் தேடலும் தொடங்கி விட்டது. எங்கே தேட? தன் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆயாசமாய் அமர்ந்தவன் மனதிலோ இரு நாட்களாய் லயாவின் முகமே மின்னி மறைந்து கொண்டிருந்தது.
ராஜாவின் காதலை சேர்த்து வைக்க, இரு வீட்டிலும் பேசி ஒப்புதல் வாங்கி, இரண்டே மாதத்தில் திருமணம் முடிக்க முடிவை எடுக்க வைத்த பின்பே தான் ஓய்ந்து அமர்ந்தான். அந்த சந்தோஷத்தில் தான் தமயந்தி திருமணம் பற்றி கேட்டதும் சட்டென சரியென்றது.
ஊரார் காதலை எல்லாம் ஓடி ஓடி சேர்த்து வைத்ததாலோ என்னவோ விதி அவனிடம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை பின்னர் தான் உற்சாகமாக ஆரம்பித்து வைத்து விட்டது.
பணிகளை முடித்து விட்டு காரில் வந்து கொண்டிருந்தவன் கண்களில் தூரத்தே அவள் நிற்பது போன்று மனம் பதைப்பதைக்க தொடங்கியது. என்றும் இல்லாமல் அதிவேகமாக இதயமும் தன் துடிப்பை அதிகரிக்க விரைந்து காரை ஒட்டி வந்து அருகே நிற்பாட்ட, அவன் பைங்கிளியோ துச்சமாய் மதித்து கேப் ஏறி பறந்து போய் விட்டது.
இன்றும் நொடி மின்னலாய் தான் தரிசனம் கிட்டியது அவனுக்கு. அவளை தொடர்ந்து செல்லலாம் என்றால் அவன் வந்த வழியே கார் யூடர்ன் அடித்து விருட்டென சென்று விட்டது. கண்ணில் கண்டதும் மறையும் காட்சி பிழையோ அவள் என உள்ளம் தடுமாற நெற்றியை தேய்த்து யோசித்தவனோக்கோ உள்ளுணர்வு அறுதியிட்டு கூறியது உன்னவள் தான் சென்றதென்று. கண்ணில் பட்டவளை, கண்ணில் நிறைக்கும் முன்னே, கண்ணில் இருந்து மறைந்தாலும் கண் முன் பார்க்கும் இடமெல்லாம் அவள் கண் விழியே அவன் கண் முன் தோன்றி தோன்றி மறைந்தது.
இரு நாட்களாக அவளை தான் பித்து பிடித்து தேடி அலைந்து கொண்டிருக்கிறான். தேடா பொழுதில் தானாய் தோன்றியவள் தேடும் பொழுதிலோ ஓடி ஒளிந்திட்டாள். வீட்டிலும் யாரும் இல்லாமல் போக இரவிலும் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு களைத்து கலைந்து போனான். அழுத்து போய் வீடு வர தாயின் அழைப்பு வந்தது. இன்னும் அவரிடம் கூறவில்லையே என அப்போது தான் ஞாபகம் வந்தது. ” ஹலோ!!!!… ” என்னும் குரல் கேட்கும் முன்னே இருந்த அலைகளைப்பில் ” ம்ம்மா.. லயாவை பார்த்துட்டேன் ” என கத்தினான்.
நொடி நேரம் அமைதியில் கழிய தொண்டையை கணைத்து கொண்டவர் ” நான் சொல்றத மொத நீ கேளு. காட் இட்…,” என்ற தாயின் அதட்டல் குரலில் அமைதியானவன் ” ம்ம்ம். சொல்லுங்க..,”
” உனக்கு வர்ற வெள்ளி கிழமை காலையில நிச்சயம் ., மொத நாள் நைட் செங்கல்பட்டுக்கு கிளம்பி வந்துரனும். அடுத்த பத்து நாள்ள கல்யாணம். நான் பார்த்த பொண்ணுக்கு தாலி கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டி வரும் போது தான் நாங்க அங்கே வருவோம். இங்கே நாங்க பார்த்துகிறோம். அதுக்குள்ள அங்க எல்லா வேலையும் கரெக்டா செஞ்சி முடி. பொண்ணு போட்டோ டீடெயில்ஸ் அனுப்பியிருக்கேன். பாரு.
திருப்பி எவன் கூடாவாவது சேர்ந்து எதையும் பண்ண நினைச்சா, அப்புறம் இந்த அம்மாவை மறந்துரு. நேர்ல வந்து பொண்ணுகிட்ட பேசிக்கலாம், புரியுதா…,” என அழுத்தமாய் சொல்லியதிலேயே அவனுக்கு புரிந்து விட்டது. இனி தன் பேச்சை அவர் காது கொடுத்து கூட கேட்க மாட்டார் என்பது. ஒன்றும் கூறாமல் போனை அணைத்து தூக்கி தூர எரிந்தான்.
“ ச்சே… இவ்ளோ நாள் கண்ணுல படமா இப்போ மட்டும் எதுக்குடி என் முன்னே வந்தே.. “ நொடி பொழுதில் மின்னலாய் மறைபவளை, எங்கென தெரியாதவளை திட்டி தீர்த்தான். காதல் வலிக்க வலிக்க அவனை கொன்றது. யாரோ ஒருவரின் காதலினால் அம்மாவின் அன்பை தொலைத்து, ஏங்கி தவித்து, வருடங்கள் கடந்து தான் பிடிவாதத்தை விட்டு பேசியுள்ளார். இனியும் தான் ஏதேனும் செய்திட்டால் நிச்சயமாக தன் முகத்தில் கூட முழிக்க மாட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அவனுக்கே புரிந்தது.
எங்கும் திசை திரும்பாது உன்னிப்பாய் பார்த்து ஒவ்வொரு தப்பையும் கண்டறிவனோ அதை எல்லாம் மறந்து விட்டான். பேசாமல், பழகாமல், முழுதும் பார்க்காது போனாலும் கூட தன் மனதில் அவளை நினைத்து விட்டானே. நினைவுகளை அறுத்தெரிந்து விட்டு இன்னொருத்தியை எப்படி மனதால் உடனே ஏற்று கொள்ள முடியும். தன் தாயை விடுத்து யாருக்கும் தன் காதல் தெரியாது எனினும் மனசாட்சி கொன்று புதைக்குமே என் செய்வது என துவண்டான். எத்தனை காதலை சேர்த்திருப்பான், அத்தனையும் தன்னை காக்காமல் புதைக்குழிக்குள் தள்ளி விட்டதே என காதலையே நிந்தித்தான்.
கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் முள் மேல் நிற்பது போல இருந்தது. பசி மறந்தான். உறக்கம் தொலைத்தான். பணியை மாற்றி மாற்றி செய்திட்டான். கல்யாண கனவு காண்பதாய் கண்டவர் சிரித்திட உள்ளம் நொந்தான். கண்ட கனவை கல்யாணம் தடுத்திட, அதை தடுத்திடும் வழி தெரியாமல் தானே தவித்து நிற்கிறான்.
போனில் ராஜா சண்டையிட்ட போது கூட பதில் கூறிட முயலவில்லை. ” என்கிட்ட நீ கல்யாணம் பண்றத பத்தி ஒரு வார்த்தை நீ சொன்னியாடா, ஊருல இருந்து அத்தை இன்வைட் பண்ணி தான் எனக்கு தெரியுது. நான் அவ்ளோ குளோஸ் இல்ல உனக்கு. போடா…,” என எகிறியவனை சமாதானம் கூட செய்ய தோன்றாமல் அமைதி காத்தவன், ” எனக்கே பொண்ணு பத்தி ஒன்னும் தெரியாது. உன்கூட தான் நானும் பார்க்க போறேன்., அம்மா சொல்லிட்டாங்கல, கிளம்பி வாடா..,” என்ற வார்த்தை தவிர்த்து எதையும் பேச வில்லை. அவனையும் பேச விடவில்லை.
error: Content is protected !!