“திட்ட மாட்டேன் வா டி அம்மு”, என்று சொன்னதும் அவன் அருகே வந்து அமர்ந்தாள். அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “நான் அன்னைக்கு உன் கிட்ட சொல்லிட்டு போற மாதிரி சிட்டுவேசன் அமையலை டி. அப்புறம் சொல்லிருக்கணும். சொல்லாம விட்டுட்டேன். அதுக்காக நீ இவ்வளவு பெரிய விஷயம் என் கிட்ட இருந்து மறைக்கலாமா? நம்ம குழந்தை டி”, என்று ஆதங்கமாக கேட்டான்.
“அதை உன் கிட்ட சொல்ல தான் அன்னைக்கு அவ்வளவு ஆசையா வெயிட் பண்ணினேன் தெரியுமா?”
“சரி விடு. நாம சண்டை போட்டா நம்ம பேபி அபெக்ட் ஆகும். இனி நமக்குள்ள சண்டையே கிடையாது. அன்னைக்கு நடந்ததை இப்ப சொல்லவா அம்மு?”
“வேண்டாம், அது எனக்கு தெரியவே வேண்டாம், பிளீஸ்”
“சரி டி, அப்புறம் உன் இஷ்டம்”
“நெட்ல போட்டது என் அப்பா வேலையா தான் இருக்கும்”
“ஆமா, அவரைத் தவிர வேற யாரும் இப்படி பண்ணிருக்க மாட்டாங்க. ஆனா நீ திடீர்னு பிரிஞ்சு போய் இப்படி ஷாக் கொடுத்துட்டியே? உனக்கு எவ்வளவு கோவம் வருது? நீ ரொம்ப மாறிட்ட அம்மு”
“நான் முன்னாடியே மாறிட்டேன். நீ தான் கண்டுக்கலை”
“எப்ப டி?”
“மத்த பொண்ணுங்க கிட்ட நீ பேசினா பொறாமை வந்துச்சு. அப்பவே”
“அட ஆமா, அப்பா கூட கண்டு பிடிச்சிருக்கார். நான் தான் கண்டு பிடிக்கலை. சரி அன்னைக்கு எப்படி ஹாஸ்பிட்டல் போன?”, என்று கேட்டதும் அன்றைய நிகழ்வையும் செல்வத்தைப் பற்றியும் சொன்னாள். அவனும் தனக்கு அந்த விஷயம் தெரியும் என்று சொன்னான்.
“அப்பா பத்து தெரிஞ்சதுல இருந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு யுவன். அம்மாவை நினைச்சு பாவமா இருக்கு. இத்தனை நாளும் அப்பாவால அவங்க சந்தோஷமா இருக்கலை. நாளைக்கு நாம உங்க வீட்டுக்கு போன அப்புறம் அம்மா தனிமையை உணருவாங்க. அப்பாவை பிடிக்கலைன்னாலும் இது வரைக்கும் அவங்களுக்கு துணையா அவர் இருந்தார். இப்ப நான் தான் அவங்களைப் பிரிச்சிட்டேனோன்னு தோணுது. ஏன்னா நீ என்ன தான் என்னைக் கொடுமை படுத்தினாலும் எனக்கு உன் கிட்ட இருக்குறது தானே சந்தோஷமா இருக்கும். அதே மாதிரி தானே அவங்களுக்கும்”
“நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற யுக்தா? இப்ப அத்தை சந்தோஷமா தான் இருக்காங்க. உங்க அப்பா கூட இருந்தப்ப அவங்க நிம்மதியா இருந்துருக்க மாட்டாங்க. கொடுமைக்கார புருசங்க மேல பொண்ணுங்களுக்கு காதல் இருக்கும் தான். ஆனா உங்க அப்பா கொடுமைக்காரன் மட்டும் இல்லை. அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. அது கண்டிப்பா அத்தைக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். இதை எந்த பொண்ணாலயும் தாங்கிக்க முடியாது. இப்ப அவங்க விலகி வந்தது அவங்களுக்கு நிம்மதியை தான் தரும். அவர் கூட வாழுறது தான் அவங்களுக்கு கொடுமை. உனக்காக இத்தனை நாள் அவரை சகிச்சிக்கிட்டாங்க. இனி நாம அவங்களை நல்லா பாத்துக்கலாம் டா. நாம இந்த வீட்ல தான் இருக்க போறோம். எங்க வீட்டுக்கு போக போறது இல்லை. சுந்தரி மேடம் க்கு கொஞ்சம் மகன் மருமகள் அருமை புரியட்டும். அதுக்கப்புறமும் அங்க போயிட்டு போயிட்டு வரலாம். ஆனா நாம இருக்க போறது இந்த வீட்ல தான்”, என்று சொன்னவன் “பேசினது போதும் டி. ரொம்ப காயப் போட்டுட்ட. இந்த ரூம்ல கட்டில் இல்லை. வா அந்த ரூம்க்கு போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.
வெகுநாள் பிரிந்து இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்த படி வெகு நேரம் கதை பேசினார்கள்.
அடுத்த நாள் இருவரும் சந்தோஸமாக அலுவலகம் கிளம்பி வர அவர்களைக் கண்டு தாமரைக்கு சந்தோசமாக இருந்தது. அவர்களுக்கு திஷ்டி சுற்றியவள் சூடான காலை உணவை பரிமாறினாள்.
ஆபீஸ் சென்றதும் “உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு யுவன்”, என்று சொன்ன யுக்தா ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“ஸ்டோர் ரூம்ல என்ன சர்பிரைஸ் அம்மு?”, என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னே சென்றவன் அந்த அறையை அவள் திறந்ததும் வியந்து போனான்.
பயோ டெக்னாலஜியில் ஆய்வு செய்யக் கூடிய அனைத்து உபகரணங்களும் அங்கே இருந்தது.
“ஏய் அம்மு என்ன டி இது?”
“எனக்காக உன்னோட வாழ்க்கையவே அடகு வச்சியே. அதுக்கு என்னோட பரிசு. சத்தியமா உன்னை பாரின்க்கு அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது டா. உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை இங்க இருந்து செய்”
“ரொம்ப தேங்க்ஸ் யுக்தா. சத்தியமா நான் இதை எதிர் பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. எனக்கு கூட இங்க ஒரு ரிசெர்ச் செண்டர் ஆரம்பிக்கணும்னு ஐடியா தோணலை பாரேன்”
“அதான் உன்னோட மூளை பாதி என் கிட்ட வந்துருச்சுல்ல? அதான் இதை பிளான் பண்ணினேன். அத்தை வேற திட்டிட்டே இருந்தாங்க. அதான் உனக்காக பிளான் பண்ணினேன். இந்த ரிசெர்ச் நம்ம கம்பெனி பேர்ல தான் இருக்கு. அதனால உனக்கு பிரச்சனை எதுவும் வராது. இனி இது எல்லாமே உன் பேர்ல தான் இருக்கு. என்னையும் சேத்து”
“ரொம்ப தேங்க்ஸ் டி, நீ எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட். உன் சொத்து எல்லாம் எனக்கு பெருசே இல்லை அம்மு. நீ தான் என்னோட பெரிய பெரிய கிஃப்ட். எந்த நிமிசத்துல இருந்து நான் உன்னைக் காதலிக்கிறேன்னு என்னால சத்தியமா சொல்ல முடியாது யுக்தா. ஆனா இப்ப என்னோட காதல் மொத்தமும் உன் மேல தான் இருக்கு. அதே நேரம் நமக்குள்ள இருந்த பழைய நட்பும் அப்படியே தான் இருக்கு. ஐ லவ் யு டி அம்மு”
“போதும் போதும் இனி நம்ம கம்பெனியை நான் பாத்துக்குறேன். நீ உன் வேலையைப் பாரு”
“அம்மு ஒரு ஹெல்ப் கேக்கட்டா?”
“கேளு யுவன்”
“நம்ம கிளாஸ் ரேவதி நினைவு இருக்கா?”
“இருக்கே. அவ கிட்ட நீ என்னை பேசக் கூடாதுன்னு சொன்னியே?”
“ஆமா, இப்ப அவ ரொம்ப கஷ்டப் படுறா. உனக்கு தெரிஞ்ச இடத்துல ஏதாவது வேலைக்கு சேத்து விட முடியுமா?”
“நம்ம கம்பெனிலே சேத்துக்கலாமா?”
“அது சரி வராது யுக்தா. எப்படி இருந்தாலும் அவளாலயும் சரி நம்மளாலயும் சரி. பழசை மறக்க முடியாது. தினமும் பாக்குற மாதிரி இருந்தா நல்லா இருக்காது”
“சரி வேற இடத்துல பாப்போம். சரி அவளை எப்ப பாத்த? அவ எப்படி இருக்கா?”
“அன்னைக்கு அந்த போட்டோல இருந்தது ரேவதி தான்”
“என்னது?”, என்று அவள் கேட்டதும் நடந்ததைச் சொன்னான் யுவன்.
“சாரி யுவன், நீ எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிருக்க? நான் உன்னைக் கஷ்டப் படுத்திட்டேனே? சாரி”
“விடு யுக்தா, நீ என்ன வேணும்னா பண்ணின? சரி யுக்தா. வா வேலையைப் பாப்போம்”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அன்று மாலை வேலை முடிந்ததும் அவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். அவள் கேள்வியாக பார்க்க “சும்மா பாத்துட்டு போவோம்”, என்று சொல்லி கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த சுந்தரி “பெரிய இவன் மாதிரி பேசிட்டு போன? இப்ப இவளையும் இழுத்துட்டு வந்து நிக்குற?”, என்று கேட்டாள்.
“சுந்தரி, வந்த பிள்ளைகளை வாசல்லே நிக்க வச்சிருக்க? உள்ள வா யுவன். உள்ள வா மா மருமகளே”, என்றார் ஈஸ்வரன்.
சுந்தரியை முறைத்து விட்டு இருவரும் உள்ளே வந்தார்கள். சுந்தரியை ஒரு பார்வை பார்த்தவன் “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாப்பா?”, என்று ஆரம்பித்து யுக்தா தனக்காக ஏற்பாடு செய்திருக்கும் வேலையைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டு சுந்தரிகே வியப்பாக இருந்தது.
ஏதோ மகன் வாழ்க்கை காப்பாற்றப் பட்டது போல உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. வேகமாக அடுப்படிக்குச் சென்றாள். யுவன் சுந்தரி போன திசையைப் பார்க்க “அவ கிடக்குறா விடு டா”, என்ற ஈஸ்வரன் இருவரிடமும் வேறு கதையை பேச ஆரம்பித்தார்.
அப்போது டீயுடன் வந்தாள் சுந்தரி. அனைவரும் அவளை வியப்பாக பார்த்தனர்.
“வீட்டுக்கு வந்தவங்களுக்கு டீ கொடுக்கணும்ல? அதான்”, என்று வீரப்பாக சுந்தரி சொல்ல யுவனுக்கு அன்னையை நினைத்து சிரிப்பு வந்தது. அவள் எடுத்து வந்த தட்டில் இரண்டு டம்ளர் தான் இருந்தது.
யுக்தாவுக்கு அம்மா கொண்டு வரவில்லையே என்று மனதுக்கு கஷ்டமாக இருந்தது யுவனுக்கு. அதனால் ஒரு டம்ளரை எடுத்து யுக்தாவுக்கு கொடுத்தான்.
“டேய் அது உனக்கு டா. வயித்துப் பிள்ளைக்காரிக்கு டீயா கொடுப்பாங்க? அவளுக்கு நான் பால் ஆத்திக் கொடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சுந்தரி இந்த அளவுக்கு மாறினதே அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
அங்கே சிறிது நேரம் இருந்து விட்டு தங்களின் வீட்டுக்குச் சென்றார்கள். யுக்தா பண்ணிய விஷயம் கேள்விப் பட்ட தாமரைக்கும் சந்தோசமாக இருந்தது.
தங்களுக்காக கஷ்டப் பட்ட மருமகனுக்கு எதுவும் செய்ய வில்லையே என்ற அவளது வருத்தம் கூட அவளை விட்டுச் சென்றிருந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் வேறு ஒரு இடத்தில் ரேவதிக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள் யுக்தா. அதற்கு ரேவதி நேரில் வந்து யுக்தா மற்றும் யுவனுக்கு நன்றி சொல்லி விட்டுச் சென்றாள்.
மேலும் ஒரு வாரம் கழித்து மெதுவாக கம்பெனிக்கு வந்தார் செல்வம். ஆனால் அவரை உள்ளேயே விட வில்லை. இதற்கு மேல் வந்து நின்றால் கொடுத்த வீடையும் கம்பெனியையும் பிடுங்கிக் கொள்வார்கள் என்பதால் இரண்டாவது குடும்பத்துடன் சென்று தங்கிக் கொண்டார்.
யுக்தாவின் பூர்வீக வீட்டை அவர் விற்க நினைத்து அறிவிப்பு விட தாமரையின் பேரில் அந்த வீட்டை வாங்கினான் யுவன். ஆனால் தாமரை அந்த வீட்டை வாடகைக்கு விடச் சொல்லி விட்டாள்.
அடுத்து வந்த நாட்கள் எவ்வளவு விரைவாக நகர்ந்ததோ யுக்தாவின் வயிறும் வளர்ந்தது. யுவன் ஆராய்ச்சியில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தான். ஏற்கனவே அவன் செய்து கொண்டிருக்கும் வேலை தான் என்பதால் அவனுக்கு சுலபமாக இருந்தது.
ஆனால் அமைதியே உருவாக இருந்த யுக்தா தான் புயலன மாறி அவனை பந்தாடிக் கொண்டிருந்தாள். அன்று இரவு வீட்டுக்கு வந்தவனைக் கண்டு முகம் திருப்பினாள். பெரிய வயிற்றுடன் அழகாக இருந்த மனைவியைக் காதலாக பார்த்தவன் அவளை சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.
“போ நீ என்னையும் நம்ம பேபியையும் கண்டுக்குறதே இல்லை. உனக்கு அந்த ரூமில் செட்டப் வச்சு கொடுத்தாலும் கொடுத்தேன். அங்கேயே இருக்க போ”, என்று முகம் திருப்பினாள். அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப் படுத்திய யுவன் அவளை தன்னுடைய நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.