அன்று அரசு விடுமுறை என்பதால் விடிந்தும் எழுந்து கொள்ள மனதில்லாமல் படுத்திருந்தாள் வினோதினி. தூக்கம் அவளை விட்டுச் சென்றிருந்தது தான்.
ஆனால் கீழே செல்ல மனதில்லை. கீழே சென்றால் விஜியையும் ரவியையும் பார்க்க வேண்டும் என்பதால் அன்று முழுவதும் அறையிலே இருக்க முடிவு எடுத்தாள். கூடவே இன்று முழுவதும் எப்படி சாப்பிடாமல் இருப்பது? சாப்பாட்டுக்கு என்ன வழி என்று அவள் மூளை சிந்தித்தது. ஆனால் அதற்கு விடை தான் தெரிய வில்லை.
இன்பாவிடம் சொன்னால் வாங்கித் தருவான் தான். ஆனால் அவனிடம் சொல்ல மனதில்லை. ஒரு வேளை அவன் தந்தால் அடுத்த நிமிடம் விஜி தேவியிடம் போட்டுக் கொடுத்து விடுவாள் என்பதால் அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.
வினோதினிக்கு எப்போதுமே கொஞ்சம் உண்டாலும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு விட வேண்டும். ஆனால் இங்கு வந்ததில் இருந்து அவள் சரியாக சாப்பிடவே இல்லை.
என்ன செய்ய என்று தெரியாமல் அவள் சோர்ந்து படுத்திருக்க “நீ எதுக்கு டி பட்டினி கிடக்கணும்? இந்த ஊர்ல ஹோட்டல் இல்லைன்னா என்ன? பக்கத்து ஊர்ல வாங்கிட்டு வந்து சாப்பிடு. கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை பஸ் இருக்கு. அப்புறம் என்ன?”, என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
“அதானே, நான் எதுக்கு பட்டினி கிடக்கணும்? மதியம் போய் சாப்பாடு வாங்கிட்டு வரணும். நைட்டுக்கும் அதே வச்சிக்கணும். இல்லைன்னா ஏதாவது பழம் வாங்கிட்டு வரணும். மதியம் வரைக்கும் இப்படியே படுக்க வேண்டியது தான்”, என்று எண்ணிக் கொண்டு நேரத்தைக் கடத்துவதற்காக தூங்க முயற்சி செய்தாள். தூக்கம் வரவில்லை. ஏதேதோ யோசித்த படி இருந்தாள். அவள் யோசனையில் இன்பாவும் வந்தான். அவனுடைய பார்வை, சிரிப்பு, அவனுடைய அக்கறை, அவனுடன் வண்டியில் சென்றது என அனைத்தும் நினைவுக்கு வந்தது.
அதே நேரம் ரவியின் ஊரில் வந்து இறங்கிய தேவி, கணவரிடம் “மாப்பிள்ளை வீட்டுக்கு எப்படி போகணும்னு அந்த பெட்டி கடைல கேளுங்க”, என்றாள்.
“இதோ கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு கிருஷ்ணன் செல்ல “இந்த ஊர்லயா மா விஜி இருக்குறா? பயங்கர கிராமமா இருக்கு. நம்ம கேட்டதுக்கு அது இதுன்னு பீத்திக்குவா. உள்ளதை உள்ள படி சொல்ல வேண்டியது தானே? எதுக்கு பொய் சொல்லணும்”, என்று கேட்டாள் அணு.
“அது அவ தேடிக் கிட்ட வாழ்க்கை. இது அவ ஊர். ஆனா அந்த பெருமை எல்லாம் அவளுக்கு எங்க இருக்கும்? நம்ம கிட்ட பொய் சொன்னா அவ சந்தோஷமா இருப்பா போல? எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி தான்”, என்று தேவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ரவி வீடு இங்க பக்கத்துல தான் இருக்காம் தேவி. வாங்க போகலாம்”, என்று சொல்லி விட்டு மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு நடந்தார் கிருஷ்ணன்.
அப்போது மணி ஆறரை என்பதால் விஜி வீட்டில் யாருமே எழுந்து கொள்ள வில்லை. கதவு பூட்டி இருந்தது. மற்ற வீடுகளில் காலையிலே வாசல் தெளித்து கோலம் போடப் பட்டிருக்க விஜி வீடு மட்டும் சுத்தமில்லாமல் கிடந்தது. அந்த வேலையை எல்லாம் விஜி செய்தால் தான் அதிசயம் என்று எண்ணிக் கொண்ட தேவி அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினாள். வெகு நேரம் கழித்து தான் எழுந்து வந்து கதவைத் திறந்தாள் விஜி.
திறந்தவள் திகைத்து போனாள். பெற்றவர்களை அந்நேரம் அவள் எதிர் பார்க்க வில்லை என்பதால் அதிர்ந்தவள் “அம்மா, அப்பா, அணு. நீங்களா?”, என்று ஆர்வமாக கேட்டாள். (www.sociobits.org)
“நான் உங்களை எதிர் பாக்கவே இல்லை. எதுக்கு வறேன்னு சொல்லலை? ஒரு போன் கூட பண்ணலை”, என்று விஜி மேலும் பேசிக் கொண்டே இருக்க “முதல்ல வந்தவங்களை வீட்டுக்குள்ள கூப்பிடு. இப்படி தான் வாசல்லயே நிக்க வச்சு பேசிட்டு இருப்பியா?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் அணு.
“உங்களைப் பாத்த சந்தோசத்துல மறந்துட்டேன். உள்ள வாங்க”, என்று அழைத்த விஜி “எதுக்கு திடீர்னு வந்துருக்காங்க? வினோதினி ஏதாவது போட்டுக் கொடுத்துட்டாளா?”, என்று மனதுக்குள் குழம்பினாள்.
உள்ளே வந்ததும் “உக்காருங்க மா, உக்காருங்கப்பா, அணு உக்காரு டி. இருங்க, நான் என் வீட்டுக்காரரை கூட்டிட்டு வரேன்”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவர் தூங்கட்டும். அக்கா எங்க டி?”, என்று கேட்டாள் தேவி. அவளுக்கு வினோதினியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவளுக்கு நியாயம் செய்ய தானே அவள் இங்கே வந்தது.
“அவளுக்கு இன்னைக்கு லீவ் தானே? அதனால தூங்குவா. எப்பவும் அந்த ரூம்ல தான் இருப்பா. எனக்கு வந்து உதவி கூட செய்ய மாட்டா. குட்டிப் பையனைக் கூட கொஞ்ச நேரம் வச்சிக்க மாட்டா”, என்று போட்டுக் கொடுத்தாள்.
“அப்படியா? இங்க வந்து இந்த வினு இப்படி மோசமா ஆகிட்டாளா? அதை விசாரிச்சே ஆகணும். அணு அக்காவைக் கூட்டிட்டு வா”, என்றாள் தேவி.
அக்காவைப் பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் “சரி மா”, என்று சொல்லி விட்டு அணு துள்ளளுடன் மாடி ஏறினாள். தேவி மற்றும் கிருஷ்ணன்க்கு கூட மேலே சென்று அவளைக் காண ஆசை தான். ஆனால் இருவருக்கும் அவளைக் காயப் படுத்தியகுற்ற உணர்வு அதிகம் இருந்ததால் அவளே கீழே வரட்டும் என்று எண்ணிக் கொண்டார்கள்.
விஜிக்கு டென்ஷன் ஏறியது. வினோதினி வந்து ஏதாவது உளறி விடக் கூடாதே என்று பயமாக இருந்தது. அவள் நைசாக அவர்களின் அறைக்கு சென்று ரவியை எழுப்பினாள்.
எரிச்சலுடன் எழுந்து அமர்ந்தவன் “என்ன டி?”, என்று கேட்டான்.
“எங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்துருக்காங்க”
“சென்னைல இருந்தா?”
“ம்ம்”, என்று அவள் சொன்னதும் அவசரமாக எழுந்து நின்றவன் முகம் கழுவி சட்டையை மாட்டி விட்டு வெளியே வந்து அவர்களை வரவேற்றான். பின் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பது போல “அம்மா அப்பா வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன். விஜி காலைலைக்கு ஏதாவது செய்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
மாடிக்கு சென்ற அணு அவளுடைய அறைக் கதவைத் தட்டியதும் “காலைலே எதுக்கு இந்த விஜி உயிரை வாங்குறா? ஒரு வேளை ரிஷி குட்டியோ?”, என்று எண்ணி தான் கதவைத் திறந்தாள் வினோதினி. ஆனால் அங்கு நின்ற அணுவை சத்தியமாக அவள் எதிர் பார்க்க வில்லை.
“அணு…..”, என்று அவள் பாசமாக அழைக்க “அக்கா”, என்ற படி அவளைக் கட்டிக் கொண்டாள் அணு. “நல்லா இருக்கியா டி? வறேன்னு சொல்லவே இல்லை”, என்று வினோதினி கேட்க “நீ தான் எங்க போனை எடுக்கவே இல்லையே?”, என்று குற்றம் சாட்டினாள் தங்கை.
அது எதற்காக என்று எண்ணி வினோதினி முகம் கசங்க “அதை விடு கா. சரி கீழ வா”, என்றாள் அணு.
கீழே தேவி வந்திருப்பாள் என்று தெரியும் என்பதால் “நான் வரலை” என்றாள்.
“அக்கா வா கா. கீழ யார்லாம் இருக்கா தெரியுமா?”
“இது என்ன கேள்வி? நீயும் அம்மாவும் தான், அப்புறம் விஜி அவளோட குடும்பம்”
“இல்லை, கூட புது ஆள் வந்திருக்காங்க”
“புது ஆளா, யாரு அணு?”
“நம்ம அப்பாவும் வந்துருக்கார்”
“என்ன டி சொல்ற?”
“ஆமா, அது மட்டுமில்லாம அவர் நமக்கு பிடிச்ச அப்பாவா வந்துருக்கார்”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னாள். அதைக் கேட்டு ஒரு நிம்மதி வினோதினி நெஞ்சில் பரவியது.
கூடவே தானும் அவரிடம் பக்குவமாக பேசி இருக்க வேண்டுமோ? அவரைக் கண்டாலே திட்டி அவரை விலக்கி வைத்து, தானும் அவரிடம் இருந்து ஒதுங்கிப் போனது தவறோ என்று யோசித்தாள்.
“அக்கா வா, கீழே போகலாம். நான் இன்னும் ரிஷி குட்டியைப் பாக்கலை”, என்றாள்.
“நான் வரலை”, என்று முகம் இறுக சொன்னாள் வினோதினி.
“அக்கா என்ன கோபம்னாலும் இன்னைக்கு ஒரு நாள் விட்டுறேன். வா நீ”, என்று சொன்ன அணு அவள் கையைப் பற்றி கீழே அழைத்துச் சென்றாள்.