எந்த பாதிப்பும் இல்லாதவள் போல “சரி நான் போய்க் கிளம்பனும். நான் போறேன்”, என்றாள்.
“ஒரே ஒரு நிமிஷம்”, என்று அவன் சொன்னதும் “ஏன் டா இப்படி படுத்துற? கண்டிப்பா நான் இப்ப உண்மையை உளறத் தான் போறேன்”, என்று எண்ணிக் கொண்டு நின்று அவனைப் பார்த்தாள்.
“அப்படின்னா வேற ஒருத்தனை நீ கட்டிக்குவ அப்படித் தானே?”
“ஆமா”
“நமக்குள்ள நடந்ததை எல்லாம் மறந்துருவியா டி?”, என்று துக்கம் தொண்டை அடைக்க கேட்டான்.
அவன் கேள்வியில் இருந்த துக்கம் தாங்க முடியாமல் தலை குனிந்தவள் “மறந்து தான ஆகணும்?”, என்று கேட்டாள்.
“உனக்கு அது தப்பா தெரியலையா? என் கிட்ட முத்தமெல்லாம் வாங்கிட்டு உன்னால எப்படி டி வேற ஆளைக் கட்டிக்க முடியும்?”
“இதுல என்ன இருக்கு? எல்லாரும் ரெண்டு மூணு பேரை லவ் பண்ணிட்டே இன்னொருத்தரைக் கட்டிக்கிறாங்க? நான் என்ன உங்களை லவ்வா பண்ணினேன்?”, என்று திக்கித் திணறிக் கேட்க அவள் பதிலில் எரிச்சல் அடைந்த இன்பா “ஓகோ”, என்ற படி அவளை நெருங்கினான். அவன் பார்வையில் இருந்த வேட்கையில் பின்னால் நகர்ந்தவள் “நான் போகணும்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.
ஊதா நிற பட்டுப் புடவை அவள் மேனியைத் தழுவி இருக்க, அவன் கண்கள் ரசனையாக அவளைத் தழுவியது. அவளை அணுஅணுவாய் ரசித்தான். கொஞ்சம் கூட தயங்காத உரிமையுடன் கூடிய அவந்து பார்வையில் அவளுக்கு மூச்சடைத்தது.
பாட்டி அவனிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என்று சொல்லி இருக்க அவளால் இந்த நிமிடம் எப்படி நடந்து கொள்ள என்று கூட தெரிய வில்லை.
அவன் பார்வயில் இருந்த உரிமை அவளது நெஞ்சத்தை நெகிழ்த்தியது. அவனுக்கோ இனி அவள் தனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற வலி நெஞ்சைக் கவ்வியது. அந்த வலிக்கான மருந்து அவள் தான் என்று அவனுக்கு தெரியும். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வாழ்க்கையே தலைகீழாக மாறினாலும் மாறலாம்.
அதற்கு முன் அவளால் கிடைக்கப் பெரும் சந்தோஷத்தை இழக்க அவனுக்கு மனதில்லை. அவள் வேண்டும் என்ற தாகம் அவனது ஒவ்வொரு செல்லிலும் உருவாக அவளைப் பார்வையால் தின்று கொண்டிருந்தான்.
அவன் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் அவள் திரும்பி நடக்கப் போக அடுத்த நொடி அவளது கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
“இன்பா என்ன பண்ணுறீங்க? விடுங்க”
“முடியாது”, என்று சொல்லிக் கொண்டே அவன் கைகள் அவளை எலும்புகள் உடையும் அளவுக்கு இறுக்கி அணைத்துக் கொண்டது.
அவன் அணைப்பில் நெகிழ்ந்தாலும் இது அதற்கான நேரமில்லை என்று உணர்ந்து “இன்பா பிளீஸ், நாம இப்ப கிளம்பனும்”, என்றாள்.
“எனக்கு எங்கயும் போக வேண்டாம். நீ மட்டும் தான் வேணும்”, என்று சொன்னவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான். ஆறுதல் தேடும் குழந்தை போல தன் மேல் சாய்ந்த அவனுடைய தலை கோதி ஆறுதல் சொல்ல அவள் மனது துடித்தது.
ஆனால் அதைச் செய்யாமல் “இன்பா நேரம் ஆச்சு, யாராவது வரப் போறாங்க. கதவு திறந்திருக்கு”, என்று அவனை எச்சரித்தாள்.
“யார் வந்தாலும் வரட்டும். நாம இப்படி இருக்குறதைக் கூட பாக்கட்டும். அப்படிப் பாத்தாலாவது உன்னை எனக்கு கட்டி வச்சிருவாங்கல்ல?”
“அதுக்கு நான் சம்மதிக்கணுமே?”
“நீ சம்மதிக்கவே வேண்டாம் டி. நீ என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லவே வேண்டாம். நீ நீயாவே இரு. இனி உன் கிட்ட கெஞ்சவே மாட்டேன். ஆனா இந்த நிமிஷம் எனக்கு நீ வேணும்”
“எனக்கு உன்னைத் தவிர வேற எவளும் வேண்டாம். எங்க அப்பா கேட்டாலும் இதைத் தான் சொல்லுவேன். அவர் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா கடைசி வரை பிரம்மச்சாரியா இருந்துட்டு போறேன். நான் எவளையும் பாக்கப் போறதா இல்லை”, என்று அவன் உரைக்க அவன் பதிலில் நெகிழ்ந்தாள்.
அவனை வெறுப்பேற்ற “ஆனா நான் வேற கல்யாணம் பண்ணிக்குவேன்”, என்றாள்.
“தாராளமா பண்ணிக்கோ. ஆனா இன்னைக்கே பண்ணிக்க மாட்டல்ல? நீ வேற கல்யாணம் பண்ணிக்கிற வரை நான் உன் கிட்ட இப்படி தான் நடந்துக்குவேன்”, என்று சொன்னவன் கைகள் அவளுடைய இடையில் பதிந்தது.
“இது தப்பு இன்பா”, என்று அவள் வாய் சொன்னாலும் அவன் தொடுகையில் அவள் உடல் நடுங்கியது.
“என்ன தப்பு? எப்படின்னாலும் நீ இதை எல்லாம் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்க தானே போற? அப்புறம் என்ன? எனக்கு கிடைச்சிருக்குற இந்த கடைசி சான்ஸை நான் மிஸ் பண்ணுறதா இல்லை”, என்றவன் அவள் மேலும் ஏதோ சொல்ல வர அவளை பேச விடாதவாறு அவள் இதழ்களைச் சிறை செய்தான்.
அவளுடைய பேச்சும் நின்றது. அவளது மூளையும் அவன் வசம் சென்றது. அவனுடைய முத்தத்தில் எப்போதும் போல மயங்கியவளின் கரம் உயர்ந்து அவனுடைய முதுகை வளைத்துக் கொண்டது.
அவனோ இது தான் கடைசி சந்தர்பம் என்று எண்ணி முரட்டுத்தனமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
பின் அவளிடம் இருந்து விலகி “ஏன் டி உனக்கு என்னைப் பிடிக்கலை?”, என்று கேட்டுக் கொண்டே மீண்டும் அவள் இதழ்களை முற்றுகை இட்டான்.
அவளுக்கு யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்ததே தவிர அவனை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அவளைத் தொட உரிமையுள்ளவன் அவன் மட்டுமே என்னும் நிலையில் அவள் ஏன் விலகப் போகிறாள்? அவளுடைய இதழ்த் தீண்டலை முழு மனதாக அனுமதித்தாள்.
ஆனால் அவனுடைய கரங்கள் அவளுடைய மேனியில் அழுத்தமாக பதிய இந்த செய்கையில் நிலை குலைந்து போனாள். எப்போதுமே முத்தத்துடன் விலகுபவனின் இந்த செய்கை அவளுக்கு திகைப்பைக் கொடுத்தது.
அவனோ தன்னை மறந்து அவளிடம் ஒன்றி இருந்தான். அவள் முழுமையாக தனக்கு வேண்டும் என்ற ஆசை அவனைச் சுற்றி வளைத்தது. அவன் அவனாக இல்லை. இப்போது யாராவது வந்து பார்த்தால் இந்த நிச்சயம் நின்று விடும் என்றும் வினோதினியை தனக்கே கட்டி வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் அவன் மனதில் உயர அவளை விடவே கூடாது என்று இருந்தான்.
தன் கைக்குள் இருப்பவள் தன்னவள் என்ற உரிமையில் அவன் அத்து மீற அவளோ உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்தாள். அதே நேரம் கதிர் உச்சக் கட்ட டென்சனில் கீழே நின்றிருந்தான்.
“பேசணும்னு போனவனை இன்னும் ஆளைக் காணும். கீழ எல்லாரும் கிளம்பிட்டாங்களே? இப்ப என்ன பண்ண?”, என்று எண்ணிக் கொண்டு மாடிப் படியில் ஏறியவன் அறைக்குச் செல்லாமல் படியில் இருந்தே “மச்சான் பேசிட்டியா?”, என்று குரல் கொடுத்தான்.
கதிர் சத்தம் கேட்டதும் அவசரமாக அவனிடம் இருந்து விலகினாள் வினோதினி. ஆனாலும் அவளை மீண்டும் தன்னுடைய கை அணைப்புக்குள் கொண்டு வந்தவன் “ஏன் டி அன்னைக்கு என்னைக் காப்பாத்தின? அப்பவே விட்டுருந்தா அவனுங்க கையால வெட்டுப் பட்டு செத்துருப்பேன்ல? அப்படி போய்ச் சேந்திருந்தா எனக்கு இந்த வலி வந்துருக்காது. சரி நீ போ. இந்த நிமிஷம் என் கைக்குள்ள இருந்தள்ல? எனக்கு அந்த சந்தோஷம் போதும் டி. இதை நினைச்சிட்டே நான் செத்து போனா கூட சந்தோஷம் தான். அப்புறமாவது எனக்கு நிம்மதி கிடைக்கட்டும்”, என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் அவள் கரம் உயர்ந்து அவன் உதட்டை மூடியது. தன்னுடைய உதட்டில் பதிந்த அவளுடைய கரத்தை எடுத்தவன் “இனி நான் உன் வாழ்க்கைல வர மாட்டேன் வினோ. உன்னை எந்த விதத்துலயும் தொல்லை செய்ய மாட்டேன். இந்த நிச்சயத்தை எப்படி நிறுத்தணும்னு எனக்கு தெரியும். நான் முடியாதுன்னு சொன்னா கண்டிப்பா என் அப்பா என்னை வீட்டை விட்டு அனுப்பிருவார். நானும் போயிருவேன். உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன். உனக்கு கல்யாணம் நடக்குற வரைக்கு உன் பதிலுக்காக காத்துட்டு இருப்பேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கணும்னு தெரியும்”, என்றான். அவன் சொன்னதே அந்த வாழ்க்கை எது என அவளுக்கு புரிய வைத்தது.