தாத்தா அங்கிருந்து சென்றதும் “எனக்கு வயிறு கலக்குது டா. ஒழுங்கா கக்கா கூட போக விடலை அந்த தடியனுங்க. சரி நான் போய் முதல்ல குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றான் இன்பா.
கட்டிலில் அமர்ந்த கதிரின் மனம் இளவரசியிடம் சென்றது. “இந்த அம்மாச்சி இருக்கே? இதுக்கு வேற வேலையே இல்லை. வெறும் உறவு முறைல மட்டும் உரிமை இருந்தா போதுமா? நான் எங்க அவ எங்க? அவங்க வீட்லயே இருந்துட்டு அவங்களுக்கே துரோகம் செய்யக் கூடாது”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
இளவரசியை எப்படி கல்லூரிக்கு அழைத்துச் செல்ல என்று தவிப்பாக இருந்தது அவனுக்கு. சிறு வயதில் இருந்து அவள் மீது ஆசையை வளர்த்துக் கொண்டவன் ஆயிற்றே. என்ன யோசித்தும் அவளை எப்படித் தவிர்க்க என்று அவனுக்கு புரியவே இல்லை.
இன்பா பாத்ரூமில் இருந்து குளித்து முடித்து வெளியே வந்தான். கதிர் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன மாப்பிள்ளை முகம் ஒரு மாதிரி இருக்கு. ஆச்சி ஏதாவது வெறுப்பேத்திடுச்சா?”, என்று கேட்டான்.
“அம்மாவா? அவங்களுக்கு நீ செல்லப் பிள்ளையாச்சே? அவங்க உன்னை ஒண்ணுமே எதுவும் சொல்ல மாட்டாங்களே. இப்ப என்ன செஞ்சாங்க?”
“அரசியை காலேஜ்ல கொண்டு விடணுமாம்? பிளீஸ் மச்சான் நீ கொண்டு போய் விடேன். பிளீஸ் டா. நீ சொன்னா அத்தை கேப்பாங்க”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான். அவன் கெஞ்சுதல் இன்பாவை அசைத்து தான் பார்த்தது.
ஆனால் கதிரின் ‘அரசி’ என்ற அழைப்பு இன்பாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. “என் தங்கச்சியை கொண்டு போய் காலேஜ்ல விடுறதுக்கு எனக்கு சந்தோஷம் தான் மாப்பிள்ளை. ஆனா உன்னையும் இளவரசியையும் சேத்து வைக்க தான் அம்மா அப்படி செய்றாங்கன்னு தெரிஞ்சும் நான் எப்படி டா உங்க ரெண்டு பேருக்கும் இடைல வருவேன்? இருந்தாலும் நீ இவ்வளவு நல்லவனா இருக்க கூடாது டா மாப்பிள்ளை”, என்று எண்ணிக் கொண்டு அவசர அவசரமாக உடையை மாற்றியவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
அங்கே இளவரசி சேலை கட்டி அழகு சிலை என அமர்ந்திருந்தாள். அவளுக்கு பாமா இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் தலையை வலிக்காதவாறு கொட்டிய இன்பா அவள் அருகில் அமர்ந்த படி “சின்ன லொல்லையா டி நீ? உனக்கு ஒரு ஆள் ஊட்டி வேற விடணுமோ? நீயே சாப்பிட மாட்டியா?”, என்று கேட்டான்.
“போண்ணா? தலையைக் களைக்காதே”, என்று சிணுங்கியவள் “எனக்கு போதும் மா”, என்றாள். உடனே கை கழுவி வந்தாள் பாமா.
“காரியத்தையே கெடுத்த போ”, என்று எண்ணிக் கொண்டு “எனக்கு பசிக்குது. அவன் எப்ப குளிச்சிட்டு வந்து எப்ப சாப்பிடுறது?”, என்றவன் தட்டைத் தூக்கிக் கொண்டு அமர்ந்து விட்டான். அதற்கு மேல் அவனை பட்டினி போட மனதில்லாமல் அவனுக்கு பரிமாறினாள் பாமா. அவசர அவசரமாக நான்கு இட்லியை விழுங்கியவன் “அம்மா நான் பஞ்சாயத்து ஆபீஸ் போறேன்”, என்றான்.
“ஏண்டா இவ்வளவு அவசரம்?”
தங்கையை ஒரு பார்வை பார்த்தவன் “எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான். அதை இளவரசி புரிந்து கொண்டாள். தலை குனிந்து அமர்ந்திருந்தாலும் அவளது முகத்தில் புன்னகை உறைந்திருந்தது.
அவளே வாரம் வாரம் இந்த திங்கள் கிழமைக்காக தான் காத்திருக்கிறாள். ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் திங்கள் கிழமை கட்டாயம் சேலை கட்ட வேண்டும். சேலை கட்டினால் தான் கதிருடன் பைக்கில் செல்ல முடியும். அந்த நாளுக்காகவே வாரம் முழுக்க தவம் இருப்பாள். அதனால் அண்ணன் அவசரமாக செல்வது அவளுக்கு புரிந்தது.
“இன்பா, பாத்து சூதானமா போ கண்ணு. கவனம்”, என்று சொல்லி வழி அனுப்பி வைத்தாள் பாமா.
“சரி மா, நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னவன் வெளியே வந்தான்.
“ஆச்சி மாத்திரை இருக்குதா? காலி ஆகிருச்சா?”, என்று கேட்ட படி செருப்பை மாட்டினான்.
“மாத்திரை இருக்கு ராசா. ஆமா எங்க அந்த போக்கத்தவன்?”
“கதிரை கேக்குறியா? குளிக்கிறான்”
“அவன் ஏண்டா இப்படி இருக்கான்? நீயும் கல்யாணம் பண்ண மாட்டிக்க? அவனும் பிடி கொடுக்க மாட்டிக்கான்”
“காலைலே ஆரம்பிச்சிட்டியா? கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா? அவனும் மனசு மாறுவான். அவன் மனசுல என்ன இருக்குனு தெரியாம என்னால எதுவும் கேக்க முடியாது. அவனா பேசட்டும் பாக்கலாம். ஆமா எங்க தாத்தா?”
“இதோ வந்துட்டேன்”, என்ற படி வந்தார் சண்முகநாதன்.
“வரேன் தாத்தா, ஆச்சி போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
நேராக பஞ்சாயத்து அலுவலகம் வந்தான். அங்கே அவனுக்கு முன்னே வேலு மணி இருந்தான். “சீக்கிரம் வந்துட்டியா மணி?”, என்று கேட்டான்.
“ஆமாங்கண்ணா”
“சரி, இன்னைக்கு என்ன வேலை இருக்கு?”
“ஓ.ஏ.பி பென்ஷன்க்கு பத்து பெட்டிசன் வந்துருக்கு. அப்புறம், குளத்து வேலை பாக்குறவங்களுக்கு சம்பளம் போடணும். இன்னைக்கு அவ்வளவு தான். இதுவுமே உங்க வேலை இல்லை. ஆனா நீங்களே தான் இழுத்து போட்டு செய்யுறீங்க?”
“நேரடியா பாத்தா இது என் வேலை இல்லை தான் மணி. ஆனா சுத்தி வளைச்சுப் பாத்தா அது என் வேலைல தான் வரும். என்னால நாலு பேருக்கு உதவ முடியுது. அந்த சந்தோஷத்தை நான் கெடுத்துக்குவேனா? சரி, குளத்து வேலை பாக்குறவங்களுக்கு சம்பள பட்டுவாடா பண்ணுறதை நீ சரி பாத்துரு. நான் கூட்டுறவு பேங்க் வரைக்கும் போயிட்டு வரேன். விவசாய லோன் தள்ளுபடி செய்யப் போறாங்கன்னு சொன்னாங்கல்ல? சில ஆட்கள் நிறைய லோனைப் போட்டு கஷ்டப் பட்டுட்டு இருக்காங்க. நான் என்னன்னு கேட்டுட்டு புதுசா ஓ.ஏ.பி பென்ஷன் கேட்டவங்களுக்கும் அக்கவுண்ட் கிரியேட் பண்ண சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
அந்த கூட்டுறவு வங்கி முன்னே இருந்த வேப்ப மர நிழலில் தன்னுடைய புல்லட்டை நிறுத்தியவன் அந்த அலுவலகம் உள்ளே சென்றான்.
வங்கி முன்னே இருந்த மரத்தின் அடியில் அழகாக வீற்றிருந்தது அந்த ஸ்கூட்டி. அதை இன்பா கவனிக்க வில்லை. கையில் இருந்த பைலுடன் உள்ளே நுழைந்தான்.
காலையில் இருந்தே வினோதினிக்கு மனதுக்கு உற்சாகமாக இருந்தது. அவனைக் காப்பாற்றி விட்டு பேங்க்க்கு வந்தவளை பேங்க் அலுவலகர்கள் அனைவரும் சந்தோஷமாகவே வரவேற்றார்கள். அவளுக்கு என்று கேசியர் பணி கொடுக்கப் பட முதல் நாளே அது வேண்டாமே என்று மறுத்து விட்டாள்.
பின் அனைவரின் வேலையையும் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கான பணி என்ன என்பதை எல்லாம் மனதுக்குள் குறித்துக் கொண்டவள் தனக்காக கொடுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தாள். ஆனாலும் மாற்றி மாற்றி வேலை இருந்து கொண்டே இருந்தது. கிராமபுறம் என்பதால் பெரும்பாலும் வயதானவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களுமாக வர மற்ற அலுவலர்கள் கொஞ்சம் சிடுசிடுவென்று தான் விழுந்தார்கள். வினோதினி தன்னால் முடிந்த அளவுக்கு மற்றவர்களிடம் பொறுமையாகவும் தன்மையாகவும் பேசினாள்.
பேங்க் உள்ளே வந்த இன்பா உள்ளே பேங்க் மேனேஜர் அறை காலியாக இருக்கவும் அவர் இன்னும் வரவில்லை என்பதை புரிந்து கொண்டு வண்டி அருகில் வந்தான். அப்போது தான் அவளது வண்டி அவன் கண்ணில் விழுந்தது.
“இந்த வண்டி அவளோடது தானே? இது தானா? இல்லை என் கற்பனையா? இல்லை இல்லை இதுவே தான். எனக்கு நல்லா நினைவு இருக்கு. அப்ப அவ உள்ள தான் இருக்காளா?”, என்று எண்ணிக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.
அவனது கண்கள் ஆர்வமாக அவளைத் தேடியது. பணம் எடுப்பதற்காக தான் பேங்க்க்கு வந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டு பணம் எடுப்பதற்காக நின்றவர்கள் வரிசையில் அவளைத் தேடினான்.
அவளை அங்கு காண வில்லை என்றதும் அவன் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஒரு வேளை அந்த வண்டி அவளோடது இல்லையோ என்று எண்ணினான்.
“இதோ, இந்த இடத்துல உங்க கை நாட்டை வைங்க பாட்டி”, என்ற இனிமையான குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே அமர்ந்திருந்த வினோதினியைக் கண்டு ஆனந்தமாக அதிர்ந்தான்.
அவன் கண்கள் அவளைக் கண்டதும் மலர்ந்தது. “அம்மணி இங்க தான் வேலை பாக்குறாங்களா? ரொம்ப வசதியா போச்சு. இன்னும் அடிக்கடி பாக்கலாம்”, என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்த படி நின்றிருந்தான்.