‘என்னாது..?” என கண்களை அகல விரித்தவள்.. ‘மாப்பிள்ளை பார்க்க போறியா.?” என்றாள் பேரதிர்ச்சியாக.
‘பின்ன பார்க்க மாட்டமா.? உனக்கும் இருபத்திரண்டு பிறக்க போகுது.. நான் நல்லாயிருக்கும்போதே உன்ன ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுத்திடனும்..”
‘முடியாதுமா.. உன்ன விட்டு என்னால எங்கையும் போக முடியாது.. அப்படியேது வெளியூர்ல மாப்பிள்ளை பார்த்துடாதிங்க..” என்றாள் உறுதியாக.
‘என் ஆதிம்மா அழகுக்கேத்த மாதிரி நம்மூர்ல எந்த மாப்பிள்ளை இருக்கான்..” என மகளின் கன்னம் தடவினார் பெருமையாக.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது.. எப்படிபட்ட மாப்பிள்ளை வந்தாலும் உன்ன தனியா விட்டுட்டு போகற மாதிரியா இருந்தா கல்யாணமே செய்துக்க மாட்டேன்.. இங்க நம்மளோடவே இருக்கிற மாதிரி மாப்பிள்ளையா பாருங்க.. அதுவும் இப்போ இல்ல.. இன்னும் நாலஞ்சு வருசம் கழிச்சிதான்..” என்றாள் கறாராக.
‘ம்.. இப்படி சொல்றவங்கதான் கல்யாணத்துக்கப்புறம் சாரிம்மா.. எனக்கு இங்கையே சரியாயிருக்கு.. வரவே நேரமில்லன்னு சொல்வாங்க..” என்றார் சிரிப்போடு.
‘ம்மா.. நிஜமா சொல்றேன்.. என்னை கேட்காம யாருக்கும் ஓ.கே சொல்லிடாதிங்க.. அப்புறம் எல்லார் முன்னவும் வீட்டோட மாப்பிள்ளையைதான் நான் கல்யாணம் செய்துக்குவேன்.. நீங்க இடத்தை காலி பண்ணுங்கனு சொல்லிடுவேன்..”என்றாள் மிரட்டலாக.
‘என்ன..? சத்தம் வேலிவரைக்கும் கேக்குது..?” என்றவாறு ராஜாத்தி வந்தார்.
‘வாங்கண்ணி.. உங்க தம்பி மக என்ன சொல்றா தெரியுமா.? வீட்டோட மாப்பிள்ளையத்தான் கல்யாணம் கட்டிக்குவாளாம்..” என்றார் நொடிப்பாக.
ம்.. இவ மட்டும் ஏழெட்டு வருசம் முன்ன பொறந்திருந்தா நம்ம மகனுக்கு கட்டியிருக்கலாம்.. என நினைக்க ராஜாத்தியின் முகம் வாடித்தான் போனது.
‘என்ன அண்ணி.? நீங்களும் சோர்ந்துட்டிங்க.? என்னைக்கானாலும் ஒருநாள் ஆதுவை பிரிஞ்சிதான ஆகனும்..?” என்றார்.
பின்னே சுதாரித்தவராய்.. ‘ம்… ” என பெருமூச்சிழுத்து.. ‘ஆதிகிட்ட எதோ பேசனும்னு கர்ணாவும் வந்திருக்கான்.. வர வழியில அவன் சினேகிதன் பிடிச்சிக்கிட்டான்.. கர்ணன் வந்து நாலு தட்டு தட்டினானா ஒழுங்கா சொன்ன பேச்சு கேட்க போறா.. இவள்லாம் ஒரு ஆளுன்னு இவ பேச்சுக்கு பயந்துட்டிருக்கியா காஞ்சனா.?” என்றார் எள்ளலாக.
மாமாவாவது இங்க வரதாவது என நினைத்தவள்.. ‘அத்த.. நிஜமா சொல்றேன்.. எங்கம்மாவை விட்டு நான் எங்கையும் போகமாட்டேன்..” என உறுதியாக சொன்னவள்.. பின்னே சிரித்து.. ‘வேணும்னா கர்ணா மாமாவை கட்டிக்கிட்டு இங்கையே இருந்துக்கவா.?” என்றாள்.
‘ஆத்தி.. வந்துடப் போறான் வாய மூடு.. விளையாட்டுக்கு கூட இப்படி பேசாத.. அவன் காதுலயேது விழுந்துச்சி.. உன்ன விட்டுட்டு என்ன புடிச்சிக்குவான்..” என்றார் உண்மை பயத்தோடு.
‘ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. வெளியூர்லயேது மாப்பிள்ளை பார்த்திங்க.. நான் கர்ணா மாமாவைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு வரவங்கள்ட்ட சொல்லுவேன்..” என மிரட்டி.. இவங்களை அடக்க இதையே படிச்சிக்க வேண்டியதுதான் என உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே வந்தாள்.
அப்பொழுதுதான் கம்பிவேலியை திறந்து கொண்டிருந்தான் முப்பத்தெட்டு வயது கர்ணன். அச்சோ.. கொஞ்சம் முன்ன நான் பேசினதை மட்டும் கேட்டுருந்தாங்க.. நான் அவ்வளோதான் என பதறியவள்.. ‘வாங்க மாமா..” என்றாள் வரவழைத்த இயல்போடு.
தலையசைப்போடு நெருங்கியவன்.. ‘உன்னை பார்க்கத்தான் வந்தேன்.. அப்படி உக்காரு..” என வெளியிலிருந்த திண்ணையை காண்பித்தான்.
அதுக்குள்ள பஞ்சாயத்து போய்டுச்சா.. என நினைத்தவாறு ‘அத்தையும் அம்மாவும் உள்ளதான் இருக்காங்க.. உள்ள வாங்க மாமா..” என்றாள்.
கர்ணன் முறைக்கவும் அமைதியாய் அவன் சொன்னவாறு திண்ணையில் அமர்ந்தாள். ‘யாரை கேட்டு கிடைச்ச வேலையை வேணாம்னு சொன்ன.?” என்றான் முறைப்பாக.
‘அம்மா என் கூட வரமாட்டன்னாங்க.. அதான்..” என்றாள் சன்ன குரலில்.
‘காலேஜ் முடிச்சி வேலைக்கு போற அளவு வளர்ந்தாச்சி.. இன்னும் அத்தைய எதிர்பார்ப்பியா.? ஒழுங்கா சென்னை கிளம்புற வழிய பாரு..” என்றான் மிரட்டலாக.
இவங்ககிட்ட அம்மாவை இங்க தனியா விடமுடியாதுன்னு சொன்னா நாங்க பார்த்துக்கமாட்டமான்னு நம்மளை ஒரு வழியாக்கிடுவாங்க.. என நினைத்து.. ‘சென்னைல தனியாயிருக்க பயமாயிருக்கு மாமா.. மாணிக்கம் சார் முழு நேர வேலை போட்டு தரன்னு சொல்லியிருக்காங்க.. எல்லாரோடவும் இங்கையே இருந்துக்கறனே..” என்றாள் கெஞ்சலாக.
ஆதிரை கெஞ்சவும் அவளருகில் அமர்ந்தவன்.. ‘வெளில போகவும்தான் இரண்டே வருசத்துல எல்லா கடனையும் பரதன் அடைச்சான்.. கடனில்லாம இருக்கவும்தான் உன் வருமானம் கைய கடிக்காம இருக்கு.. இதுவே காலத்துக்கும் போதுமா.. எத்தனை கனவுகளோட மாமா உன்ன படிக்கவச்சார்.. கைநிறைய சம்பாதிச்சி பெரிய இடத்துல உன்ன கட்டிக்கொடுக்கனும்னு அத்த ஆசைப்படறாங்க.. அவங்க ஆசையை நிறைவேத்த மாட்டியா.?” என கனிவாய் எடுத்துரைத்தான்.
நான்கு வருடங்களுக்கு முன் கர்ணனின் மனைவி இறந்திருந்தாள்.. ஆறு வயது சிறியவள் அழுவதையும் நான்கு வயது இளைய கர்ணன் அழுவதையும் பார்த்து, அப்பொழுது ப்ளஸ்டூவில் இருந்த ஆதிரை குழந்தைகள் அழுவதை சகியாமல்.. கவலைப்படாதிங்க இனி நான் உங்க அம்மாவா இருக்கேன் என ஆறுதல் சொல்ல..
‘ஏய் அவங்கம்மா செத்ததுக்கு அவங்க அழறாங்க.. குழந்தைகள் அழுதா அழட்டும்.. நீ வாய மூடிட்டு போ..” என ஆதிரையை மிரட்டினான் கர்ணன்.. கர்ணனை முறைத்தவாறே அமைதியானாள்.
பின்னே ஒரு வருடம் கழித்து.. இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இருக்கப்போறேன்.? பொட்டபிள்ளைய பெத்து வச்சிருக்க.. அதுக்கு கல்யாணம் காட்சின்னு எடுத்துகட்டி செய்ய எனக்கப்புறம் வீட்டுக்கு ஒரு பொட்டச்சி வேணாமா என கர்ணனை மறுமணம் செய்ய ராஜாத்தி வற்புறுத்தினார்.
‘என்னால இன்னொரு கல்யாணம் முடியாதும்மா.. ” என கர்ணன் திடமாய் மறுத்திட.. அச்சமயம் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்த ஆதிரை.. இரண்டு குட்டிகளையும் நான் பார்த்துப்பேன்த்த.. குட்டிமாக்கு நானும் மாமாவும் கல்யாணம் செய்து வைப்போம்.. என்றாள்.
குழந்தைக்காகத்தான் சொல்கிறாள் உணர்ந்த போதும்.. ஆதிரை பேச்சின் பாசம்கண்டு.. இந்த பாசம் நாளை ஆதிரையின் வாழ்வை கேள்வியாக்கிடக்கூடாதென.. ‘என் குழந்தைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்.. படிக்கிற வேலையை மட்டும் பாரு.. ” என கர்ணன் மிரட்ட..
கன்னிச்சிவந்த கன்னத்தோடும் நிற்காத கண்ணீரோடும்.. ‘எங்கப்பாகிட்ட சொல்றேன் இரு..” என சிறுமியாய் அழுதுகொண்டு வீடு வந்தவள் கர்ணன் அடித்ததை அண்ணனிடமும் தந்தையிடமும் கூற.. நீ பேசியது தவறென பொறுமையாய் எடுத்துரைத்தனர் இருவரும்.
தன் தவறு புரிந்ததும் கர்ணனிடம் மன்னிப்பு கேட்டாள்.. இனி ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு..” என எடுத்துரைத்தவன் அன்றிலிருந்து மொத்தமாய் ஆதிரையை புறக்கணித்தான்.
அதன்பின் இரண்டு வருடம் முன் ஆதிரையின் அண்ணன் அப்பா இழப்பிற்குதான் வந்தான். அப்பொழுதும் கூட ஆதிரையிடம் அதிகம் பேசியதில்லை. அவள் அழுவதை அவளறியாமல் பார்த்து வேதனைப்படுவதோடு சரி.
கர்ணன் மனைவியிருக்கும் வரை ஆதிரையோடும் பரதனோடும் நல்ல நட்போடும் பாசத்தோடும்தான் இருந்தான்.. ஆதிரையின் குழந்தைக்கான அன்பை மற்றவர்கள் தவறாக புரிந்து தன்னோடு ஒப்பிட்டுவிடுவார்கள் என்ற அக்கறையாலே ஆதிரையிடம் விலகியிருந்தான்.
நான்கு வருடம் கழித்து இன்று இத்தனை தன்மையாய் கர்ணன் பேசவும் கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள் தன் அத்தை மகனை.. ‘என்ன.? சென்னை கிளம்றதான.?” என்றான் உரிமை மிரட்டலாக.
‘உங்களுக்கு என்மேல உள்ள கோபம் போய்டுச்சா மாமா.? என்னை உங்களுக்கு பிடிக்குமா.?” என்றாள்.
‘ஹேய்.. எதோ சின்னபுள்ளையில பேசத்தெரியாத பேசிட்டியேன்னு ஒரே ஒரு அடி வச்சேன்.. அதுக்கு உன்ன பிடிக்காம போய்டுமா.?” என்றான் பாசமாக.
‘அந்த சூழல்ல நீ குழந்தையை பார்த்துக்கிறன்னு சொன்னா மத்தவங்க உன்ன தப்பா நினைப்பாங்கனுதான் கண்டிச்சேன். மத்தபடி உன்மேல தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லடா..” என்றான் கனிவாக.
‘நிஜமாவா மாமா..?” என்றாள் ஆச்சர்யமாக.
‘ம்.. இதிலென்ன சந்தேகம்.?”என ஆதிரையின் தலையை வருடி.. ‘அப்பா அண்ணன் இல்லன்னாலும் இந்த புள்ள நல்லபடியா படிச்சி பெரிய வேலைல சேர்ந்தாதான பெத்தவங்களுக்கு பெருமை..” என்றான்.
‘உங்களுக்கு எப்படி இன்னொரு கல்யாணம் பிடிக்கலயோ.. அதே போல எனக்கும் அம்மாவை விட்டு போக பிடிக்கல மாமா.. ப்ளீஸ் இங்கயே வேலை பார்த்துட்டு இருந்திடறனே..” என்றாள் சலுகையாக.
எதை எதோடு ஒப்பிடுகிறாள் என கர்ணன் முறைக்கவும்.. ‘ப்ளீஸ்.. ப்ளீஸ் மாமா..” என்றாள் கெஞ்சலோடு.
‘இல்ல ஆதிமா.. நானும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ஃபாரின் போகப்போறேன்.. அபி எல்லா ஏற்பாடும் செய்துட்டான்..” என்றான்.
அபிமன்யு ஆதிரையின் சித்தப்பா மகன்.. அவனும் சென்ற வருடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருந்தான். படிப்பு முடித்து நான்கே மாதத்தில் அமெரிக்காவில் வேலை கிடைக்கவும் கிளம்பிவிட்டான்.
நம்ம தலைமுறைக்கே முதல் முறையா படிச்சி வேலைல சேர்ந்தது நம்ம பரதன்தான்.. அவனையும் அந்த கடவுள் விட்டு வைக்கில..” என தழுதழுத்து.. ‘இப்போதான் அபிமன்யு படிச்சி நல்ல வேலைல உக்கார்ந்திருக்கான்.. ம்.. இப்படி இளைய தலைமுறைல்லாம் அயல்நாட்டுக்கு உழைக்கிறோம்னு நினைக்க ரொம்ப வேதனையாதான் இருக்கு.. ஆனா நம்மளை போல வறுமைல இருக்கிறவங்கள்ல ஒருத்தராவது இப்படி கிளம்பினாதான அடுத்து வர தலைமுறை கொஞ்சமாவது நிமிர்ந்து நிக்கும்ன்ற பேராசையில பிடிக்கலன்னாலும் போகவேண்டியிருக்கு..
ஒரு அஞ்சி வருசம் மட்டும் சம்பாதிச்சிட்டு வந்திடலாம்னு இருக்கேன்.. அஞ்சி வருசத்துக்கப்புறம் இளாமாமா குடும்பத்தை அபி தூக்கி நிறுத்திடுவான்.. நானும் ஓரளவுக்கு பசங்களுக்கு சேர்த்திடுவேன்.. அப்போ நீ மட்டும் இந்த பேக்கரில வேலை செய்திட்டிருந்தா நல்லாவா இருக்கும்.? அதுவும் நல்லா படிச்சி முடிச்சிட்டு..” என்றான் அக்கறையாக.
‘நிறைய பணம் எனக்கு வேணாம் மாமா.. எப்படியும் இன்னும் கொஞ்ச வருசத்துல என்னை யாருக்காவது கட்டி கொடுத்துடுவாங்க.. அதுவரைக்குமாவது அம்மாவோடவே இருந்துடறனே..” என்றாள் கெஞ்சலாக.
அப்பொழுதும் கர்ணன் யோசனையோடிருக்க.. ‘படிச்ச படிப்பும் என் திறமையும் எப்பவும் எனக்குள்ள இருக்கும் மாமா.. கல்யாணம் வரைக்கும் அம்மாவோட இருக்கேன்.. தேவைப்படும்போது நிச்சயம் என் திறமைக்கேத்த வேலையை பிடிச்சிடுவேன்..” என்றாள் நம்பிக்கையாக.
‘ம்.. பெரிய மனுசி ஆகிட்ட..” என்றான் பெருமையாகவே.
‘ம்.. ஆமாம் ஆமாம்.. எனக்கு இருபத்திரண்டு வரப்போகுது..” என்றாள் தானும் பெருமையாக.
வெளியே வந்த ராஜாத்தி.. ‘என்னடா இது.? உலக அதிசயமா இரண்டுபேரும் நல்லமாதிரியா பேசிட்டிருக்காங்க.?” என்றார் சந்தோசத்தோடு.
சிரித்தவன்.. ‘அத்த.. இவ உங்கள விட்டு எங்கயும் போககூடாதுன்னு முடிவு பண்ணிட்டா.. விடுங்க கொஞ்ச நாள் பேக்கரிக்கே போகட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான்.