முழுநேரமும் இயங்கும் பேக்கரியில் இரவு நேரப் பணியாளர்களோடு சேர்ந்து ஐநூறு பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். பேக்கரியோடு சேர்த்து உணவகமும் உண்டு.
இங்கே வேலை செய்பவர்களுக்கு இங்கேயே சாப்பாடு. செய்யும் வேலைக்கு கொஞ்சமும் குறைவில்லாத நியாயமான சம்பளம்.. அதனாலேயே வேலையில் எத்தனை விதிமுறைகள் இருந்தபோதும் இங்கு வேலை செய்பவர்கள் வேலையை விட்டு நிற்பதேயில்லை.
சரத்குமார்.. ‘கூடுதலா உழைக்கத்தான கேக்குற.? பேராசைனெல்லாம் நினைக்க மாட்டார்.. கேட்டு பார்ப்போம்.. ஒத்துக்கிட்டார்னா லக்குதான.?” என தேற்ற.. இவள் புலம்ப என இருவரும் அறுபத்தைந்திற்கும் மேலிருக்கும் பேக்கரி முதலாளி முன் நின்றனர்.
ஆறு மணி வேலைக்கு இன்னைக்கென்ன அஞ்சி மணிக்கே வந்துருக்காங்க என யோசித்து.. கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கும்.. அதனால வேலையிருந்து நிக்க கேட்பாங்களா இருக்கும் என நினைத்த மாணிக்கத்திற்கு சற்று கவலையாகத்தான் இருந்தது.
(ஆதிரை இங்கு வேலை செய்ய வந்து இரண்டு வருடமாகிறது.. இன்ஜினியர் படிப்பின் மூன்றாம் வருட துவக்கத்தில் சரத்தின் பரிந்துரையோடு இங்கு வேலை கேட்டு வந்தாள்.
படிக்கிற பசங்களுக்கு நான் வேலையே கொடுக்கிறதில்ல.. எதோ ரொம்ப வறுமை படிப்பு செலவுக்காகத்தான் வேலை கேக்குறன்றதால உனக்கு வேலை கொடுத்தா.. இன்னொருத்தரையும் இழுத்துட்டு வருவியா.? என முதலில் முடியாது என்றுவிட்டார்.
சார்.. இவங்க அப்பாவும் அண்ணனும் ஒரு விபத்துல போன மாசம் தவறிட்டாங்க.. இவங்கப்பா கூலிவேலைதான் செய்துட்டிருந்தார்.. என்னைவிட ஆதிரை நிலைமை ரொம்ப மோசம் சார்.. என கெஞ்சினான் சரத்குமார்.
இது உண்மையா இருக்குமா என்பதுபோல் மாணிக்கம் பார்க்கவும்.. எங்கப்பா கூலிவேலை செய்திட்டிருந்தது உண்மைதான்.. ஆனா நாங்க ரொம்ப ஏழை இல்ல, சொந்த வீடிருக்கு, கொஞ்சம் காடும் இருக்கு.. அம்மா அதுல வேலை பார்ப்பாங்க.. அதுல வர வருமானம் சாப்பாடு செலவுக்கு போதும்தான்.. ஆனா வருங்காலத்துல எதாவது பெரிய செலவு வந்தா பணம் வேணும்ல.? அதுக்குதான் வேலை கேட்டு வந்தேன் என ஆதிரை சொல்ல.. சரத் பதட்டமானான்.
உன் கல்யாணத்துக்கு சேர்க்க வேலை கேட்டு வந்தியா.? என மாணிக்கம் கேட்க.. இல்லையென்பதாய் தலையசைத்தவள்.. எங்கண்ணன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துட்டான்.. ஆனா எங்கப்பா உயிரோடதான் இருந்தார்.. மண்டையில அடி உடனே ஆப்ரேசன் செய்தா பிழைக்க வாய்ப்பிருக்குன்னாங்க.. ஆனா எங்ககிட்ட பணமில்ல..
எங்க தாத்தாகிட்ட அம்மா கேட்டாங்களாம்.. அவங்க வசதிதான்.. ஆனா எங்கம்மாவோட சித்தி பணம் கொடுக்க அனுமதிக்கலையாம்.. காட்டு பத்திரத்தை வச்சி பணம் புரட்டலாம்னு எங்கம்மா ஏற்பாடு செய்யிறதுக்குள்ள எங்கப்பா இறந்துட்டாங்க என கண்கலங்கியவள்..
நாளைக்கு எனக்கோ இல்ல எங்கம்மாக்கோ இதுபோல எதாவது ஆகிட்டா யார்கிட்டயும் போய் நிக்ககூடாதுனுதான் வேலை கேட்டு வந்துருக்கேன் என்றாள் ஆதிரை.
இங்கு வேலை கொடுக்கவில்லையென்றாலும் நிச்சயம் வேறொரு இடத்திற்கு செல்வேன் என்ற உறுதியும் அவளிடமிருப்பது கண்டு மறுப்பின்றி வேலை கொடுத்தார் மாணிக்கம்.)
வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை ஒருநாளும் சோர்ந்து காணப்பட்டதில்லை.. பேக்கிங் செக்ஷனில்தான் ஆதிரையின் வேலை.. மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை பணிநேரம்.. அந்த நேரத்தில்தான் பேக்கரிக்கு அதிக கூட்டமும் வரும்.. கல்லூரியிலிருந்து வந்த களைப்பு ஒரு நாளும் அவள் முகத்தில் தெரிந்ததில்லை.. அத்தனை சுறுசுறுப்போடு வேலை பார்ப்பாள்.
ம்.. எங்கேனும் நல்லா இருக்கட்டும் என மனதோடு வாழ்த்தி.. ‘படிப்பு முடிஞ்சி கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டியா.? வேலை கிடைச்சிடுச்சா.? எப்ப கிளம்பனும்..?” என்றார்.
சரியாய் கணித்திருக்கிறாரே என ஆச்சர்யமடைந்தாலும்.. ‘கேம்ப்பஸ்ல செலக்ட் ஆனேன் சார்.. சென்னையில நல்ல கம்பெனியில வேலையும் கிடைச்சது.. நான் அங்க போய்ட்டேனா அங்க தங்கிக்க சாப்பாடுன்னு எல்லாம் ரெண்டு செலவு.. அம்மாவும் இங்க தனியா இருக்கனும்.. அதனால அங்க வேலைக்கு போக எனக்கு பிடிக்கல.. (Zolpidem)
படிப்பு முடிஞ்சதிலயிருந்து காலைல இருந்து சாய்ங்காலம் வரைக்கும் வெட்டியாதான் இருக்கேன்.. அதனால இ.. இங்கையே முழுநேரமும் வேலை செய்ய அனுமதிப்பிங்களா..?” என்றாள் தயக்கத்தோடு.
வேலை கேட்டு வரும்போது ஆதிரை சொன்னதுபோல கொஞ்சம் காடு இருப்பது உண்மைதானென்றாலும் அவர்களின் காட்டில் வருமானம் இல்லையென்பதும்.. அவளின் அப்பா இருக்கும்வரை ஆதிரையின் அம்மா வேலைக்கு சென்றதில்லை எனவும்.. ஆதிரையின் அப்பா பஜாரில் மூட்டை தூக்கும் வேலை செய்துகொண்டிருந்தார் எனவும்.. அவளின் அண்ணனும் படிப்பு முடித்து இரண்டு வருடமாகத்தான் வேலைக்கு போகிறான்.. இரண்டு வருடம் முன்வரை ஆதிரையின் அப்பா சம்பாதியத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது எனவும் ஆதிரை வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே அறிந்திருந்தார் மாணிக்கம்.
ஆனாலும் தன் வறுமையை குறையாய் எடுத்து கொள்ளாததோடு வாங்கும் சம்பளத்தை தவிர ஒருநாளும் கடன் என தன்முன் நின்றிராத ஆதிரையின் குணம் மாணிக்கத்திற்கு மிகவும் பிடிக்கும்.
கடந்த ஆறு மாதங்களாக மகனிற்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார் மாணிக்கம்.. நிறம்தான் சற்று குறைவு.. மாணக்கத்தின் மகன் நிறத்திற்கு சற்று குறைவுதான் என்றாலும் ஆதிரை கருப்பு அல்ல.. மாநிறத்திற்கும் சற்று மேல சந்தன நிறத்தழகி.. எதையும் நிறைவாய் பார்க்கும் கண்கள்.. இடைதாண்டிய நீண்ட கூந்தல் இருந்தபோதும் அப்படியிப்படியென புதுவிதமான பின்னல்களோ அல்லது கூந்தலை விரித்து விடுவதோ கிடையாது.. எப்பொழுதும்போல பின்னலிட்டுதான் வருவாள்.
ஆதிரையின் எளிமையான அழகும் தடுமாற்றமில்லாத குணமும் மாணிக்கத்திற்கு பிடித்திட மகனிற்கு கேட்கலாம் என கூட யோசித்தார்.. ஆனால் மாணிக்கத்தின் மனைவி அதற்கு ஒப்புகொள்ளவில்லை.. இத்தனை வசதியில்லாத இடத்தில் பெண்ணெடுத்தால் மூத்த மருகளிற்கும் இவளிற்கும் பாகுபாடு வரும்.. மகனைவிட ஆதிரையின் நிறமும் சற்று குறைவென்பதாலும் முக்கியமாக ஆதிரை தங்களின் இனம் இல்லையென்பதாலும் நிராகரித்திருந்தார். அன்றிலிருந்து மருமகளாக பாராவிடினும் மகள் போல் நினைத்திருப்பதால்..
‘இங்க விட அங்க நிறைய சம்பளம் தருவாங்களேமா.. அதோட படிப்புக்கேத்த வேலையை பார்த்தா உன் எதிர்காலம் இன்னும் சிறப்பா இருக்கும்.. அம்மா தனியா இருப்பாங்கனா அவங்களையும் உன்னோடவே கூட்டிட்டு போய்க்கோ.. வாய்ப்பு கிடைக்கும்போதே யூஸ் பண்ணிக்கிட்டாதான் ஆச்சு..” என்றார் அக்கறையாக.
‘அம்மா இங்கவிட்டு வரமாட்டன்னுட்டாங்க.. எனக்கும் எங்கம்மாவை விட்டுட்டு போக விருப்பமில்ல.. அதோட சம்பளம் அதிகம் கிடைச்சாலும் இங்க போல புது இடத்துல பாதுகாப்பு இருக்குமா தெரியாது.. நைட் பத்து மணியானாலும் உங்க வேன்லயே வீட்டுக்கு சேஃபா போய்டுறேன்.. எனக்கு இங்க வேலை செய்யத்தான் பிடிச்சிருக்கு..” என்றாள் நிறைவாக.
தான் என்ன சொல்வேனோ என்ற ஆவல் தெரியவும்.. பெரிதாய் வசதியில்லையென்றபோதும் படிப்பிற்கேற்ற வேலை கிடைத்தும் தம்முடைய இடம் ஒரு பெண்ணிற்கு இத்தனை பாதுகாப்பாய் இருக்கிறது என்பதற்காக இங்கேயே வேலை செய்ய கேட்டதும் சற்று பெருமையாக உணர்ந்தவர்.. ‘இந்த மாசம் முழுசும் ரெகுலர் டைமுக்கே வா.. வேலை ஹோட்டல்லையா இங்கயான்னு அப்புறம் சொல்றேன்..” என்றார் மாணிக்கம்.
சரியென சந்தோசமாய் தலையாட்டவும்.. ‘சரி போய் வேலையைப் பாருங்க..” என்கவும்.. பணிவான பாவனையோடு அவ்விடம் விட்டு நகர்ந்தவர்கள் மாணிக்கம் கண்ணில் மறைந்த பின்னே ‘ஹே…” என இருவரும் சந்தோசமாய் ஹைபை அடித்துக்கொண்டனர்.
தனது பத்தாம் வகுப்பு விடுமுறையிலிருந்து சரத்குமார் இங்கே வேலை செய்கிறான்.. சிறுவர்களை பணியிலமர்த்துவது தவறென வரும் காவல்துறையிடம் இருதங்கைகள் உள்ளனர்.. அப்பா அம்மா இருவரும் கூலிவேலைதான்.. சரத்தும் பகுதிநேர வேலைக்குத்தான் வருகிறான்.. இவனின் வருமானம் இவன் படிப்பிற்கு மட்டுமின்றி அவனின் தங்கைகளின் படிப்பிற்கும் உதவுகிறது என சரத்தின் பின்புலம் சொல்லி மாணிக்கமே பார்த்துக்கொண்டார்.
ம்.. மாணிக்கத்தின் சிறப்பே அதுதான்.. இங்கே வேலை செய்பவர்களில் என்பது சதவிகிதம் பேர் வசதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களே.. மாணிக்கம் எத்தனை இறக்கமுள்ளவரோ அத்தனை கறாராகவும் இருப்பார்..
கழிவறை தவிர்த்து ஹோட்டல் பேக்கரி.. சமைக்குமிடம்.. என கேமரா இல்லாத இடமே இல்லை.. யார்மீதேனும் சின்னதாய் தவறென பட்டாலும் ஒருமுறை எச்சரிப்பார்.. மீண்டும் தவறு நடந்தால் வேலையிலிருந்து நீக்கி விடுவார்.. பத்து மணி சிஃப்ட் முடிந்து வீடு செல்வதற்கு பெண்களுக்கென தனி வேனும் இருக்க.. இத்தனை பாதுகாப்பு காரணங்களுக்காகவே இங்கு வேலைசெய்யும் பெண்கள் வேலையிலிருந்து நீங்குவதில்லை.
தற்போது ஆறாயிரம் தருகிறார்.. முழுநேர வேலையென்றால் கட்டாயம் சம்பளம் உயர்த்தி தருவார் என்ற சந்தோசத்தோடே வேலை முடித்து வீடு வந்திருந்தாள்.
அங்கே இவளிற்கு முன் சரத் வீட்டில் இருக்க.. ‘சரத்து..” என சந்தோசத்தோடு உள்ளே வந்தவள்.. தன் அம்மாவிடம் விசயத்தை சொல்ல.. ‘ம்.. சரத்து சொன்னான்..” என்றவர் மகளிற்கு பால் ஆத்திக்கொண்டே.. ‘ஆதிம்மா.. உனக்கு கிடைச்ச வேலைக்கே போலாமில்ல..? நாப்பதாயிரம் சம்பளத்தை விட்டுட்டு ஆறாயிரம் சம்பளத்துக்கு இங்க எதுக்கு முழு நேரமும் அல்லாடனும்.?” என்றார் கவலையாக.
ம்.. இரண்டு வருடம் முன்வரை ஆதிரைக்கும் வெளியே போய்விட வேண்டும்.. நிறைய சம்பாதிக்கனும்.. தற்போதிருக்கும் சிறிய வீட்டை பெரிதாய் கட்ட வேண்டும்.. இத்தனை கஷ்டத்திலும் தன் அண்ணனிற்கு நிகராக தன்னை படிக்க வைக்கும் தந்தைக்கு நிறைய சம்பாதித்து தரவேண்டும்.. அன்னைக்கு நிறைய நகை செய்ய வேண்டும்.. என இப்படி பல கனவுகளோடுதான் இருந்தாள். தந்தையின் இறப்பிற்கு பின் ஆதிரையின் கனவெல்லாம் மண்ணாகிப்போனது.
‘முழு நேரமும் அல்லாடினாலும் நைட்ல உன்னோட இருக்கிற சுகம் வருமாம்மா.? உன்னைவிட்டு கிடைக்கிற எதுவும் எனக்கு வேணாம்..” என்றாள் இன்முகத்தோடே.
‘இல்ல ஆதி.. இப்படி கஷ்டப்படவா உங்கப்பா உன்ன இன்ஜினியருக்கு படிக்க வச்சாரு.? உனக்கு கிடைச்சிருக்க வேலை ரொம்ப நல்ல வேலைன்னு சரத்து சொன்னான்.. நீ வெளில போனாதான் உன்ன வச்சி உங்க இளா சித்தப்பா பசங்களையும் முன்னேத்த முடியும்.. படிப்புக்கேத்த வேலைக்கு போனாதான் எதிர்காலம் நல்லாயிருக்கும்னு உங்கப்பா சொல்லிட்டே இருப்பார்.. அவர் ஆத்ம சாந்திக்காகவாவது கிடைச்ச வேலைக்கு கிளம்பு..” என்றார் காஞ்சனா.
தந்தை இறப்பிற்கு பின்னே காஞ்சனா வேலைக்கு செல்லும் சூழல் ஏற்படவே.. அப்பாவைதான் பார்த்துக்கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை.. அன்னையையாவது பொக்கிசமாய் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆதிரைக்கு வலுப்பெற.. தந்தை இறப்பிற்கு பிறகு காஞ்சனா வேலைக்கு செல்வதற்கு தடைவிதித்து அப்பணியினை தான் ஏற்றாள்.
இப்படியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது.. தற்போது படிப்பு முடித்து வேலை கிடைத்திருக்கிறது என ஆதிரை சொல்லவும் சந்தோசம் இருந்தாலும் தான் தனியாய் சென்று சமாளிப்னேனா என்ற தவிப்பு அன்னை முகத்தில் தெரிய.. ‘நீயும் என்னோடதான்மா வரப்போற.. ஒரு மாசத்துக்குள்ள சின்னதா ஒரு வீடு பார்த்துக்கலாம்..” என்றாள்.
‘என்னால் இங்கு விட்டு எங்கும் வரமுடியாது ஆதி..” என கண்ணீர் வடிக்கவும்.. மகனோடும் கணவனோடும் வாழ்ந்த இடம் என நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னையின் மனம் புரிந்ததாலும், வற்புறுத்தி அழைத்து சென்றாலும் புது இடத்தில் தனித்திருப்பது கடினம் என்பதாலும்.. எங்கு சென்றாலும் அம்மாவிற்கு இங்குபோல் சௌகர்யம் வராதென்பதாலும்.. அன்னையும் தானும் பிரிந்திருக்கும் படியாக எத்தனை பெரிய வேலை கிடைத்தாலும் போகக்கூடாது என முடிவெடுத்தவளாய் தற்போது கிடைத்த வேலையை நிராகரித்தாள் ஆதிரை.