அடுத்த நாள்.. கர்ணனும் ராஜாத்தியும் வீட்டிற்கு வந்திருக்க.. கோபத்தோடு இருப்பதுபோல் முகத்தை இறுக்கமாய் வைத்தபடி.. ‘அத்த.. அவதான் அறிவில்லாம பேசுறானா உங்களுக்கெங்க போச்சி..?” என்றான்
காஞ்சனா.. ‘கர்ணா.. என் பொண்ணு கழுத்துல தாலி ஏறாம வெளிநாடு போனினா நீ திரும்ப வரும்போது எங்களை உயிரோட பார்க்க முடியாது..“ என்றார் தீவிரமான பாவனையில்.
‘ஓ.. அந்தளவுக்கு வந்துட்டிங்களா.?” என்றான் அதிரையை முறைத்தவாறு. ம்.. அவள் ஏன் நிமிரப் போகிறாள்.. அதிரூபனிடமிருந்து தப்பிக்க இந்த கல்யாணம் நடந்தால் போதுமென அமைதியாய் தலைகுனிந்திருந்தாள்.
‘எந்த சொந்தமிருந்து எதுக்காகுது.? என் பொண்ணு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சி தர யாருமில்லையே..” என புலம்ப ஆரம்பித்த காஞ்சனா பொய்யாய் அழவே.. எங்கே சிரித்திடுவோமோ என எழுந்த கர்ணன் வேகமாய் வேலிக்கருகே போக.. காஞ்சனா.. ‘என் பொண்ணுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போ கர்ணா..” என்றார் விடாமல்.
தன்னை நிலைப்படுத்தி திரும்பி வந்தவன்.. ‘நீ புரிஞ்சிதான் முடிவெடுத்திருக்கியா..? நிஜம்மா இந்த கல்யாணம் உனக்கு வேணுமா.?” என்றான் ஆதிரையிடம்.
குனிந்திருந்த தலை இன்னும் குனிய.. வேணும் என்பதாய் தலையசைத்தாள். ம்.. தன்னோடு கல்யாணம் என பொய்யாய் கேட்கக்கூட மனம் அருவருக்க.. ‘தாலி ஏறினதுக்கப்பறம் பின் வாங்கமாட்டியே..?” என்றான் இம்முறை உண்மைக்கோபமாக.
‘ம்ஹூம்..” என்றாள் சன்னக்குரலில்.
‘எத்தனை அகங்காரம்..” என பல்லை கடித்தவன்.. ‘அத்தை.. எனக்கு சனிக்கிழமை டிக்கட் புக் பண்ணிருக்கேன்.. வெள்ளிகிழமை நைட் சென்னை கிளம்பனும்.. அதனால வியாழக்கிழமை கல்யாணம்.. உங்க பொண்ணை ரெடியாகிக்க சொல்லுங்க..” என்றான் கோபக்குரலில்.
தான் விரும்பி கேட்ட கல்யாணம்தான்.. ஆனால் கர்ணன் சம்மதித்ததும் மனம் பெரிதாய் அதிரவே.. விழிவிரித்து பார்த்தாள் கர்ணனை. ஆதிரையை பாராமல்.. ‘இரண்டாந்தாரமாத்தான கல்யாணம் செய்துக்கிறேன்னு சும்மா அப்படியே கூட்டிட்டு வந்திடப் போறிங்க.. முன்ன மாதிரியா.? இப்போதான் பெரிய பணக்காரங்களாகிட்டிங்கள்ல.. உங்கம்மா நகைகளை புதுப்பிச்சிடுங்க.. லட்ச ரூபாய்ல புடவை எடுத்துடுங்க.. மேக்கப் போட பியூட்டிசியன்க்கு சொல்லிடுங்க..
இது எல்லாத்தை விட முக்கியம்.. இப்போ இருக்கிறமாதிரி கல்யாணத்தன்னைக்கு முகத்தை உர்ருன்னு வச்சிக்க கூடாது.. கல்யாண பொண்ணுங்க எப்படி சிரிச்ச முகத்தோட இருப்பாங்களோ அப்படிதான் இருக்கனும்.. இவ கழுத்துல தாலி ஏறும்போது கட்டிக்க போறவன் கண்ணுக்கு விக்ரகமா ஜொலிக்கனும்.. இதுல எதாவது குறையிருந்தது கல்யாணம் நடக்காது.” என்று கட்டளைகளை பிறப்பித்து கிளம்பியிருந்தான் கர்ணன்.
‘வற்புறுத்தி கல்யாணம் செய்தாலும் பார்க்கிறவங்க கண்ணுக்கு நீ அழகா தெரியனும்ல.? கல்யாணம்னு வந்துட்டா ஆம்பிளைங்க இதெல்லாம் எதிர்பார்ப்பாங்க.. இதுக்கே பயந்தா எப்படி.? நான் வேணா கர்ணாகிட்ட கல்யாணம் வேணாம்னு சொல்லிடவா.. எதுன்னாலும் இப்பவே முடிவு செய்..” என்றார் எச்சரிக்கும் தோரணையில்.
‘இல்ல வேணாம்.. நான் மாமா சொல்ற மாதிரியே கேட்டுக்கறேன்..” என்றாள் அவசரமாக. இப்போ கூட அசராம எத்தனை அழுத்தமா இருக்கா என மருகி.. ‘சரி.. உங்கத்தையை வர சொல்லி கால் பண்ணு.. பத்து மணிபோல பஜாருக்கு போலாம்.. உனக்கு பிடிச்சாப்பில நகைகளை மாத்திட்டு.. பட்டு புடவை எடுத்து தைக்க கொடுத்துடலாம்..
கல்யாணத்துக்கு இன்னும் நாலுநாள்தான் இருக்கு.. இப்போ கொடுத்தாதான் பிளொஸ் ரெடியாகும்.. உன் மாமன் வேற எந்த குறையுமில்லாம வந்து நிக்கனும்னுருக்கான்..
சீக்கிரம் போய் குளிச்சி ரெடியாகு.. நான் சாப்பிட எதாவது செய்யறேன்..” என அவசரமாய் சொல்லி கிச்சனுள் நுழைந்தார் காஞ்சனா.
கர்ணனின் எதிர்பாராத திருமண சம்மதத்திலும்.. காஞ்சனாவின் வேகத்திலும்.. பொருந்தாத துவாரத்தினுள் தன்னை திணித்துக் கொள்வதுபோல ஆதிரைக்கு மூச்சு முட்டியது.
காஞ்சனா சமையல் முடித்து வர ஆதிரை நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள். ‘என்ன ஆதி.? இன்னும் குளிக்க போகலையா.?” என அதட்டவே தன்னுணர்வு பெற்றவள்.. ‘ம்மா..” என திணற.. ‘மணி பத்தாகுது.. சீக்கிரம் போய் குளிச்சி வா.. பட்டுசாரி வாங்கவே பாதி பொழுதாகிடும்.. அதுக்கப்புறம் நகைக்கடைககு போகனும்..” என சிடுசிடுப்பாய் அவசரப்படுத்த குளியலறை புகுந்தாள்.
தண்ணீரில் நிற்க மனம் சற்றே சமன்பட்டது.. ம்.. இன்னொருத்தியை கொஞ்சினவேனாட வாழ்றதுக்கு பதிலா மாமாவோட வாழ்ந்திடலாம்.. கடைசி வரைக்கும் நம்மை கண்ணியமாக நடத்துவார் தன்னை தேற்றியவாறு குளித்து வெளியே வந்தாள்.
‘சீக்கிரம் சாப்பிடு..” என ஊட்டிவிட.. வேலைக்கு விட்டு வந்தநேரம் மிகுந்த பசியென்றால் வழக்கமாய் ஊட்டிக்கொள்வாள்தான்.. ஆனால் இன்று கலங்கிய கண்களோடு ஊட்டினார். எதிர்பாராமல் ஒரே வாரத்தில் திருமணம்.. ஆதிரை சென்றபின் தனியே இருப்பதை யோசிக்கும்போதே மனதை அழுத்தியது.. ‘ஏன்மா அழற.?” என்றாள் கலக்கமாக.
‘இன்னும் ஒருவாரம்தான் இங்க இருப்ப..” என தன்போல் குரல்கமற.. ‘ப்ச் ம்மா.. இங்கயிருக்க அத்த வீட்ல இருக்கப்போறேன்.. அதுக்கே அழுவியா.?” என செல்லமாக முறைக்க.. அச்சோ என நினைத்து.. ‘ம்.. ஆமாம்ல.?” என சமாளித்து வேகமாய் ஊட்டி இடையிடையே தாணும் உண்டார். பின்னே ராஜாத்தி வரவும் கடைக்கு கிளம்பினர்.
‘அம்மா.. இவ்வளோ… விலைலயா.? இதெல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம்.. அநியாயமும் கூட.. பணத்துக்கு எவ்வளோ கஷ்டப்பட்டிருக்கோம்.. இப்போ ஒரு சாரில இவ்வளோ பணம் போடுவிங்களா..? ஒரு இருபது இல்ல இருபத்தைஞ்சாயிரத்துல பாரும்மா..” என்றாள்.
‘பணத்துக்கு பஞ்சமில்லன்னும்போது கல்யாணத்துக்கு நல்லதா எடுத்தா என்ன.? இல்ல என் பையனைத்தான கட்டிக்கிறன்னு இளப்பமா நினைக்கிறியா ஆதி.?” என ராஜாத்தி கேட்க.. ‘அச்சோ அத்தை.. நான் அப்படி நினைப்பனா.?” என பதறினாள்.
காஞ்சனா.. ‘உன் சம்பாதியத்துல உன் கல்யாணத்துக்கு சேர்த்து வச்ச காசுலதான் இந்த புடவை எடுக்கிறேன்.. நகைகள் மட்டும்தான் எங்கப்பா கொடுத்தது..” என்க..
‘லட்சத்துக்கு மேல சாரி இருக்கனும்னு உன் மாமன் சொன்னது மறந்துடுச்சா.?” என்க.. ஆதிரையின் முகம் சட்டென இலகுவைத் தொலைக்க.. ‘மாமாக்காக மட்டும் இல்ல ஆதிம்மா.. உங்கண்ணனுக்கும் கல்யாணம் செய்து பார்க்க முடியல.. உங்கப்பாவும் அண்ணனும் போனதுக்கப்புறமும் இந்த உயிர் உடம்புல தங்கியிருக்குனா அது உனக்காக மட்டும்தான்..
திருமண கோலத்துல உன்னை கண்நிறைய பார்க்கனும்.. நம்ம வீட்ல நடக்குற ஒரே மங்களகரமான விசேஷம் உன் கல்யாணம்தான்.. அவசர கல்யாணம்னாலும் எந்த குறையும் இல்லாம நடக்கனும்.. உன் கல்யாணகோலம் நான் சாகும்வரை என் மனசுல நிக்கனும்.. உன் கல்யாண வாழ்க்கைதான் என் வாழ்நாள் நிம்மதி.. சந்தோசம்..” என உணர்ச்சி பெருக்காக பேசிக்கொண்டே போக..
‘ம்மா.. உன் இஷ்டத்துக்கே செய்ம்மா..” என்றாள் கலங்கிய கண்களோடு. தன் சந்தோசமே பெரிதென நினைக்கும் அன்னையை நினைத்தவள் அதன்பின் நகைகள் தனக்கு தேவையான உடைகள் எடுப்பது என எதற்கும் ஆதிரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
— — —–
அடுத்த இரண்டு நாள் அனைவருக்கும் வெற்றிலை வைத்து திருமணத்திற்கு அழைக்கும் பணி சென்றது. ‘ஆதிம்மா.. பிளொஸ் போட்டு பாரு..” என கொடுத்தவர்.. ‘மாணிக்கம் சார்க்கு சொல்லிட்டு வந்தேன்.. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன்னார்.. அங்க பேக்கரில வேலை செய்யிறவங்களுக்கும் சொல்லியிருக்கேன்.. எதுக்கும் நீ போன்ல ஒத்த வார்த்த சொல்லிடு..” என்றார்.
திருமணத்திற்கும் முதல்நாள்.. காலை ஆறு மணிக்கெல்லாம் மேள தாளத்தோடும் முக்கிய சொந்தங்களோடும் ஆதிரை வீடு வந்தான்.
உள்ளேயிருந்த ஆதிரைக்கு மனமெங்கும் இனம்புரியாத பயம்.. மனம் தாறுமாறாய் துடித்தது.. அந்த பெரிய வாசலில் வாடகை நாற்காலிகளில் வந்தவர்கள் அமர்ந்திருக்க.. கர்ணன் மட்டும் நேரே ஆதிரையிருக்கும் அறைக்கு வந்தான்.
கர்ணனை கண்டதும் வெலவெலத்து எழுந்து நின்றாள் அதிரை. அவனின் மனைவி இறப்பிற்கு பிறகு மிகவும் அவசியம் என்றாலொழிய இங்கு வரவேமாட்டான்.. வந்தாலும் வாசலோடு செல்பவன் தற்போது இத்தனை பேர் முன்னிலையில் அறைவாசலில் நிற்கவும் பேயறைந்த நிலைதான் ஆதிரைக்கு.
ஆதிரையின் மனதை படித்தவன்.. கல்யாணம்னா அவ்வளோ ஈசியா போச்சா உனக்கு.? வீண் பிடிவாதத்தோட அவஸ்த்தை இப்போ புரியுதா.? என உறுத்துப் பார்த்தான். கர்ணனின் பார்வையில் ஆதிரையின் முகம் மேலும் பயத்தை காட்ட அதில் மனமிறங்கியவன்.. இதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறை நிகழும் அழகான தருணம்.. சின்ன பொண்ணு பாவம் என நினைத்து..
‘உனக்கு மாமன் முறை செய்ய வந்திருக்கேன்.. அழகா தயாராகி சிரிச்ச முகத்தோட வெளில வா.. இல்ல வெளில எல்லாரும் கட்டாய கல்யாணம் செய்துக்கிறதா என்னை தப்பா நினைப்பாங்க..” என்றான் கட்டளையாக.
சன்னப் பட்டுடுத்தி மிதமான ஒப்பனையோடு வெளியே வந்த ஆதிரைக்கு என்ன முயன்றும் இயல்பாய் இருக்க முடியவில்லை.. ‘பெரிய ஆள்டி நீ.. ஒன்னும் தெரியாதவளாட்டம் இருந்துட்டு காதல் செய்திருக்க..? லவ் பண்ணினதோட இல்லாம உங்கம்மாவை ஒத்துக்க வச்சி ஒரே வாரத்துல கல்யாணத்துக்கு தயாராகியிருக்க..” என கிண்டல் செய்யவும் வரவழைத்த சிரிப்பை உதிர்த்தாள்.
சுமங்கலிகள் ஐந்து பேர்வரை நலங்கு வைத்தபின்னே.. கர்ணன் ஆதிரைக்கு மாலையிட்டு நலங்கு வைக்கவும் கண்கள் தானாய் ஊற்றெடுத்தது. பின்னே ஒரு மணிநேரம் வரை நீடித்தது நலங்கு வைக்கும் படலம்.. மேளதாளம் ஓய்ந்த நேரம் அதிரூபனிடமிருந்து அழைப்பு வரவே.. ஆதிரை அருகேயே நின்றவன்.. ‘ரூபா..” என்றான்.
‘அண்ணா.. நலங்கு வைக்க வந்துட்டிங்களா.? ஆதி எப்படியிருக்கா.? ரொம்ப பயந்துருக்காளா.?” என்றான் சிறு பதட்டத்தோடு.
ரூபன் என பேச ஆரம்பித்ததும் கர்ணன் மீதிருந்த பயத்தை மீறி.. ‘மாமா அவங்களுக்கு எதுக்கு சொல்லிட்டிருக்கிங்க.?” என கோபத்தோடு முனுமுனுத்தாள்.
ஆதிரையை முறைத்தவாறு.. ‘ஆதிரை குடும்பத்துக்கு மறக்க முடியாத உதவி செய்திருக்க.. நாளைக்கு கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்திடு ரூபா..” என்று வேறு அழைப்பு விடுக்கவும்..
‘மாமா.. அவன் கல்யாணத்துக்கு வரக்கூடாது.” என ஆதிரை தொணதொணத்து கொண்டிருக்க.. ‘கல்யாணத்துக்கு யாரை கூப்பிடனும்னு முடிவு செய்யவேண்டியவன் நான்.. உள்ள போ..” என மிரட்டி ரூபனோடு பேசியவாறு சற்று தள்ளி வந்தவன்..
அதிரூபன்.. ‘இது நீங்க பெருமை படவேண்டிய விசயம்ண்ணா.. உங்க மேல அவ்வளோ நம்பிக்கை வச்சிருக்கா..” என்றான் பெருமையாக.
கர்ணன்.. ‘இருந்தாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு ரூபா.. கணேசண்ணா பையன் அதிரூபனுக்குதான் ஆதிரையை கொடுக்கிறோம்னுதான் எல்லாரையும் அழைச்சிருக்கோம்.. ஆர்வத்துல உன்னைப் பத்தி விசாரிக்க நினைச்சி அவகிட்ட யாராவது உளரிடுவாங்களோன்னு நலங்கு முடியும் வரை அவ பக்கத்திலயே இருக்க வேண்டியதாய்டுச்சி.. அவமுன்ன மாப்பிள்ளையா நடிக்க கூட அத்தனை நரகமா இருக்கு..” என்றான் வேதனையாக.
‘இன்னைக்கு மட்டும்தான்.. நாளை காலை ஆறு மணிக்கெல்லாம் உங்களை விடுவிச்சிடுவேன்.. எனக்காக பொறுத்துக்கோங்க.. ப்ளீஸ்..” என்றான் இறைஞ்சலாக.
‘ம்..ம்.. “ என விறைப்பாய் சொன்னவன்.. ரூபனின் கெஞ்சலில் மனம் இலகி.. ‘எங்க ஆதி பொண்ணுக்காகதான்..” என்றான்.
‘சரி.. உங்க ஆதிக்காகவாவே இருக்கட்டும்..” என சிரித்தவன்.. ‘நலங்கு வைத்த ஃபோட்டோ அனுப்புங்கண்ணா..”என்றான் ஆவலாக.
‘அதெல்லாம் முடியாது.. அப்போதான் காலைல எங்களுக்கு முன்ன கோவிலுக்கு வருவ.. காலைல கல்யாணம் முடிஞ்சதும் போட்டோவை அனுப்பி வைக்கிறேன்.. அதுதான் நான் உனக்கு கொடுக்கிற கல்யாண பரிசு..” என சின்ன சிரிப்போடு சொல்லி இணைப்பை துண்டித்தான்.