இளங்கோ குடும்பம் ராஜாத்தி குடும்பம் என ஹாலில் அனைவரும் நிறைந்திருக்க.. ‘இந்தாங்க தம்பி.. நீங்க சாப்டுட்டு ஆதிகிட்ட கொடுங்க..” என காஞ்சனா பால்பழக் கிண்ணத்தை நீட்ட.. வாங்கியவன்.. ‘சாப்பிட்டு கொடு..” என ஆதிரையிடம் நீட்டினான்.
காது கேளாதவளாய் ஆதிரை அமர்ந்திருக்க.. சின்ன பழத்துண்டை எடுத்து அவள் வாயில் திணித்தவன்.. ‘சண்டை போட தெம்பு வேணும்ல..? சாப்பிடு..” என்றான் இலகுவாக.
அதிரூபன் ஊட்டியதில் அனைவரும் புன்முறுவல் பூத்திட.. ஆதிரைக்கு பெருத்த சங்கடமாகிடவே.. ‘அம்மா.. எனக்கு டிரெஸ் மாத்தனும்..” என உள்ளே போனாள்.
‘ப்பா.. சித்தி அவங்களோட வீட்டுக்கு போய்டுவாங்களா.?” என கர்ணனிடம் அவனின் மகள் கேட்க.. ‘ஹா..ஹா.. ஆமாம்டா..” என்றான்.
‘போடா.. நம்ம சித்தப்பா..” என கர்ணன் அனுப்பிவைக்கவும் கர்ணனிடம் வந்தாள். ‘அந்த பாஸ் யாரு.? உங்க தம்பியா.?” என கர்ணனின் மகனையும் அழைத்துக்கொண்டு அவர்களிடம் இயல்போடு பேசிக்கொண்டிருக்க.. சிறுவர்களோடு சேர்த்து தன் அன்பான பேச்சால் ராஜாத்தி இளங்கோ என அனைவரின் மனதிலும் புகுந்தான் அதிரூபன்.
வீட்டின் முன் வாசலில் போடப்பட்டிருந்த அடானஸில் விருந்து வைக்கத்தொடங்கவும்.. பரிமாற ஆட்கள் பேசியிருந்தபோதும்.. கர்ணனோடு சேர்ந்து தானும் பரிமாறும் பணியில் இறங்கினான் அதிரூபன்
‘மணி எட்டரை ஆகிடுச்சி.. ஆதியோட போய் சாப்பிடு ரூபா..” என கர்ணன் சொல்ல.. ‘எட்டு மணிக்கே அத்தை கூப்பிட்டாங்கண்ணா.. ஆதிக்கு சாப்பிட கொடுக்க சொல்லிட்டேன்.. நாம இங்க சாப்பிடலாம்..” என்றான்.
கர்ணன்.. ‘புதுமாப்பிள்ளை தனியா உக்கார்ந்து சாப்பிட்டா இங்கல்லாம் ஒரு மாதிரி நினைப்பாங்க.. இதுல உங்களுக்கு குழந்தையிருக்கிறதால இதுதான் சான்ஸ்னு இன்னும் பேசுவாங்க.. நீ போய் ஆதியோடவே சாப்பிடு ரூபா..” என்றான் அக்கறையாக.
அதிரூபன் உள்ளே வர.. ‘வாங்கதம்பி..” என்றவர் ‘ஆதி.. வெளில வா சாப்பிடனும்..” என்றார் கெஞ்சலாக.
‘எல்லாம் கர்ணா மாமா ப்ளான்னு நினைச்சிருந்தேன்.. ஆனா அந்த ரூபன் பேச்சை கேட்டு எல்லாருமா டிராமா போட்டுருக்கிங்க.. எனக்கு சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம்..” என்றாள் கமறலாக.
அதிரூபன் இங்க இருக்கிறது தெரியாத என்ன பேசி வைக்க போறாளோ என.. ‘புருசனை பேர் சொல்லி பேசலாமா.? மாப்பிள்ளை சாப்பிட வந்தாச்சு.. நீயும் சாப்பிடனும்.. வெளில வா ஆதி..” என்றார் ராஜாத்தி.
ஆதிரையிடமிருந்து பதில்லாமல் போகவே..‘தம்பி.. அப்பாம்மால்லாம் எங்க இன்னும் காணோம்..?” என பேச்சை மாற்றினார் காஞ்சனா.
புது இடமென்பதால் இரவு சரிவர தூங்காமல் அழுததால் பட்டுவிற்கு காய்ச்சல் வந்திருக்க.. காலை திருமணம் முடிந்ததும் கனகா.. பிரியாவின் குடும்பத்தார் அனைவரும் கோவிலிலிருந்து இரவு தங்கியிருந்த குடியிருப்பிற்கே கிளம்பியிருந்தனர்.
காய்ச்சல் ஒரு காரணமென்றாலும் குழந்தை விழித்தால் அதிரூபனிடமிருந்து விலகமாட்டாள் என்பதாலே கிளம்பியிருந்தார் கனகா.
‘இதோ கால் பண்றேங்கத்தை..” என அன்னைக்கு அழைத்து.. ‘அம்மா அத்தை சாப்பிட கூப்பிடறாங்க.. எல்லாரும் வாங்க.” என்றான்.
‘உன்தாத்தாவும் அப்பாவும் வருவாங்க ரூபா.. நான் உங்கத்தைல்லாம் வீட்டுக்கு போய்ட்டிருக்கோம்..” என்றார் கனகா.
‘ம்மா.. ஏன்மா இங்க வராம கிளம்பினிங்க.?”
காஞ்சனா.. ‘என்ன கிளம்பிட்டாங்களா.? சாப்பிட கூட வராம எதுக்கு கிளம்பினாங்க.? இங்க கொடுங்க நான் பேசுறேன்..” என மொபைலை வாங்கிய காஞ்சனா.. ‘கல்யாண விருந்து நம்ம வீட்லன்னு பேசி வச்சிதான செய்தோம்..? சாப்பிடாம எதுக்கு கிளம்புனிங்க..” என்றார் தவிப்பாக.
‘நம்ம வீடுதான.? எப்பன்னாலும் வந்து சாப்டுப்போம்.. பட்டுக்கு இப்போதான் காய்ச்சல் குறைஞ்சிருக்கு.. திரும்பவும் அலைச்சல் பட்டா ரொம்ப படுத்துவா.. அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்..
நான்போய் அங்க மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யறேன்.. உங்கண்ணனும் அப்பாவும் இன்னும் கொஞ்சநேரத்துல வந்திடுவாங்க.. மருமகளை அழைச்சிட்டு எல்லாருமா வந்திடுங்க..” என்றார் தன்மையாக.
‘சரிங்க..” என ரூபனிடம் கொடுக்கவும்.. ‘ம்மா பட்டுக்கு இப்ப எப்படியிருக்கு.?”
‘நல்லாயிருக்கா.. நீ மருமகளை சமாதனப்படுத்தி அழைச்சிட்டு வர வழிய பாரு..” என இணைப்பை துண்டித்தார்.
ஆதிரை அதிர்வோடு விழிவிரிக்கவும் அவளை கட்டிலில் அமர்த்தி தானும் அமர்ந்தவன்.. ‘என்னை உனக்கு பிடிக்கலன்னா எப்படியாவது பிடிக்க வச்சிருப்பேன்.. அதுல எந்த மாற்றமும் இல்ல.. ஆனா அந்த சிரமத்தை நீ கொடுக்கல..” என ஆழ்ந்து பார்க்கவும் ஆதிரை தீயாய் முறைத்தாள்.
ரூபன்.. ‘என்கிட்ட சொல்லலைன்னாலும் அத்தைகிட்ட என்னை விரும்பறன்னு சொன்னதான.? உண்மையை சொல்றதுக்கு முறைப்பியா.?”
‘அது எங்க குடும்ப விசயம்..” என முகம் திருப்ப.. ஆதியின் கன்னத்தை அழுத்திப்பிடித்து தன்புறம் திருப்பியவன்.. ‘எதுடி உன் குடும்ப விசயம்.? என்னை மனசுல வச்சிட்டு கர்ணாண்ணாகூட குடும்பம் நடத்துறது உன்குடும்ப விசயமா.?” என உறுத்துப் பார்க்கவும்..
ரூபனின் கோபத்தில் பயந்தவள்.. ‘எ..என் மாமா என்னோட குடும்பம் நடத்தமாட்டார்..” என திணற.. ‘அவர் உன்னோட வாழமாட்டார்ன்னு எனக்கும் தெரியும்..” என கடுப்போடு அவளின் கன்னம் விடுவித்தவன்..
‘அதுக்காக அவரை கல்யாணம் செய்துக்க நினைக்கலாமா.? யார் பொண்ணு கேட்டு வந்தாலும் கர்ணாமாமாவைத்தான் கட்டிப்பேன்னு எல்லார் முன்னவும் சொல்வேன்னு சொல்லிருக்கியே.. உன்னை கூடப்பிறந்தவளாட்டம் நினைச்சிருந்தவருக்கு எப்படியிருந்திருக்கும்.?” என்றான் சிவப்பேறிய கண்களோடு.
ஆதிரை கண்ணீரோடு தலைகுனிய.. ‘ஆ..ஊன்னா எங்கப்பா இருந்திருந்தா இப்படி ஆகிருக்குமான்னு கேக்குறியாமே.. நீ முதல்ல உன் சித்தப்பாவை அப்பாவா என்ன.? அப்பா மாதிரியாவது நினைக்கிறியா.?” என முறைக்கவும்.. ஆதிரை அதிர்வாய் பார்த்தாள்.
‘உன் சித்தப்பாகிட்ட சொன்னமாதிரி கட்டினா கர்ணா மாமாவைத்தான் கட்டிப்பேன்னு உங்கப்பாகிட்ட உன்னால சொல்லிருக்க முடியுமா.? இதே ரோஜா உன்னமாதிரி அவங்கப்பாகிட்ட பேசுமா.?” என்றான் கோபமாக.
ஆமாம்.. நம்ம அப்பா இருந்திருந்தால் இப்படி பேசியிருக்கமுடியாதுதான் என உரைத்ததுதான்.. ஆனாலும் ரூபனிடம் ஒப்புகொள்ள மனமில்லாமல்.. ‘எங்கப்பா இருந்திருந்தா உன்னாலயும்தான் இப்படி கல்யாணம் செய்திருக்க முடியாது.. எங்கத்தை அம்மால்லாம் உனக்கு இப்படி ஜால்ரா அடிச்சிருக்கமாட்டாங்க..” என்றாள் சுள்ளென.
‘உங்கப்பா உன்ன எனக்கு கொடுக்க மறுத்திருந்தாலும் உன்னைத்தவிர வேற யாரையும் கல்யாணம் செய்திருக்கமாட்டேன்.. ஆனா உன்னை அப்படி விடுவாரா..? வேற ஒருத்தனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைப்பார்.. கர்ணாண்ணாவைப் போல உன்ன கட்டிக்கிறவன் உன்ன சும்மா விடுவானா.?” என மீண்டும் அவளின் கன்னத்தை அழுத்திப்பிடித்தான் கோபத்தோடு.
ஆதிரையின் கண்கள் பொலபொலவென கண்ணீர் சிந்த.. உதறலோடு அவளின் கன்னம் விடுவித்தவன்.. ‘சும்மா எங்கப்பா இருந்திருந்தான்னு பிணாத்துன..” என எச்சரித்து..
‘என் பட்டுவோட அம்மா இருந்திருந்தா, எனக்கு கூடதான் இப்படி பிரச்சனை வந்திருக்காது.. அதுக்காக அவ இருந்திருந்தான்னு நடக்காத விசயத்தை யோச்சா எல்லாம் சரியாகிடுமா..?” என ஆதிரைக்கு எடுத்துரைப்பதாய் நினைத்து அதிரூபன் கூறிட.. பட்டுவின் அம்மா என்ற சொல்லில் ஆதிரையின் கண்ணீர் இன்னும் அதிகமானது.
ச்சு.. இவகிட்ட பேசும்போது ப்ரியாவை சொல்லியிருக்க கூடாது என தன்னைத்தானே கடிந்தவன்.. ‘கர்ணாண்ணாவை கல்யாணம் செய்துக்க நினைக்காம.. உங்கம்மாகிட்ட கொஞ்ச நாள் கழிச்சி கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லியிருந்தாலோ.. இல்ல வேற எதாவது சாக்குபோக்கு சொல்லி கல்யாண பேச்சை நிறுத்தியிருந்தாலோ நிச்சயம் உனக்கு யோசிக்க டைம் கொடுத்திருப்பேன்..
அதை விட்டுட்டு நீ எடுத்த முட்டாள்தனமான முடிவாலதான் அவசரமா கல்யாணம் செய்துக்க வேண்டியதாகிடுச்சி புரிஞ்சதா..?” என்றான் புரிய வைக்கும் நோக்கோடு.
‘ரூபா..” என கணேசன் குரல் கொடுக்கவும்.. ‘வரேன்ப்பா..” என்றவன்.. ‘உன் மாமனார் வந்திருக்கார்.. நம்ம விசயம் நம்மளோட இருக்கனும்.. பிடிக்காத கல்யாணம் மாதிரி எல்லார் முன்னவும் சும்மா கிறுக்குத்தனம் செய்ய கூடாது.. ஒழுங்கா சாப்பிட வா.. பசி வயிறை கிள்ளுது..” என வெளியேறினான் அதிரூபன்.
மற்றவர் முன் தேவையில்லாமல் கல்யாணம் குறித்த விவாதம் கூடாது என்ற எண்ணத்தில்தான் சிறு மிரட்டலாய் சொன்னான்.. ஆனால் ஆதிரைக்கு அதுவே பெரிய மிரட்டலாக தோன்றியது. இப்போ வெளில போகலன்னா அதுக்கும் மிரட்டுவானோ..? இல்ல லெசன் எடுப்பானோ என யோசித்திருக்க.. ‘அக்கா உன்ன கூப்பிடறாங்க..” என ரோஜா உள்ளே வந்தாள்.
உள்ளயே சாப்பிட என காஞ்சனா கேட்டிருந்தும் இங்கயே சாப்பிட்டுக்கிறேன் என அதிரூபன் சொல்லிட.. கீழே பாயை மடித்து போட்டு அமர ஏற்பாடு செய்து.. ‘வந்து உக்காரு ஆதி.. அண்ணா நீங்களும் உக்காருங்க..” என்று பரிமாற ஆயத்தமானார் காஞ்சனா.
அதிரூபனோடு திருமணம் முடிந்த அதிர்வே இன்னும் மாறாத நிலையில் இனி இவன் வீட்டில்தான் தன் வாழ்வு.. அன்னையை பிரிய வேண்டும் என்பது புத்திக்கு தற்போதுதான் உரைக்க, உடைப்பெடுத்த கண்களோடு அன்னையை நோக்கினாள்.
காஞ்சனா.. ‘சாப்பிடு ஆதி.. ஊட்டி கொடைக்கானல்லாம் இனி கிடையாது..” என சிரிப்போடு சொன்னாலும் கண்கள் பிரிவின் துயரத்தை காட்டவே.. ‘அம்மா..” என உள்ளே ஓடினாள் அழுகையோடு.
‘சா..சாப்பிடுங்க தம்பி.. ஆதிரையை கூட்டிட்டு வரேன்..” என ஆதிரையிடம் செல்ல எழவே.. ‘நீங்க இருங்கத்தை..” என உள்ளே சென்றவன் வாஞ்சையாய் பார்த்தான் மனைவியை.
ஐந்து நிமிடமாகியும் ஆதிரையின் அழுகை மட்டுப்படாமல் இருக்கவே.. ‘ஆதி.. என்னயிது.?” என மனைவியை நெருங்கினான் தவிப்போடு.
‘எங்கம்மா தனியா..” என விசும்பினாள் தன்னை மறந்து. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தான் அதிரூபன். ம்.. தன்னோடு வருவதை நினைத்து வருந்தவில்லை.. மாறாக அன்னையின் தனிமைதான் மனைவியை பெரிதாய் பாதித்திருக்கிறது என நினைக்க அதிரூபனின் மனம் மலரவே மேலும் நெருங்கி நின்றான் மலர்ந்த முகத்தோடு.
அதிரூபனின் நெருக்கம் உணர்ந்து தன்ணுணர்வு பெற்று பதறி விலகியவள் தீயாய் முறைக்கவும்.. ‘சாப்பிடறதை விட்டு எதுக்கு வந்த.? வா..” என்றான் அக்கறையாய்.
‘எனக்கு பசிக்கில.. நீங்க போங்க..” என கடுகடுத்து சுவற்றுப்புறம் திரும்பி நின்றாள்.
‘ஆதி..” என காஞ்சனா குரல் கொடுக்கவும்.. ‘வாங்கத்த..” என்றவன்.. ‘ஆதி நம்மளோட அத்தையும்தான் வரப்போறாங்க.. எப்போவும் உன்னோடதான் இருப்பாங்க..” என்றான் தேறுதலாக.
உள்ளே வந்த காஞ்சனா.. ‘இப்படி பொய் நம்பிக்கை கொடுக்காதிங்க தம்பி..” என்றார்.
‘இது பொய்யில்லைங்கத்தை.. நீங்க ஏன் இங்க தனியா இருக்கனும்.?”
‘இல்ல தம்பி.. இங்க விட்டு எனக்கு எங்கையும் சரிவராது..” என தன்மையாகவே மறுத்து, ‘ஆனா என் ஆதியை பார்க்கனும்னு தோணினா எப்போன்னாலும் உடனே கிளம்பிடுவேன்..” என மகளின் கண்ணீர் துடைத்து..
‘சாப்பிடலாம் வா ஆதி.. மாப்பிள்ளையும் சாப்பிடாம வந்துட்டாப்பில.. முதல்முறையா புகுந்த வீடு போகப்போற.. நல்ல நேரத்துல கிளம்பனும்ல..?” என்றார் புன்னகையோடு.
‘ம்மா..” என அன்னையை கட்டியணைக்க.. தானும் ஆதரவாய் அணைத்து முதுகை வருடியபடி.. ‘அழாதடா.. உன்னை பிரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம்தான்.. ஆனா எல்லா பெற்றோர்களும் அனுபவிக்கிற சந்தோசமான கஷ்டம்.. இந்த கஷ்டத்தை மனசு ஏத்துக்கும்.. பழகிக்கும்..” என்று தன்னிடமிருந்து மகளைப் பிரித்தார்.
‘ம்மா.. கொஞ்ச நாள் இங்கயே இருக்கேனே..” என்றாள் தவிப்பாக.
‘அச்சோ..” என பாவமாய் சொல்லி, செல்லமாய் கன்னம் பிடித்து ஆட்டியவர்.. ‘கல்யாணம் ஆன பொண்ணு இங்க தனியா இருந்தா கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியுமா.? அதுவும் நம்ம ஆளுங்களைப் பத்தி கேக்கவே வேணாம்..” என எடுத்துரைத்து..
‘மத்தவங்களைப் பத்தி கவலை பட கூடாதுன்னு இந்த விசயத்துல என்னால சொல்ல முடியாது ஆதி.. உன்னை யாரும் எதுவும் சொல்ற அளவுக்கு நீ நடந்துக்க கூடாது.. அதுக்கு நீ மாப்பிள்ளையோட சந்தோசமா கிளம்பனும்..
நான் இங்க தனியா இருப்பன்னு யோசிக்காத.. நீ என்னோட இருக்கிறதை விட.. மாப்பிள்ளையோட வாழ்ற சந்தோசமான வாழ்க்கை தான் எனக்கு நிம்மதியை கொடுக்கும்..” என தேற்றி சாப்பிட அழைத்து வந்தார்.