கதவை சாத்தும் சத்தம் ரூபனின் வருகையை உணர்த்த.. ரூபனின் புறம் திரும்பாமலே நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டடி தள்ளியிருந்த டிரெஸ்சிங் டேபிளிடம் சென்று நின்றாள். முன்னிருந்த கண்ணாடியில் ரூபன் தன்னை பார்ப்பது புரிய.. மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே போனாள்.
சின்ன சிரிப்போடு ஆதிரையை நெருங்கியவன்.. ‘எதுக்கு இவ்வளோ டென்ஷன்..?” என்றான் கரைந்த குரலில்.
ரூபனின் குரலும் அருகாமையும் பதட்டத்தை அதிகரிக்க செய்ய.. ‘நேத்து வரைக்கும் இல்லாத பழக்கமா இன்னைக்கு என்னோட இருக்கிங்களே.. டென்சஷன் ஆகாதா.?” என கோபமாக கேட்க நினைத்து கலக்கமாக முடித்தாள்.
‘ஹா..ஹா.. எனக்கும் அப்படித்தான.? நான் டென்ஷனாவா இருக்கேன்.?”
‘உங்களுக்கு ஏற்கனவே பழக்கம் இருக்குல்ல.? அப்போ எப்படி டென்ஷன் ஆகும்.?”
ம்.. இந்த வார்த்தையை கோபத்தோடு சொல்லியிருந்தால் சமாளிக்கலாம்.. இப்படி வலியோடு சொல்பவளுக்கு எப்படி பதிலளிக்க என அதிரூபன் தவிக்க.. ‘எனக்கு தூங்கனும்..” என்றாள்.
‘சரி வா..” என கட்டிலுக்கு அழைக்கவும்.. ‘இல்ல நா..நான் இங்க தூங்கறேன்..” என்க.. ’இந்த சோபால இரண்டு பேர்தான் உக்கார முடியும்.. இதுல எப்படி தூங்குவ.?” என கைப்பிடித்து அழைத்து வந்தவன்..
‘இப்படி உக்காரு.. என்னைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிட்டு அப்புறம் தூங்கலாம்..” என கட்டிலில் அமர்த்தி எதிரிருந்த குஷனை ஆதிரையருகே இழுத்து போட்டு அமர்ந்தான்.
‘ஹா..ஹா.. அப்படியா.? அப்போ இன்னைக்கே..” என அதிரூபன் குறும்பாக கண்சிமிட்ட.. ஆதிரை ஆவென வாய்பிளக்க.. ‘என்னை புரிஞ்சிக்கிற வரைக்கும் உன்னை தொல்லை செய்யகூடாதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டு மனசோட போராடி முடிவெடுத்தேன்.. ஆனா நீதான் என்னை முழுசா தெரியும்ன்றியே.. அப்போ எதுக்கு டைம் வேஸ்ட் செய்துட்டு..?” என சிரிப்போடு எழுந்தவன் கட்டிலில் அமர.. பேரதிர்ச்சியோடு எழுந்தாள் ஆதிரை.
‘ஹேய்..” என ஆதிரையின் தோள்தொட்டு கட்டிலில் அமரவைக்கவும் ஆதிரைக்கு கண்கலங்கியது. ‘ப்ச் ஆதி..” என தவித்தவன்.. ‘பட்டுமாவோட அம்மாவைப் பத்தி உன்கிட்ட சொல்றதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்ல.. நீ கொஞ்சம் மெச்சூர்ட் ஆனதும் நிச்சயம் உன்கிட்ட சொல்லுவேன்..” என ஆதிரையின் கன்னம் தொட்டு முகம் நிமிர்த்தி..
இப்போ நான் சொல்ல வந்தது என் தொழில் வருமானம் இப்படி விசயங்களைத்தான். நாளை காலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்.. அந்த நேரத்துக்கு உன்னை எழுப்பவேணாம்னுதான் இப்ப பேச நினைச்சேன். அதிகம் வீட்ல இருக்கமாட்டேன்.. என் தொழில் அப்படி..” என்கவும்..
தொழில் என்றதும்.. ‘எனக்கும் வேலைக்கு போகனும்.. என்னால வீட்ல அடைஞ்சிருக்க முடியாது.. எனக்கானதை நான்தான் பார்த்துக்குவேன்.. எனக்கு அப்படித்தான் பிடிக்கும்..”
ஏற்கனவே முடிவெடுத்திருக்கிறாள் எனப்புரிய.. ‘நீ நினைக்கிற அளவுக்கு இந்த ஊர்ல பெருசா ஐ.டி கம்பெனி எதுவும் கிடையாது ஆதி..” என்றான் தன்மையாகவே.
‘நானும் இந்த ஊர்ல இருக்கிறேன்னு சொல்லலையே.. சென்னைக்கு போகப்போறேன்..” என்றாள் மிடுக்காக.
ம் தன்னோடு சென்னையில் இருந்தாளென்றால் இன்னும் இன்னும் சந்தோசம்தான்.. ஆனால் ஆதிரை எதற்காக வேலைக்கு செல்ல முடிவெடுத்திருப்பாள் என யூகித்தவனுக்கு வருத்தம் வந்தது.
‘உன் விருப்பத்துக்கு இங்க யாரும் தடை சொல்லமாட்டாங்க.. ஆனா நான் உன்னை நெருங்கிடுவேன்னோ.. இல்ல என் பட்டுவை பார்த்துக்கனுமேன்ற காரணத்துக்காக வேலைக்கு போக முடிவெடுத்திருந்தாலோ.. அதுக்கு அவசியமே இல்ல ஆதிம்மா..
பட்டுவை பார்த்துக்கிறதுக்காக உன்னை நான் கல்யாணம் செய்துக்கல.. உன்னை தவிர யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாதளவுக்கு உன்னை பிடிச்சதாலயும்.. உனக்கும் அப்படித்தான்னு தெரிஞ்சதாலயும்தான் கல்யாணம் செய்துகிட்டேன்.. பட்டுவை பார்த்துக்க என் அம்மாப்பா தாத்தா எல்லாரும் இருக்காங்க..” என தன்மையாய் எடுத்துரைக்க.. கண்கள் பணிக்க தலைகுனிந்தாள் ஆதிரை.
ம்.. கருவண்டு விழிகளும்.. ரோஜா இதழ்களும்.. ஆப்பிள் கன்னமும்.. ஆச்சர்யமாய் ஆசையாய் அதிசயமாய் என பல பாவங்களோடு தன் புருவங்களை ஏற்றியிறக்கி தந்தையிடம் கதைபேசும் தும்பைநிற மழலையை.. ராமசாமியின் இறப்பில் முதல்முறை பார்த்தபோதே மிகவும் பிடித்ததுதான்.. ஆனால் இத்தனை அழகும் ஒன்றுசேர்ந்த குழந்தை அதிரூபனின் காதல் ரூபம் என நினைக்க குழந்தையிடம் நெருங்க முடியவில்லை ஆதிரையால்.
‘ப்ளீஸ் ஆதி.. கோபம்னா என்னை திட்டு.. இப்படி அழாத..” என சின்னதாய் கடிந்து.. அவளின் தாடைதொட்டு நிமிர்த்தியவன்.. ‘உன் விருப்பம் இல்லாம எவ்வளோ நாளானாலும் உன்னை நெருங்க மாட்டேன்.. மனசை அழுத்திட்டிருக்காம கொஞ்சம் இயல்பா இரு ஆதிம்மா..” என்றான் கெஞ்சலாக.
ஆதிரையின் முகத்தில் அத்தனை நிம்மதி வரவும்.. மகிழ்ந்தவன்.. ‘இப்போவாவது என் படிப்பு தொழில் வருமானம் பத்தி சொல்லட்டுமா.?” என்றான் கெஞ்சலாக.
ம்.. சினிமாத் துறையில் தன் இடம் பற்றி சொல்லி ஆதிரையின் முகபாவனையை காணவேண்டும்.. அதிலும் வளர்ந்து வரும் முன்னனி நாயகர்கள் நான்கு பேருக்கு தான்தான் பின்னனி பேசியிருக்கிறேன் என்றும்.. சண்டை காட்சிகளில் டூப் போட்டிருக்கிறேன் என்றும் சொன்னால் மனைவியின் ரியாக்ஷன் எப்படியிருக்கும்..? எனும் பேராவலோடு அதிரூபன் ஆதிரையின் முகம் பார்த்திருக்க..
‘ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி.. ப்ளஸ்டூல பார்டர் மார்க்ல பாசாகிட்டு.. மேற்கொண்டு புக்கை கஷ்டப்படுத்த விரும்பாம ஆம்புலன்ஸ் ஓட்டிட்டிருக்கிங்கன்னு எல்லாம் தெரியும்.. எனக்கு தூக்கம் வருது..” என தலைகுனிந்தவாறு முனுமுனுத்தாள்.
பெரும் சத்தமெடுத்து சிரித்த அதிரூபன்.. ‘தெரிஞ்சிடுச்சா.. டோட்டலா தெரிஞ்சிடுச்சா..?” என லாரன்ஸ் போல் மாறாப் புன்னகையோடு கேட்க..
‘என்னவோ சாதனை செய்துட்ட மாதிரி எதுக்கு இப்படி சிரிக்கிறிங்க.? வெளில கேக்கப்போகுது..” என கடுகடுத்து.. ‘நான் தூங்கனும்..” என பெட்சீட்டை எடுத்து கீழே போட முயல..
‘உன் விருப்பம் இல்லாம உன்னை நெருங்கமாட்டேன்னு நான்தான் சொன்னேன்ல.? இன்னும் எதுக்கு கீழ படுக்க போற.. வா..” என கைப்பிடித்து இழுத்து கட்டிலில் அமர்த்தி.. ‘இங்கயே படு.. “ என்றான்.
‘எனக்கு தனியா படுத்தாதான் தூக்கம் வரும்.. அதோட நெருங்கலன்னு சொல்லிட்டு கைய காலை மேல போடுறது.. கேட்டா தூக்கத்துல தெரியாம செய்துட்டேன்னு சொல்றது.. இந்த கதைலாம் இங்க வேணாம்.. நான் கீழயே படுத்துக்கிறேன்..” என எழுந்தாள்.
‘ப்ச்..” என மீண்டும் கட்டிலில் அமர்த்தியவன்.. ‘சின்ன திட்டுல படுத்தாலும் விழாம தூங்கிக்குவேன்.. எனக்கு தெரியாம என் கை கால் தூக்கத்துல கூட அசையாது.. எல்லாம் போக நான் தூங்கி ரெண்டு நாளாகுது.. கண்மூடின அடுத்த செகன்ட் தூங்கிடுவேன்.. நீ கீழ படுத்தாதான் எனக்கு கில்டில தூக்கம் வராது. இங்கையே படு..
உனக்கு புது இடம்ன்றதால தூக்கம் வராதுதான.? நான் சொன்னதெல்லாம் சரிதானான்னு உனக்கு தூக்கம் வரும் வரை செக் பண்ணிக்கோ..” என கட்டிலின் ஒருபுறம் படுத்தவன்.. ‘உனக்கு லைட் வேணாம்னா ஆஃப் பண்ணிடு.. வேணும்னாலும் எனக்கு பிரச்சனையில்லை..” என்று படு என கட்டிலின் மறுபுறத்தை காண்பித்தான்.
மெத்தையிலிருந்த பூக்களை கோபமாக கீழே தள்ளியவளை பார்த்திருந்தவன்.. ஆதிரை படுத்ததும் அவள்புறம் சற்று நெருங்கி வந்து.. ‘ஆதிம்மா.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சி முதல்முறையா என் காதலை சொன்னதும் உன் மனசு படபடத்துச்சே.. அந்த சத்தம் இன்னும் என் காதுல ஒலிச்சிட்டிருக்குடா..” என்றான் ஏக்கத்தோடு.
என்ன குரலிது என திடுக்கிட்டவள் எழப்பார்க்க.. ‘ம்ப்ச்.. ஆ.. ஊன்னா எழுந்துப்பியா..?” என அவளின் தோள்தொட்டு அழுத்தி படுக்க வைத்தவன்..
‘திரும்பவும் சொல்றேன்.. உன் சம்மதமில்லாம உன்னை நெருங்க மாட்டேன்..” என நம்பிக்கையான குரலில் சொல்லி.. ‘உன் மனசுல நான் இருக்கேன்றதுல எந்த மாற்றமும் இல்ல.. பட்டுதான் உன்னோட பெரிய நெருடல்.. நிச்சயம் ஒருநாள் அது ஒன்னுமே இல்லன்னு உனக்கு புரிய வரும்.. அன்னைக்கு உன் மனசு படபடக்கும்..
அப்படியொரு ஓசை என்னைக்கு கேக்குதோ அன்னைக்கு உன்னை நெருங்குவேன்.. இப்போ போல அப்போ நிச்சயம் உன்னால என்னை தடுக்க முடியாது.. இன்னைக்கு நமக்கான நாள்.. ஒரு சின்ன முத்தம்.. அணைப்புன்னு எதுவும் இல்லாம தூங்கறதுக்கு அன்னைக்கு வட்டியும் முதலுமா வசூல் செய்து உன்னை மொத்தமா எடுத்துப்பேன்..” என காதலோடு சொல்லி..
‘ரூபன் தூங்கப்போறான்.. இதுக்கு மேல முழிச்சிருந்தா காலைல எழுந்துக்க ரொம்ப கஷ்டமாகிடும்..” என்று ஆதிரையிடமிருந்து சற்று விலகிப் படுத்து.. ‘ம்.. குட் நைட்டா இருந்தா கூட குட்நைட் சொல்லலாம்.. இப்படி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு எப்படி குட்நைட் சொல்றது.?” என ஏக்கப் பெருமூச்சிழுத்து கண்மூடினான்.
தன் மீது கோபம் இருந்தாலும் தான் நினைத்தை விட ஆதிரை சற்று இயல்பாய் இருக்கிறாள் என்ற நிம்மதியிலும், தன் படிப்பை பற்றி கிண்டல் பேசிய நினைப்போடும் சந்தோசத்தோடு கண்மூடினான்.
எல்லாம் முன்னவே அனுபவிச்சிருப்பான்தான.? என்னவோ எனக்காகவே விரதமிருந்த மாதிரி அலுத்துக்கிறான்..’’ என கடுப்போடு முனுமுனுத்து அதிரூபனை பார்க்க.. சொன்னதுபோலவே கண்ணை மூடினதும் தூங்கிட்டானா.? என வியந்தாலும் அவனின் சுவாசம் சீராக இருக்கவே.. இரண்டு நைட்டா தூங்கலன்னானே அதுனால தூக்கம் வந்திடுச்சாக்கும் என நினைத்து தானும் கண்மூடினாள்.
ஆனால் அதிரூபன்போல் ஆதிரைக்கு தூக்கம் வரவில்லை. போனில் தன் அன்னை முன்பு பிடிக்கலைன்னு சொல்லு விட்டுடறேன் என யாசித்தது.. கர்ணா மாமாவோடு திருமணம் பேசியதை தாளமுடியாமல் இன்று காலை தன் வீட்டில் தன்னை கோபமாய் திட்டியதெல்லாம் நினைத்து இத்தனை உரிமையாய் இருக்கிறானே.. இன்று தன்னை வற்புறுத்துவானோ பயந்திருக்க.. தன் உணர்விற்கு மரியாதை கொடுத்து விலகிப் படுத்தது பெருத்த நிம்மதியை கொடுத்தது.
ஒருத்தன் தூங்க இத்தனை பெரிய கட்டில்.. பத்தாதுக்கு சோபா.. குஷன் எல்லாம நோட்டமிட்டு.. மொத்த வீட்டையும் நினைவு கொண்டவள்.. ஆம்புலன்ஸ் ஓட்டுறதுல இவ்வளோ பணமா சம்பாதிக்க முடியும்..? என அரவிந்தனையும் அவனின் நண்பர்களையும் அடித்ததை நினைவிற்கு கொண்டு வந்தவள்.. ம் இவன்தான் வல்லவனாச்சே.. அடிதடிக்கு போய்கூட சம்பாதிப்பான்.
அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல என்னவோ படபடத்துச்சாம்.. சத்தம் வந்துச்சாம்.. திரும்ப அதே போல சத்தம் வரும்போது என்னையே எடுத்துப்பானாம்.. என அவனின் காதல் சொற்களை பிணாத்தலாய் எண்ணினாள். இப்படியாக அதிரூபனின் ரூபமே மனதினுள் வலம் வந்து கொண்டிருக்க.. எந்த நேரம் தூக்கம் அவளைத் தழுவியது என அறியாமலே தூங்கியிருந்தாள்.
காலையில் கண்வழிக்கும்போது அதிரூபன் அருகிலில்லை. காலை சென்றிடுவேன் என சொன்னதுபோல கிளம்பிட்டான் போல என மணியை பார்க்க ஏழாகியிருந்தது. தன்னுடைய பேகிலிருந்து உடைகளை எடுத்து குளிக்க கிளம்பினாள்.
குளித்து வந்தவளிற்கு வெளியே செல்ல அத்தனை தயக்கம்.. யாரிடமும் பேசிப் பழகியிராத இடத்தில் எப்படித்தான் சமாளிப்பது பெரும் யோசனை.. அன்னைக்கு அழைத்தாள்.. காஞ்சனா அழைப்பை ஏற்காமல் போகவே சோர்வானது. மனம் வேறு சூடான டீக்கு ஏங்கியது. எப்படியாகினும் உள்ளே எத்தனை நேரம் இருப்பது என மெல்ல கதவைத் திறந்தாள்.
—– —— ——–
‘வா ஆதி.. நம்ம வீட்ல எதுக்கு இத்தனை தயக்கம்.?” என இயல்பாய் வரவேற்றார் கணேசன். சமையலறையிலிருந்து வந்த கனகா மருமகளை ஆராய.. தயக்கம்தானேயன்றி நாம நினைக்கிறதைப் போல ஒன்னுமில்லை என புரிந்தாலும்.. ‘காபியா.? டீயா ஆதி.?” என்றார் தன் ஏமாற்றம் மறைத்து.
‘ டீ..” என்றாள் தயக்கத்தோடே. ‘மாலா..” என கனகா அழைக்கவும் மாலா வரவே.. ‘மருமகளுக்கு டீ எடுத்து வா..” என்க.. மாலாவின் பணிவிலேயே தெரிந்தது அவர் இவ்வீட்டின் பணியாள் என.
‘உக்காருடா ஆதி..” என மாரியப்பன் சொல்ல.. அருகிருந்த சோபாவில் அமர.. ‘அம்மாக்கிட்ட பேசுனியாடா.?” என்றார்.
‘அதனால என்னடா.? எதாவது வேலையா இருந்திருக்கும்.. இன்னொரு முறை பண்ணி பேசு..” என்றார் அக்கறையாக.
மொபைலை எடுக்க உள்ளே போனவளுக்கு பிறகுதான் அறையின் அலங்கோலம் கண்ணுக்கு பட.. துடப்பம் தேட அங்கில்லையென்றதும் மீண்டும் வெளியே வந்து.. ‘ரூம் பெருக்க துடப்பம் வேணும்..” என்றாள் கனகாவிடம்.
மாலா டீ எடுத்து வர.. ‘நீ டீ குடி.. மாலா பார்த்துப்பா..” என்றார்.
‘இல்ல.. நானே..” எனத் தயங்க.. ‘டீ ஆறிடும்.. குடிங்கமா.. நான் பார்த்துக்கிறேன்..” என ஆதிரையிடம் டீயை கொடுத்து மாலா தன் வேலையை செய்ய உள்ளே போகவும்..
அச்சோ.. பூவெல்லாம் நைட் கீழ தட்டிவிட்டனே.. பார்த்துட்டு தப்பா நினைப்பாங்களோ..” பெரும் அவஸ்த்தை உண்டாக.. ‘எதுக்கு ஆதி சங்கடப்படுற.? மாலா எதுவும் நினைக்காது..” என கனகா தேற்ற.. ‘டீ குடிடா ஆறிடும்.. இல்ல மாலாதான் திரும்ப போடனும்..” என கனிவோடு கணேசன் சொல்ல.. தனக்கும் தேவையாய் இருக்கவே அமைதியாய் டீ குடிக்கலானாள்.
இந்த அம்மா ஏன் ஃபோன் எடுக்கல.? மிஸ்டு கால் கூடவா பார்த்திருக்கமாட்டாங்க.? என கோபமாய் நினைத்திருக்க.. நேற்று திருமணம் முடித்து இன்றே ரூபன் கிளம்பியிருப்பதால் ஆதிரையின் முகம் வாட்டமாய் இருப்பதாய் நினைத்த கனகா.. ‘நாளைக்கு சாய்ங்காலம் ரூபன் வந்திடுவான் ஆதி..” என்றார்.