இரவு வழமையான நேரத்தில் கடையை அடைத்த பின் வீடு திரும்பி இருந்தார் சுந்தரமூர்த்தி. வீட்டில் நுழைந்தவரை அந்த அசாத்திய அமைதியே வரவேற்க எப்பவும் வாசலில் வரும்போதே கேட்கும் தொலைக்காட்சி ஒலியோடு மகள்களின் அரட்டை சத்தம் இன்றி வெறுமையாய் இருந்தது.
“வந்துடீங்களா.. கை கால் கழுவிட்டு வாங்க.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..”
என அம்பிகா கூறிவிட்டு கிட்சனுள் போய்விட குளியலறை சென்று வந்து உணவுண்ண அமர்ந்தவர்,
“எல்லாரும் சாப்டீங்களா…?” என கேட்க அவருக்கு பரிமாறியபடி,
“கமலியை தவிர எல்லாரும் சாப்பிட்டாச்சு.. அத்தையை கூட சமாதானப்படுத்தி சாப்பிட வைச்சுட்டேன்.. ஆனா உங்க மகளோட என்னால போராட முடியல..”
என்று ஆதங்கம் கொள்ள,
காரணம் அறிந்த சுந்தரமூர்த்திக்கும் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. எனவே,
“அம்மா எதுவும் சொன்னாங்களா..??”
அடுத்த கேள்விக்கு தாவ,
“உண்மையை தான் சொல்றேன்.. தப்பு உங்ககிட்டையும் தான் இருக்கு.. அப்போ நீங்களும் வார்த்தையில் நிதானிச்சு இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சனை ஆகி இருக்காது.. நாளைக்கே எல்லாம் நடக்க போற மாதிரி அந்த குதி குதிச்சீங்க.. உங்க அப்பா உங்களுக்கு மேல தானே இருப்பாங்க.. அதான் மாமாவும் இப்படி பண்ணிட்டார்.. இப்ப கிடந்து வேதனை படுறது யாராம்..?”
“எல்லாம் எனக்கு தெரியும்.. நீ போய் கமலியை கூப்பிட்டு வா..”
என அப்பவும் முறைப்போடே சொல்ல,
‘ம்க்கும்.. என்னைக்கு என் பேச்சை கேட்டு இருக்கீங்க.. என்னவோ பண்ணுங்க..’ என முனங்கிக் கொண்டே மகள்களின் அறைக்குச் சென்று கமலினியை அழைத்து வந்தார்.
கண்கள் சிவந்து முகமே களையிழந்து இந்த சில நாட்களில் ஆளே மாறியிருந்தாள் கமலினி.
“கமலி.. சாப்பிடலாம் உட்கார்..”
என தன் அருகில் இருந்த நாற்காலியை காட்டி சொல்ல,
“இல்ல ப்பா.. பசிக்கல வேண்டாம்..”
என்றாள்.
“அது எப்படி பசிக்காமல் இருக்கும்.. மதியமும் சரியா சாப்பிடல..!! அப்பாகாக.. சாப்பிடு வா..”
“பிளீஸ் ப்பா.. எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம்.. கட்டாயப் படுத்தாதீங்க..”
“இப்ப நீ சாப்பிடாமல் இருந்தால் மட்டும் எல்லாம் சரியா போயிடுமா..?? ஏன் மா இப்படி பண்ற..?? அப்பா அண்ணன் வீட்டுக்கு இதுக்கு முன்னாடி போய் இருந்ததே இல்லையா..??”
“சாதாரணமா போறதும்.. கோவிச்சுட்டு இனி வர மாட்டேன்னு சொல்லிட்டு போறதும் ஒன்னா ப்பா..”
பேசும்போதே தன்னையும் மீறி அழுகை வந்தது. இத்தனை வருடங்களில் எதற்கும் இவ்வளவு அழுததே இல்லை. ஆனால் இந்த சூழ்நிலை மிகவும் பலவீனம் ஆக்கி இருந்தது.
“நானும் என்ன பண்ணுவேன் கமலி.. அவர் சொல்றது கொஞ்சம் ஆவது ஏத்துக்கும் படி இருக்கா..?? இன்னைக்கு சித்ராவும் மாப்பிள்ளையும் கூட போய் பார்த்து பேசி இருக்காங்க.. ஆனால் கொஞ்சமும் அசைந்துக் கொடுக்க மாட்டேன்னு நிற்கிறவர் கிட்ட என்ன சொல்ல முடியும்..?? அந்த தினகரனை என் மருமகனாக்க சம்மதிக்க சொல்றீயா..?”
என்று தந்தை மீது இருந்த கோபத்தில் காட்டமாய் கேட்க அவள் பதிலின்றி நின்றாள்.
அவளின் முக பாவனையில் சற்று அமைதியானவர்,
“இப்ப கோபத்தில் இருக்கிறார் கமலி.. இன்னும் இரண்டு மூணு நாளில் கொஞ்சம் மனசு மாறி இருப்பார்.. அப்போ பேசி சமாதானம் படுத்தி உன் தாத்தாவை அழைச்சுட்டு வந்திடலாம்.. சரியா.. இப்ப நல்ல பிள்ளையா அப்பா சொல்றதை கேளு.. இங்க வா..”
என பொறுமையாய் கூறி தானே கமலினியை அருகில் அமர்த்தி சாப்பிட வைக்க அனைத்தையும் மௌனமாய் பார்த்து இருந்தார் அம்பிகா.
‘மகள் மீது உயிரே வைத்து இருப்பவர் நிச்சயம் தனக்கு பிடிக்காத ஒருவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க வாய்ப்பே இல்லை..
மாமாவும் எத்தனை நாள் சென்றாலும் தன் பிடிவாதத்தை விடபோவது இல்லை.. இதற்கு என்ன தீர்வோ..?”
என கமலினியை எண்ணி கவலையாக இருந்தது.
தந்தைக்காக கஷ்டபட்டு இரண்டு இட்லியை விழுங்கியவள் மீண்டும் தன் அறையில் வந்து அடைந்துக் கொண்டாள்.
உறக்கம் அவளை விட்டு வெகுதூரம் சென்றிருக்க அன்று நடந்ததே மீண்டும் மீண்டும் தோன்றி இம்சித்தது.
ஸ்வர்ணா சொன்னதில் கமலினி மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் தோன்ற
அன்று ஆதவன் கூறியதும் நினைவில் எழுந்து அவளின் கோபத்திற்கு தூபம் போட்டது..!!
“நானென்ன பொருளா..?? அதுக்கு பதில் இதுவென மாற்றிக் கொடுக்க..?? என்ன நினைச்சுட்டு இருக்காங்க.. யார் என்ன சொன்னாலும் நான் தலையாட்டி விடுவேன் என்றா..!! முதலில் தாத்தாகிட்ட பேசி இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டணும்…”
என கோபமும் வேகமும் நிரம்ப தந்தையுடன் வீடு திரும்பினாள். ஆனால் அங்கே சூழ்நிலையோ இன்னும் மோசமாக இருந்தது.
ஏனெனில் லிங்கேஷ்வரனின் இளைய அண்ணன் பழனியப்பன் தன் மகனிற்காக அவளை பெண் கேட்டு தன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
“கடையில் இருந்தபோது இந்த மாதிரி சொல்லி நல்ல நாளா இருக்குன்னு இன்னைக்கே வரேன்னு அத்தான் சொன்னாங்க ப்பா.. நானும் வீட்டிற்கு வந்து சொல்லலாம்னு இருந்தேன்..”
என சுந்தரமூர்த்தி கொடுத்த விளக்கத்தில் தாத்தாவிற்கு இவர்கள் வருகை முன்னமே தெரியப்படுத்தவில்லை என்று புரிய அவர் முகத்தில் இருந்த இறுக்கமும் சற்று முன் ஸ்வர்ணா வழியே அறிந்துக் கொண்ட விஷயமும் சேர்ந்து தாத்தாவின் மனநிலையை தெளிவாய் உணர்த்தியது. ஆனால் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
ஒரே நாளில் அடுத்தடுத்த அதிர்ச்சியில் கமலினி வாயடைத்து தான் போயிருந்தாள்..!!!
“நல்ல விஷயம்.. ஏன் தள்ளி போடணும்னு தான் உடனே வந்தாச்சு மாமா.. கமலினி அடுத்த வருஷம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதா சுந்தரம் சொன்னான்.. அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. இப்ப பேசி வைச்சுக்கிட்டு அடுத்த வருஷமே கல்யாணம் வைச்சிக்கலாம்..
நமக்குள்ள இந்த பெண் பார்க்கிற சம்பிரதாயம் எல்லாம் தேவையில்லை தானே மாமா.. ஒருநாள் மகேஷ் வந்ததும் மகேஷ், கமலினி இரண்டு பேரையும் சந்திக்க வைப்போம்.. அப்புறம் மேற்கொண்டு பேசலாம்.. என்ன சொல்றீங்க..”
என்று பழனியப்பன் எல்லாம் முடிவானது போல் பேசிக் கொண்டே செல்ல,
“அதற்கெல்லாம் அவசியம் இருக்காது பழனி.. நீ மகேஷை அழைச்சுட்டு வராததே நல்லது தான்.. இன்னும் சங்கடமா போயிருக்கும்.. ஏன்னா இந்த சம்மந்தம் சரி வராது…”
என்றே சொல்லிவிடவும் ஒரு நொடி அடுத்து என்ன சொல்வது என தெரியாமல் திகைத்துவிட்டனர்.
பழனியப்பனின் தாய்மாமன் என்ற உரிமை இருக்க அவரிடம் நேரடியாய் மறுத்து பேச சிவசுப்ரமணியம் தாத்தாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.
“அப்பா.. என்ன சொல்றீங்க.. கொஞ்சம் யோசிச்சு அப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணலாமே..”
என்று பழனியை சங்கடமாய் பார்த்து தவிப்போடு தந்தையிடம் முறையிட்டார் சுந்தரம்.
மகேஷ் பழனியப்பனின் இளைய மகன்.. பெங்களூர் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறான். தன் இரண்டு மகன்களையுமே நன்றாக செட்டில் செய்து இருந்தார் பழனி. அதுவும் தாங்கள் பார்த்து வளர்ந்தவன் என்பதால் அவனிற்கு மகளை கொடுக்க அவருக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் தந்தை இப்படி எடுத்ததுமே இப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை.
“என் மகனை மறுக்க என்ன காரணம் இருக்க முடியும்.. வீடு தேடி வந்தவனை இப்படி தான் அவமான படுத்துறதா..? ஏன் மாமா இப்படி சொல்றீங்க..”
என பழனியும் கோபமாய் கேட்க,
“ச்சே… ச்சே.. மகேஷும் என் பேரன் தான்.. அவனை நானே குறைவா நினைப்பேனா பழனி.. நான் ஏன் சரி வராதுன்னு சொன்னேனா.. கமலினிக்கு நான் ஏற்கெனவே மாப்பிள்ளை முடிவு பண்ணிட்டேன்.. அதனால் தான்..”
என்று முடிவு என்றதை அழுத்தமாய் சொல்ல சடாரென திரும்பி சுந்தரமூர்த்தியை பார்த்தவர்,
“சுந்தரம் என்கிட்ட சொல்லவே இல்லையே..”
என கேட்டார்.
“இன்னும் நான் அவன்கிட்டயே சொல்லல.. நாங்க பேசி உனக்கு ஒரு பதிலை சொல்லும் வரையாவது நீ அவகாசம் கொடுத்து இருக்கலாம்… கல்யாணம் விஷயம்னா ஒரு பொறுமை வேண்டாமா பழனி.. எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்யறதா..?? ஆனா பரவாயில்ல விடு.. நமக்குள்ள எந்த தயக்கமும் தேவையில்ல தான்.. நான் சொன்னதை நீயும் சரியா புரிஞ்சுபேன்னு எனக்கு தெரியும்…”
என அங்கே அவர் மட்டுமாய் எல்லா பக்கமும் பேசிக் கொண்டிருக்க மற்றவர்களுக்கு பார்வையாளர்களாக இருப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.
சுப்ரமணியம் அவ்வாறு சொல்லவும் சண்டையிட முடியாமல் பல்லை கடித்து,
“அப்படி யாரை மாப்பிள்ளைன்னு பார்த்து இருக்கீங்க.. நமக்கு தெரிஞ்சவங்களா.. இல்ல பிறத்தியா..?”
என கேட்க,
“தினகரன் தான்..” என்ற ஒற்றை பதிலில் அதிர வைத்தார்.
இவர் வேண்டுமென்றே தான் இப்படி செய்கிறாரோ என ஒரு நிமிடம் சந்தேகமே வந்துவிட்டது. பின்னே தன்னை மறுத்துவிட்டு தன் தம்பியின் மகனை மாப்பிள்ளை ஆக்க எப்படி நினைக்கலாம்..? அந்த தினகரன் எல்லாம் என் மகனிற்கு இனணயாக வர முடியுமா..?’
என ஆணவமாய் எண்ணமிட்ட பழனிக்கு ஆத்திரமாய் வந்தது.
ஆனால் சிவசுப்ரமணியமிடம் என்ன பேசினாலும் தன் வாயை அடைத்து விடுவார் என அறிந்தவராய் சுந்தரமூர்த்தி வழியே இதனை கவனித்துக் கொள்ளும் எண்ணத்தோடு உடனேவே குடும்பத்தோடு கிளம்பிவிட்டார்.
இங்கே அவர்கள் சென்ற மறு வினாடியே பொங்கி எழுந்துவிட்டார் சுந்தரமூர்த்தி.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ப்பா..?
பழனி அத்தானை மறுக்க அவரை கோபப்படுத்தனும்னு வீம்புக்கு பண்றீங்களா..?? நீங்க சொல்றது எல்லாம் ஒரு காலமும் நடக்காது…”
என்று ஆக்ரோஷமாய் பேச பெரியவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. சுந்தரமூர்த்தி இப்படி குதிக்கவில்லை என்றால் தானே அங்கே ஆச்சரியம்..!!
எனவே,
“இப்ப எதுக்கு நீ கத்துற..!! வீம்பு எல்லாம் ஒன்னும் கிடையாது.. என்னை பொறுத்தவரை தினகரன் தான் என் பேத்திக்கு சரியான ஜோடி.. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்.. நேரம் வரட்டும்னு காத்து இருந்தேன்.. இந்த பழனி வந்து என்னை பேச வைச்சுட்டான்..”
என்று சொல்ல அத்தனை நேரம் அமைதியாய் இருந்த அமிர்தமும்,
“ஆமா சுந்தரம்.. என்கிட்ட முன்னமே இது பத்தி சொன்னார்.. எனக்கே இன்னைக்கு பழனி வந்து இப்படி கேட்டது பெரிய அதிர்ச்சி தான்.. நல்லவேளை எல்லாம் சுமூகமா முடிந்தது.
உங்க அப்பா ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் சரியா இருக்கும்.. உனக்கு தெரியாதா..?? கொஞ்சம் கோபப்படாம
யோசியேன்..”
பதவிசாய் சொல்ல கணவரை தயக்கமாய் ஏறிட்ட அம்பிகாவும்,
“எனக்கும் தெரியும்.. அத்தை சொல்லி இருந்தாங்க..” என்று தானும் வாய் திறந்தவர்,
“உங்களுக்கு பிடிக்காதுன்னு நானும் சொன்னேங்க.. எதுவா இருந்தாலும் உங்ககிட்ட மாமாவே பேசிப்பார்.. நீ எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க…”
என அவசரமாய் தன் தரப்பையும் விளக்க எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னை முட்டாள் ஆக்கி விட்டதாக எண்ணியவருக்கு அதிர்ச்சி நிலையை தாண்டி ஆவேசம் ஆட்க்கொண்டது.
“ஹோ.. இதில் எல்லாரும் கூட்டா..?? இது என் பொண்ணு வாழ்க்கை.. எனக்கு தெரியாமல் என்ன செஞ்சுட முடியும் உங்களால..”
“நீ மட்டும் என்ன செஞ்ச..?? பழனியோடு இப்படி ஒரு பேச்சு வார்த்தை நடந்ததை எங்ககிட்ட சொல்லவே இல்ல தானே.. இன்னைக்கு தான் இப்ப தான் பேசினோம்னு எல்லாம் சும்மா சொல்லாத… அதையெல்லாம் நம்ம நான் ஆளு இல்ல..”
உண்மை தான் முன்பு இருந்தே இருவருக்கும் இந்த பேச்சு இருந்தது. தந்தைக்கு இதில் உடன்பாடு இருக்காது என அறிந்தே சொல்லாமல் இருந்திருந்தார்.
அனைத்தையும் பார்த்தபடி கற்சிலையாய் நின்று விட்டாள் கமலினி. இங்கே அவளையும் அவள் விருப்பத்தையும் கருத்தில் கொள்ளாமல் என்னென்ன செய்து வைத்து இருக்கிறார்கள்..’
அவள் மனம் வெகுவாய் காயப்பட்டது.
“அதுவும் இதுவும் ஒன்னு கிடையாது ப்பா… ஊரான் வீட்டு பொண்ணுக்கே அவன் வேண்டாம்னு அட்வெய்ஸ் பண்ணவன் நான்.. என் பொண்ணை கொடுப்பேன்னு நினைக்கிறீங்களா..?”
“அப்படி என்னடா தினகரன் மேல வெறுப்பு..!! அவன் உனக்கு என்ன பண்ணான்..?? நீதான் அவனை சுத்தி சுத்தி குடைச்சல் கொடுத்த.. அப்பவும் பொறுமையா விலகி தான் போனான்..”
“யார் அவன் பொறுமையா..?? ” என பல்லை கடித்தார்.
‘உன்னால் என் முடியை கூட பிடுங்க முடியாது என்பதுபோல அவன் பார்க்கும் பார்வையிலே திமிர் இருக்கும்..!! எந்த சூழ்நிலையிலும் அவன் பணிந்து போனது இல்லை. மாறாக அலட்சியமே செய்வான். அது தான் மேலும் மேலும் அவனை சீண்ட துண்டுதலாய் அமைந்தது.
இதனை எல்லாம் விளக்க வழியில்லாத ஆத்திரத்தில்,
“அவனை கண்டாலே பிடிக்கலைன்னு சொல்றேன்.. நீங்க காரணம் கேட்டு நிற்கறீங்க.. என் பொண்ணுக்கு ராஜா மாதிரி ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்த எனக்கு தெரியும்.. ஏன் மகேஷையே பேசி கல்யாணம் பண்ணி வைப்பேன்.. அது என் இஷ்டம்.. இதில் நீங்க தலையிடாதீங்க ப்பா..”
என்று சொல்லிவிட, “சுந்தரம்… என்ன பேசுற நீ..” என்று அதிர்ச்சியில் அதட்டல் இட்டார் அமிர்தம்..!!
“நான் சரியா தான் பேசுறேன் ம்மா.. கமலினியை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு எனக்கு தெரியும்..”
சிவசுப்ரமணியம் முகமும் முற்றிலும் மாறிவிட,
“ஓஹோ.. சரி.. நான் தலையீடல.. ஆனா என் பேச்சை மதிக்காத இந்த வீட்டில் இனியும் நான் இருக்க போறது இல்ல..”
என ஸ்திரமாய் சொல்ல சுந்தரமூர்த்தி முதற்கொண்டு யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை.
அதன் பின் யார் என்ன சொன்னாலும் காதிலே வாங்காமல் கிளம்பியே விட தன் கணவரை புரிந்தவராய் அமிர்தம் அவரை தடுக்க இல்லை. ஆனால் மகன் மீது அத்தனை கோபத்தில் வர சுந்தரமூர்த்தியை ஓயாமல் கரித்து கொட்டினார்.
சிறிது நேரத்தில் முகிலனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அப்பா அங்க வந்து இருக்காரா முகில்..”
என்று எடுத்ததும் சுந்தரமூர்த்தி கேட்க,
“ஆமா சித்தப்பா.. அதை கேட்க தான் ஃபோன் பண்ணேன்.. என்ன பிரச்சனை.. ஏன் தாத்தா கோபமா இருக்காங்க..” என்று அவன் விசாரிக்க அவனை தொடர்ந்து சித்ராவிற்கும் தெரிந்து பழனி வழியே அவரின் உடன் பிறப்புகளுக்கும் தெரிந்து என ஒரு வாரத்தில் அக்கம் பக்கத்தில் கேட்கும் அளவு காற்று வாக்கில் எங்கும் பரவியிருந்தது.
‘இப்படி செய்து இருக்கலாம்.. அப்படி செய்து இருக்கலாம்.. சுந்தரமூர்த்தி மீது தான் தவறு.. பெரியவர் மீது தவறு..’
என சொந்தங்கள் அறிவுரையை தூக்கிக் கொண்டுவர ஆளாளுக்கு தன் வாழ்க்கையை அவர்கள் இஷ்டப்படி வளைப்பதைக் காண பொருக்கவே இல்லை. அங்கே அவளின் விருப்பம் என்ற ஒன்றை யாரும் துளியும் யோசிக்கவில்லையே..!!
அதிலும் தாத்தா அவளிடம் இப்போதுவரை பேசாதது இன்னமும் வதைக்க அந்த இரவின் மடியில் அனைத்தையும் எண்ணி அழுகையில் மூழ்கி இருந்தவள்,
“கமலு…” என்ற அனன்யா குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.
“என்னடி.. தூங்காலையா நீ…”
என முயன்று சாதாரணமாய் கேட்க விடிவிளக்கை போட்டுவிட்டு மெத்தையில் தவழ்ந்து அருகில் வந்த அனன்யா,
“நீ ஏன் இருட்டில் இப்படி உட்கார்ந்து இருக்க…??”
என பதில் கேள்வி கேட்டாள்.
“சும்மா தான்டி.. தூக்கம் வரலை..”
என கூறினாலும் கன்னங்களில் தெரிந்த கண்ணீர் தடம் அவளின் அழுகையை காட்டிக் கொடுக்க அனன்யா மனமும் தாளவே இல்லை.
“நீ ஏன் ஒரு மாதிரி இருக்க கமலு.. உன்னை இப்படி பார்க்கவே என்னவோ போல இருக்கு.. உனக்கு தீனா மாமா, மகேஷ் மாமா ரெண்டு பேருமே வேண்டாம்.. எல்லாம் அவங்களால தான்..”
என அவள் கையை பற்றிக் கொண்டு மெல்லிய விசும்பலோடு கூற,
“ஒன்னும் இல்ல அனு.. அதை எல்லாம் நான் யோசிக்கவே இல்ல.. நீ ஏன் இப்ப அழுகுற லூசு…”
என தன் கவலை மறந்து தங்கையை சமாதானம் செய்தாள்.
“பொய் சொல்லாத கமலு… உனக்கு இரண்டு பேரையும் பிடிக்கலை தானே.. யாரும் உனக்கு பிடிச்சு இருக்கா இல்லையான்னு கேட்காமல் அவங்களா ஒன்னு நினைச்சு சண்டை போடுறாங்க.. எனக்கு எல்லார் மேலையும் கோபம் கோபமா வருது..”
என அனன்யா சொல்ல அவளின் பாசத்தில் மனம் நெகிழ,
“இந்த பிரச்சனை எல்லாம் உன் தலையில் ஏத்திக்காத அனு..!! அப்படி ஒன்னும் என் விருப்பத்துக்கு எதிரா கட்டாயப் படுத்தமாட்டாங்க.. பார்த்துக்கலாம்…”
என்று அவளுக்கு சொல்வதுபோல் தனக்கே சொல்லிக் கொண்டவள்,
“தாத்தா இல்லாதது வருத்தமா இருந்தது.. அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்.. வேற எதுவும் இல்ல..”
என்க,
“நானும் தாத்தாவை பார்க்கணும்.. நாளைக்கு பெரிப்பா வீட்டுக்கு போகலாமா கமலு.. நாம போய் கூப்பிட்டு பார்க்கலாம்..”
என அனன்யா கேட்கவும் அவளும் யோசித்தாள்.
‘தாத்தா பேசலை என்றால் நானும் அப்படியே இருக்கணுமா..?? அன்று ஸ்வர்ணா அண்ணியிடம் சொன்னது எனக்கும் பொருந்தும் தானே.. என் விருப்பம் அவர் கேட்கலைனாலும் எனக்காக நான் தானே பேசணும்.. எனக்கு தீனாவை பிடிக்கலன்னு நான் உறுதியா சொன்னால் தாத்தாவும் தன் பிடிவாதம்விட்டு யோசிப்பார் தானே ..’
நடந்த பிரச்சனைகளுக்கு பின்னர் இப்போது தான் மனம் கமலினியாய் செயல்பட தன்னை தெளிவடைய வைத்த தங்கையை கழுத்தோடு அணைத்துக்,
“தேங்க்ஸ் அனு… நாளைக்கு கண்டிப்பா போகலாம்…”
என சொல்ல அவள் கையை பிரித்து விட்ட அனு,
“உன் தேங்க்ஸ் எல்லாம் ஒன்னும் தேவை இல்லை.. நீ எப்பவும் போல இரு.. அதுவே போதும்… சும்மா என் கண்ணையும் வேர்க்க வைசுக்கிட்டு…”
என மீண்டும் தன் இடத்தில் சென்று படுத்துவிட அவள் கையில் விளையாட்டாய் ஒரு அடி வைத்த கமலினிக்கும் லேசாய் புன்னகை அரும்பியது.