பதினைந்து நாள் கழிந்த நிலையில் ஏழு மணியாகியும் ஆதிரை எழவில்லை. ‘ஆதிம்மா.. இன்னைக்கு லீவ் போட்டுட்டியா.?” என மகளின் தோளை உலுக்கினார் காஞ்சனா.
கண் விழித்தவள்.. ‘இல்லம்மா.. கிளம்பனும்..” என்றபடி எழுந்தவள் பாத்ரூம் சென்று பத்து நிமிடம் கழித்து வந்து தயாராய் காத்திருந்த டீ எடுத்து பருக ஆரம்பித்தாள்.
காஞ்சனா..‘இனி ஞாயித்துக்கிழமையெல்லாம் வேலைக்கு போகாத.. எப்பவும் ஆறு மணிக்கு எழறவ இன்னைக்கு இப்படி தூங்கறன்னா நேத்து எவ்வளோ வேலையிருந்திருக்கும்.?” என்றார் தவிப்பாக.
‘ஞாயித்து கிழைமைல மாணிக்கம் சார்தான் எப்பவும் பில் போடுவார்.. அவங்க மகனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கிறதால இரண்டு மாசத்துக்கு மட்டும் என்னை ஞாயித்து கிழைமைக்கும் வரியாமான்னு ரொம்ப ரிக்வஸ்டாதான் கேட்டார்.. அவர் கேட்டு எப்படிம்மா மறுக்கிறது.? இரண்டு மாசம்தான.? நான் அட்ஜட்ஸ் செய்துப்பேன்..” என்றவள் குளிக்கப் போனாள்.
வழக்கமாய் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுபவள் இன்று எழுந்ததே ஏழு மணியாதலால் தற்போது மணி ஏழரை ஆகியிருக்க அவசரமாய் தலைபின்னிக் கொண்டிருந்தாள்.
அத்தனை ஆத்திரத்தோடு வாசலில் வந்து நின்ற மாதவி.. ‘உள்ள இருக்கிற உத்தமிங்க கொஞ்சம் வெளில வரிங்களா.?”என்றார்.
காஞ்சனா வெளியே வர.. ‘அம்மாவும் மகளும் ப்ளான் போட்டு என் பேரனை ஜெயிலுக்கு அனுப்பினது பத்தாம அந்த புள்ளைக்கு சொல்லிகொடுத்து மூனுலட்சம் தண்டம் கட்ட வச்சி பழி தீர்த்துட்டிங்கள்ல.? நீங்கள்லாம் நல்லாயிருப்பிங்களா.?” என்றார் ஆத்திரத்தோடு.
மாதவியின் கத்தலில் பாதி தலைபின்னலோடு வெளியே வந்தாள் ஆதிரை. ஆதிரையைக் கண்டதும் இன்னும் ஆத்திரம் பொங்கவே.. ‘எத்தனை தைரியம் இருந்தா ஒரு வயசு புள்ள போலீஸ்டேசன் வரைக்கும் போயிருப்ப.? ஆனா எல்லா நேரமும் இப்படி தைரியம் நல்லதுக்கில்ல.. இதோட அடங்கிக்க.. இல்ல எங்கையாவது வசமா மாட்டிக்குவ.. அப்புறம் ரொம்ப அசிங்கமாகிடும்..” என்றார் காரமாக.
அந்த பொண்ணு குடும்பத்துல மூனு லட்சம் பணம் கேட்டாங்களா.? அதுவும் நான் சொல்லிகொடுத்தா..? இதென்னடா புதுக்கதையா இருக்கு.. என யோசித்தவாறு மாதவியின் கத்தலை கண்டுகொள்ளாமல் மீதி பின்னலை பின்னிக்கொண்டிருந்தாள்.
காஞ்சனா ஆதிரையைப் பார்க்க.. ‘ம்மா.. நான் யாருக்கும் எதுவும் சொல்லிகொடுக்கல.. நானே பதினைஞ்சி நாளா லீவே இல்லாம வேலைக்கு போய்ட்டிருக்கேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்த கோபத்துல இன்னும் இரண்டு சேர்த்து சொல்லிட்டிருக்காங்க..” என அசால்ட்டாய் சொல்லி உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே வர.. ஆதிரைக்கு அழைப்பு வரவும்.. எடுத்து பார்;க்க மாணிக்கத்தின் அழைப்பு. ‘சாரா..” என அவசரமாய் ‘ஹலோ சார்..” என்றாள்.
‘இன்னைக்கு வெளில போகயிருந்த ப்ரோகிராம் கேன்சலாகிடுச்சி.. நான் இன்னைக்கு பேக்கரிக்கு வரேன்.. நீ லீவ் எடுத்துக்கோமா..” என்றார் கனிவாக.
‘எனக்கொன்னும் பிரச்சனையில்லைங்க சார்..” என்க.. ‘இல்லமா.. பதினைஞ்சி நாளா தொடர்ந்து வேலைக்கு வந்திட்டிருக்க.. நாளைலயிருந்து திரும்பவும் இரண்டு மாசத்துக்கு தொடர்ந்து வேலைக்கு வரமாதிரி இருக்கும்.. நான் இன்னைக்கு ஃப்ரீதான்.. நீ ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாமா போதும்..” என கண்டிப்போடு சொல்லி இணைப்பை துண்டித்தார்.
ஷப்பா.. என பெருமூச்சிழுத்து.. உள்ளேயிருந்த நாற்காலியை எடுத்து வெளியே போட்டு தோரணையாய் அமர்ந்தவள் மாதவியிடம்.. ‘ம்.. இப்போ சொல்லுங்க.. உங்க பிரச்சனை என்ன..?” என்றாள் மிதப்பாக.
மாதவி.. ஒருவேளை இப்போ பேசினவர் போலீசா இருக்குமோ.? இத்தனை மிதப்பா கேக்குறா.. அந்தாளு வேற கம்ப்ளைண்ட் கொடுத்த பொண்ணுக்கு உங்களால எதாவது தொந்தரவு வந்ததுனா வெளிலயே எடுக்காத மாதிரி கேசுல பேரனை உள்ள தள்ளிடுவன்னு சொன்னாரே..
அச்சோ இப்போ வந்ததை அந்த போலீஸ்கிட்ட செல்லியிருப்பாளோ.. நாம கத்தின கத்துக்கு கொஞ்சம் கூட அசராம இத்தனை மிதப்பா உக்கார்ந்திருக்கா.. என தற்போது ஆதிரையை பார்த்த மாதவிக்கு சிறு பயம் கூட வந்திருந்தது.
‘கேக்குறேன்ல.? பதில் சொல்லுங்க.. மாதவி எதுக்கு கண்ணகி மாதிரி கத்திட்டு இருக்கிங்க..” என்றாள் நக்கலாக.
இரண்டாம் தாரம் என்பதை குத்திகாட்டுகிறாள் எனப் புரிந்த மாதவி.. ‘ஏய்.. யார்டி மாதவி.? நான் தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி..” என்றார் காரமாக.
‘ஹாஹா.. ஆனாலும் பேருக்கேத்த மாதிரி இரண்டாவதாதான கட்டிகிட்டிங்க..?” என மீண்டும் நக்கலோடு கேட்டவள்.. ‘இங்க பாருங்க.. நானொன்னும் உங்க பேரனை குறிவச்சி கம்ப்ளைண்ட் கொடுக்கல.. அந்த பொண்ணை காப்பாத்த நினைச்சி கொடுத்தேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்ததோட சரி.. நீங்க நினைக்கிற மாதிரி அந்த பொண்ணுகிட்ட நான் எதுவும் சொல்லிகொடுக்கல..
அவங்க வீடு எங்கயிருக்குன்னு கூட எனக்கு தெரியாது.. நீங்களா எதாவது நினைச்சிட்டு இங்க வந்து தேவையில்லாம கத்திட்டிருந்திங்க.. உங்க மேலயும் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டி வரும்.” என்றாள் எச்சரிக்கையாக.
அச்சோ இந்த பொம்பள குணம் தெரியாம பேசி வைக்கிறாளே என பதறிய காஞ்சனா.. ‘ஆதி.. உனக்கு வேலைக்கு நேரமாகிடுச்சி.. கிளம்பு..” என்றார்.
‘பாவம்.. எப்படி பதறிட்டு வந்திருக்காங்க..? இவங்க பதட்டத்தை விட எனக்கு வேலையா முக்கியம்.? நமக்கு தெரிஞ்ச நல்லதை சொல்லியனுப்புவோம்..” என்றவள்..
‘உங்க பேரன் இன்னும் எங்கெங்க என்னென்ன செய்து வச்சிருக்கான்னு தீர விசாரிச்சிக்கோங்க.. அப்போதான இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்னு தெரிஞ்சிக்க முடியும்..” என்றாள் பொய் அக்கறையாக.
இன்றுதான் ஆதிரை பேசி கேட்கிறார் மாதவி. இனியும் இங்கு நின்றால் தன்னை மேலும் அவமதிப்பாள் என்றும்.. தன்மீது கம்ப்ளைண்ட் செய்திடுவாள் என ஆதிரைக்கு பயந்தாலும்.. இவளெல்லாம் எனக்கு ஒரு ஆளு.. இத்தனை எள்ளலாய் பேசியும் தன்னால் எதுவும் சொல்ல முடியவில்லையே என்ற ஆற்றாமையோடு கிளம்பினார்.
— —- —
காஞ்சனா.. ‘ஆதி.. அந்த பொம்பளை சொல்றது உண்மையா.? அந்த பொண்ணுக்கு எதாவது சொல்லி கொடுத்தியா.?” என்றார் பயத்தோடு.
‘ப்ச்.. ம்மா.. நிஜம்மா அப்படியெதுவும் நான் சொல்லலமா.. அந்த பொண்ணு வீடு எங்கயிருக்குன்னு கூட எனக்கு தெரியாது..” என்றாள் உண்மையாக.
‘அப்போ யாரா இருக்கும்.?” என காஞ்சனா யோசிக்க..
‘யாரா இருந்தா நமக்கென்ன.? அந்த பசங்களால அந்த பொண்ணு எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும்.? அதுக்கே இன்னும் ரெண்டு லட்சம் சேர்த்து கொடுக்கலாம்.. இப்படி செய்தாதான் பெத்தவங்களும் பசங்களை கண்டிச்சி வளர்ப்பாங்க..
ம் எந்த புண்ணியவான் செய்தானோ..? உங்கப்பா பொண்டாட்டியையே ஒருத்தன் பதற வச்சிருக்கான்னா பெரிய ஆளாத்தான் இருப்பான்.. ஆக மொத்தம் அந்த பொண்ணுக்கு நல்லது செய்தவன் வாழ்க..” என்றாள் சந்தோசமாக.
‘நான் போடலமா.. இன்னைக்கு ஒரு நாளைக்கு மாணிக்கம் சாரே ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டார்.. நாம கர்ணா மாமா வீட்டுக்கு போலாமா.?” என்றாள் ஆசையாக.
‘பசங்க ஸ்கூல் போயிடுவாங்க.. காலைல எழ முடியாம எழுந்தயில்ல..? சமைக்கிறேன் சாப்டுட்டு கொஞ்ச நேரம் படு.. சாய்;ங்காலம் போல உங்கத்தை வீட்டுக்கு போலாம்..” என சமையலறை சென்றார்.
‘நானும் சமைக்க ஹெல்ப் பண்றேன்..” என பின்னோடு சென்றவள்..’என்ன சமையல்மா செய்ய போற.? சின்ன வெங்காயம் உரிக்கவா.? இல்ல பெரிய வெங்காயமா.?” என கேட்க..
‘சின்ன வெங்காயம்தான் வேணும்.. ஆனா நானே உரிச்சிக்கிறேன்..” என எடுத்து உரிக்க ஆரம்பித்தவருக்கு மகளிடம் இன்று மாரியப்பன் பெண்கேட்டது பற்றி பேசிடலாம் என்ற எண்ணம் வர.. எப்படி ஆரம்பிப்பது.?
எங்கப்பா ஃபிரண்டுன்னு சொன்னதுக்கே அன்னைக்கு அப்படி பேசினா.. இன்னைக்கு அவங்க பேரனுக்கு கேட்டாங்கன்னு சொன்னா நிச்சயம் ஒத்துக்கமாட்டா.. பேசாம ராஜாத்தி அண்ணியையே பேச சொல்லுவோம்..” என முடிவெடுத்து சமையலில் கவனமானார்.
‘என்னம்மா யோசனை.?” என்றாள் ஆதிரை.
‘கல்யாண வயசுல பொண்ணை வீட்ல வச்சிட்டிருக்க அம்மாக்கு வேற என்ன யோசனை இருக்கப் போகுது..? உன் கல்யாணம் பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன்..” என்றார் மகளின் முகம் பார்த்தவாறு.
அன்னை விளையாட்டிற்கு சொல்லவில்லை என்பதை காஞ்சனாவின் முகவாட்டத்தில் தெரிய.. ‘ம்.. பண்ணிக்கலாமே.. நம்ம வீட்டோட இருக்க சம்மதிக்கிற மாப்பிள்ளை கிடைச்சா சொல்லுங்க.. கண்டிப்பா பண்ணிக்கிறேன்..” என்றாள் சிரிப்போடு.
‘வீட்டோட மாப்பிள்ளைக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. மருமகன் இங்கையே தங்கினா எனக்கு சரிபட்டு வராது..” என்றார் திடமான மறுப்பாக.
‘ம்மா..” என அதிர்ந்தவள்.. ‘அப்போ என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியும் அப்படிதான.?” என்றாள் ஏமாற்றமாக.
‘ப்ச்.. என்ன இது ஆதி.? எல்லா பொண்ணுங்களும் இதை சந்திச்சிதான ஆகனும்.? இப்போ கஷ்டமா இருக்கும்.. போக போக சரியாகிடும்..” என்றார் ஆறுதலாக.
ஆதிரை.. ‘ம்..” என முகத்தை திருப்ப.. ‘அப்படி ஊர் பேர் தெரியாதவங்களுக்கு உன்னை கட்டிகொடுத்திடுவனா.? நம்ம குடும்பம் நிலைமை தெரிஞ்சி உன்னை மகள் போல பார்த்துக்கிறவங்க வீட்டுக்குத்தான் என் ஆதிம்மாவை கொடுப்பேனாக்கும்..” என்றார் பெருமையாக.
திருமணத்திற்கு பிறகு கணவன் வீடுதான் கடைசி வரை என தெரியாதா என்ன.? தந்தையும் அண்ணனும் உயிரோடிருந்திருந்தால் இப்படி வீட்டோடு மாப்பிள்ளையை எதிர்பார்க்க மாட்டேனே.. தற்போது யாருமில்லாமல் அன்னையை தனியே விட்டு செல்வதே பெருங்கொடுமை.. இதில் தான் திருமணமாகி சென்றுவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்.?
திருமணத்திற்கு பிறகு படிப்பிற்கேற்ற வேலைக்கே போனாலும் தன் அன்னைக்கு பணம் கொடுக்க புகுந்த வீட்டில் அனுமதிப்பது சந்தேகம்தான்.. அதனால்தானே வீட்டோடு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்.. ஆனால் அன்னைக்கு அது சங்கடம் என நினைக்கும் போது இப்பிரச்சனையை எப்படித்தான் சரிசெய்வது என்ற ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
‘சரி சரி.. கல்யாண விசயம் அப்புறம் பேசிக்கலாம்.. வந்து சாப்பிடு..” என்றார் காஞ்சனா.
இளங்கோவிடமும் ராஜாத்தியிடமும் மாரியப்பனும் கணேசனும் ஆதிரையை பெண்கேட்டதை சொல்லியிருக்கிறார். இருவருக்கும் மாரியப்பன் நல்ல குணம் தெரியும்தான்.. ஆனால் அதற்காக அவரின் பேரன் அப்படியிருப்பானா என யோசித்துதான் செய்ய வேண்டும்.. முக்கியமாக ஆதிக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும்..
மாரியப்பன் தன் மகளுக்காக பேரனிடம் பேசி நிச்சயம் சம்மதம் வாங்குவார்.. கூடவே முடிந்தவரை விரைவில் பெண்கேட்க வருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கையிலும் ஆதிரையிடம் திருமணம் பற்றி பேசினார் காஞ்சனா.
ம்.. ஆதி சாப்பிட்டு முடித்ததும் ஆதி அத்தை வீட்டிற்கு அழைத்து செல்லலாம்.. அவர்கள் எடுத்துரைத்தால் நிச்சயம் ஆதிரை கேட்பாள் என்ற நம்பிக்கையில் மகளிற்கு பரிமாறி தானும் உண்ண ஆரம்பித்தார். 976
—– ——- ——– ——–
ரூபனின் அழைப்பை ஏற்ற கணேசன்.. ‘ஒரு போன் செய்ய கூட நேரமில்லையா.?” என்றார் கோபமாக.
அதிரூபன்.. ‘சாரிப்பா..” என்றான் கனிவாகவே. பதினைந்து நாளாய் தினமும் ஃபோன் செய்யும் போதெல்லாம் அப்புறம் பேசுறேன் என சொல்வது.. இல்லை அழைப்பை ஏற்காமல் விடுவது என அதிரூபன் இருக்க தற்போது தந்தையின் கோபம் புரிந்து தன்மையாக பேசினான்.
‘ஊருக்கு எப்ப வர.?”
ஆதிரையின் கூந்தலை தொட்டதால் வந்த கோபப்பேச்சு.. ஒரு பெண்ணிற்கு நடக்கும் அநியாயத்தை கடந்து போகாமல் தைரியமாக காவல்துறைக்கு அழைத்து சொல்லிய குணம்.. எவ்வித ஒப்பனையுமில்லாமல் நிறைவாய் இருக்கும் அவளின் சந்தன நிறத்தழகு என பதினைந்து நாளாய் ரூபனை பாடாய் படுத்த..
ஊருக்கு போனதும் முதல்வேலையாக தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறான்.. ஆனால் ஒப்பந்தம் செய்திருந்த படக்காட்சிகள் முடிய இன்னும் இருபது நாள் இருக்க.. ஒவ்வொரு நாளையும் கடுமையாய் போக்கிக் கொண்டிருந்த அதிரூபன்.. ‘இன்னும் பத்து பதினைஞ்சி நாளாவது ஆகும்ப்பா..” என்றான் சோர்வாக.
‘என்னடா ரொம்ப டல்லடிக்கிற.?”என கணேசன் பதற.. ஆதிரை நினைவிலிருந்து மீண்டவன்.. ‘ஒன்னுமில்லப்பா நான் நல்லாதான் இருக்கேன்.. அம்மா தாத்தா பட்டுமா எல்லாரும் எப்படி இருக்காங்க.? இருங்க வீடியோ கால்ல வரேன்..” என இணைப்பை துண்டித்து மீண்டும் அழைத்தான்.