பகுதி – 18
மறுநாள் சாதனா கண்விழித்த போது… ரிஷி பால்கனியில் அமர்ந்து பேப்பர் படித்தபடி காபி குடித்துக்கொண்டு இருந்தான். அவனின் ஈரமான கேசமே குளித்து விட்டான் என்பதைக் காட்டிக்கொடுக்க…. அதுக்குள்ள குளிச்சாச்சா என நினைத்தபடி சாதனா செல்லில் நேரத்தை பார்க்க… மணி அப்போது எட்டு.
சோம்பல் முறித்தபடி மெதுவாக எழுந்து, குளியல் அறைக்குள் சென்று பல் துலக்கி விட்டு வந்தவள், பால்கனி சென்று ரிஷியின் எதிரில் அமர்ந்து தனக்கும் ஒரு கப்பில் காபி ஊற்றிக் கொண்டாள்.
அவள் வந்து உட்கார்ந்ததை உணர்ந்ததும் படித்துக்கொண்டிருந்த பேப்பரை விலக்கி பார்த்த ரிஷி “ஹாய் ! என்ன அதிசயம்? எழுப்பாம எழுந்திட்ட…” என்றான்.
“நான் எழுந்தது இருக்கட்டும். நீங்க என்ன அதுக்குள்ள குளிச்சிடீங்க. நேத்து மாதிரி இன்னைக்கும் வெளிய போறீங்களா…” என்று கேட்டவளின் குரலில், இன்றும் தனியாக விட்டு சென்று விடுவானோ என்ற கலக்கம் இருந்தது.
“ஆமாம் வெளிய போகணும் தான். ஆனா…” எனச் சொல்ல வந்ததை முடிக்காமல் ரிஷி சாதனாவை ஆராய்ந்தான். அவள் எதாவது சொல்கிறாளா பார்ப்போம் என நினைத்தான். முகம் மாறினாலும் சாதனா ஒன்றுமே கேட்கவில்லை…. அமைதியாக இருந்தாள்.
“நான் மட்டும் இல்லை… நீயும் தான் சாதனா. சீக்கிரம் கிளம்பு ரூமை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்குப் போய்டலாம். காலையில சாப்பாடு அங்கேயே செய்யச் சொல்லி இருக்கேன்.”
ரிஷி சொன்னதைக் கேட்ட சாதனாவிற்கு நிம்மதியாக இருந்தது. அதன் பிறகு அவள் சென்று குளித்து விட்டு வர… இருவரும் வேகமாகத் தங்கள் பெட்டியில் எடுத்து வைக்க ஆரம்பித்தனர். வரவேற்புக்கு அணிந்திருந்த உடைகள், நகைகள் முதலியவற்றை ஏற்கனவே ஜோதி அவர் செல்லும் போது கொண்டு சென்று இருந்தார்.
காலை ஒன்பதரைக்கு எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தனர். வெளியே இருந்து பார்க்கவே வீடு அவ்வளவு அழகாக இருந்தது.
மொத்தம் மூன்று தளங்கள். மதுரை வீடு போல் மிகவும் பெரியது அல்ல… ஆனால் அதே சமயம் ரொம்பவும் சின்னதாகவும் இல்லாமல்… இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் புதுமையாகக் கட்டபட்டு இருந்தது.
பண்ணை வீடு போல் இங்கும் வீட்டை பார்த்துக்கொள்ள இருவர் இருந்தனர். சமையல் செய்பவரின் மனைவியே வீட்டின் மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். அதுதவிர வாயில் காவலாளி ஒருவர். அவர்களுக்கு என்று வீட்டின் பின்புறம் அறைகள் இருந்தது.
மதுரை வீடு போல் இங்கு வீட்டை சுற்றி தோட்டம் எல்லாம் இல்லை…. முன்புறம் மட்டும் சிறிய தோட்டமும், அக்கம்பக்கம் இது போல் பெரிய வீடுகள் இருந்தது.
காலை உணவு முடிந்ததும் சாதனா வீட்டை சுற்றிப் பார்த்தாள். கீழே ஹால், சமையல் அறை போக மற்ற அறைகளை அலுவலக அறைகளாக இருந்தது. முதல் தளம் முழுவதும் படுக்கை அறைகள். அதற்கு மேல் தளத்தில் உடற்பயிற்சிக் கூடமும் நீச்சல் குளமும் இருந்தது.
நீச்சல் குளம் வீட்டின் வெளியே இருப்பதை விட மேல் தளத்தில் இருப்பது இன்னும் வசதியாக இருக்கும். யாரும் வருவார்களோ என்று அச்சப்பட வேண்டாம்.
ஐயோ ! நீச்சல் டிரஸ் கொண்டு வரலையே… இப்ப என்ன பண்றது? சாதனா யோசிக்க… அப்போது அவளைத் தேடிக்கொண்டு ரிஷி அங்கே வந்தான்.
“ரிஷி இதுல ஸ்விமிங் பண்ணலாமா….”
“பண்ணலாம். ஆனா இன்னைக்கு இல்லை…. பார்ட்டி இருக்கு. ஸ்விமிங் பண்ணா ஸ்கின் டேன் ஆகும். அதனால நாளைக்குக் காலையில பண்ணலாம்.”
“என்கிட்டே ஸ்விமிங் டிரஸ் இல்லையே….”
சாதனாவின் கவலையைப் பார்த்து ரிஷிக்குச் சிரிப்பு வந்து விட்டது.
“இங்க வெளி ஆளுங்க யாரும் பார்க்க முடியாது. மேல பார்த்தியா கவர் பண்ணி இருக்கோம். அதனால நீ என்ன டிரஸ் வேணா போட்டுக்கிட்டுக் குளிக்கலாம். ஏன் ட்ரெஸ் போடாம கூடக் குளிக்கலாம்.” என அவன் கண் சிமிட்ட….
அவன் சொன்னதைச் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டு இருந்தவள், அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு “ஐயோ…” என அலறியே விட்டாள்.
அவள் அதிர்ச்சியைப் பார்த்து அவளை இன்னும் சீண்டும் எண்ணம் ரிஷிக்கு தோன்ற “சரி, எப்படிக் குளிக்கிறதுன்னு நாளைக்கு முடிவு பண்ணிக்கலாம். எனக்கு இப்ப வேலை இருக்கு. நான் கீழ ஆபீஸ் ரூம்ல இருப்பேன்.” என்றுவிட்டுச் சென்றான்.
எப்படிப் பேசுறான் பாரு? என நினைத்தபடி அவர்கள் அறைக்கு வந்த சாதனா படிப்பில் மூழ்கி விட்டாள்.
மதியம் சாப்பிட்டதும் சாதனா ஒய்வு எடுக்க… அப்போது ரிஷி செல்லில் பேசியபடி அறைக்கு வந்தான். கட்டிலில் அவள் அருகில் சென்று உட்கார்ந்தவன் “அவளுக்கென்ன இன்னும் காலேஜ் லைப் என்ஜாய் பண்ணிட்டு இருக்கா…. காலையில படிச்சா இப்ப படுத்து தூங்கிறா…” என்றான்.
[the_ad id=”6605″]
யாரு என்றபடி சாதனா எழுந்து உட்கார…. “சிமி உன்னோட பேசணுமாம்.” என்ற ரிஷி அவளிடம் போன்னை கொடுத்தான்.
“சாதனா, இன்னைக்கு நீங்க பார்டிக்கு போட வேண்டிய டிரஸ் ரெடி ஆகிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு பொண்ணு எடுத்திட்டு வருவா…. நீங்க போட்டு பார்த்துப் பிட்டிங் ஓகேவான்னு சொல்லிடுங்க. இல்லைனா அவ அப்பவே சரி பண்ணி கொடுத்துடுவா….”
“ஓகே சிமி… நான் பார்த்துகிறேன்.”
“ஓகே சாதனா, நாம ஈவ்னிங் பார்ப்போம்.”
சிமி போன்னை வைத்ததும், ரிஷியை பார்த்து முறைத்த சாதனா “நான் என்ஜாய் பண்றேன்னா…. நீங்க படிச்சு பாருங்க அப்ப தெரியும் எவ்வளவு கஷ்ட்டம்னு…. இன்னும் நிறைய இருக்கு படிக்க. நானே எப்படி முடிக்கப் போறேன்னு தெரியலை….”
“கவலைப்படாத பேப்பர் ட்ரேஸ் பண்ணிடலாம்.”
“நான் படிச்சே பாஸ் பண்ணிக்கிறேன். நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.”
“ஏய் ! நான் எதோ சும்மா விளையாட்டு சொன்னா…. நீ நிஜம்னு நினைச்சிப்பியா… நீ ஒழுங்கா படிக்கிறியா இல்லை ஓபி அடிக்கிறியான்னு சும்மா போட்டுப் பார்த்தேன், அவ்வளவு தான்.”
“நீ மட்டும் பாஸ் பண்ணலைன்னு வை… நான் உன் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்ல சைன் பண்ண மாட்டேன்.” ரிஷி பொய்யாக மிரட்ட…. அவனை அங்கிருந்த தலையணையால் அடித்த சாதனா “நான் ஸ்கூல்ல படிக்கிற மாதிரி பேசுறீங்க.” என்றாள்.
“இல்லையா… உன்னைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது.” ரிஷி சொன்னதும்,
“முதல்ல இங்க இருந்து போங்க…. நான் தூங்கணும்.” என்றாள் கடுப்பாக.
“நானும் தான் நைட் சரியா தூங்களை… எனக்கு மட்டும் ரெஸ்ட் வேண்டாமா….” என்றவன், அவளுடனே படுத்துக் கொண்டான்.
மாலை வீட்டு வேலை செய்யும் சுகந்தி வந்து சிமி அனுப்பிய பெண் வந்திருபதாகச் சொல்ல… சாதனா மட்டும் எழுந்து வந்தாள். ரிஷி இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தான்.
அவள் கொண்டு வந்த உடையை வேறு அறைக்குச் சென்று சாதனா எடுத்து பார்த்தாள். தங்க நிற புடவையும், அதே நிறத்தில் முழுவதும் வேலைப்பாடுகள் செய்த ரவிக்கையும் இருந்தது.
ரெடிமேட் புடவை அதனால் ப்ளீட் எல்லாம் வைத்தே இருந்தது. அதுவும் மடிப்பில் அழகாக டிஸைன் செய்யப்பட்டு இருந்தது. அணிந்து கொள்ள மிகவும் சுலமாக இருந்தது.
சாதனா ஓரளவு உடுத்திக் கொண்டு கதவை திறந்து அந்தப் பெண்ணை அழைக்க…. அவள் வந்து நன்றாக அணிய உதவி செய்து, அளவு சரியாக இருப்பதைப் பார்த்துவிட்டு கிளம்பினாள்.
சாதனா திரும்ப உடை மாற்றிக்கொண்டு மேலே வந்த போது ரிஷி எழுந்திருந்தான்.
“டிரஸ் வந்துடுச்சா… எப்படி இருக்கு?”
“சூப்பரா இருக்கு. ஆனா அந்த ட்ரெஸ்க்கு ஏத்த மாதிரி மேக்கப்பும், ஹேர் ஸ்டைலும் பண்ணனும். நான் பக்கத்தில இருக்கிற பார்லர் போயிட்டு வரட்டுமா…”
“சரி போயிட்டு வா… இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி போனா ஒரு மால் இருக்கு. அதுல பார்லர் இருக்கு. டிரைவர் வர சொல்றேன்.”
“ப்ளீஸ் ரிஷி, டிரைவர் எல்லாம் வேண்டாம். நானே ஓடிட்டு போறேன். மதுரையில தான் ப்ரீயா இருக்க முடியாது. இங்கேயுமா….”
சாதனா கெஞ்சலாகக் கேட்க… “சரி பார்த்து போ…. செல் கைல எடுத்திட்டுப் போ….லைட் மேக்கப் போதும்.” என்றான்.
“அது எனக்கும் தெரியும்.” சாதனா வெடுக்கென்று பதில் கொடுக்க… ரிஷி அவளை முறைத்தான். ஆனால் அதில் கோபமில்லை….
மாலை ஆறு மணி ஆனதும் சாதனா பார்லர் கிளம்பினாள். ஆனால் அதற்கு முன்பே அந்தப் பார்லருக்கு அழைத்துப் பேசி இருந்தாள். அதனால் காத்திருக்க வேண்டுமோ என்ற பயமின்றி நிதானமாகக் கிளம்பி சென்றாள்.
எளிய அலங்காரம் என்பதால் அரை மணியில் முடிந்தும் விட்டது. மதுரையில் இருந்தால் தனியாக எங்கும் வெளியில் சுற்ற முடியாது. ரொம்ப நாட்கள் கழித்துச் சுதந்திரமாக உணர்ந்ததால்… அந்த மாலில் சுற்றிக்கொண்டு இருந்தாள்.
[the_ad id=”6605″]
அவளுக்காக நீச்சல் உடை வாங்கினாள். ஒரு கடையில் குங்கும சிமிழ் அழகாக இருந்தது. அதை ஜோதிக்காக வாங்கினாள். ரிஷிக்கும் எதாவது வாங்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் என்ன வாங்குவது என்று தெரியவில்லை… சிறிது நேரம் சுற்றி விட்டு அவனுக்காகத் தரமான இரண்டு சட்டைகள் மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.
அவள் வீடு திரும்பிய போது… ரிஷி சூட்டில் தயாராக இருந்தான்.
அவள் கையில் இருந்த ஷாப்பிங் பையைப் பார்த்ததும், “என்ன தனியா சுத்திட்டு வரியா…” என்றான் சரியாக.
சாதனா அவனுக்குப் பதிலாகப் புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு உடை மாற்ற சென்றாள். அவள் சென்றதும் அந்தக் கவரில் என்ன இருக்கிறது என்று ரிஷி எடுத்துப் பார்த்தான். அவனுக்குச் சட்டை வாங்கி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். திரும்ப எடுத்த இடத்திலேயே வைத்து விட்டான்.
ரெடிமேட் புடவை என்பதால் சாதனா எளிதாக அணிந்து கொண்டாள். அதற்குப் பொருத்தமாகத் தங்கத்தில் பெரிய தோடும், கழுத்தணியும் அணிந்து கொண்டு பார்க்க… பிரமாதமாக இருந்தது.
அவள் தனது செல்லில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது ரிஷி வந்தான். கதவை திறந்தவன் சாதனாவை பார்த்ததும் திகைத்து போய் நின்று விட்டான். தங்க நிலவாக ஜொலித்தவளை விட்டு பார்வையை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அவனால் திருப்ப முடியவில்லை.
சாதனா பார்த்தபோது அப்போது தான் வருவது போல் உள்ளே வந்தான்.
“நல்லா இருக்கா…” சாதனா இப்படி அப்படியும் திருப்பிக் காட்டி கேட்க….
“ம்ம்…” என்ற வார்த்தைக்கு மேல் அவனுக்குப் பேச்சே வரவில்லை….
வாயைத் திறந்து சொன்னாத்தான் என்னவாம் என மனதிற்குள் சாதனா அவனைத் திட்டும் போதே…. “இங்க கொடு நான் எடுக்கிறேன்.” என்றபடி அவளின் செல்லை வாங்கி, அவன் அதில் புகைப்படம் எடுத்தான்.
நான்கு ஐந்து படங்கள் எடுத்ததும், தன்னுடைய செல்லை எடுத்து அதிலும் அவளைப் படம் பிடித்துக் கொண்டான். எடுத்த படங்களை அவன் பார்க்க… சாதனாவும் வந்து அவனோடு நின்று பார்த்தாள். அப்போது இருவரையும் சேர்த்து ரிஷி செல்பி எடுத்தான்.
அவன் சாதனாவிடம் எதுவும் சொல்லவில்லை… அவன் எடுப்பதைப் பார்த்தவள், அவனோடு இன்னும் நெருங்கி நின்றாள். சில படங்கள் எடுத்ததும், “என்னோடதுல எடுங்க ரிஷி.” சாதனா சொன்னதும், அவளின் செல்லிலும் இருவரையும் சேர்த்து எடுத்தான்.
அவன் எடுத்ததும் சாதனா அவனிடம் இருந்து செல்லை வாங்கிப் படங்களைப் பார்ப்பதில் தான் கவனமாக இருந்தாள். ஆனால் ரிஷியின் பார்வை அவள் மீதே இருந்தது.
சாதனா இன்று மிகவும் அழகாக இருந்தாள். இதற்கு முன்பு அவள் அழகு இல்லை என்று அர்த்தமில்லை…. இந்த உடையும் அந்த நிறமும் அவளுக்கு மிகவும் பொருந்தியது. அதனால் பட்டை தீட்டிய வைரம் போல் இருந்தாள்.
சாதனா அதை எல்லாம் உணரவில்லை… அவள் ரிஷியோடு சேர்ந்து செல்பி எடுத்ததில் உலகம் மறந்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“போகலாமா…” ரிஷி சொன்னதும், சாதனா தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவனோடு சென்றாள்.
ரிஷி தான் காரை ஓட்டினான். காரில் செல்லும் போது வாட்ஸ் அப்பில் தாங்கள் இருவரும் சேர்த்து எடுத்த போட்டோவை டிபியாகச் சாதனா வைக்க… கொஞ்ச நேரத்திலேயே வெற்றி அவளை அழைத்து விட்டான்.
“ஹாய் அண்ணா, எப்படி இருக்க? அண்ணி எப்படி இருக்காங்க? பாரிஸ் நல்லா இருக்கா….”
“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம். இன்னும் ஊர் சுத்த ஆரம்பிக்கலை…. நீயும், ரிஷியும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.”
“எனக்கு எக்ஸாம் இருக்கேண்ணா…”
“ம்ம்… சரி ரிஷி எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க. நாங்க ஒரு பார்டிக்கு போறோம்.”
“ரொம்பச் சந்தோஷம், அப்புறம் உன்னோட டிபி பார்த்தேன் ரெண்டு பேரும் ரொம்பச் சூப்பரா இருக்கீங்க.”
வெற்றிப் பேசிக்கொண்டு இருந்த போதே அவனிடம் இருந்து செல்லை பறித்து ப்ரீதா பேசினாள். அவள் பேசி விட்டு வைத்ததும், ஜோதி அழைத்தார்.
“சாதனா ரொம்ப அழகா இருக்க டா…..” என்றதும், சாதனா நடந்த கதை அனைத்தையும் அவரிடம் சொல்ல… அவளை ஸ்பீக்கரில் போட சொன்னவர்,
[the_ad id=”6605″]
“டேய் ரிஷி, உன் பொண்டாட்டிக்கு மட்டும் தனியா ஆள் எல்லாம் வச்சு டிரஸ் டிஸைன் பண்ணி இருக்க… இந்த அம்மாவுக்குப் பண்ணி இருக்கியா டா…” என அவர் கிண்டலாகக் கேட்க….
“உங்களுக்கு எதுக்கு மா வேற ஆளு… உங்களுக்கு நான் போதாது. நான் எங்க அம்மாவுக்குச் செலக்ட் பண்றது போல வேற யாரு பண்ண முடியும்.” ரிஷி சமாளிக்க….
“நல்லா சமாளிக்கிற டா…. அப்ப உன் பொண்டாட்டிக்கும் நீயே செலக்ட் பண்ண வேண்டியது தான…”
“அவளுக்கும் துணி நான் தான் எடுத்தேன். டிஸைன் மட்டும் தான் சிமி பண்ணா….”
“சரி டா… நாளைக்கு மதியம் உமா அத்தை பொண்ணு சுகந்தி வீட்டுக்கு போயிட்டு வந்திடுங்க. மத்த சொந்தகாரங்க வீட்டுக்கு அடுத்தத் தடவை போய்க்கலாம். இதுக்கு மட்டும் கண்டிப்பா போயிட்டு வந்திடுங்க.” ஜோதி சொல்ல… ரிஷி சாதனாவை பார்க்க… அவள் போவோம் என்றாள்.